Sunday, November 15, 2009

மரப்பாச்சி,,,,,,,,,

ஒரு குழந்தை உறங்கி விழிப்பதைப்போல காலம் கரைந்துகொண்டிருக்கிறது. அந்தக்
குழந்தையின் அசைவுகளைப் போல பல ஆச்சர்யங்களை அவ்வப்போது விட்டுவிட்டுப் போயிருக்கிறது காலம். குழந்தை வளரும்போது அதன் முந்தைய பருவம் தொலைந்துவிடுவது
போல ஆச்சர்யங்கள் மறைந்துபோகின்றன. ஆனால் இவை நினைவுக்குள் பசுமைபூத்துக்
கிடக்கின்றன.

இவற்றைப் பகிர்ந்துகொள்ளவே இப்பகுதி.

முதலில் மரப்பாச்சி...மரபும் மனிதர்களும் தொலைந்துவிடாத ஒவ்வொரு குடும்பத்திலும் மரப்பாச்சி உண்டு. அதற்கென்று உருவம் உண்டு. உடலின்ஒவ்வொரு உறுப்பும்
கூர்மையாக இருக்கும். வழுவழுவென்று உருவம் இருக்கும். பார்க்கும் ஒவ்வொருவரிடமும்
பேசுவதுபோல இருக்கும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுப்பொருள் இதுதான்.

வாயில் வைத்து கடித்தாலும் கரையாதது. குழந்தைகளின் எச்சிலால் அடிக்கடி
குளிக்கும் மரப்பாச்சிகள். அந்த மழலை எச்சிலோடு குழந்தைகளின் அரவணைப்பில் உறங்கு
வதும் உண்டு

அடுத்த குழந்தை வரும்வரை பரண்களில் பத்திரமாகப் பெட்டிகளில் உறங்கும்.

மரப்பாச்சிகள் மௌனமாக தலைமுறைகளின் கதைகளைப் பேசுபவை.

பண்பாட்டை இறுக்கிப் பிடித்திருப்பவை.

வீட்டின் முதியவர்களைப் போல மரப்பாச்சிகளுக்கு மரியாதை உண்டு. செப்புச்
சாமான்களோடு மரப்பாச்சியும் முக்கிய சீதனமாகும்.

தீங்கு விளைவிக்காதது மரப்பாச்சிகள். அந்த மரப்பாச்சி மரம் மருந்தாகும்
என்று பாட்டிகள் சொல்வதுண்டு.

சிலசமயங்களில் பல தனிமைகளில் பலபேருக்கு குறிப்பாக இளம் விதவைகளுக்கு..
முதியோர்களுக்கு மரப்பாச்சிதான் உற்ற நட்பாகும் உகந்த உறவாகும்.

இப்போது மரப்பாச்சிகளைத் தேடவேண்டியிருக்கிறது.

ஆனாலும் மரத்துப்போகாமல் மரப்பாச்சிகள் மனப் பரண்களில் காத்திருக்கின்றன.



மரக்குதிரை....


கூட்டுக்குடும்பமாய் இருந்த வாழ்க்கையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரக்குதிரை இருக்கும். அந்த வீட்டில் முதலில் பிறந்த குழந்தைக்காக தாய் மாமனால் அல்லது தாத்தாக்களால் வாங்கி வரப்படும் குதிரை நிலைபெற்றுவிடும். அந்த வீட்டில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அதுதான் சவாரிக் குதிரை. வளையலை பாதியாக உடைத்ததுபோல் வளைவான மரச்சட்டத்தில் ஓடுகிற கால்கள் பதிக்கப்பட்டு குதிரை தயாராக இருக்கும். காதுகளுக்குப் பதில் மரக்குச்சிகள் பிடித்துக்கொள்வதற்கு. முகத்திற்கு ஒரு நிறம், முக்கிற்கு ஒரு நிறம், வாயிலிருந்து செல்லும் கடிவாளக கயிற்றுக்கு ஒரு நிறம், கழுத்தில் மணிக்கு ஒரு நிறம் (சப்தமிடாத மணி)கழுத்திற்கு ஒரு நிறம், உடலுக்கு ஒரு நிறம், வாலுக்கும் கால் குளம்பிற்கும் கருப்பு நிறம் இப்படி வண்ணக் குதிரையாய் மரக்குதிரை வாய் பிளந்து ஓடக் காத்திருக்கும். மரக்குதிரை பிள்ளையின் தாய்க்குப் பெருமை தரும் விசயம், தாய்வீட்டுச் சீதனமாய் சகோதரனால் அல்லது அப்பாவால் வந்ததல்லவா?

குழந்தைகளை குதிரையில் ஏற்றிவிட்டுத்தான் எல்லாமும் நடக்கும். ஆட்ட ஆட்ட குதிரை பறக்கும், முதலில் தாய் வீட்டுச் சொந்தங்கள் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் பறக்கும்,அப்புறம் பாட்டியின் ஆசைகளுக்கு ஏற்பப் பறக்கும், அப்பா ஆட்டிவிட அயல் நாடுகளுக்குப் பறக்கும் அப்பா ஆபிசிற்கும் பறக்கும், வாயில் எச்சில் ஒழுகப் பிள்ளை சிரித்தபடி குதிரையின் காதுகளைக் கெட்டியாகப் பிடித்தபடியிருக்க அம்மா சோறு ஊட்டுவாள்,, பால் புகட்டுவாள,,,அழும்போது சிரிக்க வைப்பாள் குதிரையை அதட்டியபடி,,,
குதிரையின் வால்களில் அடிவிழும்,,,இப்படியாக மரக்குதிரை காலங்களைத் தாண்டி,,,தலைமுறைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது,,எல்லாக் குழந்தைகளும் வளர்ந்து பருவமெய்திவிட்டாலும் அவர்களின் குழந்தைகளுக்கான பயணத்திற்காக மரக்குதிரைகள் என்றைக்கும் இளமைமாறாது காத்திருக்கும்,,,,

இப்போது சில காலங்கள் பரண்களின் மேல்..உத்திரங்களின் மேல் கயிற்றால் கட்டப்பட்டு படுத்துகிடக்கின்றன மரக்குதிரைகள், ஆனாலும் அவை ஓடுகிற கால்களை மடக்கவில்லை.,, இப்போது சீண்டப்படாமல் அவை ஒதுக்கப்பட்டுவிட்டன முதியோர்களைப் போல,,சில வீடுகளில் உடைபட்டு அடுப்பு விறகாகிவிட்டன,,சில மரக்கடைகளில் வேறு வீடுகளுக்குப் பயணிப்பதற்காக விலைக்குக் காத்திருக்கின்றன,, பெரும்பான்மை வீடுகளில் இடத்தை அடைக்கிறது என்று தொலைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இப்போது மரக்குதிரைகள் ஆமை உயரத்திற்கு சுருங்கி பிளாஸ்டிக்கில்,,,,,,பயணங்களும் சுருங்கிவிட்டன,,குழந்தைகள் சாப்பிட்டுத் தொலைக்க,,,அழுது எழவெடுக்காமல் இருக்க,,,இடுப்பில் உட்கார்ந்து சுமையாக இல்லாதிருக்க,,நாங்களும் நாகரிகத்திற்கு மாறிவிட்டோம் காட்டுவதற்காக...மரக்குதிரைகள்
இந்த தனிக்குடித்தன வாழ்க்கை வேண்டாமென்றுதான் தொலைந்துவிட்டனவோ என்னவோ,,,எங்கேனும் மரக்கடைகளில்,,,வீடுகளில் மரக்குதிரைகளைப் பார்க்க மனசு பயணிக்கத்தொடங்கிவிடுகிறது எல்லாக் கவலைகளையும் மறந்து எல்லா உறவுகளோடும்,,,தாங்க முடியாத தாகத்திற்குக் கிடைத்த பானைத் தண்ணீரைப் போல,,,,,
ஆனாலும் மனசு கணக்கிறது மண்ணின்வாசமும் மரக்குதிரைகளின் பயணமும் இல்லாத பல அபார்ட்மெண்ட் குடியிருப்புப் பிள்ளைகளின் வாழ்வை நினைக்க..இப்போது எல்லாக் குழந்தைகளுக்கும் இனி இல்லை இதுபோன்ற அற்புதங்கள் எனும்போது மேலும் வலுக்கிறது கணம் மனசெங்கும்.

Wednesday, August 19, 2009

முன்னவர்கள்,,,,,,முக்கியமானவர்கள்....



தஞ்சை ப்ரகாசு...

தஞ்சையின் முக்கியமான எழுத்தாளர். முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா எனத்
தொடங்கிய எனது எழுத்துலகத்தின் திசை திருப்பிய வலிமையான காற்று. உண்மையான
எழுத்தை அடையாளப்படுத்தியவர். புதுமைப்பித்தன் தொடங்கி அத்தனை பெரிய எழுத்துக்
கடல்களில் நீந்தப் பழக்கியவர். நிலவுபோன்ற வழுவழுப்பான தலை, அடர்த்தியான புருவங்கள்
இமைகளைப் பிதுக்கி நிற்கும் முட்டையின் மஞ்சட்கருவைபோன்ற வடிவ கண்கள், கருகரு
வென்ற சுருளுக்குள் சுருளாய் இருக்கும் தாடி, பெரிய காதுகள்..அழகான பெரிய பற்கள்,
இதுதான் ப்ரகாசின் அடையாளம். சும்மா இலக்கியக் கும்பல் தொடங்கி எத்தனையோ
கூட்டங்கள்..இலக்கியப் பேச்சுக்கள்...இதழ்கள் தொடங்கி...சாளரம் என்று ஒரு இதழ்,
படைப்பு மறுக்கப்பட்டவர்களுக்காக க்யுக்தம்...கற்றுத் தந்த ஞான வடிவம் ப்ரகாசு...

நிறைய மொழிகள் தெரியும்...ஓமியோபதி மருத்துவர்...பிரிண்டிங் பிரஸ்
வைத்தவர்...ரப்பர் ஸ்டாம்பு செய்து விற்றவர்..இதெல்லாம் பொழுதுபோக்கு..ஆனால்
அவருக்கு வாழ்க்கை எழுத்துதான்... வாசிப்புதான்..பேச்சுதான்..எளிமைதான்...இன்று
ப்ரகாசு இல்லை. ஆனால் தஞ்சையின் எல்லார் மனசிலும் இருக்கிறார். அவரைப் பற்றி
நிறைய எழுத ஆளுமைகள் கொண்டவர்..எழுதுவேன். ஒவ்வோர் ஆண்டும் அவரது
நினைவு நாளில் கூட்டம் நடத்தி இலக்கியப் பரிசுகளும்..கூட்டங்களும் நடத்தி திரு சுகன்
அவர்கள் எல்லோரையும் அழைக்கிறார். சுகனைப் பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.

அங்கிள் சிறுகதைத் தொகுப்பு..மேபல்...அப்புறம் கள்ளம், கரமுண்டார் வூடு..
எனும் நாவல்கள்..இன்னும் வெளிவராத அவரது காலத்தின் தேவையான படைப்புக்கள்
இருக்கின்றன அவரது துணைவியாரிடம்...யாரும் கேட்டு அச்சிடவேண்டும்...

எழுத்து என்று தஞ்சையில் தொடங்கினால் ப்ரகாசிடமிருந்துதான் தொடங்க
வேண்டும்..அவர் விதை மட்டுமல்ல...பலவற்றிற்கு வேரும்கூட...

--------------------------------------------------------------------------------

தஞ்சை மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் என்று சொன்னால் குறைவாகவே கணக்கிற்கு வரும். இவர்களுள் ஒருவராக சி.எம்.முத்துவை சொல்லலாம். இடையிருப்பு எனும் ஒரு கிராமத்தில் அஞ்சலக அதிகாரியாகப் பணியாற்றுபவர். பணிவு எனும் பண்பைச் சிகரமாகக் கொண்டவர். எல்லா எழுத்தாளர்களும் கற்றுக்கொள்ளவேண்டியது இது. ஏறிய எண்ணெய் வழியும் முன்நெற்றி. இப்போது வியர்வை வழிகிறது. சவுக்குமரத்தின் ஊசியிலைகளைப் போல அலசலான முடிக்கற்றை. பாகவதர் போன்ற அமைப்பில் முடிக்கற்றை. அதற்கு எண்ணெய் இடுவதும் இல்லை ஒழுங்குபடுத்தி வாரிக் கொள்வதுமில்லை. எழுத்துக்களால் படிப்போரை மனம் வாரிக்கொள்வதைத்தவிர.

யாராக இருந்தாலும் என்ன கண்மணி என்பார். எந்தப் படைப்பாளியையும் மனம் நோகப் பேசுவதில்லை. எது சொன்னாலும் வெற்றிலைக் கருப்பு ஏறிய பற்கள் வெளியே காட்டும் சலசல சிரிப்போடு ஏற்றுக்கொள்வார். படைப்பாளிகளைப் பாராட்டும்போது ரொம்பவும் மிகையாகவே பாராட்டுவார். ஆனால் அதில் கள்ளங்கபடமிருக்காது. தனது பாராட்டில் மலரும் படைப்பாளிகளின் மகிழ்வை சிறு குழந்தை போல ரசிப்பார்.

எழுத்தில் அத்தனை அற்புதங்கள் கூடுகட்டிக்கிடக்கும். மனசைக் கவர்ந்து கட்டிப்போட்டு மயக்கும் எழுத்து. ஒவ்வொரு சொல்லிலும் தஞ்சை மணம் இறுகிக் கிடக்கும். மனித வாழ்வியலின் அவலம், சோகம், சிக்கல்கள், வாழ்தலுக்கான போராட்டங்கள், மேலாதிக்க விளைவில் ஏழைகள் சிந்தும் துன்பக்குருதி..படிப்போரைச் சிதைத்து போகும். எல்லாவற்றிலும் மனிதநேயமும், மனித ஒழுக்கமும், மனித நேர்மையும் தேவை என்பதை இவரது கிராமிய மணம் வீசும் கதைகள் வலியுறுத்துபவை.

நெஞ்சின் நடுவே, கறிச்சோறு எனத் தொடர்ந்து பல நாவல்கள். பல சிறுகதைத் தொகுப்புகள். காட்டேரி மதவு, ஏழு முனிக்கு இளைய முனி, மண்டையன் போன்ற காலத்தால் அழிக்கமுடியாத சிறுகதைகள் இவருடையது. தஞ்சை மாவட்டத்தை வாசிப்பவர்கள் கண்மணி சி.எம்.முத்துவையும் சேர்ந்துதான் வாசிக்கவேண்டும். அப்போதுதான் முழுமையாகும். இன்னொரு இவரைப் பற்றியும் இன்னும் விரிவாகப் பேசுவேன்.