Friday, December 31, 2010

கடைசித்துளி...



ஆண்டின் இறுதியில்தான்
எதனையுமே தொடங்கவில்லையென்று
உணர்கிறோம்...
தொடங்கியதான எதனையும்
முடிக்கவில்லையென்று
உணர்கிறோம்...
முடிந்த எல்லாமும் பயனில்லையென்று
உணர்கிறோம்...
ஆனாலும் தொடங்கியதென்றும்
முடிந்ததென்றும்
பயன் விளைந்ததென்றும்
ஒரு நம்பிக்கையின்
பற்றுக்கோட்டில்
நாள்களைக் கடக்கிறோம்
ஒவ்வோராண்டும்...

இவற்றில் கிடைத்த மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும் இடர்களையும்
தடைகளையும் சங்கடங்களையும்
அசிங்கங்களையும் அவமானங்களையும்
இழப்புக்களையும் ஏமாற்றங்களையும்
வெற்றிகளையும்
புன்னகைகளில் கொஞ்சமாகவும்
அழுகைத்துளிகளில் கொஞ்சமாகவும்
கரைத்துக்கொள்கிறோம்...

வாழ்வு கடந்துபோகிறது
புத்தாண்டில் வாழ்த்துக்களைப்
பரிமாறிக்கொள்கிறோம்..
ஒருசிறிதும் களைப்புறாமலும்
கவலையுறாமலும்
அழுக்குப்போகத் துவைத்து சலவைசெய்த
ஒரு சட்டையை அணிந்துகொள்வதைப்போல..
வாழத்தொடங்கிவிடுகிறோம்...

Sunday, December 26, 2010

தளும்புதல்...



திசம்பர் 26 ஆண்டு 2004.

ஆண்டவன் அமைதியாக இல்லை.

ஆரவாரமாக இருந்த உலகை வேறு உலகிற்கு மாற்றினான்.

கடலாய் பெருகியோடியது கண்ணீர்.

கடலாய் பொங்கியது உயிர் குடித்தது.

ஆழிப்பேரலை.

என்ன தவறு யார் செய்தார்கள்?

ஆண்டவனுக்கு ஏன் இத்தனை உக்கிரம்?

இத்தனை ருத்ர தாண்டவம்?

மனசுக்குள் இன்றைக்கும் அதை நினைத்தால் வேதனை நெருப்பாகிறது.

அத்தனை ஆன்மாக்களுக்கும் என்னுடைய கண்ணீர்த்துளிகள் போதாது.

ஆனாலும் என் கண்ணீர்த்துளிகளோடு தளும்புகிறேன்.

அவர்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

அவர்களைப் பிரிந்தவர்கள் அமைதி கொள்ளட்டும்.

ஆண்டவனும் அமைதி கொள்ளட்டும்.

Friday, December 17, 2010

தமிழ் இன்பம் 2



தமிழ் மொழிபோல் உலகிற்கு அறம் உரைத்த மொழி இல்லை என்று கூறலாம். இதற்குச் சிறந்த சான்று உலகப்பொதுமறையாகப் போற்றப்படுகின்ற திருக்குறள். என்றைக்குமான அழியாச் சான்றாகக் குறளைக் குறிப்பிடலாம். ஔவையின் ஆத்திச்சூடி புதுமையானது. இதனைக் கொண்டு பாரதி புதிய ஆத்திசூடி பாடிய கதை உலகறியும். ஔவை அறம் உரைக்கும் போக்கு புதுமையானது.

ஒரு நீதியைச் சொல்வது என்பது படைப்பாளன் சமூகத்தின்மேல் கொண்டுள்ள அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் காட்டுவதாகும். இதையே ஔவையிடத்தும் காண முடிகிறது.

ஒற்றை வரியில் ஒரு முழக்கம்போல ஔவை அறத்தை உரத்துச் சொல்கிறார்.
சொல்கிற நீதிக்கெனப் பயன்படுத்துகிற சொற்களில் ஆழமான உணர்வையும் சிந்தனையையும் படிப்போர் மனத்தினுள் பதிய வைக்கிறார் ஆழமாக.

பின்வரும் சொற்களைப் பாருங்கள்..


கரவேல்...கைவிடேல்...இகழேல்...பேசேல்...சொல்லேல்..மறவேல்...
விரும்பேல்...திரியேல்...இடங்கொடேல்...புரியேல்...

என்றும்

விரும்பு...ஒழுகு...இணங்கு...பேண்...செய்..வாழ்..சேர்..கொள்..வாழ்...
அகல்...எழு..

என்றும் ஆத்திசூடியில் சொற்களைப் பயன்படுத்துகிறார்..


நன்று...அழகு..கெடும்..தகும்..இல்லை..அணிகலம்..
ஒழுகு..தொழு..கொள்..

போன்ற சொற்களைக் கொன்றைவேந்தனிலும் ஔவை அறமுரைக்கப்
பயன்படுத்துவதைக் காணலாம்.

இவற்றை ஆழ்ந்து பார்த்தால் ஔவை அறம் உரைத்தலில் பல சிறப்புக்களைப்
பட்டியலிட்டு சுவைக்கலாம்.

பன்முகச் சொற்களைப் பயன்படுத்துதல் புலவரின் புலமைத்திறத்தை வெளிக்காட்ட
என்று ஒருபக்கம் வைத்துக்கொண்டாலும் இன்னொருபக்கம் இவற்றைத் தாண்டி சமூகப்
பொறுப்புணர்வுடன் செயல்படும்நிலையில் மிகுந்துள்ள பண்பையும் மாண்பையும் நாம் பாராட்ட வேண்டும்.

பேசும்போது அளவுகடந்து பேசக்கூடாது. எல்லையில்லா பேச்சு இழப்புகளையே
தரும். எனவேதான் வள்ளுவர் நாகாக்க என்றார்.

இப்போது ஔவையின் சொற்களைப் பின்வருமாறு பாருங்கள்.

(அ) (ஆ)

இணங்கு X இணங்கேல்
ஒழி X ஒழியேல்
கேள் X கேளேல்
கொள் X தவிர்
செய் X செயேல்
சேர் X அகல்
திரி X திரியேல்
மற X மறவேல்
விரும்பு X விரும்பேல்

இந்தப்பட்டியலில் நேர்ச்சொற்களும் அதற்குண்டான் எதிர்ச்சொற்களும் இருக்கின்றன. இரண்டு வகையையும் ஔவை பயன்படுத்துகிறார். நன்மைக்கு நேர்ச்சொற்களையும் (அ) தீயனவற்றிற்கு
எதிர்ச்சொற்களையும் (ஆ) பயன்படுத்துகிறார். இது மிகவும் சிறப்பானது.சுவையானது.

தீயனவற்றை மறக்கவேண்டும். சிலவற்றை அகற்றவேண்டும். சிலவற்றைத் தொடரக்கூடாது. சிலவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும். சிலவற்றை ஒழுகுதல் வேண்டும். சிலவற்றிற்கு இடங்கொடுக்கக்கூடாது. சிலவற்றைக் கைவிடக்கூடாது எனப் பாகுபாடுகளை வைக்கிறார். இதேபோன்று செயல்களை செய்யும்போது அழகு தருவது எது, தகுதியானது எது,அணிபெற நிற்பது எது, எது கெட்டநிலைக்குத் தள்ளிக் கெடுப்பது என்பன போன்றும் பயன்படுத்துகிறார்.

எனவேதான் தீயனவற்றினைக் குறிப்பிடும்போது

விரும்பேல்
பேசேல்
சொல்லேல்
செயேல்
அகற்று
ஒழி
இடங்கொடேல்
கெடும்
போன்ற சொற்களையும்

நல்லது குறித்து உரைக்கும்போது

கேள்
செய்
கடைப்பிடி
ஒழுகு
பேண்
வாழ்
அழகு
தகும்

போன்ற சொற்களையும் பயன்படுத்துகிறார். இப்போது நினைத்துப் பாருங்கள் மேற்கண்ட சொற்களை வரிசைப்படுத்தினால் நல்லனவற்றை கேள் கேட்டுப் பின் செய் அதனையே கடைப்பிடித்து ஒழுகு. அதனைப் பேணி அதன்படி வாழ். வாழ்ந்தால் அதுதான் அழகு. உலகத்திற்கு அதுதான் தகும்.

இதேபோன்று சங்கிலித்தொடர் வாக்கியத்தினை தீயனவற்றிற்கும் இணைத்துப் பார்க்கலாம்.

தீயன குறித்துப் பேசும்போது வாழ்வில் கேடு உண்டாக்கும். அதை விரும்பக்கூடாது. அதனைப் பேசவும் (பேசேல்) யாரிடத்தும் சொல்லவும் (சொல்லேல்) கூடாது. அகற்றிவிடவேண்டும் (அகற்று).அவற்றிற்கு என்றைக்கும் வாழ்வில் இடங்கொடுக்கக்கூடாது (இடங்கொடேல்). இல்லையெனில் வாழ்வு முழுக்கக் கெட்டுவிடும் (கெடும்).

இப்போது ஔவையின் ஆத்திசூடியில் சில....


அறஞ் செய விரும்பு
பருவத்தே பயிர் செய்
நன்மை கடைப்பிடி
நேர்பட ஒழுகு
தந்தைத்தாய் பேண்

இயல்பலாதன செயேல்
கீழ்மை அகற்று
கெடுப்பது ஒழி
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்..


இன்னொரு தமிழ் இன்பத்தில் சந்திக்கலாம்.

Thursday, December 16, 2010

என்றும் தமிழ் இன்பம்

தமிழ் செம்மொழியாகியிருக்கிற தருணம் இது. அதுதோன்றிய காலத்திலேயே செம்மொழிக்கான தகுதியிருந்தும் காலமும் பல்வேறு அரசியல் பின்னணிகளாலும்தான் காலதாமதமாக செம்மொழிக்கான தகுதி கிடைத்திருக்கிறது. தமிழில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் அனைவராலும் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய அவசியத்திற்குரியவை. அதில் பேசப்படாதவை இல்லை. சிந்திக்கப்படாத புதுமைகள் இல்லை. எல்லாவற்றையும் யோசித்து அவற்றைப் பாடல்களாகப் பதிவு செய்து வைத்திருக்கும் அறிவு வியக்கத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க அற்புதம் என்னவென்றால் ஒவ்வொரு பாடலும் அறிவியல் பின்னணியோடு இருப்பதுதான். அறிவியல் பார்வையோடு உள்ள மொழிதான் உலகில் நிலைக்கும் என்பார்கள். ஒவ்வொரு பாடலைப் புனையும்போது தனக்குத் தெரிந்த வானியல் அறிவு, உயிரியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, புவியியல் அறிவு எனப் பரந்துபட்ட அறிவைப் பாடல்களில் அதன் இயல்பும் சுவையும் கெடாமல் இணைத்துப் பாடியிருப்பதான் அற்புதம்.

ஓர் அரண்மனையைக் கட்டுவதற்குரிய தொழில்நுட்பத்தை நக்கீரர் நெடுநல்வாடை எனும் இலக்கியத்தில் தெளிவாகப் பாடுகிறார். யானைக்கு நாற்பது வயது வந்துவிட்டால் மலர் மலர்ந்து தானே உதிர்வதுபோல யானையின் தந்தம் உதிர்ந்துவிடும் முதிர்ந்து என்கிற குறிப்பையும் இவ்விலக்கியத்தில் காணலாம்.

நகரவியல் அமைப்புப்பற்றிய செய்திகளை அகநானுர்று தெளிவுறுத்தும். இதில் இன்றைக்கு இருக்கும் ஊராட்சி அமைப்புமுறையைக் காணலாம். கணிதவியலில் பேசப்படும் அளவைகள் பற்றி தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகிறார். கனஅளவு குறித்து ஔவையார் பாடலில் அறியமுடிகிறது. டெலஸ்கோப் தத்துவத்தைக் கபிலர் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அணுவைப் பிளக்கமுடியும் என்பதை அணுவைப் பிளப்பதற்கான கருத்து வருமுன்னே பாடிய தமிழ்ப்பாடலால் அறியலாம்.

இவையெல்லாம் கடுகு அளவு சான்றுகளேயாகும்.

இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

இத்தோடு இலக்கியச் சுவை என்றால் தமிழில் அலுக்கும்வரைக்கும் அள்ளிப் பருகலாம் தேனின் சுவையோடு.

பாரதியைப் பொறுத்தளவில் மஉறாகவி மட்டுமல்ல. என்போன்றோருக்குப் போதி மரமும் அவன்தான். படிக்கும் யாருக்கும் அவனே ஞானகுரு மற்றும் எல்லாமும்.....

அவன் இயற்றிய சிறுகாப்பியம் பாஞ்சாலி சபதம்

தமிழின் சுவையனைத்தைம் இக்காப்பியத்தில் அனுபவிக்கலாம்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும் பெண் விடுதலைக்காகவும் அவன் இயற்றிய காப்பியம் இது. பாரத தாயைப் பாஞ்சாலியாகவும் கௌரவர்களை ஆங்கிலேயர்களாகவும் பாண்டவர்களை மக்களாகவும் உருவகித்து இக்காப்பியத்தை அமைத்தவன். இது விடுதலைக்காலக் கட்டத்தில் ஓர் ஆயுதமாகத் திகழ்ந்தது எனலாம்.

இக்காப்பியத்தின் சிறப்பிற்குப் பல காரணங்கள் உண்டு.

மிகச் சிறந்த உவமைகள். எளிமையான சொற்கோர்வை. அத்தனையும் அழகியல் மட்டுமன்றி காப்பியப்பொருண்மைக்கேற்றவாறு அழுத்தமான விவரிப்பு.. சொல்லுகிற முறையில் பாரதியை விஞ்சுவதற்கு இன்னொருவன் பிறந்து வரவேண்டும். உவமைகளைச் சொல்லுகிற முறையில் இழிந்தனவற்றை இழிந்த உவமைகளாலும் உயர்ந்தனவற்றை உயர்ந்த உவமைகளாலும் பாடிய திறன் போற்றுதலுக்குரியது.

சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்துவிடுகிறான் தருமன்.
கடைசியாக விதி சகுனியின் வாயால் வலியுறுத்த பாஞ்சாலியை அடகு வைக்கிறான்.
உலகத்தில் யாருமே செய்திராத செயல் இது. மனைவியை சூதாட்டத்தில் பணயப்பொருளாக அடகு வைப்பது என்று. எனவே எல்லோரும் தருமனின் இந்தச் செயலுக்குக் கடிந்து பேசுகிறார்கள். எல்லோரும் திட்டியபிறகும் பாரதிக்கு இது பொறுக்கமுடியவில்லை. தன் பங்குக்கும் அவன் திட்டுகிறான். அந்த வரிகள் பின்வருமாறு

கோயிற் பூசை செய்வோர்
சிலையைக் கொண்டு விற்றல்போலும்
வாயில் காத்து நிற்போன்
வீட்டை வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி
அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான்
சீச்சீ சிறியர் செய்கை செய்தான்...

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சாதாரண மனிதன் செய்திருந்தால்கூட மன்னித்துவிடலாம். ஆயிரங்களான நீதி அவையுணர்ந்த தருமன் என்கிறார். மட்டுமல்ல ஒரேயொரு சொல் சீச்சி..சிறியர் செய்கை...என்கிறான். ஒற்றைச்சொல்லில் உயிரை விட்டுவிடலாம். அத்தனை வலுவானது. அதேபோல பாஞ்சாலியை இழுத்துவர ஆள் அனுப்புகிறான் துரியோதனன். ஒரு தேர்ப்பாகனை அனுப்புகிறான். அவனிடத்தில் பாஞ்சாலி ஒரு கேள்வி கேட்கிறாள். சூதாட்டத்தில் தன்னை இழந்தபின் என்னை அடகு வைக்கும் உரிமை அவர்க்கில்லை. என்ன சாத்திரத்தால் என்னைத் தோற்றிட்டார்? எனப் பலவற்றைக் கேட்டுப் போய் கேட்டுக்கொண்டு வா என்கிறாள். தேர்ப்பாகனும் இவள் கேட்பது நியாயம்தான். அதற்குப் பதில் தெரியாமல் அவளிடத்தில் செல்லமாட்டேன் என்று மனஉறுதியுடன் செல்கிறான். தேர்ப்பாகன் துரியோதனனிடம் கேட்கிறான். துரியோதனம் பெருங்கோபம் கொள்கிறான். பாகனோ பயப்படாமல் சொல்கிறான்.

அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி சொல்லில்
அக்கணமே சென்று அழைக்கின்றேன்

அந்த மகாசபையில் சாதாரண ஒரு தேர்ப்பாகனுக்கு இத்தனை துணிச்சல் அதுவும் உயிர் போய்விடும் என்றாலும் துரியோதனனை எதிர்த்துப்பேசும் துணிச்சல் எப்படி வந்தது? வேறு ஒன்றுமில்லை. அந்தத் துணிச்சல் பாரதி கொடுத்ததுதான். இன்னும் சொல்லப்போனால் அந்தத் தேர்ப்பாகன் யாருமில்லை பாரதியேதான்.

இப்படி பல சுவைகளைப் பாஞ்சாலி சபதத்தில் அனுபவிக்கலாம்.

இன்னும் பல இலக்கியச் சுவைகளை வாய்ப்பு அமையும்போது சுவைக்கலாம்.

Wednesday, December 8, 2010

சாபம்



நாம் வாழ்க்கையில் வாங்கிவந்த சாபம்தான்.

ஒரு நீண்ட கட்டுரையின் பொருண்மையை முடிந்தவரை சுருக்கியிருக்கிறேன்.
பொருண்மை கெடாமலும் எச்சரிக்கைக்காகவும்..

1. 1830 களில் இந்தியாவை சுற்றிப் பார்த்த மெக்காலே குறிப்பிடும்போது இந்தியாவில் நான் மேற்கொண்ட மிக நீண்ட பயணத்தில் ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ இதுவரை சந்தித்ததில்லை. நற்பண்புகளும் தனித்தன்மையுள்ள மக்களால் இந்நாடு வளம் பெற்றுள்ளது. இத்தேசத்தின் முதுகெலும்பான கலாச்சார மேன்மையை உடைத்தெறியாமல் இம்மக்களை வெற்றி கொள்வது பற்றி என்னால் சிந்திக்கவே முடியவில்லை.

2. பன்முகத்தன்மை வாய்ந்த பல மருத்துவங்களின் அறிவுச்சொத்தை இன்றைய கருவிகளின் கற்பனை அடிப்படையிலான முடிவுகளின் வழியாக கேள்விக்குள்ளாக்குவது கேலிக் கூத்தானது.

3. காசநோய்த்தடுப்பு மருந்துத்திட்டம் இந்தியாவில் வருவதற்கு முன்பே பிற நாடுகளில் அந்நோய் குறைந்துவிட்டது. இந்த நோய்களுக்குக் காரணம் கிருமிகளைவிட சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள்தான் முக்கியம்.

4. தடுப்பூசியால் டிபிடி, போலியோ சொட்டு மருந்துகளால் பக்க விளைவுகள் வரும் என்பது உண்மை.இந்தப் போலியோ சொட்டுமருந்தால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை என்பது உண்மையில் போலியோ வைரஸால் வரக்கூடிய பாதிப்பைவிட அதிகமாக உள்ளது.

5. பன்னாட்டுக்கம்பெனிகள் தேவையில்லாத தடுப்பூசிகளையும் மற்றும் திட்டங்களையும் செயற்படுத்தச் செய்கிறது.

6. பெரும்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கான நிரந்தரத் தீர்வு அதன் சமூக, பொருளாதார அரசியல் சூழலில்தான் உள்ளது.

7. இந்தப் பன்றிக் காய்ச்சலைப் பரப்பும் என்று நம்பப்படும் கிருமி, வைரஸ் வகை சார்ந்தது என்பதும் இது கிருமி வகைகளிலேயே மிகவும் நுண்ணியது என்பதும் எல்லா மருத்துவர்களுக்கும் தெரியும். சாதாரண துணியால் ஆன ஒரு முகமூடி இந்த நுண்ணிய வைரஸிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என்பது உண்மையானால் உலகிலுள்ள எல்லாக் கிருமிகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தி படைத்ததாக துணி மாறிவிடும். ஆனால் உண்மை மாறானது. சாதாரணத் துணியில் உள்ள நெய்யப்பட்ட நுர்லின் இடைவௌயில் நுர்ற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளே போய் வெளியே வரும் என்பது எல்லா நுண்ணுயிரியல் மாணவர்களுக்கும் தெரியும்.

8. பன்றிக்காய்ச்சல் பற்றிய உண்மைகளை உலக சுகாதார நிறுவனம் அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக வெளியிடவில்லை என்று கூறுகிறது.

9. வணிக வெறி இவ்வளவு துர்ரம் பெருக மருத்துவம் பற்றிய அறியாமைதாயே காரணம்?

10.இயற்கையாக கிருமிகள் உடலில் நுழைய முயலும்போது உடல் எதிர்ப்பு வேலையை இயற்கையாகச் செய்யும். இதற்காக உடலிற்கு இப்படியான தடுப்பூசிப் பயிற்சிகள் அவசியமில்லை. அடிக்கடி கிருமிகளை எதிர்க்கும் செயற்கைப் பயிற்சிகளை நாம் உடலுக்கு வழங்கி அதன் சக்தியை வீணடித்தால்...இயற்கையான சூழலில் அதன் சக்திகுறைவால் எதிர்க்க இயலாமல்போய்விடும்.

11. பக்கவிளைவுகள் பக்க விளைவு மருந்துகள் கெடாமல் பாதுகாக்க என்று ஏகப்பட்ட இரசாயனங்கள் இத்தடுப்பு மருந்துகளில் கலக்கப்படுகின்றன. இவ்விளைவுகளும் பக்க விளைவுகளே.

12. தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் இந்தியாவில் ஏன் அடிக்கடி ஏற்படுவதில்லை?...இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முறையான உணவுப்பழக்கம் இயற்கை சார்ந்த வாழ்வியல் நடைமுறைகள் மாறத்தொடங்கி சில பத்து வருடங்கள்தான் ஆகின்றன.

பக்க விளைவால் ஏற்பட்ட மரணங்கள் 10,06,000 பேர்
மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் 9,98,000 பேர்
மருத்துவமனை படுக்கையில் ஏற்பட்ட புண்களால்
ஏற்பட்ட மரணங்கள் 10,15,000 பேர்
மருத்துவமனையில் ஒவ்வாமையால் ஏற்பட்ட
மரணங்கள் 8,80,000 பேர்
தவறான சிகிச்சையால் ஏற்பட்ட மரணங்கள் 3,71,360 பேர்
தவறான அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட
மரணங்கள் 3,20,000 பேர்
தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால்
ஏற்பட்ட மரணங்கள் 10,09,000 பேர்
வெளிநோயாளிகளில் பக்கவிளைவுகளால்
ஏற்பட்ட மரணங்கள் 10,99,000 பேர்

ஆக மொத்தம் 67 லட்சத்து 6 ஆயிரத்து 360 பேர்

இதுகுறித்த அறிக்கையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ள வாசகம்

ஒட்டுமொத்த அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு போரினாலும் ஏற்பட்ட மரணங்களைவிட இந்த மருத்துவத் தவறுகளால் ஏற்பட்ட மரணங்கள் அதிகம்.

நன்றி . புதுவிசை- கலாச்சார இலக்கியக்காலாண்டிதழ்
திசம்பர் 2010.



எனவே
இயற்கைதான்
நம் உயிர்காக்கும்
இறைவன்.

Tuesday, December 7, 2010

நிசப்தம்....




நிசப்தம்

யாருமறியாத வேளையில்
யாருமறியாமல் இழந்த கனவுகளைச்
சேகரிக்கும்
இறைந்துகிடக்கும் தானியங்களைப்
பொறுக்கும் குருவிகளைப்போல....

என்றைக்கோ தவறவிட்ட யாருக்கோ
உதவ மறுத்த உதவியை
மீட்டெடுக்கும்
எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும்
மகிழ்ச்சியைப்போல...

தவறிச் செய்துவிட்ட குற்றத்தின்
பரிகாரச் சந்தர்ப்பத்தைக்
காத்து வைத்திருக்கும்
பொரிந்த குஞ்சுகளை காக்கும்
தாய்க் கோழியைப்போல....

மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட
காதலின் தடங்களைத் துருவித்துருவி
காட்சிப்படுத்தும்
வயது தளர்வில் தவிர்க்கமுடியாத
நரையைப்போல....

கனிந்த பழத்தைப்போல
எல்லாப் பக்கமும் சுவைக்கும்
கனியவைத்துண்ணும்போது...

கவனமாகவும் கையாளவேண்டும்
கச்சிதக் கூராய் முனையிரண்டிருக்கும்
கத்தியைப் போலவும்...

நிசப்தம்.

வதமும் வரமும்



போதையோடு மீறிமீறி
முத்தமிட்ட வாயைக் கிழிக்க
ஒர் இணை கைகள்...

பெண் ஈன்றேன் என்பதற்காய்
இடுப்பிலுதைத்த கால்களை
முறுக்கிச் சிதைக்க ஒர் இணை கைகள்..

எப்பவும் காமம் செருகியிருக்கும்
கண்களைக் கவ்வியெறிய
ஒர் இணை கைகள்...

கழிவுகளையும் கொத்தும் காக்கையென
கண்டதையும் வாரிக்கொள்ளும்
கைகளைப் பற்றிக் கழித்துவிட
ஒர் இணை கைகள்...

விருப்பமற்ற வேளையிலும்
மிருகமெனப் புணர்ந்துதறும்
உணர்வின் உயிரறுக்க
ஒர் இணை கைகள்....

அநியாயப்படுகையில்
அசிங்கப்படுகையில்
அருவருப்படைகையில்
அடக்கப்படுகையில்
அவதாரமெடுக்காமல்
பொறுமையெனும் கடலிலிருந்து
மேலெழும்பி வரவேண்டும்
இப்படி...

தமிழைத் தாயாய் காப்பவனைத்
தழைய தழைய அணைப்பதற்கு
ஒர் இணை கைகள்...

எல்லையில் எல்லையிலாத் தீரமுடன்
எந்தன் தாய்நாடு காத்திறக்கும்
இளையரைத் தாங்கி இளைப்பாற்ற
ஓர் இணை கைகள்..

மனநிலை இழந்துவிட்ட இதயங்களை
இதமாய் தாங்கிநிற்கும் அந்தத்
தாயுமானவனை தழுவிப் பாராட்ட
ஓர் இணை கைகள்...

சோதரத் தமிழ்மக்கள் சுடுகாடாய்
சுருண்டதற்காய் தன்னுயிரை சுட்டிட்ட
அந்த முத்துச் சகோதரனின் ஆன்மாவை
ஏந்திச் சுமப்பதற்காய்
ஓர் இணை கைகள்...

என
வருவாள் பெண்
சபிக்கப்பட்ட வாழ்க்கையில்
வதம் செய்யவும்
வரம் கொடுக்கவும்....

Sunday, December 5, 2010

சுமை





காய்கறிகளைச் சாப்பிடும்
சுவையைவிட விலை
சுமை...

சுவைக்குள்ளும் பல
சூட்சுமங்கள் சுமை...

பெய்யாமல் கெடுத்ததுபோக
பெய்து கெடுக்கிறது மழை
செய்யும் எந்த வேலையும்
மழையில் சுமை...

நீண்ட சரக்கு ரயிலைப்போல
ஊழல் ரயில்
பெட்டிகள்தோறும் விதவிதமாய்
ஊழல் சரக்குகள்...

வண்ணவண்ண விளையாட்டுக்கள்
வானவில் ஜாலங்கள்

கொஞ்சம் எலும்புகள்
கொஞ்சம் சதைகள்
கொஞ்சம் ரத்தம்
இதுதான் மனிதன்
சாப்பிடவும் முடியாமல்
துர்ங்கவும் முடியாமல்
சுகப்படவும் முடியாமல்

நாளெல்லாம் பொழுதெல்லாம்
ஏறிகொண்டேயிருக்கிறது
சுமை...சுமை...
சுமைகளைத்தவிர
வேறொன்றுமில்லை..

வருத்தம்




வருத்தமாக இருக்கிறது
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.
நினைக்க நினைக்க
வருத்தம் பொங்கி வருகிறது.
பொங்கி பொங்கி வருகிறது வருத்தம்.
வருத்தம் கொள்ளும் தருணங்களில்
வருத்தப்படும் எல்லாமும்
வருத்தப்படுவதற்குரியதாய்
இல்லாமலிருப்பதோடு
கேலிக்கும் கேவலத்திற்கும்
ஆளாக்கிவிட்டு நிற்கும்நிலைமை
எண்ணியே
வருத்தமாக இருக்கிறது.

கவனிக்க..கவனிக்க..



திசம்பர் அம்ருதா இதழில் ஒரு கட்டுரை முனைவர் மு.இளங்கோவன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பு கிரந்தப் புயலில் சிக்கிய தமிழ் என்பதாகும். அதன் சுருக்கத்தை மட்டும் தருகிறேன்.

ஒருங்குகுறி சேர்த்தியம் தமிழ்மொழிக்கு வழங்கியுள்ள 128 இடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் 56 இடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26 ஐச் சேர்க்கும்படியும் தமிழுக்கே உரியதான எ,ஒ,ழ,ற,ன ஆகிய எழுத்தொலி வடிவங்களைக் கிரந்த அட்டவணையில் சேர்க்கும்படியும் காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சிறீஇரமணசர்மா ஒருங்குகுறி சேர்த்தியத்துக்கு அனுப்பிய முன்மொழிவில் தொடங்கி கலைஞர் கடிதம் வரைக்கும் சர்ச்சைகள் பற்றியது. அவசியம் எல்லோரும் வாசித்து இதுகுறித்து எழுதவேண்டிய கடப்பாடு உள்ளது. இதில் தமிழ்மொழிக்கான ஆபத்தையும் உணரவேண்டும்.

Sunday, September 26, 2010

பகிர்தல்.....


இரண்டு சங்கடமான செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

1. ஆனந்தவிகடனில் (27.10.2010 தேதியிட்டது) தன்னைப் பாதித்த சம்பவமாக எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் குறிப்பிட்டிருப்பது.வெளிநாட்டிற்கு சம்பாதிக்கப்போய் 40 வயதான பீபி லுமாடா என்னும் பெண் இந்தியா திரும்பும்வழியில் பாஸ்போர்ட் தொலைந்துவிட,,,,கனவுகளோடு வந்த அந்தப்பெண் மறுபடியும் திருப்பி மஸ்கட்டுக்கே அனுப்பப்பட்டு அங்கும் அனுமதி மறுக்கப்பட்டு விமானநிலையத்திலேயே 5 நாள்கள்
மன உளைச்சலுடன் ஏற்பட்ட அழுத்தத்தால் உறார்ட்அட்டாக்கில் இறந்துவிட்டார். வீட்டுவேலைக்கு வந்த பெண் என்பதால் இந்திய துர்தரகஅதிகாரிகள் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். இதுதான் செய்தி. நினைத்துப் பாருங்கள் பொறுப்பான இடத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் இந்த அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலை. இதற்கு ஏதேனும் ஒரு தீர்வைக் கண்டறிந்து அந்த அதிகாரிகளுக்குத் தகுந்த தண்டனை அவர்கள்
மறக்கமுடியாத அளவிற்குத் தரவேண்டும். நிச்சயம் வேண்டுங்கள் கடவுள் அவர்களை நின்று கொல்லவேண்டும். பீபி லுமாடாவின் ஆன்மா அமைதி பெறவேண்டும். 5 நாட்கள் என்ன பாடுபட்டிருக்கும் அந்தப் பெண்ணின் மனம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் இதனைக் கண்கொண்டு பார்ப்பார்களா? இன்னொரு லுமாடாவிற்கு இப்படியொரு கதி ஏற்படக்கூடாது. இன்னும் சங்கடமாகவே இருக்கிறது. வாழ்க பாரத தேசம்.

2. இதுவும் ஆனந்தவிகடனில் வந்ததுதான். தசைச் சிதைவு நோயால் பாதிக்கப் பட்டு மரணத்தை எதிர்கொண்டிருக்கும் இரண்டு சகோதரிகள் மாதேவியும் வல்லபியும். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கொடுமையான வாழ்க்கை. இருப்பினும் அச்சகோதரிகள் சமூகப்பணியில் தீவிரமாக. அவர்களை வணங்குவோம். அந்தக் கட்டுரையின் கடைசிவரிகள் இப்படி முடிகின்றன...


.....இன்னும் கொஞ்சம் நாட்களில் எங்களின் கண் இமைகள் இமைப்பதை நிறுத்திக்கொள்ளும். துர்ங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளும். நாங்கள் விடைபெறுவோம். ஆனால்
இன்னும் 200 வருடங்கள் கழித்துப் பிறக்கும் ஒரு குழந்தைக்குக்கூட இந்த வியாதி இருக்காது. ஏனெனில் அந்த வலி முழுவதையும் நாங்களே ஏந்திக்கொள்கிறோம்......

யார் என்ன செய்யமுடியும்? அரசு ஏதேனும் செய்யவேண்டும். நிச்சயம் செய்யும் என நம்புகிறேன். மனசுக்குள் வேதனை கசிகிறது. தொண்டை அடைக்கிறது. என் அன்பு சகோதரிகளே உங்களுக்கு இன்னும் ஆயுளுக்காக இறைவனை வேண்டுகிறேன்.

நட்பு பக்கம்




ஒரு வழக்கமான காலைப்பொழுதில் தானாகவே வந்து அறிமுகம் செய்து கொண்டார். அப்போது ஆரம்பித்தது அந்த இலக்கிய நட்பு. கருப்புநிறம் என்றாலும் கவர்ச்சியான முகம். பௌண்டன் பேனாவை வளைத்தது போன்ற மீசை. உருண்டை முகம். பளிச்சென்ற பல்வரிசை. அறிமுகம் தொடங்கிய நாள்முதல் கலகலவென்ற சிரிப்புதான். சுருள் சுருளான முடிக்கற்றை கருகருவென்று. உடல்பயிற்சி செய்த உடல் அமைப்பு. கைகுலுக்கும்போதே ஒரு அழுத்தம் உணரலாம். அதில் நானிருக்கிறேன் எதற்கும் என்றுணர்த்துவதுபோன்ற உணர்வு கிடைக்கும். அதிலிருந்து அடிக்கடி சந்திப்பு நிகழ்ந்தது. பெரும்பாலும் கையில் புகையும் சிகரெட்டுடன் இடது கையிலேந்திய டீகிளாசுடன்தான் அழைப்பார். எதற்கும் கவலைப்படாதவர். எந்தப் பிரச்சினை என்றாலும் கடைசிவரை தான் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படாது தீர்த்து வைப்பார். உதவி செய்வார். எதற்கும் அஞ்சாதவர். துணிச்சல் இயல்பிலேயே இரத்தத்தில் ஊறிப்போயிருந்தது. அரசு வேலை என்றாலும் சொற்ப சம்பளம். நிறைய பிரச்சினைகள். சமாளிப்பதில் வெகு சிரமப்பட்டிருந்தாலும் போராளி குணத்துடன்தான் இயங்கி சமாளிப்பார். மனைவியும் பிள்ளைகளும் கடுகளவும் கவலைகொள்ளாத ஒரு வாழ்வை அவர் அளிப்பதில் வெகு கவனமாக இருந்தார். எனவே எங்கும் பண நெருக்கடி இருந்தது. அதை அவர் அசட்டுச் சிரிப்புடன் சந்தித்துப் பதில் சொல்லும்போது மனசுக்கு சங்கடமாக இருக்கும். கேட்டால் வேறென்ன தலைவா செய்யறது... என்று சிரிப்பார். இதுதான் புத்தகன்.

கரந்தையில் மேட்டுத்தெரு, அப்புறம் குதிரைக்கட்டித்தெருவில் மலையாள டாக்டர் வீட்டுச் சந்தில் என வெகுகாலம் குடியிருந்தார். இரண்டு பிள்ளைகள். சசிதரன், நிலா. பெண் குழந்தைமேல் ரொம்ப பிரியம் வைத்திருந்தார். பிள்ளைகள் இரண்டும் தலையைக் கண்டால் போதும் அப்பா உறரணி மாமா வந்திருக்காங்க என்று வாய்நிறைய சிரிப்பு வழிய அழைத்து போவார்கள். அதில் அதிகப் பங்கு நிலாவிற்குண்டு.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் கரந்தை விட்டு வல்லம் பகுதிக்கு குடியேறினார். அலுவலகத்தில் பிரச்சினைகள். ஒரத்தநாட்டிலிருந்து துர்த்துக்குடிக்கு மாற்றினார்கள். சளைக்கவில்லை. போனார். மாறுதல் மாறுதல் என்று அலுவலகம் படுத்தி வைத்தது. இதையெல்லாம் தாண்டி மனிதநேயம், கவிதை, இலக்கியக்கூட்டம் என்று அயராது இயங்கினார். தொகுப்பு போடவேண்டும் என்கிற ஆர்வம் மனதிற்குள் ஆழமாய் வேர் ஊன்றிக் கிடந்தது. அதை அவ்வப்போது வெளிப்படுத்துவார் அதைப்பற்றி கேள்வி கேட்கும்போது மட்டும். கவிதை எழுதுவதற்கு என்று அதிக நேரங்கள் நாள்கள் கடத்தியதுண்டு. எழுதுகிற பேனா, தாள் என எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியான உயர்ந்த தேர்வு உண்டு. அழகான சாய்வான எழுத்துக்கள். செதுக்கி வைத்ததுபோல எழுதுவார். ஒரு கவிதை எழுதி முடித்துவிட்டால் அதைப் பற்றி மிக அருமையாகப் பேசுவார். நீண்ட நாள் குழந்தையில்லாமல் இருந்து ஒரு குழந்தை பெற்ற ஒரு தாயின் களிப்பை அவர் ஒரு கவிதை எழுதி முடித்ததும் வைத்திருப்பார். அத்தனை கவனம், பொறுப்பு, எச்சரிக்கையுணர்வு, கடமை, அக்கறை எனப் பலகூறுகளுடன் அக்கவிதையைப் படைப்பார்.

வெகு ஆழமான பொருண்மைதளத்தில், மனித மனத்தின் அந்நியத்தன்மையால் காயப்படும் மனவெளியை, சுய வலியை, அவமானத்தை சொற்கள் கம்பீரமாய் ஏந்தி அவரது கவிதைகள் வெளிப்படுத்தியிருக்கும். கணீரென்ற குரலில் அவர் அவரது கவிதையை வாசிக்கும்போது கவிதை எனும் இலக்கியப் பிரிவின்மீது ஒரு உயர்ந்த மரியாதை வரும் கேட்கிற மனங்களுக்கு. நல்ல சிறுகதை, நல்ல கவிதை, நல்ல நாடகம், நல்ல திரைப்படம், நல்ல நுர்ல் இப்படி எது அவரது மனதுக்குப் பட்டாலும் உடன் அதனைப் படைத்த படைப்பாளியுடன் உடன் தொடர்புகொண்டு அதன் நேர், எதிர் குணங்களைச் சரியாகப் பட்டியலிட்டு உரைப்பது அவரது இலக்கியப் பங்களிப்பின் முக்கிய பதிவாகும். அத்தனைச் சரியாக கணிப்பார். சிலசமயம் தவறினாலும் தன் கருத்தில் விலகாத குணமுடன் இருப்பார். தெரிந்த நண்பர்கள் இல்லை..இல்லை..புத்தகன் நீங்கள் இப்படி பார்த்திருக்கவேண்டும்.. என்றால் அப்படியா.. என்று உடனே உணர்ந்துகொள்ளும் மனப்பக்குவமும் உண்டு. யாராக இருந்தாலும் மனந்திறந்து பாராட்டுவார். எல்லோரையும் எல்லோரிடமும் அறிமுகம் செய்வார். கூடுதலான பாராட்டுச் சொற்களைக் கொண்டதாக அந்த அறிமுகம் இருக்கும்.

அவருக்குள் பல கனவுகள். பிள்ளை பொறியியல் படிப்பின் இறுதியாண்டில். பெண் பொறியியல் படிப்பில் முதலாண்டில். பல திட்டங்கள். வீடு கட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் கரந்தையில் வெகு முயன்று ஒரு இடம் வாங்கிப் பதிவு செய்து வைத்திருக்கிறார். வழக்கமான பிரச்சினைகள். ஆனால் எல்லாம் அவரது ஆளுமையின் எல்லைக்குள் வைத்திருந்தார். பதவியுயர்வும் வந்தது.

எத்தனையோ இலக்கியம் குறித்து பேசியிருக்கிறோம். எத்தனையோ கூட்டங்களில் கலந்துகொணடிருக்கிறோம். சமீபமாக இடைவெளி விழுந்தது என்றாலும் கைபேசியில் பேச்சைத் தொடர முடிந்தது.

20.09.2010 அன்று அவரது கைபேசியில் இருந்து அழைப்பு. சிதம்பரத்தில் அலுவலகத்தில் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட மறு நொடியில் அந்த அழைப்பு..என்ன புத்தகன்? நல்லாயிருக்கீங்களா? என்றதும்............பதில் பின்வருமாறு
இருந்தது.

நான் புத்தகன் பையன் சசி பேசறேன் அப்பா நேத்து ராத்திரி இறந்துட்டாங்க...

அதிர்ந்துபோனேன். என்னடா சொல்றே?

ஆமாம்.

என்னாச்சு?

நேத்து ராத்திரி 12.30க்கு உறாரட் அட்டாக். இறந்துட்டாங்க..


இன்னும் மீளமுடியாத வலியில் இருக்கிறேன்...


இலக்கியம் என்றோம்
பேசினோம்
சிரித்தோம்
விவாதித்தோம்
எழுதினோம்
கலைந்து கலைந்து
கூடினோம் புத்தகன்..

எந்தப் படைப்பிற்காக
இந்த மீளா மௌனத்தை
கையிலெடுத்துக் கொண்டீர்கள்...

உங்கள் கவிதைகளைப்போலவே
ஆழமான வலியை மனதில்
தைத்துவிட்டுப் போய்விட்டீர்கள்...


நிலா அழுது பார்த்ததில்லை...

நீங்கள் புகைத்த சிகரெட்டின் புகைபோலவே
வலியூடுருவுகிறது மனவுணர்வெஙகும்
வலியன்றி வேறு வழியறியா
மௌனத்தில் புதைந்து நிற்கிறேன்...

Sunday, July 11, 2010

அஞ்சலி


மஉறாத்மாவுக்கு ஒரு மானசீகக் கடிதம்

வணக்கம் மஉறாத்மாவே. இன்று உங்கள் பிறந்த தினம். ஒரு தேசத்தின் விடியலுக்காக இருளோடு போராடியவர் நீங்கள். எல்லோரும் வசதியும் வாய்ப்புமாக இருக்க நீங்கள் எளிமையைப் போர்த்தியவர் நீங்கள். எத்தனையோ தியாகங்களைச் செய்து இந்த தேசத்தைக் காத்தவர் நீங்கள். வன்முறை வேண்டாம் என்று சத்தியத்தையும் அஉறிம்சையையும் கடைசிவரை சுவாசித்த நீங்கள் ஒரு வெறியாளனின் வன்முறைக்கு உயிர் நீத்தீர்கள். உலக நாடுகளில்கூட மரியாதைக்குரிய மனிதராக இன்றும் போற்றப்படும் ஒரு மேன்மையாளராக வாழ்ந்தவர் நீங்கள். பணத்தாள்களிலும், காசுகளிலும் என அரசின்
பலவற்றில் கருப்பு வெள்ளையிலும் வண்ணங்களில் பொக்கைவாய் சிரிப்போடு இருக்கிறீர்கள்.
உங்களைப் புறத்தோற்ற அளவில் ஏற்றுக்கொண்டிருக்கிற தேசம் அகத்தளவில் உங்கள் கொள்கைளை மறந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. அன்றைக்குவிட இன்றைக்குத்தான் வன்முறை பல்லாயிரம் கரங்களைக்கொண்டு அப்பாவி மக்களை வதம் செய்துகொண்டுகிறது. வீசியெறியப்பட்ட காய்ந்த மலர்க்கொத்துக்களைப் போல கொத்துகொத்தாக மக்கள் உடல் சிதைந்து இறந்துபோகிறார்கள். பொதுவிடங்களிலும், ரயில் பயணங்களிலும், மகிழ்ச்சியான குடும்பத் தருணங்களிலும். பெரும்பாலும் குழந்தைகளும், வயதானவர்களும், பெண்களும் என அப்பாவிமக்களையே உயிர்குடிக்கிறது வன்முறை. இங்கே அரசியல் என்பது பலவித மாய வலைகளாலும் சூதுக்களாலும் நேர்மையற்ற முறைகளாலும் இரக்கமற்றும் அமைந்து இருக்கிறது. அறம், சத்தியம், தர்மம், நீதி என்று எந்தப் பெயரில் கூவி நின்றாலும் கேட்பாரில்லை. தேசம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது நெருப்பில் விழுந்த புழுபோல.

வேலை பார்ப்பவனுக்கு வேலை இல்லை, நியாயம் பேசுபவன் தாக்கப்படுகிறான், பணம் இருந்தால்தான் எல்லாமும் நடக்கிறது, பணம் வாங்கிக்கொண்டவன் இல்லையென்கிறான், கல்வி கொள்ளையர்களின் கைப்பொருளாக இருக்கிறது, இளையவர்களின் மனங்களில் பல்வகை விஷங்கள் துர்வப்பட்டிருக்கின்றன..யாரிடமும் ஒழுக்கமில்லை, ஒழுக்கமாயிருப்பவன் கேலிக்குரியவனாகிறான், சாதிவெறியை சுவாசித்தபடியே எழுகிறார்கள், இயங்குகிறார்கள், உறங்குகிறார்கள், அப்படியே வாழ்ந்து சாகிறார்கள், எல்லாமும் உச்சமாகவே இருக்கிறது..யாரிடமும் நேர்மையில்லை..பேசுகிற வார்த்தைகளில் ஒழுங்கில்லை..பதவியில் இருப்பவர்கள் கோடிகோடியாய் சேர்த்து சுகம் கண்டு கிடக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு சூதாட்டக் காய்களாய். தகுதி என்பது தகாத சொல்லாய் இருக்கிறது. பரிந்துரையும், சாதியப் பின்னணியும், வன்முறையும் மிகச் சிறந்த தகுதியாய் இருக்கிறது. இந்த தேசம் இன்னும் விடுதலை பெறவேண்டியிருக்கிறது.

மஉறாத்மாவே நீங்கள் நினைத்த தேசம் வேறு. இன்று இயங்கும் தேசம் வேறு. தேசத்தைக் காக்கவேண்டியவர்களே பயிர் மேய்கிறார்கள். ஜனநாயகம் என்பது முழுக்கப் புதைக்கப்பட்டுவிட்டது. அரசு அலுவலகங்களில் இன்றும் வயதானவர்களின் கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது மிகச் சாதாரணமான கோரிக்கைகளைகூட நிறைவேற்றிக்கொள்ளமுடியாமல்..மனுக்கள் பிணங்களைப்போல எரிக்கப்படுகின்றன.
லஞ்சம் என்பது முறைப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் நேர்மையும், முறைமையும், எளிமையும் ஆங்காங்கே நெரிசலான மக்கள்கூட்டத்தில் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தையைப் போல இன்னும் திணறிக்கொண்டிருக்கின்றன. உங்களுடைய பிறந்த நாளில் உங்கள் ஆன்மாவோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன். இந்த தேசம் முழுக்க எத்தனையே மனங்கள் உங்களோடு இன்று பகிர்ந்துகொள்ளலாம். அத்தோடு இதுவும்.

வணக்கம் மஉறாத்மா. வாழ்க நீ எம்மான்.




அக்டோபர் அஞ்சலி



பேருந்து நடத்துநர்கள் என்றால் நமக்கு பின்வருவனவே நினைவிற்கு வரும்.

1. சொன்ன இடத்தில் நிறுத்தாதவர். இறக்கிவிடாதவர்.
2. பாக்கி சில்லரை தராதவர்.
3. கடுகடுவென்று பேசுபவர்.
4. இலவச பாஸ் கொண்டு வரும் மாணவர்களை அலைக்கழிப்பவர்.
5. மரியாதையில்லாமல் சமயங்களில் பேசுபவர் (பல சமயங்களில்)

இதையெல்லாம் தாண்டி ஒரு சம்பவம். கோயம்புத்துர்ரில் ஒரு பேருந்து
நடத்துநர் மனைவிக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட கணவரும் பொறியியல் பட்டப்படிப்பு
படிக்கும் அவரது மகனும் மனமொத்து உடல் உறுப்புக்களைத் தானமாகத தர சம்மதித்துள்ளனர். இதன்படி இறந்துபோன பெண்ணின் உறுப்புக்கள் நான்கு பேருக்கு வாழ்வை மீட்டுக்கொடுத்திருக்கிறது. தானமாகப் பெற்றதில் ஒருவரின் மனைவி நெகிழ்ந்துபோய் என் உயிருள்ளவரை உங்களை மறக்கமாட்டோம். என் பெண்ணின் திருமணம் நடைபெறவுள்ளது. இனி எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர் என்று அழைத்திருக்கிறார் கலங்கிய கண்களுடன்.
அந்த பேருந்து நடத்துநரின் மனைவியின் உறுப்புக்கள் தமிழ்நாடெங்கும் முகந்தெரியாத நான்கு பேரை வாழவைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன தமிழின் மேன்மை / தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது. பெருமை கொள்ள வைக்கிறது. ஒருபுறம் ஜாதி வெறிபிடித்துபோய் சங்கம் வைத்தும் இன்னும் பல வன்முறைகளை கடை பரப்பிக்
கொண்டாடும் சமூகத்தில் இப்படியும் நிகழ்வுகள் மனிதன் தொலைந்துவிடவில்லை. மனிதாபிமானம் தொலைந்துவிடவில்லை. உயிரிரக்கம் பேசிய ராமலிங்க சுவாமிகள் இன்னும் பல சான்றோர்கள் வாழ்ந்த தேசம் இன்னும் பாழ்பட்டுவிடவில்லை என பல நம்பிக்கைகளை இச்சம்பவம் மனவயலில் விதைகளாகத் துர்விப் போகிறது.

பேருந்து நடத்துநர்கள் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்த இச்சம்பவம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அந்த பேருந்து நடத்துநருக்கும் அவரது மகனுக்கும் ஈடு கட்ட முடியாத இழப்பென்றாலும் அதனையும் மீறி அவர்கள் செய்திருக்கும் தியாகம் விலை மதிப்பற்றது. ஈடு செய்யமுடியாத மேன்மை மிக்கது. அவர்களை வணங்குவோம். அவரின் மனைவி சித்திராதேவியின் ஆன்மா இறைவன் திருவடிக்கு நிச்சயமாக சென்று சேர்ந்திருக்கும் அந்த இறையான்மாவை வணங்குவோம்.

Tuesday, June 29, 2010

இளைப்பாற இலக்கியம்.....



தமிழ்மொழி பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் ஒரு சுவையான கனி. ஒவ்வொருமுறையும் ஒரு தனியான சுவை. மனித வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து இலக்கியம் படைத்த பான்மை நுட்பமானது. இல்லறம் பேணுதல் என்பது அகத்திலும் வெளியில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் புறத்திலுமாக அடங்கும். இந்த இருபெரும் பிரிவுக்குள்தான் தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நின்று ஆண்மையோடும் ஆளுமையோடும் இயங்கிகொண்டிருக்கிறது. இவற்றின் நுட்பத்தையும் சுவையையும் அவ்வப்போது ஒரு இலக்கியப் பாடலுடன் பகிர்ந்துகொள்ளலே இந்த இளைப்பாற இலக்கியம் பகுதி.

முதலில் குறுந்தொகை. சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கருவறை என்று சொல்லலாம். அதில் அக இலக்கியமும் புற இலக்கியமும் என அமைந்தவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எனும் 18 இலக்கியங்கள். இவற்றுள் அக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கது குறுந்தொகையாகும். காதலும் இல்லறமும் வாழ்வியலின் நுட்பமும் செழுமையான சுவையும் நிரம்பியது குறுந்தொகையாகும். மட்டுமின்றி தமிழுலகில் அதிகஅளவு சான்றோர்களால் சான்று காட்டப்பட்ட இலக்கியமும் இதுவேயாகும்.

இன்று இளைப்பாற.....

ஒரு தலைவன் தலைவியை காதல் வயப்படுத்திவிட்டு..திருமணம் செய்து கொள்வதில் காலம்தாழ்த்துகிறான். தலைவி மிகுந்த துயரத்திற்காளாகிறாள். அவளின் துயர் துடைக்கமுடியாமல் அவளுடைய நெருங்கிய தோழி தலைவனைப் பார்த்துப் பேசுகிறாள்.

என் இனிய தலைவனே உன்னுடைய நாட்டில் அரசனுடைய காவல் மரம் பலாமரமாகும். அதனைச் சுற்றி மூங்கிலால் வேலியிடப்பட்டிருக்கும். அந்தப் பலாப்பழம் சிறிய காம்பில் பெரிய பழமாகத் தொங்கும். இது பலாமரத்தின் இயல்பு. எனவே அந்த இயல்பில் தலைவியைக காக்கவைக்காதே. இவளுடைய உயிரானது மிகச் சிறியது. ஆனால் உன்னால் அவள் மனதில் ஏற்பட்டிருக்கும் காதலானது அந்தப் பலாப்பழம்போல பெரியது. இதை உணர்ந்துகொள் என்கிறாள்.

இது சற்று புரியாப் பொருள்போல இருக்கும். முதலில் இதன் நுட்பத்தைப் பார்க்கலாம்.

அரசனுடைய காவல் மரம் என்பது கடும் காவலுக்கு உரியது. அம் மரத்தின் பழத்தை எளிதில் யாரும் அணுகமுடியாது. இது தலைவனுடைய நாட்டின் நிலை,அதேபோன்று இரவு நேரத்தில் தலைவியை எப்படியாவது அடைந்துவிடலாம் என்றெண்ணி பல ஆபத்தான நிகழ்வுகளை எல்லாம் கடந்துவரும் தலைவனிடம் இதை தோழி சொல்லி அந்த கடும் காவலுக்குப் பின் இருக்கும் பழத்தைப் போலதான் தலைவியின் நிலையும் அடைய முடியாது. எனவே விரைவில் முறைப்படி வந்து திருமணம் செய்துகொள் என்று தோழி கூறுகிறாள்.

இதனைத் தாண்டிய ஒரு சுவையான நுட்பமும் இதில் இருக்கிறது. தலைவன் இருக்கும் நாட்டையாளும் அரசனின் காவல் மரத்தில் சிறிய காம்பில் பெரிய பலர்ப்பழம் காய்த்துத் தொங்குவது மரத்தின் இயல்பாகும். அந்த இயல்பில் தலைவனாகிய நீயும் இருக்கிறாய். ஒன்றைப் புரிந்துகொள் பலாமரத்தின் இயல்பு என் தலைவயிடம் இல்லை. அவள் உயிரோ மிகச்சிறிய காம்புதான் (பலாப்பழத்தைத் தாங்கும் காம்பைப் போல்) ஆனால் அந்த காம்பில் தலைவனாகிய உன்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காதல் நாளுக்கு நாள் பழுத்து மிகப்பெரிய பலாப்பழம்போல் தொங்கிக்கொண்டிருக்கிறது. மரத்தின் இயல்பைப் போல் அது இல்லை. நீ முறைப்படி அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் உன்னால் பழுத்திருக்கும் காமம் (காதல்) என்கிற கனியின் பாரம்தாங்காமல் அவளின் உயிர் ஆகிய காம்பு முறிந்துவிடும். இதனைப் புரிந்துகொள் என்று உணர்த்துகிறாள்.

அந்தப் பாடல் பின்வருமாறு

வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃதறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தாங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே...

கபிலர்

வசதிக்காக... வேரல் என்பது மூங்கிலைக் குறிக்கும். கோடு என்பது சிறு காம்பைக் குறிக்கும். பலவு என்பது பலாப்பழம்.

அடுத்த இளைப்பாறுதல் வரைக்கும்...

Sunday, June 27, 2010

ஆங்கிலக்கவிதை....

இருபதாண்டுகளுக்கு முன் கல்கத்தாவிலிருந்து வரும் பொயட்ரி டூடேயில் ஆங்கிலக் கவிதைகள் கொஞ்சம் எழுதி பிரசுரமானது. அப்புறம் பணியின் நிகழ்வுகள் பயணங்களில் கழிந்தன. ஆனாலும் அவ்வப்போது விட்டுவிடாமல் குறிப்புகள் எடுத்து வைத்து வந்திருக்கிறேன். அதன் வெளிப்பாட்டில் இனி சிறுசிறு கவிதைகள் வரும்.



N E V E R....

First Attack
First Love
First Poem
First Pain
First Insult
First Triumph

Never comes
in our life
again...



T R U T H.....

All truths show
all shadows..
but
All shadows never
show even single truth...




PUNCTUATED MARKS..

Many times we are missing
commas...

Sometimes we are keeping
Semicolons...

Rarely We are using
brackets...

Question marks using us
ever..

Single Quotes often
by our relatives...

Exclamation marks alloted
only for Children..

Normally full stops in
Waiting List...

Awaiting some marks still
like our life...

Saturday, June 26, 2010

ஹைகூ...கூ...கூ....


வலை வீசுதலில்
சிக்குகின்றன மீன்கள்
நதிகளல்ல...



நீயும் பேசவில்லை
நானும் பேசவில்லை
எல்லோரும் பேசுகிறார்கள்.



நீரின்றி அமையாது
உலகு
நத்தைக்கு யார் சொன்னது?



குழந்தை கையசைக்க
பயந்த காற்று
முகத்தில் தஞ்சமாகும்..




எறும்புகள் மொய்க்கலாம்
குப்பைக்குப் போகலாம்
சிறுமிக்கு இல்லை பருக்கை..




டயர் பஞ்சர்
விடுதலையான காற்று
காட்டிக்கொடுத்தது முள்ளை...


தொட்டிக்குள் நீந்துகின்றன
மீன்கள்
மனசுக்குள்ளிருக்கு கடல்...



சாலையில் காலி பீர்பாட்டில்
உள்ளிருந்து வரும் காற்று
கண்ணீர்த்துளிகளைப் பாடுகிறது..



கிணற்றுச் சரிவில்
குருவிக்கூடு..
மனசிலிருக்கு வாழ்க்கை..



காய்ந்த டீகோப்பை
மொய்க்கும் ஈக்கள்
நினைவில் நண்பர்கள்....



யாரின் மரணம்?
கூரியரில் கண்ணீர்
ஓடும் மேகங்கள்...



விடைபெறுகிறது சருகு
வழியனுப்புகிறது மரம்
அழுகிறது காற்று...



விபத்தில் பிணம்
கடந்துபோகின்றன
நாளைய பிணங்கள்...



டிரான்ஸ்பார்மரில் பட்டாம்பூச்சி
11000 வோல்ட்
அழகு ஆபத்துதான்...



தரிசன க்யூ
எறும்புகள் ரயில்
மேசையில் திருப்பதி லட்டு...



யார் செய்த பிழை?
தவளை விழுங்கி
அடிபட்ட பாம்பு...



எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
அப்பாவிடம் திருடிய பீடி...



இன்று ஸ்டாக் இல்லை
அரிசியா?
அவளின் வாழ்க்கையா?

நாடக அரங்கு....


பொம்மை.....
(நாடகம்)


காட்சி ஒன்று

( ஒரு அப்பார்ட்மெண்டின் உறால் அது. சுவற்றில் அழகான ஷோகேஸ்
அதில் பல பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு
வெள்ளை நிற முயல்பொம்மை பீங்கானால் செய்யப்பட்டது.
அந்த முயல் தாவுவதுபோல் இருக்கிறது.)

(அந்த உறாலில் இரு பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருத்தியின் பெயர் ஈசுவரி. இன்னொருத்தி நிர்மலா. கூடவே
நிர்மலாவின் பையன் பாபுவும் இருக்கிறான். அவன் அந்த ஷோகேஸ்
முயல்பொம்மையை எடுக்க முயற்சிக்கிறான்)

ஈசுவரி: நிர்மலா உன்னைப் பார்த்து நாளாச்சு.. ஒரே அப்பார்ட்
மெண்ட்ல இருக்கோம்னுதான் பேரு..

நிர்மலா: எங்க வேலை சரியா இருக்கு ஈசுவரி. அதுவும் இவன
வச்சு சமாளிக்கறது பெரும்பாடா இருக்கு..படுத்தறான்..
பொழுது போயிடுது...

ஈசுவரி : விடு நிர்மலா..சின்ன பையன்தானே...அப்படித்தான்..
என்ன நினைச்சுப் பாரு..(பெருமூச்சுவிடுகிறாள்..)
கல்யாணம் ஆகி பத்து வருஷமாச்சு..நீ என்னப் பாரு..
நான் உன்னப் பாக்கிறேன்னு..ஓடுது பொழுது...

நிர்மலா: வருத்தப்படாதே ஈசுவரி. கடவுள் நிச்சயம் கண்ணத்
திறப்பார்..

(அப்போது பாபு ஒரு மோட்டாவை எடுத்துவந்து ஷோகேஸ்
அருகே போட்டு அதன்மேல் ஏறி முயல்பொம்மையை எடுக்க
முயல்கிறான். இவர்கள் கவனிக்காது பேச்சைத் தொடர்கிறார்கள்.)

ஈசுவரி : எனக்கு நம்பிக்கை போயிடிச்சி நிர்மலா..எத்தனை விரதம்..
எத்தனை கோயில்?...எத்தனை பிராத்த்தனை..ஒண்ணும்
பிரயோசனமில்லே..கடவுள் இருக்கான்னு சந்தேகமா இருக்கு..

(பொம்மையை எடுக்க முயலும்போது அது கைதவறி கீழே
தரையில் விழுந்து உடைகிறது...சில்லுகளாய்..)

நிர்மலா: யேய் பாபு.. அய்யய்யோ என்ன பண்ணே? அடக்கடவுளே
ஒடச்சிட்டியா..சனியனே..உன்னால தொல்லை...(அடிக்கிறாள்)

ஈசுவரி : என்ன நிர்மலா.. ரொம்ப ஆசையா வாங்கினது..இப்படிப்
பண்ணிப்புட்டான்..இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற...அடக்
கடவுளே...எனக்குப் பயமாயிருக்கு..என்ன நடக்கப்போவுதோ?

நிர்மலா: சாரி ஈசுவரி..

ஈசுவரி : சாரி எதுக்கு நிர்மலா? அதனால உடைஞ்சது ஒட்டிடுமா..

(ஈசுவரி கோபமாகப் பேச நிர்மலா முகம் சுண்டுகிறது.)

நிர்மலா: தப்புதான் ஈசுவரி.. இதே மாதிரி வேறு வாங்கி கொடுத்துடறேன்.
(பிள்ளையைப் பார்த்து) சனியனே..எனக்குன்னு வந்து
பிறந்து தொலைச்சே பாரு...(ஓங்கி அறைகிறாள் கன்னத்தில்)

ஈசுவரி : என்னால மறக்கமுடியாத பொம்மை அது..இருந்தாலும்
இப்படிப்பட்ட மோசமான பிள்ளையைப் பெத்துக்கக்கூடாது..

நிர்மலா: நான் வரேன் ஈசுவரி..வந்து தொலைடா கழிச்சல்ல போற
நாயே...புள்ளயா வந்துருக்கு...பேய்..

(அடித்தபடியே இழுத்துக்கொண்டு போகிறாள்)

(ஈசுவரி உடைந்த முயல்பொம்மையின் சில்லுகளையே பார்த்துக்
கொண்டிருக்கிறாள்).


காட்சி இரண்டு

(அதே உறால்..ஈசுவரியும் அவள் கணவனும்..)


கணவன் : சரிவிடு..சின்ன பையன்தானே..வேணுமின்னா போட்டு
உடைப்பான்..ஆசையா எடுத்திருக்கான் கைதவறி விழுந்துடிச்சி..
வேற வாங்கிக்கலாம்.. பெரிசு பண்ணாதே இத...

ஈசுவரி: இல்லங்க..உங்களுக்குத் தெரியாது..நீங்க ஆபிசு போயிட்டா..
அதுதாங்க எனக்கு ஆறுதல்..கொஞ்சறதுக்கு எனக்கென்ன பிள்ளையா..
குட்டியா..அந்தக் கொடுப்பினைதான் எனக்கு இல்லே.. என்ன பாவம்
செஞ்சேன்னு தெரியல்லே..வயித்துலே வந்து தங்கறதும் நினைக்கறதுக்
குள்ளே கலைஞ்சி போயிடுது.. இதுகிட்டதான் சொல்லிப் புலம்புவேன்..
என் கவலைங்கள எல்லாம் பேசாம கேட்டுக்கும்.. இன்னிக்கு
வெள்ளிக்கிழமை..உடைஞ்சிப்போனது நல்ல சகுனமில்லீங்க..ஏதோ
நடக்கப்போவுது எனக்குப் பயமாயிருக்குங்க...(அழுகிறாள்)

கணவன் : ரொம்பக் குழம்பிக்காதே ஈசுவரி..சாதாரணப் பொம்மை..பேசாமப்
படு..பயமாயிருந்தா சாமியைக் கும்பிட்டு விபூதி பூசிக்கிட்டுப் படு..
நாளைக்கு உங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்..

ஈசுவரி : இல்லங்க என்னமோ போல இருக்கு..என் பக்கத்துலே உக்காந்துக்கங்க.

கணவன்: சரி..சரி.. பயப்படாம படு.. (அருகில் உட்கார்ந்துகொள்கிறான்.)



காட்சி மூன்று
(நிர்மலாவும் ஈசுவரியும்)

நிர்மலா: ஈசுவரி.. எப்படியும் அந்த பொம்மைய வாங்கி கொடுத்துடறேன்.
அது மாதிரி முயல் பொம்மை கிடைக்கலியாம்.. பாபு அப்பா
அலைஞ்சி பாத்துட்டார்.

ஈசுவரி : சரி நிர்மலா..என் விதி..

நிர்மலா: வருத்தப்படாத ஈசுவரி. உன் கோபம் புரியுது..நல்லா அடிச்சு
விலாசிட்டேன்..உடம்புக்கு முடியாம படுத்திருக்கான்..

ஈசுவரி : அதனால என் பொம்மை கிடைச்சுடுமா..அது வெறும் பொம்மை
யில்ல.. என்னோட குழந்தை மாதிரி..கொன்னுட்டான்..

(சொல்லிவிட்டு ஈசுவரி திரும்பிப் பார்க்காமல் போய்விடுகிறாள்.)

(அவள் போவதையே பார்த்துவிட்டு நிர்மலா திரும்பி நடக்கிறாள்.)


காட்சி நான்கு
(ஈசுவரியின் வீடு..அமர்ந்திருக்கிறாள். டிவியில் படம் ஓடிக்கொண்டிருக் கிறது. அவள் கணவன் கூடவே உட்கார்ந்து இருக்கிறான். அப்போது நிர்மலாவும் அவள் பையன் பாபுவும் உள்ளே வருகிறார்கள். பாபு முன்னால் ஓடிப்போய் ஈசுவரியின் முன்
நிற்கிறான்)

பாபு : ஆண்ட்டி அம்மா உங்களுக்கு பொம்மை கொண்டாரங்க...
நான் ஒடச்ச அதே முயல் பொம்மை..

நிர்மலா: மன்னிச்சுக்க ஈசுவரி..இந்தா அவரு பெங்களுரு போனப்ப பாத்திருக்காரு..
மறக்காம வாங்கிட்டு வந்துட்டாரு..எடுத்துக்க..திரும்பவும் மன்னிப்பு
கேட்டுக்கறேன்.

பாபு : ஆண்ட்டி வாங்கிக்கங்க..நான் ஒடச்ச அதே பொம்மைதான்..

ஈசுவரியின்
கணவன்: ஈசுவரி.வாங்கிக்க..கொடுங்க..விடுங்க..இது பெரிய விஷயமே
இல்ல.. (ஈசுவரி எழுந்து வாங்குகிறாள்.)

பாபு : ஆண்ட்டி அங்கேயே வச்சுடுங்க..இனி நான் எடுக்கமாட்டேன்..
எங்கப்பா எனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்காரு..இதே மாதிரி
முயல் பொம்மை...

எழுந்து அதை ஷோகேஸில் வைக்கப் போகிறாள். வழியில்
கிடந்த பாத்திரத்தைக் கவனிக்கவில்லை. கால் அதில் பட
தடுமாறி விழப்போக..சமாளிக்க பொம்மையை நழுவவிடுகிறாள்.
மறுபடியும் அந்த முயல்பொம்மை கீழே விழுந்து உடைகிறது
சில்லுகளாய்.. அதிர்ந்துபோய் நிற்கிறாள் ஈசுவரி..

( திரை )

Tuesday, June 22, 2010

ஆராய்ச்சிமணி



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். அந்த அரிய மானிடப் பிறவியைக் காப்பதே பெரும்பாடாகிவிடும் சூழல் இப்போது. அந்தக் காலம்போல் எதுவும் இல்லை. உடல் பராமரித்தலும், உணவு தயாரித்தலும், உணவு உண்ணும் முறையும் மாறியுள்ளது. அதனால்தான் சொற்ப வயதில் எல்லா நோயும் வருகின்றது. மரணமும் நேருகிறது. இது காலத்தின் கட்டாயம் என்று ஒத்துக்கொண்டுபோனால். மனிதனே சக மனிதனை அழிக்கும் கொடூரம் என்றைக்கும் மன்னிக்கமுடியாதது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படிதான் எல்லாமும் எனும்போது மனது வேதனைப்படுகிறது. எடுத்துக் காட்டு போபால் விஷவாயுவில் பலியானவர்களுக்கான நீதி இரண்டாண்டுகள்தான். அதுவும் இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் எனும்போது பலியான உயிர்களை நினைத்து மனம் கசிகிறது. தற்போது போலி மருந்து. மனசாட்சியேயில்லாமல்...வீட்டுப் பத்திரங்களை அடகு வைத்து...தாலியை அடகு வைத்து...5 காசு 10 காசு என வட்டிக்கு வாங்கி எப்படியாவது நோய் தீர்ந்துவிட்டால்போதும் சம்பாதித்துவிடலாம் எனும் நம்பிக்கையோடு மருத்துவமனைக்குப் போனால்....போலி மருந்துகள்...இது தெரியாமல் பல ஆண்டுகள்..எத்தனை எத்தனை உயிர்கள் பலியானதோ...யாரறிவார்..அந்த ஆண்டவனை அன்றி...இப்படி ஈடுபட்டவனைப் பெற்றவளும் ஒரு பெண்தானே? அவள் தாய்தானே?...அவளுக்குத்தான் இந்த வேதனை கவிதை...

அன்புள்ள அம்மா...
இந்த முகந்தெரியாத மகனின்
வேதனை வணக்கங்கள்....

என் மனைவி...என்னைப் பெற்ற தாய்...
என் பிள்ளைகள்..என் உறவுகள்...
இப்படியாக அடுத்தடுத்து
இழந்திருக்கிறேன்....

என் வேதனையெதற்கு உங்களுக்கு
என்று நினைக்கலாம்...

உங்கள் மகன்தான்
எங்களுக்கு மரணத்தை மருந்துகளில்
தந்தவன்...

மரண மிருகத்தை உங்கள் கருவறையில்
சுமந்து எங்கள்மீது ஏவிவிட்டிருக்கிறீர்கள்..
பலரைக் கொன்று வைத்த நெருப்பில்தான்..
உலை வைத்து உயிர் வளர்த்திருக்கிறீர்கள்..
மருந்துக்கூட மனிதனாக இல்லாதவன்
தந்த காசில்தான் நீங்கள் உங்கள் மானத்தை
மறைத்த ஆடை தொடங்கி எல்லா சுகத்தையும்
அனுபவித்திருக்கிறீர்கள்...

உங்கள் குடும்பம் வாழ அழகியவீடு
அதனால் பலகுடும்பம் கண்டதோ எரியும் சுடுகாடு..
பலருக்கு பிணமாலை
உங்களுக்குப் பணமாலை...

நியாயமா அம்மா...?

அம்மா ஒரு தாயாக நிற்கிறீர்கள்
உலகமெங்கும் உங்களை நினைக்கிறது..
எரிகிற பிணங்களின் முன்நின்று கண்ணீரோடு...

என்ன செய்யப்போகிறீர்கள்?

தன் மகன் போரில் புறமுதுகிட்டான் என்ற
சொல்லுக்காகப் பால்கொடுத்த மார்பை
அறுத்தெறிவேனென்ற தாய்கள் வாழ்ந்த தேசத்தில்..
பல தாய்களின் தாலிகளை அறுத்தவன்
உங்கள் மகன் புறமிருந்து...

என்ன செய்யப்போகிறீர்கள்?

உங்களின் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்
ஒரு தாயை இழந்த மகனின் கண்ணீர்...
ஒரு மகனை இழந்த தாயின் ரத்தம்...
ஒரு கணவனை இழந்த மனைவியின் துடிப்பு...
ஒரு மனைவியை இழந்த கணவனின் வேதனை..
என நிரம்பி வழிகிறது...

சாகும்வரை நின்று உறுத்தும்
இதற்கு மருந்தேதும் கிடையாது அம்மா..

உங்களுக்கும்...உங்கள்..
இனிவரும் எல்லா தலைமுறைக்கும்...

என்ன செய்யப்போகிறீர்கள் அம்மா....?

Friday, June 18, 2010

மடலேறுதல்


அன்புள்ள....

பெரும்பான்மை ரயில் பயணங்களிலும் பேருந்து பயணங்களிலும் பார்க்கமுடிகிறது. கொஞ்சம் வயல்கள்தான் பசுமையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாம் நடுகற்கள் நடப்பட்டு பிளாட்போடப்பட்டு வருகின்றன. மயானமானது வயல்கள் மட்டுமல்ல நமது வாழ்க்கையும்தான்.

வயல்களைப் பார்க்கிறபோதெல்லாம் போஸ்ட் ஆபிஸ் ஞாபகத்திற்கு வருகின்றது. எப்படியும் வயல்ல அறுத்துடுவேன். இந்தவாட்டி நல்லா வௌஞ்சிருக்கு..நமக்கு தும்பம் தொலையற காலம் வந்துடுச்சி....கரும்பு போட்டிருக்கேன். நல்ல வெல போகும் உனக்கு செய்ய வேண்டியத செஞ்சி எவன்கிட்டயாவது இழுத்துவிட்டுடலாம்... நல்லா படிடா மவனே..நம்ப வம்சத்துலே யாரும் காலேசிக்கு போகல...பணத்தப் பத்தி கவலைப்படாத..மாவுக்கு பதினஞ்சி முட்டை கண்டுமுதலு வரும்...ஜமாய்ச்சுடலாம்...படிச்சி ஆபிசரா ஆவணும்.. இத்தனை கனவுகளையும் ஒரு அஞ்சல் அட்டையில் யாரிடமாவது கொடுத்து எழுதச் சொல்லி அனுப்புவார்கள். எத்தனையோ கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன்..அஞ்சல் அட்டை வெறும் அட்டையல்ல அது உயிர்.

ஒரு தாயின் ஏக்கம்...பரிவு...பாசம்..எதிர்பார்ப்பு...மகிழ்ச்சி...துக்கம்..எல்லாம்..

ஒரு தந்தையின் பெருமை..சிறுமை..அவமானம்..அசிங்கம்..மகிழ்ச்சி..
துள்ளல்...வாரிசு பெருமை...எல்லாமும்..

ஒரு மனைவியின் அளவுகடந்த சொல்ல முடியாத ஆசைகள்..எதிர்பார்ப்பு...

ஒரு கணவனின் செயல்பாடுகள்...சாதனைகள்..நம்பிக்கைகள்..

ஒரு விதவையின் அவலம்..வாழமுடியாமல் போன வேதனைகள்..

ஒரு வாழாவெட்டியின் கொடுமைகள்...

இப்படி எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு கித்தான் பைக்குள் புழுங்கிக்கொண்டு அந்த அஞ்சலட்டை போகும்.

சொல்ல வந்தது இதுதான். யாரும் கடிதம் எழுதுவதில்லை இப்போது.

கடிதம் எழுதுவதே போயிற்று.

செல்போன் எனும் உயிர்க்கொல்லி உறவறுத்து..உறவின் வேரறுத்து..நம்பிக்கையை அறுத்து..வாழ்வின் சகலத்தையும் அறுத்து..உயிரைக் கொன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது.

கடிதம் ஒரு அற்புதமான வாழ்வின் அடையாளம்.

ஒரு நம்பிக்கையின் வேர் துளிர்விட்டிருக்கும்.
ஒரு வாக்குறுதியின் சிறகுகள் துடித்திருக்கும்.
ஒரு உறவின் உறுதிப்பாட்டை அது கனியாக்கியிருக்கும்.
ஒரு ஈடுகட்டமுடியாத துயரத்தையும் அது வாரி போட்டிருக்கும்.
ஒரு மகிழ்ச்சியை அது கட்டுக்கடங்கா நதியாய் பொங்கவிட்டிருக்கும்.

ஒரு கடிதம் வருகிறது என்றால் அது ஏதாவதொரு வாழ்வின் கருவிற்கு உணவு ஊட்டுகிறது என்று அர்த்தம்.

இப்போது எழுதவே வரவில்லை பலருக்கு. அப்புறம் எப்படி கடிதம் எழுதுவது.

எல்லாம் அலைஅலையாய் போகிறது பேசிகளில்..அதில் எதையும் மாற்றலாம்...ஏமாற்றலாம்...போலிகளைப் பிரசவிக்கலாம்..

ஒரு வாழ்க்கை செம்மையாக வாழ்ந்ததை பல கடிதங்களில்தான் கண்டெடுத்து அடுத்த தலைமுறை மகிழ்ந்திருக்கிறது..

வாரத்திற்கொருமுறையேனும் கடிதம் எழுதுங்கள். வாழ்வைத் தொலைக்காமல் இருக்கிறோம் என்றர்த்தம்.

கடிதம் வாசியுங்கள்..

அப்பாவின் கடிதத்தில் ஒரு நம்பிக்கையும் வாழ்வின் உயர்ச்சியும் இருக்கும்.

அம்மாவின் கடிதத்தில் அன்புதேன் சிந்தி இழையும்..

அக்காவின் கடிதத்தில் வாழ்வின் அர்த்தம் தெறிக்கும்..

தங்கையின் கடிதத்தில் இளமை துள்ளி... பொய்யாய் சண்டையிட்ட பொழுதுகள் தோன்றி கரையும்..

மாமாவின் கடிதத்தில் மயங்கிக் கிறங்கலாம்..

நண்பனின் கடிதத்தில் நமக்கு எல்லா இறக்கைகளும் கிடைக்கும்..

கடிதம் எழுதுங்கள். கடிதம் படியுங்கள்.

கடிதம் நமக்கு ஆறுதலைத் தரும். நம்பிக்கையை விதைக்கும்.

கடிதம் காயங்களுக்கு மருந்தாகும். நமது நேர்மையையும் பண்பையும் தக்க வைக்கும்.

கடிதம் நமது சுமைகளை இறக்கி வைக்கும். இளைப்பாற நிழல்களைத் தரும்.

கடிதம் நாம் போனபின்பும் வாழும் நமது பெயரில்.

கடிதம் நம் வாழ்க்கையின் சுவடு.

கடிதம் நம் வாழ்க்கையின் பிரதிநிதி. தலைமுறையின் வழிகாட்டி.

கடிதம் எழுதுங்கள். கடிதம் வாசியுங்கள்.

ஒரு பாய்ச்சல் மானைப்போல....பரந்து ததும்பும் நதியைப்போல...வானில் சுகமாய் மிதக்கும் பறவையைப்போல...நமது பிள்ளையின் பிஞ்சு விரல்களின் ஸ்பரிச உணர்வைப்போல...ஒரு நல்ல காதலைப்போல..

கடிதம் அற்புதமானது. அது ஒரு சுகம். கடிதம் தவ அமைதி.

Wednesday, June 16, 2010

குறும்புப்பேச்சு......



என் கண்ணப் பாத்து
சொல்லுங்க...

எங்களுக்குன்னு இலக்கியம்
அதிகம் இருக்கா?



இதையும்
பிளாட் போட
வர்றாங்களாம்..



சீரியல் பாத்துட்டு
என்னிக்கும்மா
வருவே?



எங்களுக்குக் கதைகள்
சொல்ல
அந்த
முதியோர் இல்லங்களை
மூடிவிட்டு
பாட்டிகளை
அனுப்புங்கள்.


ஒரு
பிள்ளைத்தமிழ்
பாடவா?



கனவு காணுங்கன்னு
கலாம் தாத்தா
சொன்னாரு..



டாடியும் மம்மியும்
பிரிகேஜி
இண்டர்வியுக்குப்
போயிருக்காங்க

என்ன பாக்குறீங்க....
அலாவுதீன் விளக்கு
கிடைக்குமா?
ஹோம்வொர்க்
செய்யணும்.

வாசிக்க...சுவாசிக்க...



புத்தகங்கள் வாசிக்காத யாரிடமும் பழகவேண்டாம். உயிர்வாழ சுவாசிப்பதைப் போன்றது புத்தகங்கள். காசுகொடுத்து வாங்கி வாசிக்கவேண்டும். வாசித்தல் என்பது அற்புதமானது. அது தாய்மையைபோன்ற அன்பைப் பரிமாறும். ஒரு மலர்ந்து வாசம் வீசும் போல அழகான தருணத்தைத் தரும். துன்பத்தின் வலிக்கு மருந்தாய் இருக்கும். நாம் உயிர்த்திருக்கிறோம் என்பதை அறிவிப்பவை புத்தகங்கள்தான்.


ஒருமுறையேனும் வாசித்துவிட......


1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்.
2. தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்.
3. மௌனியின் அழியாச்சுடர்.
4. ஜெயகாந்தன் சிலநேரங்களில் சில மனிதர்கள்
5. தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.
6. பாலகுமாரன் இரும்புக்குதிரைகள்
7. பிரபஞ்சன் சிறுகதைகள்.
8. நாஞ்சில் நாடனின் வாக்குப்பொறுக்கிகள்
9. சா.கந்தசாமியின் தொலைந்துபோனவர்கள்.
10.சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை
11. ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே
12. வண்ணநிலவனின் கடல்புரத்தில்
13. ஐசக். அருமைராசனின் கீறல்கள்
14. கோணங்கியின் மதினிமார் கதைகள்
15. விட்டல்ராவின் நதிமூலம்
16. சுஜாதாவின் நைலான் கயிறு
17. கல்கியின் பொன்னியின் செல்வன்.
18. நீல பத்மநாபனின் தலைமுறைகள்
19. லா.ச.ராவின் அபிதா
20. ஹெப்சிபா ஜேசுதாசின் டாக்டர் செல்லப்பா
21. ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்
22. அம்பையின் வீட்டின் மூலையில் சமையலறை
23. வாஸந்தியின் சிறுகதைகள்
24. கிருத்திகாவின் புகை நடுவில்
25. சிவகாமியின் ஆனந்தாயி
26. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்
27. பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்
28. ஜெயமோகனின் ஏழாம் உலகம்
29. விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி
30. எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து
31. எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதைகள்.
32. திலகவதியின் கல்மரம்
33. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல்
34. சி.எம்.முத்துவின் நெஞ்சின் நடுவே.
35. பட்டுக்கோட்டை பிரபாகரின் சிறுகதைகள்
36. தேவனின் துப்பறியும் சாம்பு
37. தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார்.
38. கார்த்திகா ராஜ்குமார் சிறுகதைகள்
39. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை
40. ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை
41. சி.ஆர்.ரவீந்திரனின் ஈரம் கசிந்த நிலம்.
42. ர.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள்
43. மு.மேத்தாவின் சோழநிலா
44. சாண்டியல்யனின் யவனராணி
45. ஆதவனின் காகிதமலர்கள்
46. சோலைசுந்தரபெருமாளின் செந்நெல்
47. யூமா வாசுகியின் இரத்த உறவு
48. கே.டேனியலின் கானல்
49. க.நா.சுவின் பித்தப்பூ
50. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்

இந்தப் பட்டியல் கன்னாபின்னா பட்டியல். என் நினைவிலிருந்து வருவது. பட்டியல் முடியவில்லை. பழைய வாசித்த நினைவுகளை அசைபோட்டபடியே தந்திருக்கிறேன். தொடர்ந்து பட்டியல்கள் தருவேன்.


வாசிக்கவென்று இலக்கிய இதழ்கள்.

1. தஞ்சையிலிருந்து வரும் சௌந்தர சுகன்..
2. திருச்சியிலிருந்து வரும் உயிர் எழுத்து...
3. சென்னையிலிருந்து வரும் யுகமாயினி...
4. பெங்களுரிலிருந்து வரும் புதிய விசை...
5. சென்னையிலிருந்து வரும் இலக்கியப்பீடம்..
6. புதுதில்லியிலிருந்து வரும் வடக்குவாசல்...
7. திருப்பூரிலிருந்து வரும் கனவு
8. சென்னையிலிருந்து வரும் தீராநதி...
9. சென்னையிலிருந்து வரும் தஞ்சாவூர்க்கவிராயர்...
10. பாண்டிச்சேரியிலிருந்து வரும் சுந்தர்ஜி..
11. கடலுர்ரிலிருந்து வரும் சங்கு...
12. புத்தகம் பேசுது
13. மணல் வீடு
14. சென்னையிலிருந்து வரும் உயிர்மை
15. கேரளாவிலிருந்து வரும் கேரளத்தமிழ்