Friday, December 31, 2010

கடைசித்துளி...



ஆண்டின் இறுதியில்தான்
எதனையுமே தொடங்கவில்லையென்று
உணர்கிறோம்...
தொடங்கியதான எதனையும்
முடிக்கவில்லையென்று
உணர்கிறோம்...
முடிந்த எல்லாமும் பயனில்லையென்று
உணர்கிறோம்...
ஆனாலும் தொடங்கியதென்றும்
முடிந்ததென்றும்
பயன் விளைந்ததென்றும்
ஒரு நம்பிக்கையின்
பற்றுக்கோட்டில்
நாள்களைக் கடக்கிறோம்
ஒவ்வோராண்டும்...

இவற்றில் கிடைத்த மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும் இடர்களையும்
தடைகளையும் சங்கடங்களையும்
அசிங்கங்களையும் அவமானங்களையும்
இழப்புக்களையும் ஏமாற்றங்களையும்
வெற்றிகளையும்
புன்னகைகளில் கொஞ்சமாகவும்
அழுகைத்துளிகளில் கொஞ்சமாகவும்
கரைத்துக்கொள்கிறோம்...

வாழ்வு கடந்துபோகிறது
புத்தாண்டில் வாழ்த்துக்களைப்
பரிமாறிக்கொள்கிறோம்..
ஒருசிறிதும் களைப்புறாமலும்
கவலையுறாமலும்
அழுக்குப்போகத் துவைத்து சலவைசெய்த
ஒரு சட்டையை அணிந்துகொள்வதைப்போல..
வாழத்தொடங்கிவிடுகிறோம்...

8 comments:

  1. //ஒருசிறிதும் களைப்புறாமலும்
    கவலையுறாமலும்
    அழுக்குப்போகத் துவைத்து சலவைசெய்த
    ஒரு சட்டையை அணிந்துகொள்வதைப்போல..
    வாழத்தொடங்கிவிடுகிறோம்//

    நாளை மற்றுமொரு நாளே ஹரணி.

    ReplyDelete
  2. நன்றி சுந்தர்ஜி. கணிப்பொறியைவிட வேகமாக இருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  3. Today was the tomorrow for yesterday when we had failed to plan for, and we realise it today. Better late than never. WISHING YOU A VERY HAPPY NEW YEAR. WITH LOVE AND REGARDS. GMB.

    ReplyDelete
  4. அன்புள்ள ஐயா..

    உங்களை நினைத்து வியக்கிறேன். உங்களின் பதிவுகளும் பிற வலைப்பூக்களின் பதிவிற்குத் தாங்கள் இடும் கருத்துரைகளும் மிகவும் பொறுப்பான உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த வயதில் உங்களின் இளமை வேகம் எங்களுக்கு முன்மாதிரி. நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. //அழுக்குப்போகத் துவைத்து சலவைசெய்த
    ஒரு சட்டையை அணிந்துகொள்வதைப்போல..
    வாழத்தொடங்கிவிடுகிறோம்...//
    அட்டகாசம் பேராசிரியர் ஐயா! உங்கள் கவிதைக்கு வாழ்த்து சொல்லும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்றாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்லியே ஆகவேண்டும்.
    உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நன்றி ஆர்விஎஸ். வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. பதவி தேவையில்லை. மனது மட்டுமே தேவை. உங்களின் நல்ல மனதிற்கு நன்றிகள். தொடர்ந்து வருக. உங்களுக்கு பெருகிவரும் நதியெனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஹரணி.
    கடைசித் துளி என்பது
    முதல் துளிக்கான
    முந்தையத் துளி
    என்று கொண்டால்
    எல்லாத் துளிகளும்
    சமமாகும்.
    புதிதாய்ச் சலவை செய்த
    சட்டை என்றாலும்
    கொஞ்சம் சந்தனமும்
    கொஞ்சம் சாக்கடையும்
    சிதறத்தான் செய்கிறது.
    இரண்டையும் ஒன்றேனப்
    பார்க்கும் தன்மை
    நமக்கு
    கடவுள்,இலக்கியம்,இசை
    மூலமாகக் கிடைத்துக்
    கொண்டேயிருக்கிறது.

    ReplyDelete
  8. சிவகுமாரன்...

    அடுக்கிப் பொங்குகிறது தமிழ். கவிமழை பொழிகிறது அழகுத்தமிழில்..நன்றி.

    ReplyDelete