Sunday, March 6, 2011

புறக்கணித்தல்


”தேர்தலைப் புறக்கணிப்போம்-எங்கள் குரல் கேட்கப்படும் வரை-
நாங்கள் விரும்பும் மாறுதல் ஏற்படும் வரை-”


இது சுந்தர்ஜியின் வலைப்பக்கத்திலிருந்து எடுத்த உறுதிமொழி.
ஓட்டுப்போடுவது அவரவர் தனிப்பட்ட உரிமை.சுதந்திரம். இதுகுறித்து எதுவும் சொல்ல கூடாது என்றாலும் இது வேண்டுகோள்தான்.

நாம் எல்லோரும் யோசிக்கவேண்டும்.

நம்மை முட்டாளாக நினைக்கிறார்கள்.
எது சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எது செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எதுவேண்டுமானாலும் செய்யலாம் இவர்களால் என்ன செய்துவிடமுடியும்? என்று நினைக்கிறார்கள்.
அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் எதுவும் செய்யாமல்தான் போய்க்கொண்டிருக்கிறோம்.

பொதுக்கூட்டங்கள்..ஊர்வலங்கள்..மாநாடுகள்...பிறந்தநாள் விழாக்கள்..எனும் பெயரால் அரசின் சொத்து - நமது சொத்து சூறையாடப்படுகிறது.படிக்கிற பிள்ளைகளுக்கு மின்சார வசதி கிடைப்பதில்லை தேர்வு சமயங்களில் மின்சாரத்தடை. இவர்கள் அளவுக்கதிகமான மின்சாரத்தை வீணாக்குகிறார்கள்.

நேர்மையான அரசியல் வேண்டும். நேர்மையான தலைவர்கள் வேண்டும். சாதியின் பெயரால்...வாரிசுகளின் பெயரால் அரசியல் அமையக்கூடாது.

மக்களை நினைக்கின்ற மக்களை வாழ வைக்கின்ற மக்களின் கண்ணீர் துடைக்கப்படுகின்ற மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிற அரசு அமையவேண்டும்.

இலவசங்கள் எனும் பெயரால் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான பண விரயத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை எனும் அடிப்படையில் செலவிட்டால் அது நிரந்தரத் தீர்வாக அமையும்.

எனவே தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். ஓட்டுப்போடாமல் அமைதியாக இருங்கள். இதுதான் நமது கடமை. அவர்களுக்கு காந்திய வழியில் அகிம்சை வழியில் நிருபிக்கவேண்டும்.

முறையான கல்வியைக் கற்றல்...நேர்மையாகப் பணியாற்றல்.. தகுதியோடு பணியுயர்வு...திறமைகள் மதிக்கப்படல்...பண விரயத்தைத் தடுத்தல்...மக்களின் பிரதிநிதிதான் தாங்கள் என்று உணர வைத்தல்...இவைதான் ஜனநாயக அரசின் அடையாளங்கள். அதை அடையும்வரை இவர்களுக்கு ஓட்டுப்போடுவது கூடாது.

படிப்பறிவு என்பது நல்ல சிந்தனையை வளர்ப்பதற்குத்தான். சிந்திப்போம். புறக்கணித்தல் என்பதும் புல்லர்களைச் சிந்திக்க வைப்பதுதான்.

17 comments:

  1. புறக்கணித்தல் என்பது முழுமையாக நடக்கா விட்டால், அதுவே கூட இப்போது இருக்கும் தீய சக்திகளுக்கு கொண்டாட்டமாகி விடும் அபாயமும் இருக்கிறது ஹரணி.

    ReplyDelete
  2. ரொம்ப கஷ்டம் சார் புறகணிப்பு ஒரு ஓட்டு கூட விழாமல் இருக்க வேண்டும் இல்லையேல் வேஸ்ட்

    ReplyDelete
  3. உண்மைதான் ரிஷபன். ஆனாலும் மனம் கொதிக்கிறது. ஒன்று ஓராயிரம் ஆகவேண்டாம். ஒன்று பத்தாகட்டும். பத்து பல லட்சமாகும். அதற்குக் காலங்கள் பிடிக்கும். நாமிருந்து பார்ப்போமா எனத் தெரியாது. ஆனாலும் நம்முடைய வரும் தலைமுறைகள் பிழைக்கும். ஒரு கடுகளவேனும் நம்முடைய செயல்குறித்து பேசும். நம்புவோம்.

    ReplyDelete
  4. எல்கே...

    அவ்வளவு ஆசையில்லை. நடக்காது அது தெரியும். இறைவன் அவதாரம் எடுத்து வதம் செய்வதுபோல நடப்பது அது. ஆனாலும் நம்புவோம். சிறுதுளிதான் பெருவெள்ளம். தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும் தருமமே வெல்லும். இது சத்தியம். பாரதியின் வாக்கு என்றைக்கும் பொய்க்காது.

    ReplyDelete
  5. சிந்திக்கத் தூண்டும் பதிவு
    எனது பதிவுக்கு தங்கள்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. நான் மாறுபடுகிறேன்.சுயமரியாதை உள்ளவர்கள்..எளிமையானவர்கள்.. நல்லவர்கள்..
    வாசலுக்கு வெளியே தயக்கத்துடன் காத்துக் கொண்டு இருக்க, முட்டாள்களும்,முரடர்களும்,மூடர்களும் கதவை உடைத்துக் கொண்டு,கட்டிலிலும்,சோஃபாக்களிலும் அட்டகாசத்துடன் அமர்வதை நீங்கள் போடாத ஓட்டால் தடுத்து விட முடியாது!மெஜாரிட்டி தீர்மானிப்பதை ஒட்டித் தான் நாடு செல்லும்! நீங்கள் ஓட்டு போடாவிட்டால் வேறு யாரோ ஒருவர் அந்த ஓட்டைப் போட்டு விடுவார்கள்..அவர்கள் யார்? நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்! நம்மைத் தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்..போனதெல்லாம் போகட்டும்!ஓட்டுப் போடும் நாம் முதலில் நம்மை மேம்படுத்திக்
    கொள்வோம்.ஒருவர்..ஒருவராய் எத்தனைக் காலம் ஆனாலும் சரி! நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வோம்! நாம் நல்லவர்கள் ஆவோம்! நம் பிரதி நிதகள் நம்மை ப்ரதிபலிப்பார்கள் நிச்சயமாய்!!

    ReplyDelete
  7. ஆத்திரமும் கோபமும் நன்றாகப் புரிகிறது. வெளிப்படுத்தும் முறை பற்றி நிறையவே சிந்திக்க வேண்டும்.பத்தாயிரம் பேருள்ள ஒரு ஊரில் நூறு பேரே ஓட்டுபோட்டு அதில் பெரும்பான்மை வாங்கினாலும் ஜெயித்து விடலாம் ஓட்டு போட விருப்பமில்லை என்றோ வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றோ அறிவிக்கும் முறையில் ஒட்டுச்சாவடிக்கே சென்றுபதிவு செய்யலாம். அந்த தார்மீக எதிர்ப்பு அரசாங்கத்தை சற்றேனும் சிந்திக்க செய்யக்கூடும். எதிர்ப்பை தெரிவிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஓட்டுப் புறக்கணிப்பில் ரிஷபன், ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி போன்றோரின் கருத்து எனக்கு சரியென்றே படுகிறது.

    ReplyDelete
  8. நன்றிகள் ரமணி சார்.

    ReplyDelete
  9. ஆர்ஆர் ஐயா.

    நீங்கள் மாறுபடவில்லை. என்னுடைய இலக்கிலேதான் பயணிக்கிறீர்கள். ஆனால் வேறு வாகனத்தில். உங்கள் கருத்து முழுக்கமுழுக்க சரிதான். எனக்கும் தெரியும். ஒரு தனிமனிதனின் புறக்கணிப்பு கடலில் கரைத்த கடுகு என்பது. தேர்தலின் அத்தனை அசிங்க நாடகங்களும் யாவரும் அறிந்ததே. என்னுடைய நோக்கம் அதுவன்று துளித்துளியாய் நாம் புறக்கணிப்பு செய்யும்போது அது காலத்தின் ஒருநாளில் பெருங்கடலாகும். ஆழிப் பேரலையாகும். நீங்கள் செய்வதுபோல சுயபரிசோதனையின் ஒரு அத்தியாயம் இதுவும்தான். உங்களின் கணமான பகிர்தலுக்கு மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  10. உங்கள் கருத்தை முழுக்க ஏற்கிறேன் ஜிஎம்பி. ஐயா. ஆனாலும் என்னுடைய நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளலே இந்தப் பதிவு. இந்தப் புறக்கணித்தல் நிச்சயம் கவனம் பெறும். நம்புகிறேன். உங்களின் பதிவிற்கு என்னுடைய பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  11. தலைவா "49 ஓ" இருக்கு. அதைப் பயன்படுத்துவோம்.

    ReplyDelete
  12. அய்யா
    நாகா சொல்வது போல் 49 -O பயன்படுத்துவோம்.
    இதுவும் ஒருவகை புறக்கணிப்பு தான். அரசுக்கும் தெரியவரும்.
    முக்கியமாய் வலைப்பதிவு தோழர்கள் அனைவரும் ஒருமித்து நம் எதிர்ப்பை காட்டுவோம். அதை அரசாங்கத்தின் காதுகளில் விழும்படிச் செய்வோம்.

    ReplyDelete
  13. உணர்த்துதல் என்பதுதான் முக்கியம். அதை அழுத்தமுற உணர்த்தவேண்டும் என்பது அதைவிட முக்கியம்.

    நன்றி நாகா.
    நன்றி சிவகுமரன்.

    ReplyDelete
  14. என் புதிய வலைத்தளத்துக்கு வாருங்கள் பேராசிரியர் அவர்களே

    ReplyDelete
  15. நான் கூட உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் அய்யா.... தேர்தலை ஒட்டி நடக்கும் விளையாட்டுக்கள் எல்லாம் எரிச்சலூட்டுவதாகத் தான் இருக்கிறது.....

    ReplyDelete
  16. நன்றி கிருஷ்ணப்பிரியா புரிதலான உணர்விற்கு.

    ReplyDelete
  17. பொருத்தமான சுழலில்
    பொருத்தமான சிந்தனை
    தம்பியின் எண்ணம்
    தரணியெங்கும் பரவட்டும்!
    நெஞ்சம் நிறைந்த அண்ணன்
    உதயசூரியன்

    ReplyDelete