Thursday, December 1, 2011

கொஞ்சம் அரசியல்

?



ஒன்று

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்று நடைபெறும் கடையடைப்பு முழுமையாக இல்லை. பல கடைகள் திறந்துளளன. காரணம் அவர்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை போலும். இது அனுமதிக்கப்பட்டால் மீண்டும் வாணிபம் செய்ய வந்து நாட்டைப் பிடித்த கதையாகும். மாநில அரசுகளை வற்புறுத்தவில்லை. அவரவர் விருப்பம் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தாலும் எதிர்காலச் சூழலில் கூட்டணியாக தேர்தல் களத்தில் நிற்கும்போது இது மாறுவதற்கு இடமிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் அதற்கடுத்த நிலையிலுள்ள சிறுபான்மை பலமுள்ள கட்சிகளும் உறுதியாக இருக்கவேண்டும். எச்சூழலிலும் அனுமதிக்கக்கூடாது இதனை. இதுவே நமது வேண்டுகோள்.



இரண்டு

நிலம் விற்றல், வாங்கல், நில அபகரிப்பு இவற்றில் தமிழக அரசின் நடவடிக்கை மிகத் திருப்தியாக உள்ளது. தங்கள் வாழவின் கனவும் இலட்சியமும் ஒரு மனைவாங்கி பின் கடன்வாங்கி வீடுகட்டுதல்தான் என்றிருக்கும் நடுத்தர மக்களுக்கு இது ஆறுதலான நடவடிக்கையாகும். எனவே தமிழக முதல்வரைப் பாராட்டலாம். இன்னும் பின்வரும் சில வேண்டுகோள்களைக் கருதிப் பாரத்தால் அது இன்னும் நலம் பயக்கும்.

1. மனைவாங்குபவர் யாராக இருந்தாலும் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத்
தெரிவிக்கவேண்டும். அதற்கான வருவாய் எங்கிருந்து ஈட்டியது என்கிற
விவரம் தெரிவிக்கவேண்டும்.

2. ஓரு மனை வாங்கியவர்கள் அடுத்த மனை வாங்குவது குறிப்பிட்ட சில
ஆண்டுகளுக்குப் பின் எனக் கட்டாயமாக்கவேண்டும்.

3. மனை விற்பவர்கள் மனை வாங்குபவர்களிடம் பத்திரப் பதிவு செய்து தருவதோடு
அதன் தொடர்பான மூல ஆவணப்பத்திரங்களையும் எவ்வித வில்லங்கமும் இல்லை
என்கிற சான்றிதழையும் தொடர்ந்து குறிப்பிட்ட மனைக்குரிய கூட்டுப்பட்டா,
தனிப்பட்டா எனத் தொடர்புடைய ஆவணங்களையும் வாங்கிக் கொடுத்துவிட
வேண்டும். இதற்குரிய தொகையை மனை வாங்குபவர்களிடம் வாங்கிக்
கொள்ளலாம்.

4. அவ்வாறு வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் திரும்ப மனையைப் பெற்றுக்
கொண்டு உரிய தொகையைத் திருப்பியளித்துவிடவேண்டும்.

5. எக்காரணத்தை முன்னிட்டும் எச்சூழ்நிலையிலம் விளை வயல்களை மனைப்
பிரிவிற்கு அனுமதிக்கக்கூடாது. இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

6. மாதத் தவணைத் திட்டம் வழியாக மனை விற்பவர்கள் பற்றிய முழு விவரங்
களை அரசு பெறவேண்டும். தவிரவும் இதில் பணம் செலுத்துபவர்களுக்கு
போடப்பட்டுள்ள மனைப்பிரிவுகளை அழைத்துச் சென்று காணபிக்கவேண்டும்.

7. மனைப்பிரிவுகளில் இவர்கள் ஒதுக்கும் இடங்களில் பூங்கா போன்றவற்றை
உடன் உருவாக்கித்தரவேண்டும் அதன்பின்னரே அவர்கள் பிளானை வரன்முறைப்
படுத்தவேண்டும்.


மூன்று

கேரளாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் சிறுபெண்ணிற்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சந்தோஷ் என்னும் பாதிரியார் தாமாக முன்வந்து தானம் அளிக்க வந்தும் மருத்துவத் தர்மம் அனுமதிக்கவில்லை என்கிற செய்தி இவ்வார குமுதத்தில் வந்துள்ளது. வாழவேண்டும் என்று சொல்லுகிற பெண்ணை ஏன் சாக விடுகிறீர்கள் என்று அந்தப் பாதிரியார் கேட்டுள்ளார். இதில் அரசு தலையிட்டு மனிதாபிமானமிக்க முறையில் அந்த பெண்பிள்ளையை வாழ அனுமதிக்கவேண்டும்.


நான்கு

விலங்குகள் மீது பரிவுகாட்டும் புளுகிராஸ் எனும் அமைப்பிற்கு அன்பான வேண்டுகோள். நாய்களைக் கொல்லக்கூடாது எனும் உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனாலும் தெருவிற்குப் பத்துநாய்கள் ஒவ்வொருநாளும் படுத்தும் பாட்டை, அதனால் பொது மக்கள் படும் இன்னல்களை ஏன் கருத்தில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள் எல்லா தெருநாய்களையும் சேகரித்து எங்காவது தனியிடத்தில் உங்கள் பராமரிப்பில் வைத்துப் பரிவுகாட்டுவது நலமாக இருக்கும் அல்லவா

10 comments:

  1. திரு.ஹரணி ஐயா, உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடலாமா வேண்டாமா என்ற பலத்த சிந்தனைக்குப் பிறகு இதனை பதிவிடுகிறேன். மாறுபட்ட கருத்தானாலும் மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். வணிகர்களாக வந்து நாடு பிடித்த அக்காலம் வேறு .குட்டிகுட்டியாக தனி அரசுகள் தங்களுக்குள் குடுமி பிடித்து அடித்துக்கொண்ட காலம் அது.இப்போது இந்தியா ஒரு பெரிய குடியரசு.
    அரசு எது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனோபாவம் எதிர்க் கட்சிகளிடம் இருப்பதால் எல்லோரும் சகட்டுமேனிக்கு எதிர்க்கிறார்கள். நாட்டுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இப்போது பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் என்று நாம் ஏன் எண்ண வேண்டும்.?இப்போதும் நகரங்களில் பெரிய கடைகளும் மால்களும் இருக்கின்றன. அதனால் சிறிய அளவு வர்த்தகம் நடக்காமல் இல்லை. ஐம்பது பைசா சாக்கலேட்டுகளும் ஐந்து ரூபாய் சாக்கலேட்டுகளும் விற்பனை ஆகின்றன. வாடிக்கையாளர்கள் வேறு வேறு. இதேபோல் ஒரு காலத்தில் கணினியை அமல்படுத்துவதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் இன்று கணினி வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கமாகிவிட்டது. பெரிய முதலீட்டாளர்கள் வந்தால் தயாரிப்பவர்லிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்யலாம். அதனால் இடைத்தரகர்கள் குறையலாம். உற்பத்தியாளனுக்கு நல்ல விலை கிடைக்கலாம். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு கோரிக்கைக்காக போராடலாம். அதாவது எந்த முதலீட்டாளரும் அவர்கள் விற்க இருக்கும் பொருட்களை நம்மிடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். இந்த பரந்த தேசத்தில் எல்லோருக்கும் இடமுண்டு. ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் இருக்கலாம். டீக்கடைகளும் இருக்கும், உடுப்பி ஓட்டல்களும் இருக்கும். இதெல்லாம் என் மனதில் எழுந்த கருத்துக்கள். நான் சாதாரணமாக அரசியல் கருத்துக்கள் எழுதுவதில்லை. ஆனால் இது அரசியல் அல்ல. சிந்திக்க வைக்கும் ஒரு கருத்துப் பரிமாற்றம். அவ்வளவே.

    ReplyDelete
  2. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். வித்தியாசமான கருத்துக்கள் ஐயா! தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு வாழ்த்துக்கள்.நன்றி ஐயா!
    எனது தளத்தில்:
    "மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"


    இதையும் படிக்கலாமே:"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"

    ReplyDelete
  3. பரபரப்பில் கவனிக்கவேண்டிய
    நாம் கவனிக்காது போகிற விஷயங்கள் மிக அழகான
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம். தங்களின் கருத்துரைக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் கருத்துரைக்கு நான் ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரை எழுதியே பதில்அளிக்கவேண்டும். எந்தவொன்றையும் அலட்சியமாகக் கருதிவிடமுடியாது. தாங்கள் குறிப்பிட்டதுபோல குட்டிகுட்டி அரசுகளிடம் இருந்த தெளிவும் நிர்வாகமும் (விதிவிலககுகளை விட்டுவிடுவோம்) இன்றைக்கு ஒவ்வொரு மாநில அரசிடமும் இல்லை. ஒவ்வொன்றும் இப்போது ஒரு குட்டிஅரசுக்கான மனோபாவத்துடனேயே இயங்குகின்றன. இது ஒரு தனி கதை. அரசு எது செய்தாலும் எதிர்ப்பது என்பதல்ல. ஆனாலும் சிறு எதிர்ப்பு வந்தாலும் அரசின் எந்தவொன்றும் விவாதத்திற்குரியதுதான். சான்றாகக் கூடங்குளம் பிரச்சினையில் ஒரு நாட்டின் ஜனாதிபதியையே மாறாகப் பேசவைத்திருக்கும் அரசின் செயல்பாட்டை எனனவென்பீர்கள்? இந்த மாதம் தீராநதியில் வெளிவந்திருக்கும் பேராசிரியர் அ.மார்க்ங்ஸ கட்டுரையைப் படிக்கவேண்டும்.

    இப்படித்தான் பிரிட்டிஷாரின் வர்த்தகம் தொடங்கியது. இன்றைக்கு இந்திய முழுக்கத் தாங்கள் குறிப்பிடுவதுபோல அயல்நாட்டு வர்த்தகம் இருக்கத்தான் செய்கிறது. அது மொத்த வியாபாரம் எனும் நிலையில் உள்ளது. ஆனால் நம்முடைய இந்தியாவில் சில்லறை வணிகத்தில்தான் வாழ்வின் ஆதாரமே அடிப்படையே வேராக இறுகிப் பிடித்திருக்கிறது. அதை அலட்சியமாகக் கருதமுடியாது.

    எந்த கருத்தையும் நான் அலசி பார்ப்பேன். உங்கள் கருத்தையும் நான்கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் இது தொடர்பாக வெளிவரும் இதழ்களின் செய்திகனை வல்லுநர்களின் கருத்துக்களை சேகரித்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனவே இந்த விவாதம் உங்களுடன் தொடரும். ஆனாலும் இது மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கவேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளையும் மாநில அரசின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிப்போம்.

    இது குறித்து மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் வாசித்துவிட்டு பின் பெரும்பான்மை நிலையில் ஒரு முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன. மறுபடியும் தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. வணக்கம் தனபாலன். உங்கள் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி. உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்.

    ReplyDelete
  6. ரமணி சார்..

    இந்தப் பதிவு குறித்து நீங்கள் அறிந்தவற்றின் அடிப்படையில் கருத்துரையுங்கள். அது சமூகத்தின் பயனாகும். நன்றி.

    ReplyDelete
  7. நிறைய விஷயங்களில் நமக்குத் தெரிந்த தகவல்கள் கொஞ்சம் தெரியாத தகவல்கள் கொஞ்சமாய் இருக்கின்றன. அதனால்தான் இது சரி அல்லது இது தப்பு என்று சொல்ல முடியவில்லை. ஊடகங்கள், பத்திரிகைகள் தருகிற தகவல்களைப் பார்க்கும்போது மாறுபட்ட கோணங்கள் இருக்கின்றன. சற்று பொறுமையாய் இருந்தால் பின்பு அறிய வருகிற போது நமது முந்தைய முடிவு மறு பரிசீலனைக்கு ஆட்படுகிறதும் நிஜமே.

    ReplyDelete
  8. முதலாவது சரியான வாதம்.

    இரண்டாவது... பாராட்டு தேவையில்லாதது. பழி வாங்குதல் நடவடிக்கையின் விளைவு அது. சொத்துக் குவிப்பு வழக்கில் திணறும் அம்மையார் இந்த பாராட்டுக்கு தகுதியானவர் அல்ல.

    மூன்றாவது --- அது எப்படி மருத்துவ தர்மம் ஆகாது என தெரியவில்லை.

    நான்காவது.. ஏற்றுக் கொள்ளக் கூடியது நிச்சயமாய் ( கடி வாங்கியவன் என்ற முறையில் )

    ReplyDelete
  9. அன்புள்ள ரிஷபன்...

    சிலவற்றை நாம் கண்ணுறும்போதே கண்டுவிட முடியும் அது சரியில்லை என்று. அன்னிய முதலீடும் அப்படித்தான். இருப்பினும் பொறுத்திருந்து பேசுவோம்.

    ReplyDelete
  10. சிவகுமரன்...

    எப்படியேனும் மக்களுக்கு நன்மை விளையவேண்டும் என்கிற ஆர்வமே பாராட்ட வைக்கிறது. தங்கள் கருத்துரைக்கு நன்றிகள். இருப்பினும் இதுவரை நிகழ்ந்தவை எல்லாம் முரண்பட்டே நடககின்றன என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. பேருந்து கட்டணம் உயர்த்தியதிலும் பால் விலையை உயர்த்தியதிலும் பேசாமல் டாஸ்மாக்கில், பீடி, சிகரெட் இவற்றில் ஏற்றியிருக்கலாம் குடிப்பவர்கள் எப்படியும் என்ன விலை கொடுத்தாவது குடிப்பார்கள். பார்ப்போம் தொடர் நிகழ்வுகளை.

    ReplyDelete