Tuesday, January 4, 2011

எண்ணங்கள்


நான்காக மடிக்கப்பட்டு
சாலையின் ஓரமாய் கிடந்தது
அந்த வெள்ளைத்தாள்...

காற்று அதனை எழுப்பிக்
கொண்டிருந்தது..

எடுத்துப் பார்க்கையில்
எதுவும் எழுதப்படாமல்
இருந்தது..

நினைவில் பொங்கின
எண்ணங்கள்...

உனது அன்பை எழுதுவேன்
என்றாள்...

உனது பரிவை எழுதுவேன்...
என்றது குழந்தை...

உனது அவமானத்தை எழுதுவேன்
என்றது உறவு...

உனது பலவீனத்தை எழுதுவேன்
என்றன சுற்றம்...

உனது போராட்டத்தை எழுதுவேன்
என்றது காலம்...

உனது சகிப்புத்தன்மையை எழுதுவேன்
என்றது சந்தர்ப்பம்...

உனது பற்றுதலை எழுதுவேன்
என்றது நட்பு...

உனது வாழ்வியலை எழுதுவேன்
என்றது கவிதை...

எண்ணங்கள் இறைந்தோடின
காற்றுவெளியெங்கும்...

கடவுள் வந்தார்
நீயென்ன எழுதுவாய் என்றார்
மௌனத்தை எழுதுவேன் என்றபடி
தாளை அவரிடம் நீட்டிவிட்டு
இதிலென்ன நீங்கள் எழுதுவீர்கள்
என்றேன்...

கடவுள் சொன்னார்
நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்
அவரவர்க்கான எண்ணத்தை
என்றபடி மறைய,
இப்போது தாள் என்னிடமே....