Tuesday, January 17, 2012

வாசிக்கலாம்...



                      நீதிச்சார அனுபவத் திரட்டு என்று ஒரு புத்தகம். சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த இது புத்தக வடிவில் அச்சாகியிருக்கிறது.

                     தமிழகத்தின் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நுர்லகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடாக வந்துள்ளது. பதிப்பித்த ஆண்டு. 2002.

                        கி.பி.1788 இல் நாகை சத்தியஞானி என்ற புலவரால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நீதிப்பனுவர் இது. மானிடர் இயல்பு நீதி இயல்பு எனும் இரு பிரிவுகளாகப் பாடப்பட்டுள்ளது.

                       எளிமையான சொற்கள். எளிமையாக செய்தியைச் சொல்லுகிறது. ஒருமுறை படிக்கலாம்.

                      சான்றாக ஒரு பாடல்

                               - உடன்தனில் பிணியணுகா வகைநீக்கி
                                      மந்தமா முண்டுயுமே நீக்கி
                                  படிறுசினந் துயிநீக்கிப் பருதிவரு
                                      முனமைந்து நாழிகையி லெழுந்து
                                  முடிவுநிறை கல்வியருண் நிறையாசான்
                                       தனையணுகி முற்றமுயல் வோர்க்குக்
                                   கடல்போலுங் கல்வி வருங் கருத்தில்லா
                                       தவர்களுநற் கருத்தினரா லாரே...

                     பாடலின் பொருள்

                                     கடல்போலக் கல்வி பெருக ஆசிரியர் தரும் உத்திகளே இப் பாடலின் பொருளாகும்.

                               அவை

                                    1,    நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
                                    2,    பெருந்தீனியை நிறுத்துங்கள்.
                                    3.    பொய் பேசாதீர்கள்.
                                    4.    கோபத்தை ஒழியுங்கள்.
                                    5.   சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகை முன்பே எழுந்துவிடுங்கள்.
                                    6.   நன்கு கற்ற ஆசிரியரை அணுகிக் கற்றுக் கொள்ளுங்கள்.

                  எவ்வளவு எளிமையான உத்திகள் பாருங்கள்.

                   எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு?   ஆச்சர்யமாக இல்லை?

                    அனுபவிக்கலாம்..   மேல் விளக்கம் புரிதலுக்காக.


                      நல்ல உடல்திறம் இருந்தால்தான் கற்க முடியும்.
                      பொய் கூறும் நெஞ்சத்தில் உண்மைக்கல்வி ஏறாது. ஏறினாலும்
                      அதனால் பயன் இல்லை.
                      வயிறு நிறையத் தீனி தின்பவன் மந்தமாவான். சிந்தை மந்தமானால்
                      கல்வி ஏறாது.


                        படிறு - பொய்... நாழிகை 24 நிமிட நேரம்.
                     
                        இன்னொரு வாசிப்பில் சந்திக்கலாம்.
                     
            

8 comments:

  1. வணக்கம்.கி.பி.1788 இல் நாகை சத்தியஞானி என்னும் புலவரால் இயற்றப்பட்ட கல்வி குறித்த பாடலை இத் தலைமுறையினர் அறியத் தந்தமைக்கு நன்றி.வெற்றி விழுக்காடு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பள்ளிகள் இயங்கும் இன்றையச் சூழலில், மாணவர்களின் உடல் நலனையும், மன நலனையும் குறித்து கவலைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து வருகின்றது என்பதே மறுக்க இயலாத உண்மையாகும்.இந்நிலை மாறுவது எந்நாளோ?

    ReplyDelete
  2. எனக்கு ஒரு சந்தேகம் ஐயா.சுவடியிலிருந்து பதிப்பிக்கப் பட்டு புத்தக வடிவில் வந்திருக்கும் இந்நூலில் தமிழ் எழுத்துக்களின் வடிவம் எப்படி யிருக்கிறது. கோயில்களில் காணும் தமிழ் கல்வெட்டுகள் பலவும் படித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் இக்கேள்வி. நன்றி.

    ReplyDelete
  3. வாழ்வை எளிதாக இனிமையாக நடத்துவதற்கு ஒரு சுலபமான உக்தி இது.
    சொல்வதற்கு சுலபம் என்றாலும் தினசரி வாழ்வில் எத்துணை கடினமாகிவிடுகிறது !!

    சுப்பு ரத்தினம்.
    http://Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  4. அரிதான நல்ல பாடல் நன்றி ஐயா...

    ReplyDelete
  5. கல்வியின் பயனை முழுவதுமாய் அடைய என்றைக்கும் பொருந்தும் அருமையான உத்திகள். பழம்பாடற்பகிர்வுக்கு மிகவும் நன்றி ஹரணி சார்.

    ReplyDelete
  6. கடல் போலுங் கல்வி...
    கண்கள் மூடி யோசிக்கையில்
    அலையடிக்கிறது.
    தெரியாத விஷயங்கள் நிறைய உள்ளன.
    அறிமுகப் படுத்தவும்.

    ReplyDelete
  7. நல்ல கருத்துடன் கூடிய பாடல்!

    ReplyDelete