Thursday, February 16, 2012

உன்னோடு வாழ்தல் அரிதல்ல விதி....



                                     உருவமற்றிருக்கிறாய்..
                                     எந்த உருவத்தையும்
                                     உருவற்றாக்குகிறாய்...

                                     உன்விருப்பமாய் உன்னாட்சி
                                     தன்னாட்சி கட்டுப்பாடற்று...

                                     தவிக்கவிடுகிறாய்...
                                     சங்கடப்படுத்துகிறாய்...
                                     கோபமூட்டுகிறாய்...
                                     கொந்தளிக்க வைக்கிறாய்..
                                     கொள்ளி வைத்ததுபோல
                                     அதிர வைக்கிறாய் ஏனென்று
                                     தொட்டுக்கேட்டால்...

                                      என்ன செய்துவிடமுடியும் என்னை
                                      என்று கேட்பதில்லை..
                                      ஆனால் எல்லாமும் செய்கிறாய்..
                                      எல்லாமும் அசைவற்றுப்போகிறது...

                                       முணுமுணுக்கிறாய்...
                                       முட்டி மோதுகிறாய்..
                                       நெருப்பு வீசவும் செய்கிறாய்.
                                       நெஞ்சுபொறுக்காது வெடிக்கிறாய்..
                                       வேதனைப்படுத்தியோடுகிறாய்...

                                        உன்னை என்னதான்
                                        செய்துவிட முடியும்?
                                        அந்த துணிவுதான் உனக்கு.....
                                        நீயின்றி எதுவுமில்லை...
                                        கர்வத்தில் கரைந்திருக்கிறாய்
                                     
                                        வாழ்வது அவரவர் விருப்பமென்றாலும்
                                        வாழ்தலில் நீதான் முக்கியம்
                                        நம்பித்தான் வாழ்கிறோம்...
                                        நம்பாது வாழ்ந்தாலும் அஞ்சாதிருக்கிறாய்..

                                         உன்னோடு வாழ்தல் அரிது
                                         அரிதாயினும் வாழ்தல் விதிதான்...
                                                                          
                                         
                                          மின்சாரமே...மின்சாரமே....

                                          

12 comments:

  1. உன்னோடு வாழ்தல் அரிது
    அரிதாயினும் வாழ்தல் விதிதான்

    மின்சாரமே...மின்சாரமே

    Ha ha ha... super twist !

    ReplyDelete
  2. ஆஹா... அற்புதம். சம்சாரத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைத்தால் மின்சாரத்தைச் சொல்லி அதிரடி கொடுக்கிறீர்களே...

    கடைசி பத்தியை நீக்கினால் அட்டகாசமான சிலேடையாகிவிடும். பிரமாதம் ஹரணி சார்.

    ReplyDelete
  3. பழக்கப் பட்டு விட்டோம். மின்சாரம் வாழ்க்கையின் முக்கிய சாரமாகிவிட்டது. நம் முன்னோர்கள், ஏன் முன்னோர்கள், என் இளவயதில் மின்சாரம் இல்லாமல் இருந்ததும் நினைவுண்டு. பிடிக்காதவற்றை உதற முடியும். மின்சாரம் மிகவும் பிடித்துப் போனது. உதற முடியவில்லை. மீட்டெடுக்கவும் முடியவில்லை. மின் விசிறியும் விளக்கும் இல்லாத நேரத்தில் வெளியாகும் ஆதங்கம் ரசிக்க வைக்கிறது ஐயா.

    ReplyDelete
  4. அன்புள்ள ரிஷபன்...

    நன்றிகள். முழுக்க அங்கதச் சுவைக்காக எழுதியது. மின்சாரம் இல்லாமல் எப்படியிருக்கமுடியும்? நாளெல்லாம் மின்வெட்டால் பிளாக்கரில்கூட ஒழுங்காகப் பதிவுகளையும் பிற பதிவர்களைப் படித்து பின்னுர்ட்டம் எழுதமுடியாத சூழல். நன்றிகள்.

    ReplyDelete
  5. கீதா அவர்களுக்கு...

    எழுதும்போதே நினைத்தேன். இருப்பினும் ஏதேனும் கருத்துரை வந்தால் நீக்கிவிடுவோம் என்று தயாராக இருந்தேன். வந்துவிட்டது. நீக்கிவிட்டேன். இருப்பினும் நீக்காமல் பதிந்திருந்த வரிகளும் முழுக்க அங்கதச் சுவைக்காக மட்டுமே. நன்றிகள்.

    ReplyDelete
  6. அன்புள்ள ஜிஎம்பி ஐயா..

    என்னுடைய கணிப்பொறியில் பணிபுரியும்போதே மின்னல்வெட்டுவதுபோல திரை மின்னிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பரை வரச்சொல்லியிருக்கிறேன். எனவே இது சரியானதும் உங்கள் பதிவுகளுக்கு வருவேன். பொறுத்தருள்க. தங்கள் கருத்துரைக்கு நன்றிகள். இப்போது நாளெல்லாம் எனக்கு மின்சாரப் பெண்ணிடம்தான் அதிகம் பிரச்சினைகள்.

    ReplyDelete
  7. இப்படியொரு படைப்பை உருவாக்கும் அளவிற்கு மின்சாரம் படுத்துகிறது.விதியைப் பற்றி சொல்கிறீர்கள் என்றே நினைத்தேன்.

    ReplyDelete
  8. வ‌யிறு ப‌டுத்தும் பாடு தாண்டி வாய்த்த‌வ‌ள் ப‌டுத்தும் பாடும் தாண்டி... வாழ்வின் ஆதார‌மாய் ஆகிப் போன‌ மின்சார‌த்தை என்ன‌ சொல்ல‌...?! சிரிப்பும் ச‌லிப்பும் ச‌ரிவிகித‌மாய் க‌விதையின் ஜொலிப்பு.

    ReplyDelete
  9. நன்றி திருமதி ஸ்ரீதர்.

    ReplyDelete
  10. நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  11. மூன்று நாட்களாக,காலையும், மாலையும் எனது கருத்தைப் பதிய முயற்சி செய்யும் போதெல்லம்,இரண்டாவது வரியினைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கையிலேயே,பீப்.. பீப்.. என்ற யு.பி.எஸ்.,ன் ஒலிதான் வருகிறேதே தவிர, எழுத்துக்கள் திரையிலிருந்து, மின்சாரத்தைப் போல் காணாமல் போகின்றன.மின்சாரத்தோடு வாழ்தல் அரிது அரிதாயினும் வாழ்தல் விதிதான்...அருமை, இன்றைய வாழ்வின் யதார்த்தம்

    ReplyDelete
  12. என் தனிப்பட்டக் கருத்துக்கும் மதிப்பளித்து கவிதையின் வரிகள் நீக்கியப் பெருந்தன்மை கண்டு நெகிழ்கிறேன். மகிழ்வோடு நன்றி ஹரணி சார்.

    ReplyDelete