Wednesday, April 25, 2012

பகிர்வுகள்



               வணக்கம்.

               தொடரும் பணிகள். இடையே கிடைத்த வாய்ப்பில் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

               1. மனதிற்கினிய எழுத்தாளர். சாவியில் அவரது எழுத்தைப்
                   பார்த்து படித்திருக்கிறேன். வசீகரமான ஆழமான மாறுபட்ட
                   எழுத்திற்கு சொந்தக்காரர். ஆர்வத்தைத் தக்க வைக்கும்
                   எழுத்து அவருடையது. சமீபத்தில் திடீரென எலிக்காய்ச்சல்
                  அவரையும் அவரின் அற்புத எழுத்தையும் பறித்துக்கொண்டு
                   விட்டது. ஒருமுறைகூட நேரில் அவரைப் பார்த்ததில்லை.
                  இறந்தபின் பாக்யாவில் அஞ்சலிக்காக அவருடைய படத்தைப்
                   பார்க்க நேர்ந்த அவலம். மனதை வருத்துகிறது.

                                        கிருஷ்ணா டாவின்சி...

                  உங்களுடைய ஆத்மா அமைதி பெறட்டும். அவரைப் பிரிந்து
                  தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தலைவணங்கி என்னுடைய
                  வருத்தமும் வேதனையும் ஆறுதலும். வேறென்ன,,,,

          2.    புத்தக நாள் அன்று என்னால் பதிவிடமுடியவில்லை.
                 எனவே அதற்கென ஒரு கவிதை.

                                             வாசிப்பது என்பது வாழ்தல்
                                             வாசிப்பவன்தான் மானுடன்..

                                             சிலர் நுனிப்புல் வாசிக்கிறார்கள்
                                             உலகே தெரியுமென வதைக்கிறார்கள்...

                                             சிலர் வாசிக்காமல் வாசிக்கிறார்கள்
                                             வாசிப்போரிடம் கொட்டிக்கொட்டி பொய்களை
...
                                             நன்றாக வாசிப்பவன் எப்போதுமே
                                             எதையும் கூறுவதில்லை ஆழ்ந்துபோகிறான்
                                             தான் வாசித்தலின் பொருண்மையைப்போல...

                                             வாசிக்கும் கட்டாயத்தில் வாசிப்பவர்கள்
                                             வரிவரியாகக் குறைபேசுகிறார்கள் புரியாமல்..

                                             வாசிப்பவனும் வாசிப்பவனும்
                                             வாழ்ந்து பேசுகிறார்கள்...வாழ்கிறார்கள்..

                                              அங்கொன்றும் இங்கொன்றும் வாசிப்பவர்கள்
                                              அலைகிறார்கள் வாசிப்பிற்குள் இருப்பதை
                                              வாசிப்பிற்கு வெளியே...

                                              எதையேனும் வாசியுங்கள்..
                                              உயிர்த்தலின் அவசியம்போல வாசியுங்கள்.
                                              வாசித்தபொழுதுகளில் உயிர்த்திருங்கள்
                                              வாசிப்பவர்களைக் கண்டுணர்ந்தால்
                                              வாழ்கிறேன் அர்த்தமுடன் என்றுணர
                                              ஒரு புன்னகை சிந்துங்கள் போதும்...

                                               கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்..

                                               புத்தகம் இல்லா ஊரில் வாழ வேண்டாம்
                                               புத்தகம் வாசிக்கா மனிதரிடம் உறவுவேண்டாம்
                                             
                                               புத்தகத்தோடு பிறக்காவிட்டாலும்
                                               புத்தகத்தோடு இறந்துபோங்கள்..
                                               அது அத்தனை புண்ணியம் மறுபிறப்பினும்...

                           
                                             .
                                             

8 comments:

  1. ஆம், புத்தகம் ஒரு நல்ல நண்பன்!

    ReplyDelete
  2. புத்தகம் போன்ற சிறந்த நண்பனைப் பார்க்க முடியாது தான்.

    ஐயா மற்றொரு செய்தி இந்தப் புத்தக தினத்தைப்பற்றி:-

    உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். மற்றவர்களுக்கும் தெரியட்டும் என்பதற்காக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    உலகம் முழுவதும் புத்தக தினமாகக் கொண்டாடப்படும் ஏப்ரில் 23 இல் பல பிரபல எழுத்தாளர்கள் பிறந்திருக்கக்கூடும்.

    ஆனால் 1564 ஏப்ரில் 23 இல் பிறந்து, பல இடையூறுகளிடையே வாழ்ந்து, தன் பிறந்த நாளான ஏப்ரில் 23 அன்றே 1615 இல் இறந்த ஒரே பிரபல எழுத்தாளர் “வில்லியம் ஷேக்ஸ்பியர்” ஒருவரே.

    எனவே தான் அவருடைய பிறந்த நாளை புத்தக தினமாக நினைவு கூர்கிறோம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  3. எதையேனும் வாசியுங்கள்..
    உயிர்த்தலின் அவசியம்போல வாசியுங்கள்.
    வாசித்தபொழுதுகளில் உயிர்த்திருங்கள்
    வாசிப்பவர்களைக் கண்டுணர்ந்தால்
    வாழ்கிறேன்அருமை அருமை
    வாசித்தல் வாழும் மனிதனுக்கு
    சுவாசித்தல் போல அழகாகச் சொல்லிப் போகும் பதிவு அருமை
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்



    அர்த்தமுடன் என்றுணர
    ஒரு புன்னகை சிந்துங்கள் போதும்...

    ReplyDelete
  4. கிருஷ்ணா டாவின்சியின் மறைவு மனதை சங்கடப்படுத்தியது.

    ReplyDelete
  5. புத்தகம் பற்றிய கவிதை நன்று.

    கிருஷ்ணா டாவின்சி மறைவு - இந்த நல்ல மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  6. கடைசியாக ஆனந்த விகடனில் கிருஷ்ணா டாவின்சியின் சிறுகதை “காலா அருகே வாடா” படித்தேன். அவரது மறைவு மனசை சங்கடப் படுத்துகிறது.முண்டாசுக் கவிஞனின் இந்த சொற்பிரயோகத்தை நானும் என் பல பதிவுகளில் உபயோகித்திருப்பதால் அண்மை அதிகமாக உணருகிறேனோ என்னவோ. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  7. டாவின்ஸிக்கு ஆழ்ந்த அஞ்சலி ஹரணி.

    எஸ்.வி.வேணுகோபாலன் மின்னஞ்சல் அனுப்பியும் இறுதியான விடைபெறலில் கலந்துகொள்ள முடியவில்லை. அவரின் மூன்று வயது மகளுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் அப்பா எங்கே என்று திரும்பத் திரும்பக் கேட்கப்போகும் மழலைக் காலத்தில்?

    ReplyDelete
  8. வாசிப்பது என்பது வாழ்தல்
    வாசிப்பவன்தான் மானுடன்.

    சுவாசிப்பதே வாசிப்பதற்காகத்தானே !

    வாசிக்காமல் இருப்பதற்கு சுவாசிக்காமலே இருக்கலாம்..

    ReplyDelete