Wednesday, October 31, 2012

மழைக்கும் புயலுக்கும் ஒதுங்கி........




                         வணக்கம்,

                        இடைவிடாத மழையும் இடைவெளிவிடாத பணியும்
                       தொடர்ந்திருக்கின்றன.

                       இன்று நீலம் புயலின் காரணமாக விடுமுறை விட்டிருக்கிறார்கள்.

                       மின்வெட்டும் இல்லை.

                       இதுதான் தருணமென்று ஒவ்வொரு வலைப்பூவாய் வலம்
                       வந்து மகிழ்ந்த தருணங்கள் நிகழ்ந்தன.

                       இன்னும் வலம் வரவேண்டும் இன்றைக்கு எவ்வளவு முடியுமோ
                        அவ்வளவு.

                       அடுத்தவர் பிரச்சினையில் எப்போதும் மூக்கை நுழைக்கும்
                      அமெரிக்க வெள்ளத்தால் ஒரு லட்சம் கோடி இழப்பு வருத்தத்தைத்
                      தரவில்லை.

                        சாலைகள் போடப்பட்ட தெருக்களும் சரி... போடப்படாத
                       தெருக்களும் சரி... குளங்களாகவும் குட்டைகளாகவும் பெருகி
                       பல்லிளிக்கின்றன... அதைவிட,,, அரசியல்...

                       கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதன் சத்தியத்தில்
                       இயங்கவேண்டும்.

                       000000000000000


                        மழை கொட்டுகிற தருணத்தில்
                       விழுகின்ற மழையேணியில் ஏறுகிறேன்..
                       கை வழுக்கவில்லை
                       மனம் வழுக்குகிறது...

                        அப்படியே சரிந்து
                        சில பூக்களின் வண்ண இதழ்களின் மீதும்
                        சில வண்டுகளின் இறக்கைகளின் மீதும்
                        அடர்ந்த இலைகளின் மீதும்
                        சில மிருகங்களின் முதுகின் மீதும்
                        கூரைகளின் மீதும்,,, குறு மலைகளின் மீதும்
                        கொஞ்சம் சாக்கடையிலும்
                        கொஞ்சம் சகதியின் பரப்பிலும்
                        விழுகிறேன்...
                        தவிக்கையில் தாங்கிப் பிடிக்கின்றன
                        சில குழந்தைகளின் காகித கப்பல்கள்
                       போகும்வரை போகட்டுமென்று
                       அதில் பயணிக்கிறேன்,,,

                        சுகமாய் இருக்கிறது மழையும்
                         மழையேணியும்,,,

                         முகமருகே உரசுகிறது வாசமாய்
                         ஒரு தேனீர் கோப்பை
                         அன்பாய் அவளின் சொற்கள்,,,,,
                         முதுகில் இறுகும் மகளின் கைகள்,,,,
                         மழையில் இன்னொரு உலகிற்கு
                         நான் பயணிக்க வெளியே கூச்சலிடுகின்றன
                        மழையேணியின் ஒவ்வொரு துளியும்,,,

                       000000000000



                          ஒரு துளி மழைக்குள்
                          அடங்குமா
                          மனதும் மகிழ்ச்சியும்?

                          ஒரு துளி மழைக்குள்
                         அடங்குமா
                         எந்தக் கவிதையும்?

                         ஒரு துளி மழைக்குள்
                         அடங்குமா
                         முதலும் முடிவும்?

                          ஒரு துளிமழைக்குள்
                          அடங்குமா
                          ஒரு வறுமையின் மரணம்?

                          ஒரு துளி மழைக்குள்
                          அடங்குமா
                          எதுவும்?

                          துளிதானே கடல்?
                          துளிதானே உலகம்?
                          துளிதானே இயக்கம்?
                          துளிதானே பிரும்மம்?
                          துளிதானே துயரம்?
                          துளிதானே இன்பம்?
                          துளிதானே,,,துளிதானே,,,,

                            0000000000000
                         


                       

14 comments:

  1. புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களின் துயரத்தில் நாம் பங்கெடுத்துக்கொள்வோம் ஹரணி. இதில் அரசியல் தேவையில்லை. இருக்கக்கூடாது.

    ReplyDelete
  2. மழைத்துளிகளுடன் ஒரு பயணம்...அருமை

    வறண்ட பொழுதுகளில்
    மூக்கின் மேல் விழும்
    ஒரு துளியின் அழகு

    புற்களின் மேல்
    துளிர்கும் ஒருதுளியின் அழகு

    உங்கள் கவிகளில்...

    ReplyDelete
  3. இதுதான் தருணமென்று ஒவ்வொரு வலைப்பூவாய் வலம்
    வந்து மகிழ்ந்த தருணங்கள் நிகழ்ந்தன.

    புயலிலும் ஒரு நன்மை !

    ReplyDelete
  4. புயலால் எங்களுக்கு ஒரு சுவையான பதிவும் கிட்டியிருக்கிறதே....

    இரண்டு கவிதைகளையும் ரசித்தேன்.

    ReplyDelete
  5. கவிதை அழகு... வார்த்தைகள் அருமை...
    உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏற்படும் இழப்பு அதனால் ஏற்படும் மனத் தவிப்பு அனைத்தையும் தாண்டி அவர்களும் மனிதர்கள் என்ற நிலையில்...

    ReplyDelete
  6. இரு க‌விதைக‌ளுமே வெகு அழ‌காய்... அம்ச‌மாய்! ஒரு துளியில் அட‌ங்காது எதுவும். முத‌ல‌டியில் துவ‌ங்குது சிக‌ர‌ உச்சி.

    ReplyDelete
  7. சுக‌மாய் தானிருந்த‌து உங்க‌ ம‌ழையேணியும் அதிலேறிய‌ ப‌ய‌ண‌மும். குழ‌ந்தைக‌ளின் காகித‌க் க‌ப்ப‌ல் இட‌ம்பெறாம‌ல் முற்றுப்பெறும் ம‌ழைதான் ஏது? அழ‌கு அதில் வீழ்ந்த‌ த‌ருண‌ம்.

    ReplyDelete
  8. ம‌ன்ன‌ன் எவ்வ‌ழி,
    ம‌க்க‌ள் அவ்வ‌ழி.

    அமெரிக்கா அராஜ‌க‌த்தின் அச்சு
    இந்தியா ஊழ‌லின் ஊற்று.

    அமெரிக்க‌ன் மீது கோப‌ம்
    இந்திய‌ன் மீது வெட்க‌ம்.

    (டெல்லியில் கூடிய‌/கூட்ட‌ப்ப‌ட்ட‌
    கூட்ட‌ம் இத‌ற்கு சாட்சி....சி..

    ReplyDelete
  9. அருமை அய்யா. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  10. சுகமாய் இருக்கிறது மழையும்
    மழையேணியும்,,,

    புயலும் மழையும் தந்த கவிதை !!

    ReplyDelete
  11. மழை ஏணியில் நானும் ஏறி இந்த பரந்த உலகைப் பார்த்தேன் . அத்தனையும் அழகு துளித் துளியாய் ... தங்கள் கவிதைகளைப் போலவே.

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete