Tuesday, January 10, 2012

பயணம்


                     
                         அண்ணாமலை அரசரின் கருணைத் திறத்தால் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அஞ்சல் வழியில் வகுப்புகள் எடுக்கும் வாய்ப்பில் அந்தந்த ஊரிலுள்ள சிறுசிறு கோயில்களைத் தரிசிப்பது கரும்புத் தின்ன கூலிபோல கிடைத்த வாய்ப்பாகும்.

                          இம்முறை தேனீ செல்லும் வாய்ப்பில் சனிக்கிழமை மாலையில் தேனியிலிருந்து அரைமணிநேரப் பேருந்து பயணத்தில் (அல்லது ஆட்டோ எனில் 100 ரூபாய்) குச்சனுர்ர் எனும் இடத்தில் ஒரு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தமான கோயிலாகும். தானே  சுயம்புவாய் தோன்றிய கோயில் என்று அர்ச்சனை செய்யும் வயதான அர்ச்சகர் அதன் வரலாற்றைக் குறிப்பிட்டு சொன்னார். கிட்டத்தட்ட 10000 ஆண்டுகள் பழமையானது என்றும் சுவடிச் சான்று மூலம் 17 ஆம் நுர்ற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார். பல முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டின் தலைவர்கள் இக்கோயிலுக்கு வந்துசென்ற நிகழ்வையும் சொன்னார்.

                      பொதுவாக சனிஸ்வரர் கோயிலுக்கு செல்பவர்கள் அர்ச்சனை செய்ததும் எதனையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இக் கோயிலில் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம் எந்தக் கெடுதலும் இல்லை என்றும் சொன்னார். இக்கோயிலுக்கு இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் என பிற மதத்தவர்களும் வந்து வணங்கிச்செல்வதும் சிறப்பானது. இஸ்லாமியர்கள் இந்த சனீஸ்வரனை அப்துல்காதர் என்று பெயரிட்டு அழைப்பதாகவும் சொன்னார்.

                      கோயிலில் அர்ச்சனை தட்டோடு பொறி, உப்பு, மண் உருவிலான காகம், கருப்புத்துணி, அப்புறம் வழக்கமான தேங்காய் பூ பழம் போன்றவை.  பொறியைப் பிரித்து மனக்குறையை நீக்கு என்று அதற்குரிய இடத்தில் கொட்டச் சொல்கிறார்கள். உப்பு பரிகாரத் தீர்வாக அதற்குரிய தொட்டியில் கொட்டச் சொல்கிறார்கள். காக்காய் உருவத்தை தலையை ஒன்பது முறை சுற்றி காக்கைபோல குடும்பம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் வாக்கில் நல்ல சொல் வரவேண்டும் என்றும் வேண்டி காக்கா மண்டபத்தில் அதனைப் போட்டுவிடவேண்டும்  அதன் பின்னர் அர்ச்சனை நடக்கிறது.

                கோயிலுக்குப் பக்கத்திலேயே அழகான வாய்க்கால் ஓடுகிறது குளித்துவிட்டு வழிபடவும் அல்லது கை. கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வழிபடவும் என.

               சிறிய கோயில் என்றாலும் சிறப்பாக இருக்கிறது.மும்மூர்த்திகள் வழிபட்ட தலம் என்றும் குறிப்பு உள்ளது.  இக்கோயில் பற்றி கோயிலில் இருந்த குறைவான நேரத்தில் சேகரித்த செய்திகள் இன்னும் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்

                         ஒருமுறை போய்வரலாம்.

                          திருச்சி திண்டுக்கல் தேனி என்று பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்.

                         தேனியில் மேலும் பார்க்கவேண்டிய இடங்கள்.

                        1, தேனியிலிருந்து குமுளி வழியாக 61 கி.மீட்டரில் தேக்கடி.

                        2, தேனியிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் குச்சனுர்ர் சனீஸ்வரர்
                             கோயில். -  அருகிலேயே  உள்ள  குருகோயில்.

                        3. தேனியிலிருந்து 25 கி.மீட்டரில் சின்னமனுர்ர்  என்ற இடத்தில்
                            இறங்கி அங்கிருந்து 5 கி.மீட்டர் சென்று தெற்கு காளஉறஸ்தி
                            எனப்படும் (சின்ன திருப்பதி) தலத்தையும் சிறப்பாக வழிபடலாம்.

                        4. குச்சனுர்ர் அருகில் சிவகாமியம்மன் கோயில் உள்ளது.

                        5. தேனியிலிருந்து  30 கி.மீட்டர் தொலைவில் வீரபாண்டி எனும்
                             இடத்தில் ஆற்றின் கரையில் கௌமாரியம்மன் கோயில்
                             அமைந்துள்ளது.

                           தேனியிலிருந்து இரு வழிகள் வழியாக குச்சனுர்ர் செல்லலாம். ஒன்று சின்னமனுர்ர் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லாம். இன்னொன்று தேனியிலிருந்து நேரடியாக குச்சனுர்ர் கோயில் அருகில் இறங்கிக்கொள்ளலாம். பேருந்து வசதி உள்ளது. குமுளி. கம்பம் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணிக்கலாம்.

                           இரண்டாவது பயணம்

                           தேனீ . கோயம்புத்துர்ர் சென்று அங்கிருந்து சேலம் வழியாக சின்ன சேலம் வந்து தலைவாசல் எனும் ஊரில் இறங்கி கூகையூர் எனும் ஊருக்கும் செல்லும் வழியில் பல கிராமங்கள் உள்ளன. இவற்றில் அருகருகே சில கிலோமீட்டர் தொலைவுகளில் பஞ்சபூதத் தலங்கள் உள்ளன. இவையும் குறிப்பாக வழிபாடு செய்யவேண்டிய வரலாற்றுத்தலங்கள். இவை ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக எழுதுகிறேன். 



                         கடந்த சில தினங்களாக
                         இடுகையில் ஏற்பட்ட
                         பல்வேறு தொழில்நுட்பச்
                         சிக்கல்கள் காரணமாகப்
                         பலருக்கும் ஏற்பட்ட
                         இன்னல்களுக்குப் பொறுப்பேற்று
                         மன்னிக்க வேண்டுகிறேன்...


                          எனக்காக இடுகையைச சரியான
                          மொழியில் மீண்டும் பதிவிட்டுக் காட்டிய
                          கீதா அவர்களுக்கு
                           நான் என்றென்றும் நன்றி கடப்பாடுடையேன்..
                           மிகுந்த நன்றிகள் கீதா...