Friday, February 3, 2012

குழந்தைகள் தோட்டம்



                        நண்பகலுக்குப் பின் பள்ளி விட்டதும் குழந்தைகள் எல்லாருமே அந்த அரக்கனின் தோட்ட்த்திற்கு விளையாட வந்துவிடுவார்கள்.  அது மிகப்பெரிய தோட்டம்.  அழகான தோட்டம் எங்கும் மிருதுவான பசுமைப் புற்கள். வானின் சுட்ர்களைப் போல அழகான பூக்கள். வச்ந்த காலத்தில் அற்புதம் கூடியிருக்கும். அங்கு மரங்களில் வந்து உட்கார்ந்து பாட்டுப்பாடும் பறவைகளின் பாட்டில் மயங்கி பிள்ளைகள் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ரசிப்பார்கள்.

                       இப்படிப்பட்ட சூழலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த அரக்கன் தோட்டத்தில் குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு ஏய் குழந்தைகளே.. இது என் தோட்டம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் இங்கே? இனி இங்கே விளையாட யாரையும் நான் அனுமதிக்கமாட்டேன் என்று கத்தினான்.

                     உடன் தோட்டத்தைச் சுற்றி பெரிய தடுப்புச்சுவர் எழுப்பி அன்னியர்கள் உள்ளே வராதீர்கள் என பலகையில் எழுதி மாட்டி வைத்தான்.

                    குழ்ந்தைகள் மிகவும் வருத்தமுற்றார்கள். சாலையில் புழுதியும் கற்களும் இருந்ததால் அங்கு விளையாட முடியவில்லை. எனவே அரக்கன் தோட்டத்துச் சுவர்களைச் சுற்றிச்சுற்றி வந்து கவலை தோய்ந்த முகமாக காட்சியளித்தார்கள்.

                  எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் இந்தத் தோட்டத்தில்...இப்போது எல்லாம் போய்விட்டது. தங்களக்குள் பேசி வருத்தப்பட்டார்கள்.

                   வசந்த காலம் வந்தது. எங்கும் சிறு பறவைகளும் பூக்களும் என மகிழ்வாக இருந்தது. ஆனால் அரக்கனின் தோட்டம் மட்டும் மிகவும் சோகமாகக் காட்சியளித்தது.

                   அவன் தோட்டத்தில் மட்டும் கடுமையான குளிர். அரக்கன் யோசித்தான். வசந்த காலம் ஏன் என் தோட்டத்திற்கு வரவில்லை? என்று தன் கோட்டைக்கு முன் உட்கார்ந்து யோசித்தான். பதில் கிடைக்கவில்லை அவனுக்கு.

                   ஒரு நாள் அரக்கன் படுக்கையை விட்டு எழும்போது அருமையான இனிமையான ஒரு பாடலைக்கேட்டான். அதுபோன்ற ஒரு பாடலை அவன் இதுவரை கேட்டதில்லை. அப்போது அவன் தோட்டத்தில் நல்ல காற்று இருந்தது.

                 கடைசியாக வசந்தம் என் வாசலுக்கு வந்துவிட்டது என எண்ணியபடியே படுக்கையைவிட்டு துள்ளி எழுந்துவெளியே வந்தான். வந்தவன் அந்தக் காட்சியைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டான்.

                அது அழகான காட்சி. அரக்கன் எழுப்பிய தடுப்புச்சுவரில் ஒரு ஓட்டை செய்து அதன் வழியே குழந்தைகள் தோட்டத்திற்குள் நுழைந்து மரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்திருந்தார்கள்.

              குழந்தைகள் மறுபடியும் வந்ததும் தோட்டம் மகிழ்ந்தது. மரங்கள் பூத்தன.  பறவைகள் உள்ளே வந்து பாட்டிசைத்தன. அது மிக அழகான காட்சியாக இருந்தது.

                தோட்டத்தில் துர்ரமாய் இருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு பையன் ஏற முயன்று கொண்டிருந்தான்.
 
                அரக்கனின் மனம் இளகிவிட்டது. மிகவும் வருத்தப்பட்டான். சே எவ்வளவு சுயநலமாக இருந்துவிட்டேன். இந்த தடுபபுச் சுவரை உடைத்தெறிவேன். இனி இது குழந்தைகள் தோட்டம் என அறிவித்தவன் உடனே கதவையும் திறந்து வைத்தான். பின் தோட்டத்திற்கு உளளே போனான்.

             அவனைக் கண்டதும் குழந்தைகள் பயந்துஓடின. ஒரு சிறுவன் மட்டும் ஓட முடியாமல் நின்று விடவே அவனருகே போய் அவனை அன்போடு துர்க்கி ஒரு மரக்கிளையில் உட்கார வைத்தான் அரக்கன். அந்த சிறுவன் அரக்கன் கழுத்தை வளைத்துப் பிடித்து முத்தமிட்டான். இதைப் பார்த்த குழந்தைகள் மீண்டும் தோட்டத்தை நோக்கி ஓடி வந்தார்கள். உடனே வசந்தமும் வந்தது.

           குழந்தைகளே இனி இது உங்கள் தோட்டம் என்று பெருங்குரலில அரக்கன் அறிவித்தான்.

           குழந்தைகள் பயம் ஒழிந்து அரக்கனோடு சேர்ந்து விளையாடினார்கள். வசந்தம் நிறைந்த அந்த தோட்டம் அழகாய் இருந்தது.

            ஆனால் அரக்கன் மனசுக்குள் அவனை முத்தமிட்ட சிறுவன் ஞாபகமாகவே இருந்தான்.

             குழந்தைகளிடம அவனைப் பார்த்தால் நாளை வரச்சொல்லுங்கள் என்றான் அரக்கன்.

            நாங்கள் இதற்கு முன்பு அவனைப் பார்த்ததே இல்லை என்றதும் அரக்கன் வருத்தப்பட்டான். அடிக்கடி அவனையே நினைத்துக்கொண்டான்.

         வருடங்கள் பல ஓடின.

           அரக்கனுக்கு வயதாகி முதுமையடைந்தான். தோட்டத்திற்கு முன் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து குழந்தைகள் விளையாட்டை ரசித்தான். இந்த தோட்டத்தில் மலர்கள் அழகானவை. அதைவிட் குழந்தைகள் அழகானவை என அடிக்கடி அரக்கன் சொன்னான்.

            ஒருநாள் காலை உடைமாற்றும்போது ஒரு அற்புதக் காட்சியை அரக்கன் பார்த்தான். தோட்டத்தின் மூலையில்ஒரு மரத்தில் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று ஏராளமான பூக்கள்.. அந்தப் பூக்களைச் சுமந்த கிளைகள் பொன் நிறமாய் மின்னின. பழங்கள் வெள்ளி நிறத்தில் சுடர்விட்டன. மரத்தின் கீழே வெகு நாட்களாய் அரக்கன் நேசித்த தேடிய அந்த சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

           குழந்தை அருகில் போன் அரக்கனுக்கு ஏதோ செய்தது. திடீரென்று அந்தக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கினான். யார் நீ? என அன்பாய் விசாரித்தான்.

           குழந்தையோ கள்ளங்கபடமில்லாமல் சிரித்தது.

           முன்பொருமுறை முறை நான் இந்தத்தோட்டத்தில் விளையாடினேன். இன்று என்னுடன் வா.. என் தோட்டத்தில் விளையாட,, அதுதான் சொர்க்கம்.

                    குழந்தைகளே இந்தக் குழந்தை யாரென்று தெரிகிறதா உங்களுக்கு?



                                                                மூலம் - ஆங்கிலத்தில் ஆஸ்கர் ஒயில்ட்

                                                                 தமிழில் உறரணி..


                       (எனக்கு மிகவும் பிடித்த கதை) நான் மொழிபெயர்த்த பல சிறுவர் கதைகளுள் இது ஒன்று. கால இடைவெளியில் தொடர்ந்து பதிவு செய்வேன்.