Thursday, June 7, 2012

பேருந்து (நாவல்)

பேருந்து - ஆறாவது அத்தியாயம் - கதம்ப மாலை


     அன்று பிரதோஷம். மாலையில் வந்து கோயிலுக்குச் செல்லவேண்டும். அல்வது வாய்ப்புக்கிடைத்தால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய்வரலாம். மழைவருவதுபோன்ற சூழல் இருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் வானத்தில் இல்லை. ஆனால் மறைந்த சூரியன் பொழுதாய் இருந்தது. அந்தி வெளிச்சமும் குளிருமாக இருந்த அந்த காலைப்பொழுது பிடித்திருந்தது.மணி இன்றும் 6 ஆகவில்லை. வழக்கத்தைவிட சீக்கிரமாக கடைத்தெருவிற்கு வந்து ஒரு டீயையும் குடித்துவிட்டு கூடுதலாய் சூடாக ஒரு மெதுவடையும். இதமாக இருந்தது. இன்றைக்கு வெள்ளைக்குதிரைதான் வரும். ஜெயக்குமார் வருவார். என் எதிர்பார்ப்பு சரியானது. வண்டி இன்றைக்கு தாமதமாக வந்தது. 6.25க்கு வந்தது. என்னைப் பார்த்ததும் ஜெயக்குமார் சிரித்தார். வாங்க சார்.. 10 நிமிஷம் லேட்டாயிடிச்சி என்றார். கிளம்பும்போது கியர் விழலே..ஏதோ கியர் பாக்ஸ்லே கோளாறு. சரிப்பண்ண நேரமாயிடிச்சி.

       ஏறிப்போய் நடத்துநர் இருக்கையில் அமர்ந்ததும் சாலையைப் பார்த்தபடி ஸ்டியரிங் பிடித்திருந்த பாண்டியன் வணக்கம் சார்... என்றார். வணக்கம் பாண்டியன் என்றேன். ஜெயக்குமார் டிக்கட் போட்டுவிட்டு கூடவே சாக்லெட் கொடுத்தார். என்ன ஜெயக்குமார் விசேஷம் என்றேன். என்னோட பையனுக்குப் பிறந்த நாள் சார்.. என்றார். என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்க. என்ன வயசாவுது என்றேன். நாலு முடிஞ்சி அஞ்சாவுது சார்.. என்றார். நான் சாக்லெட்டை பேக்கினுள் போட்டுக்கொண்டேன். என்னுடைய மகளுக்குப் அது பிடிக்கும்.

        பாண்டியன் ஒரே சீராக ஸ்டியரிங் பிடித்திருந்தார். இன்றைக்கு சாலையே அழகாக தோன்றியது. நீரால் கழுவிவிட்டதுபோல் கருகருவென அழகாகவும் நடுவில் இருந்த வெள்ளைக் கோடுகள் பேருந்திற்கு முன்னால் ஓடுவது என்னை முடிந்தால் முந்துங்கள் என்று சொல்லுவதுபோலவும் ஓடிக்கொண்டிருந்தன. ஒருசில பறவைகள் இடதுபுறமிருந்து வலதுபுறமாகவும் வலதுபுறமிருந்து இடதுபுறமாகவும் இடம் மாறி கடந்துபோயின. பள்ளியக்ரஉறாரம் தாண்டியதும் இருமருங்கிலும் இருந்த வயல்கள் இப்போதுன் களையெடுத்து நட்டிருந்ததார்கள். பச்சைக் குழந்தைகள், எங்கும் தரையில் பச்சை ஜமக்காளம் விரித்ததுபோல் இருந்தது. அவற்றினிடையே முத்துக்கள் அசைவதுபோல கொக்குகள் வயல்களில் தவழ்ந்துகொண்டிருந்தன.


 அதிகாலை என்பதால் எல்லா வீடுகளிலும் பெண்கள் எழுந்து தண்ணீர் தெளிப்பதும்.. சிலர் பெருக்குவதும்.. சிலர் குத்துக்காலிட்டு கோலங்கள் போடுவதும்.,, சிலபெண்கள் கோலம் போட்டு முடித்துவிட்டு பக்கத்து வீட்டுப் பெண்களிடம் சிரித்து பேசியபடியும்,,, ஒரு சில வீடுகளில் வாசலில் கோலம்போடும் அம்மாக்களைப் பார்த்தபடி அவர்களின் பிள்ளைகள் அமர்ந்தபடியும் இருந்தார்கள், சில பிள்ளைகளின் கைகளில் காபி டம்ளர் இருந்தது, சில பிள்ளைகள் பால் பாட்டிலைப் பிடித்திருந்தார்கள். சில வீட்டு வாசலில் ஆண்கள்  வாசலில் இருந்த முருங்கை மரத்தில் இருந்து காய்பறித்தபடியும் கீரைபறித்தபடியும் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கண்டிப்பாய் முருங்கை மரமும் செம்பருத்திச்செடிகளும் குபேர செடிகளும் இருக்கும் காட்சி அந்த காலைப்பொழுதை அனுபவிக்க வைத்தது.  தெருநாய்கள் சில எழுந்து நீட்டி குறுக்கி உடலை சோம்பல் முறித்தபின் ஒரு குரைப்பு குரைத்து ரிகர்சல் பார்த்தன.

         எப்போதும் பேருந்து பயணத்தில் நடத்துனர் இருக்கையில் அமர்ந்து சாலையை அனுபவிக்கும் சுகம் அலாதியானதுதான். ஆனால் அதேசமயம் ஆபத்தானதும்கூடத்தான். பெரும்பாலும் ஏதேனும் இடர் வந்தால் டிரைவர்கள் சட்டென்று இடதுபக்கத்தைத்தான் மரத்தில் கொடுத்துவிடுவார்களாம். கேட்கவே பயமாக இருந்தது. பாண்டியனிடம் கேட்டேன். அவர் சொன்னார். வேற வழியில்ல சார்.. முடிஞ்சவரைக்குப் பாப்போம்.. வேற வழியில்லன்னா அப்படித்தான் என்றார் சாதாரணமாக. இருந்தாலும் சில நாட்கள் அந்தப் பயம் இருந்தது. அப்புறம் மறந்துபோனது. அப்புறம்  இடைவெளியிட்டு அந்தப் பயம் வரும். இருந்தாலும் அந்த இருக்கைதான் பிடித்திருந்தது என்பதுதான் உண்மை.

        பேருந்து சுவாமிமலையை நெருங்கி நின்றது. ஆண்களும் பெண்களும் நெற்றி நிறைய திருநீறும் குங்குமமும் பூசியபடியும் சிரித்த முகத்துடனும் ஏறி உள்ளே வரும்போது அந்தக் காலைப்பொழுது மனம் நிறைவாக இருக்கும். அதுவும் பெண்கள் பெரும்பாலும் தலையை பின்னாது ஈரமுடன் அதில் வைத்த மல்லிகையின் அல்லது முல்லையின் மணத்தோடு பேருந்தில் நிறையும்போது மனம் சுவாமிநாதா,,, எனப் பிரார்த்திக்கும். கைகள் தானாகவே கன்னத்தில் தட்டும்.

           சுந்தரப்பெருமாள் கோயில் தாண்டுகையில் குஞ்சுகளோடு இருந்த ஒரு கோழி சாலையைக் கடக்கமுயன்றபோது பாண்டியன் வேகமெடுத்திருந்தார். எனவே சட்டென்று திகைத்துபோன அந்த தாய்க்கோழி கக்கக்கக்கக்க....கக்கோ என்று கூவியபடி சிறிய சிறகுகளை பரத்தி அப்படியே சாலையைப் பறந்தபடி கடகடந்த காட்சி அற்புதமாய் இருந்தது. கையில் கேமரா இல்லையே என்கிற பதைப்பும் இருந்தது, கூடவே அந்தக் கோழிக்குஞ்சுகள் என்னவாயிற்று என்கிற பதைப்பும் இருந்தது, பாண்டியன் நிதானமாக சொன்னார் மனதைப் படித்ததுபோல.. ஒண்ணும் ஆகாது சார்.. அந்த குஞ்சுகள் அப்படியே ஒடுங்கி நிற்கும் தாய்க்கோழி போயிடும் பாருங்க,, என்றார்.. நான் எழுந்து நின்று பேருந்து வழியாகத் திரும்பிப் பார்த்தேன். அது மறுபடியும் வேகமாக சாலையைக் கடந்து தன்குஞ்சுகளை அடைந்திருந்தது. மனம் நிம்மதியாக இருந்தது.

             கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் மாயவரம் போகும் கட்டையில் வண்டியை நிறுத்திவிட்டு வாங்க சார்  டீ சாப்பிடலாம் என்று ஜெயக்குமார் எழுந்தார். இறங்கிப்போனோம். பாண்டியன் இறங்கி கட்டையால் நான்கு டயர்களையும் தட்டிவிட்டு சரிபார்த்துவிட்டு கட்டையை உள்ளே போட்டுவிட்டு எங்களுடன் டீ குடிக்க வந்தார்.

                வெங்காயம் நிறைய போட்டு மெதுவடை சூடாக வெந்துகொண்டிருந்தது,

                சார் வடை சூடாக இருக்கு சாப்பிடலாம்,

                சொல்லுங்க என்றேன்,

                வடை கொடுப்பா என்றபடி ஜெயக்குமார் தன் கண்டக்டர் பையைத் திறந்து காசை எடுத்தார்,

                   இருங்க ஜெயக்குமார் நான் தரேன் என்றேன்,

                   இருக்கட்டும் சார்,,, தினமும் நீங்கதான் கொடுக்கறீங்க,, இன்னிக்கு தம்பிக்குப் பொறந்த நாள் நான் தரேன்,,,

                    ஜெயக்குமார் எனக்கு டீ வேண்டாம் ஆப் காபி சொல்லு வரேன்,, என்றபடி கட்டணக் கழிவறை நோக்கிப்போனார் பாண்டியன்,

                    நன்றாக உப்பியபடி சிறுவெங்காயம் அதிகம் போட்ட அந்த மெதுவடை வெகு சுவையாக இருந்தது,

                     கும்பகோணத்த விட்டா வேற எங்கயும் இவ்வளவு வெங்காயத்துடன் மெதுவடை போடறதிலல சார்,, என்றார் ஜெயக்குமார்,

                      மறுபடியும் வண்டியில் ஏறி கும்பகோணம் பேருந்து நிலையத்தைவிட்டு வெளியே வந்து நால்ரோடைத் தாண்டி பேருந்து போக ஆரம்பித்தது,

                       அப்பாவின் ஞாபகம் வந்தது, அப்பாவிற்கு இந்த மெதுவடை ரொம்பப் பிடிக்கும்,

                       இறந்துபோனவர்களுக்கு சாமி கும்பிடுவார்கள். அதை தழுவை போடுவது என்பார்கள். முதல்நாளே வீடெல்லாம் நீர்விட்டலசி அம்மா சுத்தம் செய்வாள். மறுநாள் காலை அதிகாலையிலேயே எழுந்து  மாக்கோலமிட்டு சாமி அறையை அலங்காரம் செய்திருப்பாள். ஒவ்வொரு சாமி போட்டோவிலும் சந்தனமும் குங்குமமும் இணைந்து பொட்டு வைத்திருப்பாள். சுவற்றில் மஞ்சளை வட்டமாகத் தடவி அதில் வட்டமாக குங்குமப்பொட் வைத்திருப்பாள். அதில் இருபுறமும் சிறு ஆணி அடிக்கப்பட்டிருக்கும். அதில்தான் வடைகளை மாலையாகக் கோர்த்து இரு ஆணியிலும் தொய்வாகத் தொங்கவிடுவாள். அம்மா எல்லாவற்றையும் செய்துவிடுவாள். நுனி இலை போட்டு சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் வடை காய்கறிகள் அப்புறம் ஒரு செங்கல்லை வைத்து அதற்கும் பொட்டிட்டு அதன்மேல் ஒரு புடவையும் வேட்டியும் பிழிவதுபோல செய்து வைத்திருப்பாள். எல்லாவற்றையும் அம்மா செய்தபிறகு அப்பாதான் சாம்பிராணி போட்டு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபடுவார். எல்லோருக்கும் தீபாராதனை காட்ட வழிபாடு நடக்கும். அப்புறம் சாப்பாடு நடக்கும்.

                  இதுபோன்ற சமயங்களில்தான் அப்பா இரண்டு மூன்று வடைகள் கூடுதலாக விரும்பிச் சாப்பிடுவார். அப்புறம் மிச்சமிருக்கும் வடைகளை அம்மா சாம்பாரில் போட்டுவிடுவாள். அது மறுநாள் காலைவரை ஊறிக் கிடக்கும். அப்பாவிற்கு அது கொள்ளைப் பிரியம். நாலைந்து வடைகள் இட்லியோடு சேர்த்து சாப்பிடுவார். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சாமியறையில் மாட்டிய வடைமாலை மட்டும் சாமி கும்பிட்ட அடுத்த அரைமணியில் காணாமல் போய்விடும். காரணம் தம்பி. யாரும் அறியாமல் கழட்டிக்கொண்டு வெளியே ஒடிவிடுவான். அவனுடைய நண்பர்களோடு தின்றுவிட்டு மாலையில்தான் வீட்டுக்கு வருவான். அம்மாவின் பூசை அப்புறம் நடக்கும் அதையும் ஏற்றுக்கொள்வான்.

             அப்பா ஒரு வடை வைத்தாலும் அதனை சிறுசிறு துண்டுகளாக பிய்துதுப்போட்டு அதன்மேல் சாம்பார் ஊற்றி சாப்பிடுவார்,, அல்லது பாயசம் இருந்தால் ஒவ்வொரு துண்டையும் பாயாசத்தில் ஊறவைத்து சாப்பிடுவார்... அல்லது சிவப்புமிளகாய் போட்டு அரைத்த சட்டினி என்றால் வடையை ருசித்து சாப்பிடுவார்... எவ்வளவு ருசியான உணவாக இருந்தாலும் எல்லை மீறித சாப்பாடு அப்பாவுடையது. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் சர்க்கரை நோய் இருந்தும் ஒரே மாத்திரையில் அது கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் பராமரித்து வாழ்ந்தவர்.

             போனவாரம் பேருந்தில் பயணிக்கிறபோது அக்கா போன் செய்தாள். செய்தி இதுதான். அப்பா காலையில் எழுப்பும்போது பேச்சு மூசசில்லாமல் இருந்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம்.

             பேருந்து மாயவரத்திலிருந்து கிளம்பி சிதம்பரம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதுதான் அந்தப் போன் செய்தி. உடனடியாக கிளம்பவேண்டும். இவன் வந்த பேருந்து இன்னும் அரைமணிநேரம் கழித்துத்தான் கிளம்பும். இருந்தாலும அது விரைவாக செல்லும் வண்டி.
எனவே ஜெயக்குமாரிடம் சொல்லிவிட்டு வேகமாக அலுவலகம் சென்று வருகைப் பதிவேட்டில் கையெர்ப்பமிட்டுவிட்டு துறைத்தலைவரிடம் சொல்லிவிட்டு உடனே ஒரு நண்பரைக் கொண்டு வந்து விடச்சொல்லி பேருந்து நிலையம் வந்தான். ஜெயக்குமாரும் பாண்டியனும் காத்திருந்தார்கள்.

              இவன் வந்தவுடன் வண்டி கிளம்பியது.

              தஞ்சை வரும்போது மணி இரண்டாகிவிட்டது. அது ஒரு தனியார் மருத்துவமனை. அங்குதான் இவனுடைய நண்பர் இருந்தார். அவரிடம் ஏற்கெனவே போன் செய்து சொல்லியிருந்தான். அதனால் சிக்கல் இல்லாமல் போனது. உடனடியாக ஐசியுவில் அனுமதித்து சிகிச்சை தொடங்கியிருந்தார்கள். டாக்டர் சொன்னார் சர்க்கரைக்குரிய மாத்திரைகளை ஓழுங்காகச் சாப்பிடாமல் விட்டதால் சுகர் ஏறிவிட்டது என்று. அப்பாவிற்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது. அம்மாவுடன் எப்போதும் ஒரு முரண் இருக்கிறது அப்பாவிற்கு. இவனிடமும சிலசமயம் காரணம் தெரிவிக்காமல் பேச்சை நிறுத்திக்கொள்வதும் உண்டு.

                நாங்க பயந்து போயிட்டோம்.. அத்தனை உலுக்கியும் அப்பா எழுந்திரிக்கவேயில்லை. சரி முடிஞ்சிடுச்சின்னே  நினைச்சோம்... என்றாள் அக்கா அழுதபடி. அம்மா அழுகையை நிறுத்தவேயில்லை.,

                அப்பாவை அனுமதித்து இரண்டாம்நாளே சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து அப்பா கண்விழித்தார். அனைவருக்கும் போன உயிர் திரும்பிவந்தது.

                 நம்ப உடம்ப நாமதான் கவனிச்சுக்கணும். நீங்க மருத்துவமனையிலே வேலை பார்த்தவங்க.. உங்களுக்குத் தெரியாததா? என்றார் டாக்டர்.

                    அப்பா எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார்.

                   எதுவும் சொல்லாது. அத்தனை அழுத்தம். கல்லு நெஞ்சு.. என்றபடி அம்மா அழுதாள்.

                    இவன் எதுவும் கேட்கவில்லை.

                     நான்காம் நாள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். எல்லா செலவையும் இவன்தான் செய்தான். தேவையான மாத்திரை மருந்துகளையும் இவனே டாக்டர் எழுதிகொடுத்த அளவு மாறாமல் வாங்கி வந்தான்.

                      இவனை அப்பா அமைதியாகப் பார்த்தார். இவனுக்குள் ஒரு கலவரம் தோன்றியது., அப்பாவின் இறுதிப் பயணத்துக்கான ஒத்திகையோ இது என்று மனதிற்குப் பட்டது. அதுவே அவனை மேலும் கலவரப்படுத்தியது.

                      காட்டிக்கொள்ளவில்லை.

                      நினைவு கலைந்தான் பேருந்து மாயவரம் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து நின்றிருந்தது.

                         என்ன சார் நல்ல துர்க்கமா? என்றான் பாண்டியன்.

                         வடை சூப்பர் வடைல்ல,,,  என்றான் ஜெயக்குமார்.

                         மறுபடியும் டீ சாப்பிட இறங்கினார்கள்.

                         பேருந்து கிளம்புகையில் அந்தப் பெண் வந்து அவசரஅவசரமாக வந்து வண்டியில் ஏறினாள். முகம் முழுக்க வியர்வையும் பதட்டமும் பொங்கி வழிந்தது.

                      வெளியே அவளை வழியனுப்ப வந்திருந்த ஒரு வயதான பெண்...கவலைப்படாம போ தாயி... மகமாயி இருக்கா.. அவ பாத்துக்குவா...
என்றபடி கண்களை துடைத்துக்கொண்டாள்.

                         டிரைவருக்கு பின் இருக்கையில் மூன்று பேர் கொண்டதில் உட்கார்ந்துகொண்டாள்.

                         பேருந்து போய்க்கொண்டிருக்கையில் மறுபடியும் அவளைப் பார்க்க அழுதுகொண்டிருந்தாள்.

                         டிக்கட் போட்டுவிட்டு ஜெயக்குமார் வந்து பேனட்டில் உட்கார்ந்தார். அவரும் அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஏம்மா அழறே?
என்றாள்.
                        அந்தப் பெண் மறுபடியும் விசும்பி விசும்பி அழுதாள்.

                        வற்புறுத்திக் கேட்டதில் சொன்னாள் புதுசா வேலைக்குப் போறேன்.
                        எங்கே?
                        ஒரு அரசாங்க அலுவலகத்தின் பெயரைச் சொன்னாள்.

                          எல்லாருக்கும் முதல்ல அப்படித்தான் பயமா இருக்கும், ஆனா போகப்போகப் பழகிடும். எல்லாரும் உதவி செய்வாங்க என்றான்.

                           அவள் அழுகையை விடவில்லை,

                           சொன்னாள்,

                            எங்க வீட்டுக்காரர்தான் வேலை பார்த்தாரு. ஆறு மாசத்துக்கு முன்னால ஆக்ஸிடெண்ட்ல செத்துப்போயிட்டாரு. அவரு வேலையத்தான் கொடுத்திருக்காங்க...எல்லார் கிட்டயும் சண்டை போடுவாரு. வெட்டி வம்பு இழுப்பாரு.. யாருக்கும் இவரைப் பிடிக்காது.. அதான் பயமாயிருக்கு என்றாள்.

                         எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிகபட்சம் 22 வயதிருக்கும். இத்தனை இளம் வயதில் விதவை பட்டம். அதிலும் ஒரு முரடன் கணவன். அவன் மரணத்தின் விளைவாய் இந்த வேலை. அவனுடைய நடத்தை இவளைப் பாதிக்குமோ என்கிற கவலை. பெண்ணுக்கு வரும் பிரச்சினைகள்தான் பல்வகையாக இருக்கின்றன, ஒரு குழந்தையை வேறு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறான். மனிதர்கள் பிரச்சினை. அப்புறம் இவள் பார்க்கப்போகும் வேலை பழகும்வரை பிரச்சினை. அப்புறம் குடும்பப் பிரச்சினை.

                     பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

                     விடும்மா.. எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கு. அதெல்லாம பயந்தா வேலை பார்க்கமுடியாது. எங்க கண்டக்டர் டிரைவர் வேலையைவிட ஒரு சாபக்கேடான வேலை உலகத்துலே இல்லம்மா. தைரியமா இரு. தினமும் என் பஸ்ல வா...சார் இருக்காரு... யோசனை சொல்ல நாங்க இருக்கோம்.. உன் கூடப்பிறந்தவங்களா நினைச்சுக்கோ..

                      அவள் மிரட்சி அவளை விட்டு நீங்கவில்லை.

                      சீர்காழியில் அந்த மனிதர் (தானே பேசிக்கொண்டு வருபவர் ஏறினார்)ஏறி உள்ளே வந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் எப்போதும் உட்கார்ந்து வரும் சன்னலோர சீட் அவருக்கு காத்திருந்தது. போய் உட்கார்ந்துகொண்டார். கண்டக்டரை அழைத்து சீட் வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரத்தில் தானே பேசத் தொடங்கிவிட்டார்..

                     நான் ஜெயக்குமாரிடம் அவரைக் காட்டிக் கேட்டேன்.

                      இது தெரியாதா சார்.. அது ஒரு கொடுமை சார்.. உங்க ஆபிசுலே இருக்கிற பாங்க்குலதான் கேசியரா வேலை பாக்கறாரு சார்.. ரொம்பக் கெட்டிக்காரர் சார்.. அவரோட மனைவியும் வேலை பாத்த்தாங்களாம்.. ஒருநாள் லீவுலே  வீட்டுல சமைக்கும்போது தீப்பிடிச்சிடிச்சாம்... இவரு பக்கத்துலே இருந்தும் காப்பாத்த முடியல்லே.. இவர கண்முன்னாடியே அந்தம்மா கருகி செத்துப்போயிட்டாங்களாம் சார்.. அதை பார்த்த அதிர்ச்சி சார்.. நான்தான் கொன்னேன்னு புலம்பிக்கிட்டிருந்தாரு.. இப்ப இருந்து காப்பாத்தமுடியாமப் போச்சேன்னு புலம்புவாரு சார்... ஆனா இப்பவும் பாங்குக்குப் போயிட்டா வேலை அபாரமா பாப்பாரு சார்..

                    நான் அவரை பார்த்தேன். அவர் என்னைக் கவனிக்காமல் தானே பேசிக்கொண்டிருந்தார்.

                     பேருந்து போய்க்கொண்டிருந்தது.

                      அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவள் கண்கள் கலங்கயபடியே சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தது.

                       புத்துர்ரில் ஒரு இந்தியக் குடிமகன் ஏறினான். கலைந்தவேட்டியுடன்.

                       பாத்து ஏறுய்யா விழுந்துடப் போறே...

                       உற்ய்... நாங்க எத்தனை பஸ்சு ஏறியிருக்கோம்.. நாங்க ஊரு உலகத்துக்கே வழி சொல்லுவோம்.. இந்தா வல்லம் படுகை ஒரு டிக்கட் கொடுத்துட்டு விசிலை ஊது... என்றான்.

                       இது வல்லம் படுகை நிக்காது... பாய்ண்ட்  பாய்ண்ட்,,

                       எல்லாம் பிரேக்ல கால வச்சு அழுத்துனா நிக்கும்.. என்ன ஆகாயத்துல பிளேனா ஓட்டுறே.,,

                        வம்பு பண்ணாதே இறங்குய்யா...

                         வல்லம் படுகையிலே எறக்கிவுடு இறங்கறேன்,,

                          மேலே பிடித்த கையுடன் கலைந்த வேட்டியுடன் ஆடினான் காற்றில் அசையும் கொடிபோல,,,

                          வந்து சேருது பாரு நமக்குன்னு சேட்டையும் செவ்வாய்க்கிழமையும்,,,

                           இன்னிக்கு செவ்வாய்க்கிழமை இல்லே,,, விசாலக் கிழமை,, இதுகூட தெரியாம வண்டி ஓட்டறே,, என்றபடி அவன் சிரித்தான்,

                           வண்டியில் பலரும் சிரித்தார்கள்,

                           ஜெயக்குமாரும் சிரித்தபடி இந்தா டிக்கட் புடிச்சி தொலை,, நல்லா கம்பிய புடி,,, வல்லம் படுகையிலே இறக்கிவுடுறேன்,,, என்றார்,

                           அப்படி சொல்லுடா என் தங்கம் என்றான் அவன்,

                           பாண்டியன் லேசான சிரிப்புடன் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தார்,
             
                           எங்கிருந்தோ காற்றில் ஒரு பாட்டு மிதந்து வந்தது

                           வாழ நினைத்தால் வாழலாம்,,, வழியா இல்லை பூமியில்,,,


                                                                                             (பேருந்து ஓடும்)
   

   








                         

                   






அன்புள்ள சுந்தர்ஜி,,,

இந்த வாரம் நாவல் அத்தியாயம் படித்து மெய் மறந்தேன். இந்த வார அத்தியாத்திற்காக இந்த தங்க விருது உங்களுக்கு. எனக்கு தொழில்நுட்பம் தெரியாததால் இதனைத் தாங்கள் பிரதியெடுத்து தங்கள் பதிவில் இடவும். வாழ்த்துக்கள்.