Sunday, December 23, 2012

மன வீக்கங்கள்,,, பகிர்வுகள்.....




                         தொடர்ந்த இடைவெளிகளுக்குப் பின் வந்திருக்கிறேன்.

                          அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்..

                          இப்போது குளிர்கால விடுப்பில் இருப்பதால் அவ்வப்போது ஏதேனும் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருககிறது.

                         பேருந்து நாவல் அச்சில் இருக்கிறது.

                          விரைவில் வெளியீடு. அனைவரையும் அழைப்பேன்.

                          000000000000000


                           நண்பர்களின் பதிவுகளில் ஏராளமான செய்திகள்... உணர்வுகள்... சுவையான நிகழ்வுகள் குறித்த பதிவுகள்... இந்த குளிர்கால விடுப்பில் அத்தனையையும் வாசித்துவிடுவது என்கிற உறுதி இருக்கிறது..


                             000000000000000


                             செய்தித்தாள்களை வாசிக்கும்போதெல்லாம் இப்போது மனம் நொந்து புண்ணாகி வீக்கமெடுத்திருக்கிறது.

                             பெண்பிள்ளைகள்... சிறுமிகள்... பச்சிளங்குருத்துகள்...பருவப் பெண்கள் எனப் பாலியல் வன்முறைக்குப் பலியாவது மனவெளியெங்கும் ரத்தம் கசிய வைக்கும் வலியை உணடாக்கி நிற்கிறது.

                            1, புதுதில்லியில் மருத்துவக் கல்வி பயிலும் மாணவிக்குப் பேருந்தில் ஏற்பட்ட பாலியல் கொடுமை....அதற்கென நடத்தப்படும் மாணவர்களின் சமுக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த உணர்வுப் போராட்டம் இவற்றையெல்லாம்  மத்திய அரசு புரிந்துகொண்டு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கவேண்டும் என்பதுதான் பணிவான வேண்டுகோள். மாணவர்களிடம் அவர்களின் உணர்வுகளோடு பேசுங்கள்.. தயவுசெய்து தடியடியும் கண்ணீர்ப் புகையும் வேண்டாம். பாதிக்கப்பட்ட  மாணவி விரைவில் நலமடைந்து எல்லாம் மறந்த மனோதிடத்துடன் படிப்பைத் தொடரவேண்டும். அதற்குரிய வல்லமையை இறைவன் அவருக்குத் தரவேண்டும்.

                              2, துர்த்துக்குடி பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட அவலச்சாவு எந்த விதத்திலும் மன்னிக்கமுடியாத குற்றம். உரிய குற்றவாளிக்கு உரிய நேரத்தில்  உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும். மாணவியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு மன அமைதியை இறைவன் அளிக்கவேண்டும் என்பதுதான் பிரார்த்தனை,

                             தண்டனைகளோடு இவை முடிவுக்கு வருவதில்லை. நேற்று முன்தினம் ஒரு தொலைக்காட்சியில் பேசிய ஒரு சமுக ஆர்வம் கொண்ட பெண் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்குக் கடுமையாகத் தண்டனைகள் வழங்கப்படும் ஒரு தேசத்தில் இக்குற்றங்கள் அதிகரித்து உள்ளனவே தவிர குறையவில்லை என்று சான்னறுகாட்டி உரைத்த கருத்து கவனத்திற்குரியது. எப்படியாயினும் இதற்கு நல்லதொரு நடவடிக்கையை அதுகுறித்த கருத்துருவை எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காத வண்ணம் உருவாக்கவேண்டிய சூழலை அனைவரும் எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் மன எண்ணம்.

                             தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும்
                             தருமமே வெல்லும்,,,,,, பாரதி


                                000000000000


                                மாயன் காலண்டர்
                                என்றார்கள்..

                                திசம்பர் 21 இல் உலகம்
                               அழியுமென்றார்கள்...

                                ஆயிரமாயிரம் பேர்
                               ஆயிரமாயிரம் பேச்சுக்கள்

                                பேசிப்பேசி
                                இன்னும் முடியவில்லை
                                பேச்சு...

                                ஓவியம் வரைந்துகொண்டிருந்த
                                பிள்ளை சொன்னான்
                                உலகம் அழிந்தால் அழியட்டும்
                                விடுங்கள்...
                                வேறொன்ற வரைந்துகொள்ளலாம்,,,

                                எல்லாவற்றிற்கும்
                                தீர்வுகளும் எல்லாவற்றையும்
                                எளிதாக்கவும் குழந்தைகளால்
                                மட்டுமே எப்போதும்
                                சாத்தியம்....

                                0000000000000


                                திருமங்கையாழ்வார் அடிப்படையில் அரசன். அவர் அரசனாக இருந்தபோது குமுதவல்லி எனும் மங்கையைக் கேள்வியுற்று அவளை மணக்க முறைப்படி துர்து அனுப்பினார். மங்கை சில நிபந்தனைகளை விதித்தாள்.

                                  1, தினமும் நெற்றியில் திருமண் இடவேண்டும்.
                                  2, திருமால் பக்தராகப் பெயர் மாற்றம் செய்யவேண்டும்.
                                  3, திருமந்திரம் உணர்ந்து உரைத்தல் வேண்டும்.
                                  4. நாளும் 1008 வைணவப் பக்தருக்கு ஓராண்டுக்கு திருவமுது
                                      படைத்திடவேண்டும்.

                            மங்கைவேந்தன் ஏற்றுக்கொண்டார். திருமணமும் முடிந்தது, சொனன்படி அப்படியே செய்து வந்ததால் வளம் குறைந்தது, சோழ மன்னனுக்குக் கட்டவேண்டிய கப்பம் செலுத்தமுடியாமல் போகவே சிறை செல்லவும் நேர்ந்தது, விடுவானா பெருமாள்,,, கனவில் போய் காஞசிக்கு வா மகனே,,, வேகவதி நதியில் பொற்குவியல் தருகிறேன் என்றார், அதன்படி சோழமன்னனும் மங்கை வேந்தனும் காஞ்சிக்கு சென்றனர். வேகவதி நதியில் சுட்டிய இடத்தில் பொற்குவிகை கிடைத்தது, சோழமன்னர் மங்கையாழ்வாரின் அருமை உணர்ந்து, அவரை வணங்கி சொன்னான்

                                      இனி கப்பம் வேண்டாம்,,,

   
                             திருமங்கையாழ்வார் உடனே அதற்குப் பதிலும் சொன்னார்

                                        தனக்கு இனி ஆட்சியே வேண்டாம்,,,


                             000000000000000000000000000000000000000000



                                      சந்திப்போம் இன்னொரு பதிவில்,,,,