Thursday, October 31, 2013

கவிதைகள்....




           கவிதைகள்.....கவிதைகள்.....


               00
                  எப்போது குறையும்
                  டீ மாஸ்டரின்
                  முகச்சூடு.

                                   000

              00
                  ஒவ்வொரு நாளும்
                   பகலும் இரவும்
                   யார் யாருக்கு?

                                    000

              00

                   ரயில் ஓடாத
                   தண்டவாளத்தில் ஓடுகிறது
                   மன ரயில்

                                  (நன்றி.  சௌந்தர சுகன்.... அக்டோபர்...2013).


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


          பேரச்சம்....

                    அப்பா இறந்துபோனபின்
                    ஒரு மாலையில்
                     பிள்ளை கேட்டான்
                    நீ எப்போ தாத்தா ஆவே?

                    ஏனென்றேன்

                    நான் அப்பா
                    ஆவணுமே
                    என்றான்

                    இயல்பாகத்தான் கேட்டான்
                    பிள்ளையென்றாலும்
                    உள்ளுக்குள்
                    பெருக்கெடுக்கிறது
                    இயல்பற்ற
                    பேரச்சம்....
               
                                    (நன்றி. ஆனந்தவிகடன்.....6.11.2013)

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                                               

                                                      இருளும் ஒளியும்...

                                                                             - ஹரணி



                       தீபாவளி கூட்டம் சாலை முழுக்கத் தெரிந்தது.

                       இரு சக்கர வாகனங்களில் விரைந்தபடியும்... சைக்கிளில் மிதித்தபடியும்... நடந்துகொண்டும்.. அவரவர்கள் கைகளில் வாகனங்களில் பளபளப்பான பல வண்ண ஜவுளிக்கடை பைகள்...

                       சில இடங்களில் இருள் கவ்விக் கிடந்தது சாலையில்

                       அந்த இடங்களில் பேருந்து நிறுத்தங்களும்... அல்லது சிறு பாலங்களும் இருந்தன.

                        துர்ரத்து தெருவிளக்கின் ஒளியில் அவை தங்களை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன.

                          கீழவாசலில் இருந்து மெயின் சாலைக்கு ஏறும் சிஆர்சி அருகில் சாலையைக் கடந்து சைக்கிளைத் தள்ளினாள் தனலெட்சுமி... நெற்றி முழுக்க வியர்வை.. தலை எண்ணெய் காணாமல் பரந்து கிடந்தது.. காதுகளில் தன சுயம் இழந்த கவரிங் வளையங்கள்... கைகளில் ரப்பர் வளையல் போலத் தோற்றம் கொண்டிருந்த வளையல்கள்... சைக்கிளின் பின் கேரியரில் அந்த மரத்துர்ள் மூட்டை இழுத்தது சைக்கிளை முன்நோக்கி தள்ள முடியாமல்.. பெரிய மூட்டை சற்று கணத்தது.. மரத்துர்ள் அடுப்புத்தான் அவளுக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து.. நான்கு நாட்களுக்கு ஒருமுறை கீழவாசலுக்கு சைக்கிளில் ஏறிப்போய் மரப்பட்டறையில் வாங்கி வருவதும் நிற்கவில்லை.

                  சற்று களைப்பாக இருந்தது. வடவாற்றுப் பாலத்தின் ஓரமாக ஆஞ்சநேயர் கோயில் அருகில் சைக்கிளை சற்று நிறுத்தினாள்.. யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு தலையைக் குனிந்து பாவாடையின் கீழ்நுனியை உயர்த்தி முகத்தைத் துடைத்தாள்..பின் சட்டென்று கீழே விட்டாள். யாரும் பார்த்திருப்பார்களோ என்கிற அச்சத்தில்..

                 முகத்தைத் துடைத்த சில நொடிகளுக்குள் மறுபடியும் அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள் கொப்பளித்து பிரகாசித்தன..

                  எரிச்சலாக இருந்தது.

                  ஆஞ்சநேயர் கோயிலில் கூட்டமில்லை. அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தாள். அவள் காயத்ரி..

                     தன்னோடு படித்தவள் என்றதும் அவளைக் கூப்பிட்டாள்.

                    காயத்ரியும் இவளைப் பார்த்துவிட்டாள்.

                    ஏய் தனம் எப்படியிருக்கே?

                     நல்லாயிருக்கேண்டி.. நீ எப்படி இருக்கே...

                     எனக்குக் கல்யாணம் ஆயிடிச்சுடி... என்று சொல்லி தன் கழுத்தின் மாறாத மஞ்சள் கயிற்றைக் காட்டினாள்.

                     தனலெட்சுமிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. கல்யாணம் ஆயிடிச்சா?
ஏண்டி எனக்கு சொல்லலே?  என்றாள்.

                      கோவிச்சுக்காதடி... மறந்துபோயிடிச்சி....ஆமா இன்னமுமா
மூட்டை அடிககறத விடலியா நீ? என்றாள் சிரிப்பை நிறுத்தி.

                       ஆமாண்டி. எரிச்சலா இருக்கு. ஆனா எங்க வீட்டுலே மரத்துர்ள் அடுப்புத்தானே ... நீதான் வந்திருக்கியே... இலவச கேஸ் கொடுத்ததகூட கொடுத்திட்டோம் வேண்டாம்னு... சிலிண்டர் வாங்க வருமானம் ஏது?

                        நீ பாவம்டி.. என்றாள்

                        சரி விடு..உன்ன பாத்ததும் நம்ப ஸ்கூல் ஞாபகம் வந்துடிச்சிடி..
எப்படி படிப்பே நீ?  இங்கிலிசுலேயும் சமுக அறிவியல்லேயும் உன்ன யாருமே முந்த முடியாதுடி... என்றாள் காயத்ரி.

                        அதெல்லாம் முடிஞ்சுப்போச்சுடி காயத்ரி.. எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனதிலேர்ந்து வண்டி ஓட்டறதில்லே... எங்கம்மாதான் அரவை மில்லுக்கு போவுது.. நானும் ஒரு கவரிங் கடைக்கு வேலைக்குப் போறேன்.. குடும்பம் ஓடுதுடி. . ஆமா உங்க வீட்டுக்காரரு என்ன பண்ணறாரு..

                       காயத்ரி பேசாமல் இருந்தாள்.

                       என்னடி பேசாம இருக்கே?

                       எங்கம்மா வேலை பாத்தாங்களே புளி முதலியார் வீடு...

                       ஆமா...

                       அவரு பொண்டாட்டி செத்துப்போச்சின்னு என்ன கேட்டாருன்னு எங்கம்மா எனன் அவருக்கு கட்டி வச்சிடிச்சி..

                       அடிப்பாவி.. அவரு உங்கப்பா வயசுல்ல..

                       வேற யாருடி என்ன கட்டிக்குவா...காது கழுத்த மூடக்கூட எதுவும் இல்லேன்னு அம்மா சொன்னா.. கட்டிக்கிட்டேன்.. மாடிவீடு.. நாலஞ்சு புளியந் தோப்பு இருக்கு.. அதுக்கு காவல் எங்கப்பாதான்.. அதுக்கு சம்பளம் தனியாதர்றாரு..நிம்மதியா மூணுவேளை திருப்தியா ஆசப்பட்டத சாப்பிடறோம்டி..  சரி.. வரட்டுமா.. அம்மா தேடுவா..

                          போயிட்டுவா..

                           வீட்டுக்கு வாடி... கொஞ்சம் புளி எடுத்திட்டுப் போகலாம்..

                           வரேன் காயத்ரி..

                            சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்துவிட்டு தள்ளியபடியே ஆஞ்சநேயர் கோயில் வாசலில் நிறுத்திஅப்படியே கும்பிட்டு மறுபடியும் சைக்கிளைத் தள்ளினாள்.. மரத்துர்ள் மூட்டை பின்னாலிருந்து இழுத்தது.

                           சற்று நிதானம் பண்ணி தள்ளினாள். சைக்கிள் நகர்ந்தது.
என்னவோ சைக்கிள் தள்ளுவது தனலெட்சுமிக்குப் பிடித்திருந்தது. தனக்கு
எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் ஆகட்டும். தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று தனலெட்சுமிக்கு தோணியது.

                            தெருவிளக்கின் ஒளி அவள் தலைமேல் விழுந்து பின்னால் நகர்ந்துபோனது. சைக்கிளை முன்னால் தள்ளியபடி போனாள் தனலெட்சுமி.

                                                             0000000

                                           



                                   

















Wednesday, October 30, 2013

கேட்டதும் கசிந்ததும்



              வழக்கம்போலவே இவ்வாண்டும் தீபாவளி வந்துவிட்டது.

              ஒவ்வொரு ஆண்டும் வரும். கொண்டாடுவோம்.

             என்ன இன்னல்கள் இருந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும் கொண்டாடுவது அவசியமாகிவிட்ட வாழ்க்கைச் சூழல்.

               தீபாவளி நெருங்குகையில் கடைத்தெரு நிரம்பிவழியும்.

               மக்கள் கூட்டம் சிறு ஓடையாகும் பின் நதியாகும் பின்னிரவில்
வெள்ளியும் நிலவும் மிதக்கும் அற்புதம் காணக் கண்கோடிவேண்டும்.

               அப்படியான நதியின் கரையில் நடந்தபோது காதில் விழுந்தவை

                00000000000000

                ஏண்டி.. உயிரை எடுக்கறே... அவவன் தீபாவளிக்கு நாயா பேயா
அலைஞ்சி பணத்த வாங்கிட்டு வந்தா.. படுத்தறே.. இருக்கற ரெண்டாயிரத்துக்
குள்ள எல்லாத்தையும் முடிச்சுக்க.. இல்லாட்டி எனக்கு ஒரு முழம கயிறு வாங்கிக்கொடு.. என்னால முடியாது...

               வருஷத்துக்கு ஒரு தடவை அழச்சிட்டு வர்றீங்க.. அரக்கப் பரக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயிருக்காதுங்கறது என்னோட தலையெழுத்து..
நான்தான் முதல்ல தொங்கணும்..

             ?????????????????????????????????

               ஏம்மா.. உக்காந்திருக்கே... எனக்கு இன்னொரு ஸ்பைடர் மேன்
டிரஸ் எடுத்துக் குடும்மா...

               இருடா...தம்பி.. பேசாம இரு... உனக்கு பைவ் ஸ்டார் வாங்கி
கொடுத்திருக்கேன்.. அப்பா உள்ள போயிருக்காரு வரட்டும்..

               நீ வாம்மா.. அப்பா வர்ற வரைக்கு போய் டிரஸ் பாக்கலாம்..

              என்ன படுத்தாதடா தம்பி.. அம்மா வயித்த பாரு.. தங்கச்சி
பாப்பா வேற உதக்கிறா.. வலிக்குது நடக்கமுடியல்லே..

             ஏம்மா...இப்படி வயித்த தள்ளிக்கிட்டு இந்தக் கூடடத்துலே வந்திருக்கே..
யாராச்சும் இடிச்சுட்டா.. பாத்தும்மா..

                என்னங்க ஆச்சு?

                ஏடிஎம்ல தொடச்சி எடுத்திட்டேன்.. எண்ணுர்ருவா இருக்கு.. இவனுக்கு
ஸ்பைடர்மேன் டிர ஸ் எடுத்துடலாம்.. போன தீபாவளிக்கே ஏமாத்தியாச்சு...

    ????????????????????????????????????????????????????????

                       யேய் பப்பி... உனக்கு இத்தோட நாலு சுடிதார் ஆச்சு.. போதுமா
இன்னும் வேணுமா?

                       ஒண்ணுமே புடிக்கல்ல டாடி.. ஜீன்ஸ் எடுத்துக் குடுங்க..

                       சரி.. வா..

         ???????????????????????????????????????????????

                       எனக்கே அசிங்கமா இருக்கு.. நாலுங்கிழமையுங்கூட  கையிலே
காசு இலலே.. பழையபடி வட்டிக்கு வாங்கிட்டுத்தான் வந்திருக்கேன்.. இந்தத் தடவை மாசம் சுளையா மூவாயிரம் வட்டிக் கட்டணும்..

                      என்னங்க பண்ணறது.. சமாளிப்போம்.. கேக்கற பிள்ளைங்களா
இருந்தா சொல்லி புரிய வைக்கலாம்..  ஒண்ணுக்கும் வறுமை புரியலே..

          ???????????????????????????????????????????


                       என்ன சார்.. வழக்கம்போல கோஆப்டெக்ஸ் தானா?

                       வேற பாலு.. நம்ப பட்ஜெட்டுக்கு அதான்..  பொண்ணுக்கு
வேற தலைதீபாவளி.. மாப்பிள்ளை அழைக்கப்போவணும்..

                      ??????????????????????????????????

                      என்ன சார் வேணும்.,,

                      பீட் காசு பத்துரூபா வாங்கிட்டு வரச்சொன்னாரு ஏட்டய்யா,,

                      இப்பத்தான் சார் கொடுதேன்..

                      அது வேற கணக்கு.. கொடு.. கூட்டத்துலே நேரமில்ல எடு...

                      காலையிலேர்ந்து நுர்று ரூவாய்க்கு வேவாரம் பார்த்தா ஐம்பது ருபா இவனுங்களுக்கு வாக்கரிசி போடவே சரியாயிடுது..

                       ???????????????????????????????

                        இதுக்குத்தாண்டி உன்னோட கடைத்தெருவுக்வே வரமாட்டேன்னு சொன்னேன்..

                       நாளு தவறாம அழைச்சிட்டு வர்றீங்க... இன்னிக்கு தப்பா
போச்சு?

                      ஏண்டி.. அவவன் துணி எடுப்பான்.. எப்பப் பாரு எடுத்த துணி புடிக்கலேன்னு மாத்த வரேன் இந்தக் கூட்டத்துல அவன் கன்னாபின்னான்னு
கத்துவான்..

                      நேத்தே கேட்டுட்டுதான் வந்தேன்.. பிடிக்கலேன்னு மாத்த வருவேன்னு..

                       சரி போயிட்டு வா..

                       இன்னொரு 200 கொடுங்க.

                       எதுக்குடி?

                       மாத்துற துணி கூட விலையிருந்தா...

                       அடக்கடவுளே...

                  ???????????????????????????????????


                    சைக்கிளை தள்ளியபடி .... சுக்கு காபி...சுக்கு காபி...
                    ஒரு சுக்கு காபி கொடுப்பா..

                    நீண்ட நாட்களாகவே கேட்கவேண்டிய கேள்வி..

                    இதுல என்ன கிடைக்கும்பா உனக்கு..

                    எப்படியும் 50 கிடைக்கும் சார்.. அதுக்கு மேல கெடைக்காது..
நேரமாச்சுன்னா ஆறிப்போயிடும்.. கொட்டவேண்டியதுதான்.. வலிய
போனா யார் சார் குடிப்பா.. வழிபூரா டீக்கடை இருக்கு..

                  ?????????????????????????????????????????


                            சரி போ கடைக்குள்ள..

                            அய்யா சாமி உன்ன கையெடுத்துக் கும்பிடறேன்.. இங்கேயே
உக்காரு நான்போய் துணி எடுத்திட்டு வந்துடறேன்..

                            நா... ன்.. பா...ழ்...க்க வேண்டாமா?

                           கடைக்குள் வந்து வாந்தி எடுத்திராதய்யா.. மானமே போயிடும்..

                          போடி... ஐ ம்.. டீசண்ட் பார்ட்டி.. குடிச்சிருக்கேன்.. ஆனா வாந்தி எடுக்கமாட்டேன்..

                          நாலைந்து சிறுபடிகள் ஏறுவதற்கே நேரமாகிறது.

                          ஜவுளிக்கடை வாட்ச்மேன்.. அம்மா நீங்க மட்டும் போங்க..
நீங்க உள்ளே போகதீங்க சார்.. திட்டுவாங்க..

                          ங்கோத்தா.. .. எவன்டா.. என்னை தடுக்கிறது.. நாயே...

                          தகராறு தொடங்க... அய்யோ கடவுளே என்றபடி அவனை இழுத்துக்கொண்டு திரும்புகிறாள் அந்த தர்மபத்தினி..

                            ????????????????????????


                            என்னை காவு குடுக்கன்னு பொற்ந்திருக்கு சனியன்... வாயிலும் கன்னத்திலும் மாறி மாறி விழுகின்றன சுளிர் அடிகள்... துடித்துப்போகிறான்
அந்த சிறுவன்.

                            ஏமமா இப்படி பச்சபுள்ளய அடிக்கிறே?

                            புடிவாதம் புடிச்சி நான்தான் வச்சுக்குவேன்னு அம்பது ரூபாய வச்சிருந்து இப்ப எங்கய போட்டுடுச்சுங்க.. எப்படி துணி எடுப்பேன்..

                            ஐம்பது ரூபாயில் என்ன துணி எடுப்பாள்?

                             ??????????????????????????????

                             ஏய்யா என்ன கூடடம்?

                              வயசானவரு மயங்கி விழுந்துட்டாரு?

                              ஏம்பா இந்தகூட்டத்துலே வர்றீங்க?

                             பேரப் புள்ளங்களுக்கு துணி எடுக்க வந்தாராம்..

                             சரி..

                             அவரு பணத்தை யாரோ அடிச்சுட்டாங்களாம்-

                             எவ்வளவு?

                             ரெண்டாயிரம்.. அதான் பென்ஷன் பணமாம்...

                               ?????????????????????????????



                               
                   

      

Sunday, October 27, 2013

கூமுட்டைகளும்... உளுத்துப்போய் கொட்டுபவைகளும்...




                      வளர்ந்திருக்கிறதா தமிழ் சினிமா?

என்கிற கேள்வியுடன் இந்தப் பதிவைத் தொடங்கலாம் என்று எண்ணுகிறேன். பேசாப் படமாக அல்லது ஊமைப்படமாக முதன் முதலில் வெள்ளித்திரையில் வெளிவந்தபோது சினிமாவை அப்படியொரு ஊடகத்திற்குள் பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சியும் வியப்பும் ஏதோ ஒன்றை இது சாதிக்கப்போகிறது என்கிறதான எதிர்பார்ப்பிலும் எண்ணம் உருப்பெற்றிருக்கும். அந்தக் காலக்கட்டம் தொடங்கி இன்றுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான சினிமாக்கள் ஆயிரக்கணக்கான நடிகர்கள் சிலபல இயக்குநர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மனதில் நிற்கக்கூடிய இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள் இசையமைப்பாளர்கள் திரைப்படப் பாடலாசிரியர்கள் எனத் தனித்தனியாக தனித்தன்மையுடன் சினிமாக்களைப் பார்த்து அளவிடும் காலக்கட்டம் வரைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு அடையாளப் படுத்தப்பட்ட சினிமா வளர்ந்திருக்கிறதா? என்கிறே கேள்வியையே இன்றைக்கு புற்றீசல்போல மனம்போனபோக்கில் எல்லாம் தலைப்புக்களை வைத்து வெளிவந்துகொணடிருக்கும் சினிமாக்கள் மனத்தில் விதைத்துக் கொண்டிருக்கின்றன. தியேட்டருக்கு வருவதற்கு முதல்நாளே சிடியாக (திருட்டு விசிடியாக வருவது என்றைக்கும் அனுமதிக்கமுடியாத குற்றம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்) தியேட்டரைவிட்டு துர்க்கியபின் (அதிக பட்சம் ஒருவாரம் ஓடினால் அதிர்ஷ்டம்) சிடிக்களாக வந்தும் விற்பனையாகாத நிலையில் அல்லது வேறுவழியில்லை ஏதோ ஒரு சிடியை வாங்கு என்பதான நிலையில் வாங்கப்பட்டு நேரம் கழிய பார்த்துவிட்டு துர்க்கிப்போடுகிற சிடிகள்... என்பதான நிலைதான் தற்போது பெரும்பான்மை படங்களுக்கான நிலைமை.

                     தொடக்கத்தில் சினிமாக்கள் முழங்கைவரையில் கையும் பின்கழுத்துவரை ஏறிய உடம்பும் என ரவிக்கை அணிந்த கதாநாயகிகள் நாதா என்று தொடங்கி கொஞ்சம் நல்ல தமிழில் பேசிய பின் நல்ல தமிழில் பேசி நடித்த படங்கள் நடிப்புக்கும் கதாநாயகன் கதாநாயகிகளுக்கும் விரசமில்லாத கதைக்கருக்களுக்குமாக அப்புறம் சாகசங்கள் அடங்கிய வரலாற்றுப் படங்கள் புராணப்படங்கள்.. பக்தியுணர்வு பெருக்கும் படங்கள் என தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு அவை இன்றைக்கும் பார்க்கும் தகுதியை இழக்கா மலிருப்பதும் உண்மையானது.இயககுநர் பாலச்சந்தர். ஸ்ரீதர் மகேந்திரன் போன்றோரும் மற்றும் சிலரும் தொடர்ந்து தந்த படங்களில் கதை சொல்லுகிற முறையிலும் ஒருசில படங்களின் பொருண்மைநிலையிலம் மாற்றங்களும் புது உத்திகளும் அறியப்பட்டன. இவை ஏற்படுத்திய தாக்கங் களும் குறிப்பிடத்தக்கவை. தொடர்ந்து பாரதிராஜா தொடங்கிய காலக் கட்டத்துப் படங்கள் நல்ல கிராமத்தின் இயற்கைப் பின்னணியைச் சுவைக்க வைத்தன. இருப்பினும் இதுதான் சினிமாவின் சூத்திரம் என்பதுபோல அதனைத் தொடர்ந்து ஓராயிரம் படங்கள் அதே கிராமம்.. மரத்தடி பஞ்சாயத்து.. வேப்பிலை...உடுக்கடி... குளம்..குட்டை... காதல் என வட்டமடித்து வட்டமடித்து மழுங்கடித்தன.

                 இவற்றுக்கிடையில் மனித வாழ்வியலின் இருள் பக்கங்களில் ஒளியேற்றத் துடிக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய படங்களையும் எதார்த்த வாழ்வின் அவலங்களையும் நடுத்தர வர்க்க மனிதனின் பல்வேறு பிரச்சினைகளையும் கையிலெடுத்துக்கொண்டு பட்ங்களைத் தந்த இயக்குநர்கள் அதிகபட்சமாக அந்த ஆண்டின் இறுதியில் ஏதேனும் ஒரு விருதிற்காக மேடையேறி அத்துடன் காணாமல் போன கதைகளும் உண்டு. நினைவில் வந்ததைக் குறிப்பிடவேண்டுமானால்... பாரதிராஜாவின் நிழல்கள். கல்லுக்குள் ஈரம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள். பாலுமகேந்திராவின் வீடு துரையின் பசி இப்படியாக எதார்த்த வாழ்வின் நுட்ப அவலங்களையும் போராட்டங்களையும் சித்தரித்த படங்களும் ஓடி மறைந்தன. இவற்றின் தாக்கங்கள் என்பவை அவ்வளவாக  உணரப்படவில்லை. ஆனாலும் இவையும் இவற்றைத் தொடர்ந்த பல இயக்குநர்களின் ஒருசில படங்களும் கணிசமான பார்வைக்கும் வசூலுக்கும் இலக்காகியுள்ளமையும் அறியப்பட
வேண்டியவை என்றாலும் இவை தமிழ சினிமாவின் வளர்ச்சியை எந்தளவு
பாதித்திருக்கின்றன அல்லது உயர்த்தியிருக்கின்றன அல்லது எந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன என்றால் அதன் முடிவு ஏமாற்றத் தையே அளிக்கிறது. இருவேறு உச்ச துருவங்களாக விளங்குகின்ற ரஜினிகாந்தும் கமலஹாசனும் தங்களின் படங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று இயங்கியசூழலில் அவை வரவேற்கப்பட்டன. விமர்சிக்கப்பட்டன என்றாலும் அவை அந்தந்த படங்களின் இயக்குநர் அல்லது நடிகர்களின் தனிப்பட்ட நடையுடை உத்திகளின் வெளிச்சத்தையே பிரதிபலித்தன. அவை வெற்றி என்றும் அடையாளமிடப்பட்டன. ஆனாலும் உலக அரங்கின் வாசலைக்கூட அவை நெருங்குவதற்கு அனுமதிக்கப் படவில்லை என்பது யோசனைக்குரியது.

                    இப்படி தொடர்ந்த சூழலில் தற்போது தமிழ் சினிமாக்களில் பள்ளி. கல்லுர்ரி களங்களை அடிப்படையாககொணடு எடுக்கப்படும் காதல் கதைகள் எல்லாம் வீணான முட்டைகளாகவே ஆகிகொண்டிருக்கின்றன. பள்ளிப் பிள்ளைகளின் முகத்தோடு கதாநாயக முகத்தின் பொருத்த அது முத்திப் போன தோற்றத்தையே பிரதிபலிக்கிறது. தவிரவும் அப்படங்களின் கதைப் பொருண்மை முதல் காட்சியிலேயே ஊகித்துவிடுகிற மலினத்தையும் உள்ளடக்கியவை. தவிரவும் பெரிதான ஒரு சமுகத் தேவையின் பிரதி பலிப்பையும் சமுகப் பயனையும் துளிகூட அளிக்கமுடியவில்லை அல்லது விரும்பவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆயுதங்களோடு புழங்குபவனோடு சமுகத்தில் அடாவடித்தனங்கள் செய்பவனோடு பொருந்திய காதல் கதைகளைக் காட்சிப்படுத்தியது சமுகத்தின் பயன் என்பதில் வெந்நீரை ஊற்றியதாகியது.


                   அப்புறம் நல்ல சினிமாவே தமிழில் எடுக்கப்படவில்லையா? என்கிற கேள்விக்கு எடுக்கப்படும் சினிமர்க்களை அவரவர் பர்ர்த்தே பதில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். நம்பிக்கை தருகிற படங்களைத் தருகிற தங்கர் பச்சான். மிஸ்கின் பாலா முருகதாஸ்  போன்றோரும் அந்த உயர்ந்ததின் தொடக்கத்தைத் தொடங்கி பின் அதன் சக்கையையே பெரிதாகக் காட்சிப்படுத்திவிடுகிற நிலைக்குத் தள்ளப்படுகிற வணிக சமரசத்தைத் தவிர்கக்முடியாமலும் மறைக்கமுடியாமலும் போகிறது. இருப்பினும் இவர்கள் கையில் இவர்கள் அறியாமல் உலகதரத்தின் தொடர் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால் அந்தப் பயணத்தினைத் தொடங்கும்
இவர்கள் கையில் தமிழ சினிமா உலகக் கண்களின் பார்வையைச் சந்திககிற
வாய்ப்பிருக்கிறது. என்றாலும் நம்முடைய இலக்கியங்களின் மையப் புள்ளியில் அல்லது சாரத்தில் எடுத்துப் பேசப்பட்டிருக்கிற மனிதனின் உணர்வலைகளில் நாடிப் பிடிக்கிற லாவகத்தைக் கற்றுகொள்ள தமிழ சினிமா முயலவேண்டும் என்கிற ஆதங்கமுமிருக்கிறது. தொழில்நுட்ப வசதிகள் வான் முட்டும் அளவிருந்தாலும் அதனைத் தாண்டிய இவை மீறிய தரமும் தகுதியும் நம்முடைய தமிழ் சினிமா படைப்பாளிகளிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கையே தமிழ்  சினிமா வளரவில்லை என்று தொடக்கத்தில் கேட்ட கேள்வியைக் கேட்டு துர்ண்டுவதற்கான ஒன்றாக இருக்கிறது.

                     30 நாட்கள் 45 நாட்கள் 65 நாட்கள் ஆண்டுகள் எனப் படப்பிடிப்பு நடததி வெயிலிலும் மழையிலும் கிடந்து துர்க்கமின்றி பசிவேளை மாறியுண்டு எடுக்கப்படும் ஒரு படம் அரங்கில் ஒருவாரத்திற்குமேல் இருக்க முடியாமல் காணாமல் போகிறதே அதைப்பற்றிய சிந்தனை ஏன் பெருகவில்லை? உடனே ரசிகர்களின் ரசனைக்கேற்பவே எடுக்கிறோம் எங்களாலும் உலகத் தரத்தில் எடுகக்முடியும்? எத்தனை பேர் பார்ப்பார்கள்? என்கிற தயாரான பதில்களைச் சுமந்திருக்கும் நீங்கள் ரசிகர்களின் ரசனைக் கேற்ப எடுக்கிறோம் என்கிற நிலையில் அதுஏன் சரியாக நிற்கவில்லை. அதிகபட்சமும் குறைந்த பட்சமும் ஒருவாரம்தானே தாக்குபிடிக்கிறது. ஒரு நாளில் வெளியாகிற 10 படங்கள் என்கிற கணக்கில் யோசித்தால்கூட அந்த பத்துப் படங்களின் ரசனையும் வேறுபட்டுதானே இருக்கிறது. ஆனாலும் அந்தப் பத்து ரசனைகளின் முடிவு என்ன?  தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறதா?

                    தொலைக்காட்சித் தொடர்களில் இயங்கும் எல்லா பாத்திரங்களையும் பாருங்கள் காலைப்பொழுதிலும் சரி மாலைப் பொழுதிலும் சரி மதியப் பொழுதிலும் சரி இரவுப் பொழுதிலும் சரி.. வீட்டின் உறாலில்... படுக்கையறையில்... அடுக்களையில் எனப் பாத்திரங்கள் இயங்கும்போது மடிப்பு கலையாமல் உடையமைப்பும் தலை சிகையலங்காரமும் கழுத்து நிறைய நகைகளும் முகப்பொட்டும் இப்படித்தான் எந்த நேரமும் இருப்பார்களா? இது எத்தனை செயற்கையோ அதையே தமிழ் சினிமாவிலும் பொருத்தமற்ற பாத்திர ஒப்பனை தொடங்கி பலவும் இருக்கின்றன. எதார்த்தம் என்ற ஒன்றையே தமிழ் சினிமா மறந்துவிட்டது போலும். உலக அரங்கின் திரைப்படங்களை நகலெடுத்தது இது என்கிற குற்றச்சாட்டுக்களை சுமக்கிறோம்.. இல்லையென வாதிடுகிறோம்.. ஆனாலும் இயற்கையான
ஒரு சினிமாவை என்றைக்கு தமிழ் சினிமாவுலகம் அளிக்கும் என்பதை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது கூடவே உலகத் தரத்திற்குக் கொஞ்சங்கூடக் குறையாத தரத்தையும் தகுதியையும் சினிமாபொருண்மையையும் கொண்டிருக்கிறவர்கள் தமிழ்ச் சினிமாவின் படைப்பாளிகள் எனும் நம்பிக்கையுடன்.

                               




Saturday, October 26, 2013

எழுதப்படாத உயில்.....குறுந்தொடர்...3

எழுதப்படாத உயில்... குறுந்தொடர்...3




                          அவசரப் பிரிவிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
ரங்கராஜன் வெளியேதான் காத்திருந்தார்.

                          அவர் பையன் மற்றும் சில உறவினர்கள் பக்கத்து வீட்டுப் பையன் நின்றுகொண்டிருந்தார்கள்.

                           ஏம்பா.. கவனமா பாத்துக்கக்கூடாதா?  என்றார் ரங்கராஜன் மகனிடம்.

                          என்னோடதாம்பா பேசிக்கிட்டிருந்தாங்க அம்மா.. பாத்ரூம் போய்ட்டு வரேன்னுட்டு போனாங்க... கொஞ்சநேரங்கழித்து மடார்னு சத்தம் கேட்டது... அம்மான்னு சத்தம். ஓடினேன்.. மலலாக்க விழுந்துகிடக்காங்க..

                         தரையிலே லேசா வழுக்கியிருக்கு.. ஆனா பாசி இல்லே.. கால் நழுவியிருக்கு..

                         டாக்ட்ர் என்ன சொன்னார்?

                        விழுந்த அதிர்ச்சியிலே மயக்கமாயிருக்காங்க.. பின் மண்டையிலே அடின்னாலும் பயப்படறதுக்கில்லேன்னுட்டாங்க...ரெண்டு நாள் கண்காணிப்புலே வச்சி பாத்துட்டு அழைச்சிட்டுப் போங்கன்னு டாக்டர்
சொல்லிட்டாரு..

                        ரங்கராஜன் சறறு அமைதியானார். அந்த வராந்தாவில் பெஞ்சு தேடி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

                                                  000000000000


                      வாசலில் குரல் கேட்டு வாசலுக்குப் போனாள் தேவகி.

                      அஞ்சல்காரப் பெண் கையில் ஒரு கடிதத்துடன் நின்றிருந்தாள்.

                       இந்தாம்மா...  எனற்படி கொடுத்துவிட்டுப் போனாள்.

                       அக்கா... உன் பேருக்குத்தான் வந்திருக்கு..

                      உள்ளே போனதும் அந்தக் கடிதத்தை அங்கையர்க்கண்ணி
வாங்கிக்கொண்டாள்.

                         கடிதம் பிரித்தாள். அது கடிதமல்ல அரசாங்க ஆணை.

                        அவளை வேலையில் சேரச்சொல்லி வந்திருந்த ஆணை அது.

                        உள்ளே பார்த்து கத்தினாள். அம்மா ஆர்டர் வந்துடுச்சி...

                       அங்கையர்க்கண்ணியின் அம்மா உள்ளிருந்து உறாலுக்குள் வந்தாள்.
                       எப்போ வந்துச்சி?

                      இப்பத்தாம்மா போஸ்ட் உமன் கொடுத்திட்டுப் போறாங்க.

                      எப்ப வேலையிலே சேரச்சொல்லி வந்திருக்கு?

                      நாளைக்கும்மா...

                      சரி...உனக்கு விருப்பந்தானே?

                     விருப்பமில்லாட்டியும் போய்த்தானே ஆகணும்மா என்றாள் அங்கையர்க்கண்ணி..

                      அப்போ உனக்கு இஷ்டமில்லியா?

                      அப்படிச் சொல்லலேம்மா.. போகவேண்டிய கட்டாயம் இருக்குல்லே.. அதைச் சொன்னேன்...

                       சரி அதை உங்கப்பா போட்டோகிட்ட வச்சி விளக்கேத்து..

                      அங்கையர்க்கண்ணி அதை அப்பாவின் புகைப்படத்திற்குக் கீழாக
வைத்துவிட்டு வணங்கினாள்.

                      அப்பா நீங்க இருந்து எனக்குக் கிடைக்கவேண்டிய வேலை. நீங்க இறந்துபோய் எனக்கு கிடைக்குது உங்களுக்குப் பதிலா... கஷ்டமா இருக்குப்பா.. நீங்க இல்லாம இருக்கறது..

                         கண்ணீர் வழிய வேண்டி நின்றாள் அங்கையர்க்கண்ணி.

                         மறுநாள் தாலுகா ஆபீஸ் தேடி  தானே போனாள்.

                         காலையிலேயே அம்மா அப்பா போட்டோ முன்பு விபூதி இட்டு போற இடத்துலே பாத்துக் கவனமா நடந்துக்க என்றாள்.

                          அம்மாவின் ஆசி போதும்.

                          நேராக அவள் தாசில்தாரைப் பார்த்தாள்.

                          கடிதத்தைப் பிரித்து படித்த அவர்.. அவளைப் பார்த்து
ஓ.. அந்த சிவராமன் பொண்ணா நீ.. அருமையான மனுஷம்மா.. ஒரு பாலிசி
யோட வாழ்ந்தவர்ம்மா... சரி.. வாழ்த்துக்கள்.. உன் அப்பா மாத்ரியே வேலை பாரு... எதுவானாலும் சந்தேகம் கேளு.. எல்லோரும் உதவியா இருப்போம்..

                          மேசையின் மணியை அழுத்த அலுவலக உதவியாளர் ஓடிவந்தான்.

                         இவங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காங்க.. நம்ப ரங்கராஜ்ன் கிட்டே கூட்டிட்டுப் போ..

                          இவர்கள் ரங்கராஜ்ன் மேசைக்குப் போனபோது அவர் மும்முரமாக ஏதோ ஒரு கோப்பில் -குறிப்பு எழுதிக்கொண்டிருந்தார்.

                         சார்... என்று அவரைக் கலைத்தான். அலுவலக உதவியாளர்.

                         நிமிர்ந்தார்.

                         மேடம் புதுசா வேலைக்கு வந்திருக்காங்க,,, உங்ககிட்ட தாசில்தார் ஐயா உடச்சொன்னாரு..

                          அங்கையர்க்கண்ணியை நிமிர்ந்து பார்த்தார்.

                          அவளும் பார்த்தாள்.

                           இருவருக்கும் பாந்தமான ஒரு அலை பரவியது.

                           உக்காருங்க.. என்றதும் உட்கார்ந்தாள்.

                           ஜாயனிங் ரிப்போர்ட் கொடுத்தாச்சா?

                           அப்படின்னா? என்றாள்.

                           சட்டென்று ரங்கராஜனுக்கு சிரிப்புவந்தது. சிரித்துவிட்டுக்
கேட்டார்.

                          என்ன படிச்சிருக்கீங்க?

                          பிபிஏ..

                          அவளுக்கு பணிசேர்வறிக்கை எப்படி எழுதுவது என்று சொல்லி எழுதச்சொன்னார்.

                          வெள்ளைத்தாள் எடுத்துக் கொடுத்தார்.

                          அனுப்புநர் பெறுநர் பொருள் பார்வை என்று வரிசையாக அழகாக பொறுமையாக சொன்னார்.

                           எழுதினாள்.

                           அவளின் கையெழுத்து  மாவில் விழுந்து ஓடும் எலியின் கால் தடங்களைப் போல அழகாக இருந்தது.

                            அதை ரசித்தார் ரங்கராஜன்.

                            அவள் எழுதி முடித்ததும் ரங்கராஜனிடம் நீட்டினாள். அவர் அதை சரிபார்த்துவிட்டு உள்ளே போய் தாசில்தாரிடம் கொடுங்க என்றார்.

                            எழுந்துபோய் கொடுத்துவிட்டு வந்தாள்.

                            அவர் அக்கடிதத்தின் மேல் சிறுகையொப்பமிட்டுத் தந்திருந்தார்.

                            ரங்கராஜ்ன் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து அவரைப்
பார்த்து  நன்றி  என்றாள்.

                            ரங்கராஜன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு சில கடிதங்களை அவளிடத்து தந்து இதைப் படித்து என்ன பொருண்மை என்று ஒரு தனித்தாளில் குறியுங்கள் என்றார்.

                           அவள் கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

                                                                          (உயில் எழுதப்படும்)



Monday, October 21, 2013

எழுதப்படாத உயில்....குறுந்தொடர்...2

குறுந்தொடர்...


                                            எழுதப்படாத உயில்.....2



                                 ரங்கராஜன் அடிக்கடி மனம் சோர்ந்துபோனாலும் வேலையில்  சோர்ந்துபோவதில்லை.

                                 செய்கிற வேலையைத் திருத்தமாகச் செய்வார்.

                                 யாரும் அதில் குறைகாண முடியாதது மட்டுமல்ல. அந்த வேலையை மறுபடியும் செய்யவேண்டியதில்லை.

                                 அத்தனை நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும்.

                                 ஆனால் உலகியல் நீதி வேறு என்பதுதான் ரங்கராஜ்ன் வரைக்கும் நிருபிக்கப்பட்டிருந்தது.

                                 உண்மை உழைப்பு நேர்மை இவற்றோடு பணி செய்பவனுக்கு எப்போதும் பணியிலும் சுமை இருக்கும் வாழ்க்கையிலும் சுமை கூடியிருக்கும்.

                                ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

                                ஒருவேலையும் செய்யாமல்.. செய்கிற வேலையிலும் கவனக் குறைவாகவும் செய்கிறார்கள்...  அலுவலகத்தில் நுழைந்தவுடனேயே அரசியல்...

                                 ஆனால் லஜ்ஜையே இல்லாமல் துளிகூட கூச்சமும் இல்லாமல் மாதம் பிறந்தால் சம்பளம் மட்டும் குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

                                   ரங்கராஜனுக்கு அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு விஷயம் அடிக்கடி மனத்திற்குள் கேள்வியாக வந்துபோகும்.

                                   இப்படி ஊரை ஏமாற்றி மனசாட்சியின்றி வேலையும் பார்க்காமல் ஆனால் சம்பளம் மட்டும் வாங்கிகொண்டுபோகும்போது அவர்கள் வீட்டில் இப்படி உழைக்காமலே ஊதியம் பெறுகிறாயே இது உனக்கு கேடில்லையா என்று யாராவது ஒருத்தராவது கேட்கமாட்டார்களா?

                                  எப்போதோ படித்த பழமொழி நினைவுக்கு வந்துவிடும்.

                                  நச்சு மரத்தில் எப்படி நல்ல பழம் பழுக்கும்?

                                  நிச்சயம் குடும்பமே நச்சாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உடனே சமாதானமாகிவிடுவார்.

                                 ஒவ்வொரு முதல் தேதியிலும் இந்த ஓரங்க நாடகத்தை மனதிற்குள்ளே அவரே நடித்து அவரே இயக்கி அவரே பார்த்து நடத்திக் கொள்வார்.

                                  யாரோ கூப்பிட நிமிர்ந்தார்.

                                  ரங்கராஜன் சார் ஓஏபி பில் போயிடிச்சான்னு தாசில்தாரு கேக்கறாரு..

                                  அனுப்பி நாலு நாளாச்சு... கண்ணன் என்றார்.

                                  சார்.. நமக்கு வேண்டியவரு.. ரொம்பநாள் குடும்ப நண்பர்.. அவரோட சால்வன்சி பைலு தாசில்தாரு மேசையிலேயே கெடக்கு..

                                  என் மேசைக்கு வந்தா உடனே அனுப்பிடுவேன் வெங்கட்ராமன் என்றார்.

                                  அதுபோதும் சார்... ரொம்ப நன்றி..
                 
                                   சார் டீ.. என்றபடி நாயர் கடைப் பையன் டீ கொண்டு வந்தான்.

                                   என்னடா எப்படியிருக்கே?

                                   ஏதோ சாரே..  நாள் கழிஞ்சி... நிம்மதியில்லா...

                                   உனக்கு என்னடா கவலை?

                                  இந்த உலகத்துலே வந்து பொறந்திட்டா சாரே எல்லோருக்கும் கவலைதானே மிச்சமிருக்கு.. எப்ப எது நடக்கும்னு யாருக்கு தெரியும் சாரே,, அவன் ஏட்டை படிச்சுட முடியுமா? வரேன் சாரே,, அப்புறமா டீ கிளாச எடுத்துப்போறன்..

                                    இவருடைய பதிலை எதிர்நோக்காமல் போய்விட்டான்.

                                    எதார்த்தமா பேசிவிட்டுப் போகிறான் வாழ்வின் நுட்பத்தை.

                                    யோசித்தபடியே டீயைக் குடிக்க ஆரம்பித்தார்.

                                    கடைசி மிடறை உறிஞ்சத் தொடங்கும்போது ப்யூன் நடேச்ன அவசரமாக வந்து அவர் மேசை முன் நின்றான்.

                                    என்ன நடேசா?

                                     தாசில்தாரு கூப்பிடறாரு சார்...

                                    என்ன விஷயம்?

                                    தெரியலே சார்... ஆர்டிஓ கிட்டேர்ந்து தபால் வந்துச்சி.. பிரிச்சு பார்த்ததும் போய் கூப்பிட்டு வான்னார்..

                                     என்ன  பிரச்சினை என்று தெரியவில்லை. ஏதாவது கடிதம் அனுப்பியதில் இணைப்பு விட்டுப்போயிருக்கும்.

                                    என்னவாயிருக்கும் என்று ஆர்டிஓ ஆபிசுக்கு அனுப்பிய தபால்களை வரிசையா மனத்தில் புரட்டியபடி எழுந்து தாசில்தார் அறை நோக்கிப் போனார்.

                                    வாங்க ரங்கராஜன் என்றார் தாசில்தார்.

                                    சொல்லுங்க சார்.. என்றார்.

                                    உக்காருங்க... என்றார்..

                                    ரஙகராஜன் உட்கார்ந்தார்.

                                    வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவி தாசில்தார் பதவி உயர்வு வந்திருக்கு ரங்கராஜ்ன்..

                                     ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எதிர்பாராதது இது.

                                      சட்டென்று இப்படி வருமென்று தெரியவில்லை.

                                      இந்தாங்க தபால் என்று கொடுத்தார் தாசில்தார்.

                                      வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.  உண்மைதான்.

                                      மனசுக்குள் மகிழ்ச்சி புரண்டு படுத்தது.

                                      நாயர் கடைபையன் பேசியது நினைவோடையில் ஒருகணம் மிதந்துபோனது.

                                      ரொம்ப நன்றி சார்.

                                       நன்றி போதாது ரங்கராஜ்ன். இன்னிக்கு சாயந்தரம் எல்லாருக்கு எஸ்கசி தரணும்.

                                      கண்டிப்பா சார்.

                                      தன்னுடைய இருக்கைக்கு வந்தார்.  என்னவோ சாதித்ததுபோலிருந்தது அந்த பதவி உயர்வு கடிதம் வந்ததும்.

                                      தன்னுடைய உழைப்பிற்கு ஒரு மரியாதை இருக்கிறது என்று நம்பிக்கை துளிர்த்தது.

                                      இன்னும் நன்றாக உழைக்கவேண்டும் என்றுதான் அவருள் தோணியது.

                                      வீட்டிற்குத் தெரிவித்தால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். வேறு யாரிடத்தில் உண்மையான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளமுடியும் தன் குடும்பத்திடம் தவிர.

                                    அப்போது டெலிபோன் மணியடித்தது.

                                    பதிவறை எழுத்தர் பஞ்சநாதம் எடுத்து... ரங்கராஜன் சார்..
உங்களுக்குத்தான் போன்.. என்று ரிசிவரை பக்கத்தில் வைத்துவிட்டு போனான்.

                                   எழுந்துபோனார். போனை எடுக்கும்போதே இனி இந்த மேசையில் உட்கார்ந்தபடியே போனை எடுத்துப் பேசலாம் .

                                    ஆமாம் அந்த மேசைதான் உதவி தாசில்தார் மேசை.

                                    போனை காதில் வைத்ததும் மறுமுனையில் அவருடைய
பையன் பேசினான்.

                                     அப்பா... அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க.. பின் மண்டையிலே நல்லா அடி.. ஏகப்பட்ட ரத்தம்.. மெடிக்கலுக்கு துர்க்கிட்டு போறோம் உடனே வாங்கப்பா என்று பதட்டத்துடன் போனை வைத்துவிட்டான்.

                                      அப்படியே போனை வைத்துவிட்டு தாசில்தாரிடம் சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு ஒரு ஆட்டோ பிடித்து ஓடினார்.

                                     ரங்கராஜன் மருத்துவ மனைக்குள் நுழையும்போது அவர் மனைவி சாரதாவை அவசரப் பிரிவிற்குள் கொண்டுபோனார்கள்.

                                                             
                                               (உயில் வளரும்)

                         


                                 




                     

Sunday, October 20, 2013

எழுதி வைக்கப்படாத உயில்.... குறுந்தொடர்..

குறுந்தொடர்...3

                                 

                                                   எழுதி வைக்கப்படாத உயில்...



                                          தினமும் தண்ணீர் ஊற்றினாலும் பூப்பதுதான் பூக்கிறது.

                                          ஆனால் ஒருநாள் லேசாக மழைத்துர்றல் விழுந்தாலும் சரி மறுநாள் பூத்துக் குலுங்குகிறது.

                                          ஒருமுறை செடிகளின் மீது ஒரு மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு விசிறியதுபோல இலைகளை நனைத்துவிட்டு மறுநாள் பார்த்தால் பூத்துக் குலுங்கியது.

                                         செடிகளுக்கு உணர்விருப்பது உண்மைதான்.

                                         இயற்கையாக இருக்கும்போது அவை தன்னை வெளிப்படுத்துகின்றன.

                                       அப்படி மழைபெய்த மறுநாளில்தான் .. அதாவது ஐப்பசி தொடங்கிய முதல்நாளே இயற்கை தவறாது மழையை அனுப்பியிருந்தது.
இனி மழைக்காலம்தான் அனுபவியுங்கள் என்பதுபோல முதல் மழையைத் துர்து அனுப்பியிருந்தது வானம்.

                                      சந்தன முல்லைகள் நன்றாகப் பூத்துக் கிடந்தன.

                                      அதிகாலையில் சூரியன் வராத பொழுதில் ஐந்திலிருந்து ஆறுமணிக்குள்ளாகப் பறித்துவிட்டால் வெயிலும் இல்லை. மொட்டாகவும் இருப்பதால் மலர்வதற்குள் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

                                      ஆறுமணிக்குள் பறித்துவிட்டு மாடியை விட்டுக் கீழே இறங்கிவந்தாள் பரமேசுவரி.

                                       கூடத்தில் எழுந்து உட்கார்ந்திருந்தாள்  அங்கையர்க்கண்ணி.

                                      பரமேசுவரியின் மாமியார்.

                                      என்ன அத்தை அடுப்படியிலே காபி வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டீங்களா? என்றாள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பூவை உள்ளே வைத்தபடி.

                                     சாப்பிட்டேம்மா... என்றாள் அங்கையர்க்கண்ணி.

                                     இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும் என்றாள் பரமேசுவரி.

                                     வெண் பொங்கல் செய். ரொம்ப நாளாச்சு பொங்கல் சாப்பிட்டு. நெய் போடாதே. மிளகை நசுக்கிப் போடு.

                                      சரிங்க அத்தை என்றாள்.

                                      அப்போதுதான் படுக்கையைவிட்டு எழுந்து வெளியே வந்தான் சிவராமன்.

                                      என்னம்மா காபி குடிச்சிட்டியா? என்றான்.

                                      குடிச்சிட்டேம்பா.  பரமு சிவாவுக்கு காபி எடுத்திட்டு வா.

                                       இதே வரேன் அத்தே..

                                       காபியை குடித்து முடித்தான். இந்தா பேப்பர் என்று அவனிடம் தி.இந்துவை எடுத்துக் கொடுத்தாள் அங்கையர்க்கண்ணி.

                                       இந்து தமிழ் நல்லாயிருக்கில்லம்மா? என்றான்.

                                      ஆமாம்மா.. நிறைய செய்திங்க. பல்சுவையா இருக்கு. எல்லாம் கலந்துகட்டி சுவையாப போடறாஙக்..எல்லாரையும் திருப்திபடுத்தற
மாதிரி இருக்கு.

                                      ஆமாம்பா.. நானும் நாலைஞ்சு நாளாப் படிக்கறேன்.. நல்லா யிருக்கு. அதுவும் குட்டிக்கதைங்க ரொம்ப நல்லாயிருக்கு.

                                       பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

                                       அப்போதுதான் அங்கையர்க்கண்ணி சொன்னாள்

                                       சிவா.. சாயங்காலம் உங்கண்ணனையும் அண்ணியையும் வீட்டுக்கு வரச்சொல்லி போன் பண்ணு?

                                        என்ன விஷயம் அத்தே என்றாள் பரமேசுவரி.

                                       இருக்கும்மா.முக்கியமான விஷயம்தான். நான் நல்லாயிருக்கறப்பவே முடிச்சுடணும்..

                                        பேப்பரை மடித்தபடி சிவராமன் கேட்டான்

                                        என்னம்மா பேசறே நீ?

                                       அங்கையர்க்கண்ணி சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சொன்னாள்.

                                       ஆமாம்பா.. நான் உயில் எழுதவேண்டிய நேரம் வந்துடுச்சிப்பா என்றாள்.

                                         இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது அங்கையர்க்கண்ணியின் இந்த திடீர் முடிவும் பேச்சும்.

                                                                                                         (உயில் வளரும்)
                                                        .

                                                     



                       





Friday, October 18, 2013

                      
அன்புள்ள 

             ஹரணி வணக்கமுடன்.

             என் நுர்ல் நத்தையோட்டுத் தண்ணீருக்கு விமர்சனக் கடிதங்கள் என்னை மேலும் பொறுப்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன. ஏனென்றால் இவற்றைத் தக்க வைத்துக் 
கொள்ளவேண்டும் என்கிற அச்சமும் எனக்குள் பரமபதத்தில் ஏறிக்கிடக்கும் பாம்புபோல ஏறிக்கிடக்கிறது. சில தினங்களுக்கு முன் என் நண்பன் மதுமிதாவின் அத்தை. எழுத்தாளர் அமரர் அகிலன் அவர்களின் சகோதரி மகள் திருமதி ஆர். மங்கையர்க்கரசி எழுதியதைப் பதிவிட்டிருந்தேன். தற்போது அவரின் இரண்டாவது விரிவான விமர்சனம் அதே என் நுர்லுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அவற்றைக் கீழே தந்துள்ளேன். ஒரு படைப்பாளனின் கருத்துக்களுக்கு இரு விமர்சனங்களும் ஒரே நபரிடமிருந்து வருவது எத்தனை கொடுப்பினையானது. அது எனக்கு வாய்த்திருக்கிறது. உங்கள் அனைவரின் முன்னிலையிலும் திருமதி ஆர்.மங்கையர்க்கரசியின் அவர்களுக்கு நன்றியும் அவர்கனின் அன்பிற்கும் பணிகிறேன். 

               கூடவே நன்றி மதுமிதா.

=================================================================================
ஆர். மங்கையர்க்கரசி
/////////////////////////////////////////////


 நத்தையோட்டுத் தண்ணீர்
                                  (ஹரணி)
01.   வாசித்தல் - சுவாசித்தல்
       வாசித்தலில் மேலோட்டமாக வாசித்தல், நுனியும் அடியும் மட்டும் வாசித்தல், தூங்குவதற்காக வாசித்தல் மற்றும் பொழுது போக்கிற்காக வாசிக்கும் பழக்மும் பலரிடம் உள்ளதைக் குறிப்பிட்டு, வாசித்தலின் பலன்களையும் கூறியுள்ளார்.
       குழந்தைகளையும் வாசிக்கத் தூண்டுதல், நேயம் வளர்த்தல், ஒற்றுமையாக வாழ்தல், உறவை வளர்த்தல், எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதையும் வாசிப்பு வழங்குகிறது. அத்துடன் தன்னம்பிக்கையொடு செயல்படுவதற்கும் வாசித்தல் உறுதுணையாகிறது என்கிறார். வாசித்தல் சுவாசிப்பதைப் போன்றது. அதில் ஒரு சுகமும் உண்டு என்பதை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
02.   நட்பு
   
       தாயின் நட்பு வட்டமோ பெரிது. அனால் தனயனின் நட்பை தடை செய்கிறாள் ஜாதகத்தை நம்பிய தாய். பள்ளிப் பருவ நட்பு ஆசிரியரை மிகவும் பாதித்திருப்பதாகத் தெரிகிறது. நட்பின் வலியை நெறி கட்டிய வலி என்று கூறும் போது அதனை,வலியின் வலியை உணர முடிகிறது.

                    எதிர்பார்ப்பது உறவு
                    எதிர்பாராதது நட்பு

       உண்மையான நட்பு அமையும் போது நெறி கட்டிய வலி குறைந்து சுகம் மேலோங்குகிறது என்பதை ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

03.   மடலேறுதல் 

       குடைக் கம்பிக்குள் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளை, நன்றிகளை, ஏக்கங்களை, நட்பின் மேன்மைகளை, எண்ணப் பகிர்தல்களை எப்போழுது வேண்டுமானாலும் எடுத்துப் படித்து சுகம் கணலாம். வார்த்தைகள் பேச முடியாததை வரிகள் பேசும். எனவே கடிதம் எழுதுங்கள், எழுதப் பழகுங்கள், கடிதம் எழுதச் சொல்லிக் கொடுங்கள், காற்று நுழைய முடியாத இடத்திலும் கடித உணர்வுகள் நுழையும். உள்ளத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்க்க் கூடியது கடிதம் எனும் பொக்கிஷம் மட்டுமே என்கிறார் ஆசிரியர்.



04.   சந்தர்ப்பவாதிகள்
   
   நற்பண்பு இல்லாதோர்,தூய்மையற்றோர்,சுயநலவாதிகள் ஆகியோரை மண்குதிரை, எட்டிக்காய்,வெறி பிடித்த மிருகம் என்றும் பெயர் சூட்டுகிறர். காரியவாதிகளான இவர்களை அடையாளம் கண்டு தவிர்த்திடுங்கள், ஏமாறாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் ஆசிரியர்.

05.   பண உறவுகள்
 
  
    மனிதனை காசுஆசை ஆட்டிப்படைப்பதாக திரைப்படப் பாடல்களையும். தமிழ் அறிஞர்கள் மற்றும் பட்டினத்தாரின் வரிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். கடவுளுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணமும்,பக்தியும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதாகத் தெரிகிறது.
 
    உறவுகளைச் சொல்லிக் கொள்ள, அடையளப் படுத்த,உயிரூட்ட உயிரற்ற பணமே தேவைப் படுகிறது. அனைத்தையும் மாற்றும் சக்தி பணத்திற்கு உண்டு, பணம் பெருத்து உறவு சிறுத்ததாகத் தோற்றம்தான். ஆனால் உண்மையில் உணர்வுள்ள உறவுகளே வளர்ந்து வருகிறது. வரவேண்டும் என்றும் வரலாற்றை முன்னுதாரணமாக்குகிறர் ஆசிரியர்.

06.   வழிகாட்டிகள்

   செயல்,எழுத்து,நடத்தை,வள்ளன்மை,பொறுமை,சகிப்புத்தன்மை போன்ற அரிய பொக்கிஷங்கள் தான் வழிகாட்டிகள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து. பிரதிபலன் கருதா அவ்வழிக்காட்டிகளின் முக்கியமானதான தொல்காப்பியம் இன்றும்,என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    பெற்றோரும்,ஆசிரியரும் நல்ல வழிகாட்டிகளாக அமைந்தால் தலைமுறையும் சீர்படும். இல்லையேல் வரம்பில்லா நதி போல் சீர் கெட்டுவிடும். வழிகாட்டிகள் அருகிவரும் இத்தருணத்தில் இளைஞர்களின் நிலை என்னாவது என்று தனது ஏக்கத்தையும்,வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ள ஆசிரியர் நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.



07.   இளம் பருவமும், மனவெளி விளையாட்டுக்களும்

    குழந்தைகள் கூடி விளையாடும் விளையாட்டினால் கூடி வாழ்தல், விட்டுக் கொடுத்தல்,சகோதரப்பான்மை, உதவி செய்ய வேண்டும் போன்ற உந்துதலைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. உடலும் வளருது,உள்ளமும் வளருது என்பதைக் கூறியவர் குழந்தைகளுக்கு கதை மற்றும் பாட்டு மூலம் உணவின் அவசியத்தையும்,பலன்களையும் விளையாட்டாக்கக் கூறி சோறு ஊட்டலாம் என்கிறார் ஆசிரியர்.

    கணிணியின் வளர்ச்சி குழந்தைகளின் வளர்ச்சியை முடக்கி விடுவதாகவும் கூறியவர் பிள்ளைகள் வியர்வை சிந்தி விளையாடவும்,குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கும் பெற்றோரும் இருந்தால் குழந்தைகள் எப்படி நோயாளிகளாக இருக்க முடியும் என்று பெற்றோர்களுக்கும் அறைகூவல் விடுகிறர்.
08. தமிழாய்வுகள்
    வேறு வழியின்றி தமிழை எடுத்துப் படிப்போரும் சிபார்சுகளாலும், குறுக்கு வழியின் மூலமும் முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர். மேலும் படைப்பாளிகளைச் சந்திக்காமலும்,உரையாடாமலும் அவரின் அனுமதி இன்றியும் முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர் என்று மிகவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    வாசித்துக் கொண்டும்,சொற்பொழிவு,கருத்தரங்குகள் மூலமும் தமிழின் மேன்மையை பறைசாற்றிகொண்டு எவ்வித அடையாளமும் அங்கீகாரமும் வழங்கப்படாமல் இருக்கின்றவர்களையும் வேதனைப்பட வைத்து விடுவதையும்,இருப்பினும் உண்மையான ஆய்வுகள் சிலவும் நம்பிக்கையூட்டுவனாகவும் இருப்பதாகவும் சிறிய ஒளிவிளக்கை கையில் ஏந்தி நிற்கிறார் ஆசிரியர்.


09.   எனது ஆசிரியர்கள்
  அன்றைய ஆசிரியர்களின் எளிமையான தோற்றம்,பழக்கவழக்கம், பண்பு ஆகிய நற்குணங்களால் மாணவர் மற்றும் பெற்றோர்களின் மனதிலும் உயர்ந்து நின்றனர் ஆசிரியர்கள். அன்னையைப் போன்ற மேரி டீச்சர் எளிமையாக இலக்கணத்தைக் கற்பித்த ஆசிரியர்,வரலாற்றைக் கண்முன்னே கொண்டுவந்த வரலாற்று ஆசிரியரையும் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சிலரையும் நினைவு கூர்ந்து தனது நன்றிகளைக் காணிக்கையாக்கியுள்ளார் நூலாசிரியர். இதைவிட வேறு என்ன வேண்டும் ஆசிரியர்களுக்கு?

10.   நீதிபோதனை வகுப்பும்,நீர்த்துப்போகா வாழ்வும்

   உலகம் விரிவடைந்து வருகிறது. மனதின் மனமோ குறுகி வருகிறது. கூட்டுக் குடும்பம் சிதைக்கப்பட்டதே சீரழிவிற்குக் காரணம். இதுவே அழிவை நோக்கிச் செல்லும் பயணம் ஆகும்.


   உறவுமுறை,விட்டுக் கொடுத்தல்,பாசம்,நேசம் யாவும் கற்றவர்கள் தனது வாரிசுகளுக்கும் அதனைக் கற்பித்தனர். பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் மூலம் நற்பண்புகளை ஆசிரியர்கள் வளர்த்தனர். ஆனால் இன்று தீயசெயல்களும் ஒழுக்கக் கேடுகளும்,வன்முறைகளும், பாலியல் குற்றங்களூம் பெருகி சமூகத்தைக் கெடுத்து வருகின்றன. நீர்த்துப் போகா வாழ்வு வேண்டுமெனில் நீதிபோதனை வகுப்புகள் மீண்டும் தொடங்கப் படவேண்டும் என்கிறார் ஆசிரியர்


11.   நம்பிக்கையான அனுபவ வைத்தியம்
      முதியவர்கள் வீட்டின் சொத்து. கைமருந்து பாட்டி வைத்தியம்       மூலம்    குழந்தைவளர்ப்பு,சுளுக்கு,விஷக்கடி,வயிற்று உப்புசம் போன்ற நோய்கள் எளிதில் குணமானதைக் குறிப்பிட்டு தனது அனுபவத்தை நினைவு கூறுகிறார்.

12.   சில அர்ப்பணிப்புகள்

புராண,வரலாற்றுக் காலங்களிலும் அறிஞர் பெருமக்கள் தங்கள் அர்ப்பணிப்புகளை நிலைநாட்டியுள்ளதை எடுத்துரைத்துள்ளார். அரிச்சந்திரன்,மணிமேகலை,வள்ளலார்,ராஜராஜன்,அன்னைதெரசா ஆகியோர் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். அதே போன்று ஒரு பார்வையற்றவர் தன்னால் இயன்ற உதவிகளை இட்லி கடை வைத்து அதன் மூலம் தனது அர்ப்பணிப்பை நல்கி வருவதை குறிப்பிடுகிறார். நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும் என உணர்த்திய ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.   


13.   வடவாற்றங்கரையில்  

ஆசிரியரின் வாழ்வில் வடவாற்றங்கரை முக்கிய பங்கேற்றுள்ளதை உணர முடிகிறது. ஆற்றில் அன்னையுடன் சென்று குளியல்,நீச்சல் கற்றல்,ஆடிப்பெருக்கில் கொண்டாட்டம்,குதிகாலைத் தேய்த்து தூய்மையாக வைத்திருப்பதைத் தந்தையிடம் இருந்தே தானும் பின்பற்றி வருவதாக்க் குறிப்பிடும் ஆசிரியர், மகிழ்ச்சியைக் கொடுத்த அதே வடவாற்றங்கரைதான் பின்னர் உறவுகளின் மரணங்களால் ஏற்பட்ட துயரங்களையும் தந்துள்ளது என்கிறார். தன் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த வடவாற்றங்கரையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


14.   சபை நாகரீகம்

சபை நாகரீகம் என்றால் என்ன? சபையில் எப்படி கலந்து கொள்ள வேண்டும்,எப்படிப் பேச வேண்டும்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தான் சபை நாகரீகம். இது பலருக்குத் தெரிந்திருந்தும் அதனை பின் பற்றுவதில்லை. பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்திருந்தும் அதை மீறுபவர்கள் பாமரர்கள் அல்ல, மிகவும் படித்த மேதாவிகளே என்பது வருத்தத்திற்குரியது என்கிறார்.

நாகரீகம், பண்பாடு இவற்றில் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கே நாகரீகத்தைப் பற்றிச் சொல்லித்தர வேண்டி இருக்கிறதே என்று வேதனையை வெளிப்படுத்துகிறார். தனி மனித ஒழுக்கமும்,கடமையும் அடிப்படைக் குணங்களாகும். இனியாவது சபை நாகரீகம் அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் முடிக்கிறார் ஆசிரியர்.