Friday, May 3, 2013

தொட்டி மீன்கள்.....குறுந்தொடர்.....6


                      தொட்டி மீன்கள்....குறுந்தொடர்....6



                 லோகநாதன் அழுது அவள் பார்த்ததில்லை. வழககம்போல வாசலைத் திறந்தவள் படியினில் ஓர் உருவம் மயங்கிக்கிடப்பதைக் கண்டு பயந்துபோய் அருகே போகப் பயந்து நின்றாள். நெடுநேரம் அவன் எழும்பவேயில்லை என்றதும்தான் அவனருகே போய் குனிந்தாள். குப்பென்று மூக்கில் வந்து அடித்தது குடிவாடை. சட்டென்று நிமிர்ந்துகொண்டாள். அப்போதுதான் கவனித்தாள் கூடவே ரத்த வாடையையும். படியில் மோதி விழுந்திருந்ததால் அவன் நெற்றியிலும் அடிபட்டு ரத்தக்கசிவாகியிருந்தது. உடனே அப்படியே அவனை உள்ளே இழுத்துப்போய் கூடத்தில் கிடத்தினாள்.

                     அவன் மயக்கம் தெளிந்தபோது அவளுக்கு நன்றி சொன்னான்.

                     அன்று முழுவதும் அங்கேயே தங்கினான்.

                     இப்படித்தான் ஆரம்பித்த பழக்கம். நெருங்கிய பழக்கமானது. எவனையோ நம்பி ஏமாந்து. கணவன் என்கிற பெயரில் அவன் இவளை பல பேருக்கு பலியிட்டது. கடைசியில் ஒரு பெண் குழந்தையோடு ஊரைவிட்டு ஒடிவந்தது வரை எல்லாவற்றையும் இவனிடத்தில் சொல்லி அழுதாள். இவனும் தன்னிலை விளக்கம் தர. காயம்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவு ஆனார்கள்.

                    ஆனால் அவளின் நோக்கம் முழுக்க பணத்தையே மையப்படுத்தியிருந்தது. அவள் எந்த ஆணையும் நம்பத் தயாராக இல்லை. எதுவாக இருந்தாலும் அவள் ஐயத்தின் அடிப்படையிலேயே அணுகினாள். லோகநாதனுக்கு ஒரு நிரந்தர வேலையிருக்கிறது என்று தெரிந்தவுடன் கணிசமாக அவனிடததில் தேத்திவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தாள். அதற்காகத்தான் அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள் என்று அவன் குடிபோதையில் உளறியதும் ஒரு கச்சேரியை தெருசிரிக்க அரங்கேற்றிவிட்டு வந்தாள்.

                    ஆனால் நினைப்பதுபோல் எதுவும் நடப்பதில்லையே.

                    அதற்கு எதரிடையாகக் காயம்பட்ட லோகநாதனைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. நன்றாகப் படித்தவன். அதிலும் தங்க மெடல் வாங்கியவன் நிலை மாறியிருக்கிறது. படித்தவன் என்றதுமே அவனிடத்தில் அவளுக்கு ஓர் அச்சம் வந்தது. முன்புபோல் எளிதாக அவனை நெருங்கப் பயந்தாள். காரணம் தெரியவில்லை அவளுக்கு.

                     அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

                     லோகநாதனிடத்தில் தெளிவாகப் பேசினாள்.

                     உன்கிட்டப் பேசணும்யா... நான் சொல்றத கேளு...நேத்துவரைக்கும் நடந்தத கெட்டக் கனவா நினைச்சி மறந்துடு...எல்லார் மேலயும் தப்பு இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்றதுலே எதுவும் மாறப்போவது இல்லே... என்னோட வாழ்க்கை சீரழிஞ்சதோட இருக்கட்டும்... எங்காச்சும் ஒரு வேலை செஞ்சு நானும் எம்புள்ளயும் வயித்தக் கழுவிக்குவோம்.. நீ நல்லா படிச்சவன்யா.. உன்னைப் பங்கப்படுத்த எனக்கு மனசு வரலே.. எல்லா ஆம்பிள்ளயும் ஒழுங்கானவன் இல்லதான்.. யாரையும் இனிமேலும் நான் நம்பமாட்டேன்.. என் வாழ்க்கையை சீரழிச்சது உன்னோட இனந்தான்.. ஆனாலும் எனக்கு மனசு வரலே... யாருக்கோ தகப்பன் தெரியாம பொறந்தாலும் உன்னோட தகப்பன் தன் பிள்ளையா உன்னை வளர்த்திருக்கான்.. எப்படிப்பட்ட பெருந்தன்மையான மனுஷன்... உன்னோட ஆயி ஒழுசலா இருந்தும் அதைக்காட்டிக்காம அந்த சத்தியபுருஷன் உனக்குத் தகப்பனா இருந்துட்டுப்போயிருக்காரு.. அவரு சாமிதான்.. உன்னோட குல தெய்வய்யா..நான் உன்னைவிட்டுப் போயிடறேன்.. வழிச்செலவுக்குப் பணம் கொடு... ஆனா ஒரு கோரிக்கை வக்கிறேன்... நீ யாராச்சும் ஒரு நல்லா பொண்ணாப் பாத்துக்  கட்டிக்க அவள நல்லா வசசுக்க.. உன்னோட வம்சம் தழைக்கணும்யா..  ஏன்னா நீ நல்லவன்தான்... ஏதோ போறாக்காலம் என்னன்மோ நடந்துடுச்சி... திருந்தி நட... என்னோட வாழ்ந்ததயும் கெட்டக் கனவா நினைச்சுக்கோ.. உனக்கு மனசுக்குப் புடிச்சவள நீயா பாரு.. உண்மையப் பேசு.. உன்னைப் புரிஞ்சுக்கிட்டவ வருவா.. நான் புரிஞ்சுக்கிட்டமாதிரி.. எனக்கே இனிமே எங்காச்சும் உழைச்சுச் சாப்பிடணும்னு ஆசை வருதுய்யா...

                         லோகநாதன அவளை முதன்முறையாக ஒரு பெண்ணாகப் பார்த்தான்.

                         கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னான்.

                        உன்னை என்னிக்கும் மறக்கமாட்டேன்.. எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சு ஒரு பொண்ணு வந்தா..எனக்குக் குழந்தைப் பொறந்தா.. அது பொம்பளப்புள்ளயா பொறக்கணும்.. அதுக்கு உன்னோட பேரத்தான் வைப்பேன்.. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் வாழப்போறப் புது வாழ்க்கைக்கும் நீதான் காரணம்.. என் உயிர் இருக்கறவரைக்கும் மறக்கமாட்டேன்.. சாயங்காலம் வரேன்.. கடைத்தெருவுக்குப் போய் உனக்கும் உன் புள்ளக்கும் கொஞ்சம் துணிமணிங்க எடுததுத் தரேன்.. பணமும் தரேன்.. ரெண்டுபேருமே நல்ல வாழ்க்கை வாழ்வோம்.. அவங்கஅவங்க வழியிலே..

                           லோகநாதன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

                           மனது அதிகாலை குளம்போல சலனமற்று அமைதியாக இருந்தது,

                           அவன் மனத்தில் ஒரு முடிவு எடுததிருந்தான்.

                          0000000


                          சங்கரியின் சகோதரிகள் பக்கத்து வீடுகளுக்குப் போயிருந்தார்கள். சாரதா கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள். வெளியே போய்விட்டு வந்த கோபாலன் கையிலிருந்து பையைக் கீழே வைததுவிட்டு..சங்கரி கொஞ்சம் தண்ணீ கொடும்மா என்றான்.

                        எடுததிட்டு வரேம்பா என்றபடி எழுந்துபோனாள் சங்கரி.

                        என்ன பை இது என்றாள் சாரதா.

                         பழங்கள் வாங்கிட்டு வந்தேன் உனக்குததான். டர்க்டர் நிறைய சாப்பிடணும் பழங்களன்னாரு.. அதான்..

                        எதுக்குங்க? எனக்கு ஒண்ணுமிலலீங்க.. எல்லாம் சரியாயிடிச்சி...

                       எல்லாம் சரியாகணும் சாரதா என்றான் கோபாலன்.

                       சங்கரி கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்தான்.

                       சங்கரிய பத்திதானே சொல்றீங்க?

                     ஆமாம் சாரதா.. சேர்த்து வச்ச நகையும் அடகுக்குப் போயிடிச்சி.. அத எப்ப மீட்கப்போறேன்னு தெரியல்லே.. கூடுதலா வேற நகை சேர்க்கணும்.. என்ன பண்ணப்போறேன்னு தெரியாம கலக்கமா இருக்கு.. கவலையாவும் இருக்கு..

                    வேண்டாங்க.. விடுங்க.. சங்கரி கொண்டுவர்ற சம்பளத்தை இனி தொடவேண்டாம்.. அத சேமிப்பா வச்சிடுங்க.. அந்தப் பணமே இல்லன்னு நெனச்சுக்குவோம்.. சமாளிப்போம்.. நிச்சயம் ஒரு வழிய அடச்சா ஆண்டவன் இன்னொரு வழிய அகலமா திறந்து வப்பாரு.. நம்பிக்கையோட இருப்போம்.. நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலே...நமக்கு நிச்சயம் கெடுதல் நடக்காது.. எல்லாமும் ஏதோ நன்மைக்குத்தான்.. நம்பளோட மனசு தெரிஞ்ச ஒரு மனுஷன் நிச்சயமா வருவான்.. அவன் மருமகனா மட்டுமில்லே,, நல்ல மகனாவும் இருப்பான்.. திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தாங்க துணை..  யாரையும் நம்பவேண்டாம்.. எதையும் நினைக்கவேண்டாம்.. தெய்வத்தை நினையுங்க.. அந்தக் காமாட்சிய நினையுங்க.. காமாட்சி கண்கலங்க விடமாட்டா.. கைகொடுப்பா... அவளுக்கு எல்லாமும் தெரியும்.. அவதான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருக்கா.. அவ அனுப்புவா பாருங்க.. என்றாள் சாரதா தெளிவாக.

                         எதுவும் பேசாமல் ஒரு அமைதி நிலவியது.


                           00000


                       லோகநாதன் ஒரு முடிவு எடுத்திருந்தான். இனி எந்தச் சூழ்நிலையிலும் தயங்காமல் யாராக இருந்தாலும் தன்னுடைய எல்லா உண்மைகளையும் சொலலிவிடவேண்டும். அதற்குச் சமம்தித்துப் பெண் கொடுத்தால் கொடுக்கட்டும்.

                      உண்மைபேசியவ்ர்கள் அழிந்ததாக வரலாறு இல்லை.

                     சத்தியத்தின் செயல்களுக்கு எப்போதும் ஒரு வேகமும் மதிப்பும் உண்டு. அது எப்போதும் சத்தியமாகவே இருக்கும். நெருப்பைப்போல.

                       வருகிற பெண்ணிடம் எந்த எதிர்பார்ப்பும வேண்டியதில்லை. தனக்கென்று அவள் மனைவியாக உறுதிப்பட்டுவிட்டால் அவளுக்கு எல்லா நகைகளையும் தானே செய்து போட்டு மனைவியாக்கிக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தான் தீர்க்கமாக. கடைசிவரை அவளைத் துணைகொண்டுதான் இந்த புதுவாழக்கைப் பாதையில் பயணிக்கவேண்டும் என்றும் உறுதியாகத் தீர்மானம் செய்துகொண்டான்.

                        சொர்ணத்தாயைக் கூப்பிட்டான்.

                        பயந்துகொண்டே வந்தாள்.

                        எனக்குப் பொண்ணு பார்க்கப்போனியே அந்த வீட்டு முகவரிய கொடு..

                        எதுவும் பேசாமல் கொடுத்தாள்.

                        அவளிடததில் சொன்னான்.  எனக்குப் பொண்ண நானே பாத்துக்கறேன். நீ பாக்கவேண்டாம். நல்லபடியா சொல்றேன். கேட்டுகக. மீறீ பாத்தே அப்புறம் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்..

                       கோபாலனின் முகவரியை ஒருமறை மனதில் மனனம் செய்துகொண்டான்.  அவர்கள் வீட்டிற்குப்போய் உண்மையை சொல்லவேண்டும். வேறு எங்காவது நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.. என்னோட அம்மா சொன்னது எலலாம் பொய். நான இப்படிப்பட்டவன் என்று உண்மையைச் சொல்லி என்று முடிவெடுத்தான்.

                         கிளம்பிக் கோபால் வீட்டிற்குப் போனான்,

                         கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான்.

                          கதவைத் திறந்தாள் சங்கரி  யார் வேணும்?

                          கோபாலன் சார் இருக்காரா?

                          அப்பாவா? இருக்காங்க உள்ள வாங்க..

                           இருந்த ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டார்கள்.

                           நர்ன் சொர்ணத்தாயியின் மகன் லோகநாதன்.. என்றதும் அவர்கள் முகம்மாறியதைக் கண்டும் அவன் தொடர்ந்து பேசினான். எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இலலாமல் திறந்துகொட்டிவிட்டு எழுந்தான்..

                            என்னாலயும் என்னோட அம்மாவாலும் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்..மன்னிச்சிடுங்க..

                              எழுந்து வாசல் நோக்கிப்போனவனைக் கூப்பிட்டாள் சாரதா..

                              மாப்பிள்ளைத் தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க...

                                                 (நிறைந்தது)







அடுத்த குறுந்தொடர்...........   ஜால்ரா....

                           .