Monday, July 15, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்..... ஜிஎம்பி ஐயாவின் கடிதம்...



              வணக்கம்.

             ஜிஎம்பி ஐயா பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.

             73 வயதுடைய இளங்காளை அவர்.

             இந்த வயதிலும் தன்னுடைய  அனுபவ விருட்சத்திலிருந்து ஒவ்வொரு சுவை கனியாகத் தந்துகொண்டேயிருக்கிறார்.

             பாருங்கள் ஓர் அதிசயத்தை. அவரின் பதிவுச் சொற்கள் தவறில்லாமல் பதிவாகியிருக்கும். இதிலென்ன அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம். அவருக்குத் தட்டச்சு தெரியாது. என்றாலும் தளராமல் ஒற்றை விரலால் எத்தனை பெரிய பதிவுகளையும் அனாசயமாகப் பதிவிட்டுவிடுகிறார்.

                நாம் கற்றுக்கொள்ளவேண்டும் அவரிடமிருந்து நிறைய.

                என்னுடைய இல்லத்திற்கு வந்தபோது அவரிடம் சில புத்தகங்களைத் தந்தேன். உடனே அதில் வித்தியாசமாக இருக்கிறது என்று நத்தையோட்டுத் தண்ணீரைப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார் அதுபற்றி.

                இப்போதுதான் பேராசிரியர் கருப்புசாமியின் விமர்சனத்தைப் பதிவிட்டுவிட்டு மின்னஞ்சலைத் திறந்தேன். இன்ப அதிர்ச்சி. ஜிஎம்பி ஐயாவின் கடிதம். உங்கள் பகிர்வுக்காக அதுவும். இன்று இரு விமர்சனக் கனிகள் சுவைத்த திருப்தியுடன்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


அன்புள்ள ஹரணிக்கு
முகம் தெரியா நட்பினாலேயே தங்கள் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்த நான் நேரில் உங்களைச் சந்தித்ததில் அகமகிழ்ந்தேன் என்பதே நிஜம். உங்களது எளிமையும் பணிவும் என்னைக் கவர்ந்தது. அது எல்லோரையும் கவரும் என்பதும் உண்மை. நான் அங்கு வந்திருந்தபோது என் கை கொள்ளா அளவுக்குப் புத்தகங்களை எனக்குக் கொடுத்தீர்கள். அண்மை காலமாக வாசிப்பைத் தொலைத்திருந்த எனக்கு அது ஒரு விருந்துபோல் தோன்றியது. படிப்பதற்கு நான் எடுத்துக்கொண்ட முதல் புத்தகம் தங்களது “நத்தையோட்டுத் தண்ணீர்.” தலைப்பே வித்தியாசமாய் இருக்க படிக்கத் துவங்கியபோதே ஒன்று விளங்கியது. சக மனிதர்களிடம் ஆங்கிலத்தில் சொல்லும் empathy இல்லாவிட்டால் இந்தமாதிரி கருத்துகள் உதிக்காது. அர்ச்சகர் தரும் சிறிது தீர்த்தத்தை அருந்தும்போது சற்று மனப்பாரம் குறைந்தாற்போல் இருக்கும் என்று எழுதி இருக்கிறீர்கள். அதிகம் படித்தறியாத எனக்கு சந்தேகங்கள் பல எழுவதுண்டு. மழைக் காலங்களில் வயல் வரப்புகளில் நத்தைகள் திரிவது கண்டதுண்டு. அதே போல் கடற்கரைகளில் கிளிஞ்சல்கள் மற்றும் சிறிய சங்குகளும் கண்டதுண்டு. நீங்கள் குறிப்பிடும் நத்தையோடும் சிறிய சங்குகளைப் போலவே இருக்கும். இதுதான் அதுவா.?
எழுதுவதே எண்ணங்க்ளைக் கடத்த என்பது என் கணிப்பு. அது பொழுதுபோக எழுதினாலும் எழுத உந்துவதே உள்ளத்தின் உணர்வுகள்தான். நூலின் துவக்கத்தில் சமர்ப்பணமாக நீங்கள் கூறியிருக்கும் உள்ளம் படைத்தோரில் நானும் ஒருவன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.அதுவும் தலைமுறை இடைவெளி என்று கூறி பல நல்ல இயல்புகள் தொலைக்கப் பட்டு விட்டன. ஏதும் செய்ய இயலாத நிலையில் எழுதுவதன் மூலம் உள்ளக் கொந்தளிப்புகளையாவது கொட்டித்தீர்க்கலாம். அப்படி வெளிவரும் எழுத்துக்கள் கற்றதனுடையவும் அனுபவத்தினும் வெளிப்பாடு என்பது புரிகிறது. அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே நடைபெறும் ஒன்றினை மற்றது அறிந்த கத்திச் சண்டையெ என்பதும் புரிகிறது. அவற்றை தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு ஆசிரியராக இருந்து பொறுமையாக, வெளிப்படையாக அனுபவ முத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் உங்களது ஒவ்வொரு கருத்திலும் உடன்பாடு உண்டு.. மற்றபடி விமரிசிக்க எனக்குத் தகுதி போறாது.
என் பணிக்கால வாழ்வில் பெரும்பகுதியை தர உறுதி மற்றும் தரக் கட்டுப்பாடு என்றே கழித்துவிட்டதால் சில குறைகள் என் கண்ணில் தட்டுப்படுவது இயல்பாகிவிட்டது.
இந்த நூலில் குறை ஒன்றும் இல்லை இருந்தாலும் உள்ளடக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள அத்தியாய வரிசை நூல் கோர்க்கப்படும்போது மாறி இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா.?   

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000


நத்தையோட்டுத் தண்ணீர் .....விமர்சனம்.... கோபியிலிருந்து...



            பேரா. நீ.வ.கருப்புசாமி அவர்கள் கோபி கலை அறிவியல் கல்லுர்ரியில் பணிபுரிகிறார். அவருக்கு எனது நுர்லை அனுப்பியிருந்தேன். நுர்ல் பெற்றதும் உடனே பேசினார்.


                    அன்பழகன் சார்... நான் வண்டியில்போகும்போது கீழே விழுந்து காலில் அடிபட்டு மாவுக்கட்டு போட்டு படுத்திருக்கிறேன். உங்கள் புத்தகம் வந்துவிட்டது. எனவே நகரமுடியாத சூழலில் படிக்க ஆரம்பித்தேன். இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான ஒரு புத்தகம் யாரும் படிக்கிற மாதிரி எளிமையாக இருக்கிறது. முழுமையாகப் படித்துவிட்டு எழுதுகிறேன் என்றார்.

இன்று அவரின் விமர்சனம் அஞ்சலில் வந்தது. உங்களின் பகிர்வுக்காக.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


               நத்தையோட்டுத் தண்ணீர் என்னும் நுர்லில் சமூகத்திற்கு ஏற்புடைய கருத்துக்களை சோழவளநாட்டின் வட்டாரத் தமிழில் எழுதியமையும் பண்பாடு. உறவு. நட்பு. வாசிப்பு. தமிழ ஆய்வாளரின் நிலைகள் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தெளிவாகவும் எளிமையாகவும் கருத்துக்களை எழுதியுள்ளமையைக் காணலாம்.


1, வாசித்தல் சுவாசித்தால்...

             என்னும் கட்டுரையில் நிகழ்கால உயர்கல்வியில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தையும் தேடலையும் புத்தகங்களில்தான் கிடைக்கும். இன்றைய வாசித்தலின் வகைகளையும் அதனால் ஏற்படும் உறவுகள். பண்பாடு. தன்னம்பிக்கைச் சிந்தனைகள் வாசிப்பதால் வளர்த்துக்கொள்ள இயலும் உலகியல் வழக்கு எப்படி உள்ளது அதனால் சமுதாயத்தில ஏற்படும் மாற்றங்களையும் எனத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

2, நட்பு

               நவீன காலத்தில் நட்பின் நிலையை மிகவும் சுருக்கமாகவும் இன்றைய நட்பின் சூழலையும் மிகவும் அழகாக விளக்குவதற்கு ஜாதகத்தில் தொடங்கி வாலிப வயதில் நழுவிய விதத்தையும் சூழ்நிலைக்கு ஏற்ப தோன்றும் நட்பையும் மிகவும் சிந்திக்கும்படியாக நடப்பில் தன்மையில் எழுதியுள்ளார்.

3. மடலேறுதல்

                    இன்றைய கடிதங்கள் எப்படியுள்ளன? அறிஞர் அண்ணா. காந்தியடிகள். மு.வ. கடிதங்கள் சமுதாயத்திற்கு ஆறுதலாக அமைந்திருந்தன. இன்றைக்குக் கடிதங்கள் காணாமலேயே போய்விட்டன. பழைய மடல்கள் ஆறுதல் மொழிகளாக இருந்தன இன்றைய செய்திகள் மடலேறுதல் போல அமைந்துள்ளன .

4. சந்தர்ப்பவாதிகள்

                 தலைப்பில் வாழ்க்கையில் சந்தர்ப்பவாதிகள் சமூகத்தில் அதிகம் உண்டு அவர்கள் நல்லவர்களை எளிதாகக் குழியில் தள்ளிவிடுவார்கள் காரியம் நிறைவேறும்வரையில் மிகவும் நளினத்தோடு பேசுவார்கள் காரியம் முடிந்தபிறகு எண்ணிப் பார்ப்பதில்லை என்பதை இளைஞர்களுக்கு சுட்டிக் காட்டும் விதம் அருமையாக உள்ளது.

5 பண உறவுகள்

             உண்மையான உறவுகள் சமுகத்தில் விதை அற்ற விளைபொருட்கள் போல் உள்ளன. பணம் பததும் செய்யும் பாதாளம் வரை பாயும் என்பதை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

6. வழிகாட்டிகள்

             நல்ல வழிகாட்டிகள் மூலம் இளைய தலைமுறை மற்றும் வளர்ந்தவர்கள் தங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளமுடியும் என்றும் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள் வயல்நிலம் போலவும் ஏற்காதவர்கள் மேடுபள்ளம் போன்றவர்கள் போலவும் என அர்த்தமுள்ள வகையில் தெளிவாக்கியுள்ளார்.

7. இளம் பருவமும் மனவெளி விளையாட்டுக்களும்

                  இளமையில் விளையாட்டுக்கள் இல்லாத கல்வி உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் கேடாக அமைந்துள்ளன. இதன் விளைவுகளையும் சிதைவுகளையும் சமுகத்தின் மீதான மிகுந்த அக்கறையோடும் நிகழ்கால சூழலையும் எனப் பதிவு செய்துள்ளவிதம சிறப்பானது.

8, தமிழாய்வுகள்

            தமிழ் இனம் தன்னை எப்படி இழிவுபடுத்திக்கொண்டாலும் குறை கூறினாலும் யாரும் கவலைபடாத நிலை உள்ளது. நுனிப்புல் மேய்தலாக இன்றைய ஆய்வுகள் உள்ளன. தமிழ் மீது அக்கறை இல்லை. அதோடு கருத்துத் திருட்டுக்கள் அதிகமாக ஆய்வுகளில் இடம்பெறுவது மிகவும் வருத்தமாக உள்ளது.  நாமே நம் மொழிக்கு வலிமை சேர்க்கவேண்டும். தவறினால் மொழிக்கும் இனத்துக்கும் தீமை செய்பவர்களாக இருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் இக்கட்டுரையில்.

9. என் ஆசிரியர்கள்

                 அன்றைய காலத்தில் வாழ்ந்த ஆசிரியர்களின் மதிப்புக்களையும் மாணவர்களைத் தங்கள் சொத்துக்களாக மதித்த பாங்கையும் இன்றைய ஆசிரியர்கள் நெறிப்படுத்தும் பண்பு இல்லாதவர்களாகவும் மாறிப்போனதை கொண்ட வாழ்க்கைதான் நமக்கு வாய்த்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

10. நீதிபோதனை வகுப்புகள்..

                  பள்ளியில் நீதிபோதனை வகுப்புக்கள் இல்லாமல் போனதால் மாணவர்கள் மனதில் தைரியம் இல்லை. வாழவேண்டிய குழந்தைகள் சில தோல்விகளைகூடத் தாங்கிக்கொள்ளமுடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.  அன்றைய நீதிபோதனை வகுப்புக்கள் தன்னம்பிக்கைக்கு உகந்த வகையில் உள்ளதை இக்கட்டுரை வாயிலாக உணரமுடிகிறது.

11,  நம்பிக்கை அனுபவ வைத்தியம்

                  அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு மனச் சோர்வு அடையும்போது பெரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் மொழிகளால் மாறிப்போனது. பல்வேறு கை வைத்தியமுறைகள் குழந்தைகளைப் பண்படுத்தின. இன்றைய சூழல்  வழி தெரியாமல் திகைக்கின்ற வாழ்க்கையைப் படம்பிடித்து இக்கட்டுரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. பெரியவர்களின் இழப்பின் மதிப்பையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

12. சில அர்ப்பணிப்புக்கள்

               மனிதனாகப் பிறந்தவன் வாழும் காலத்திலும் வாழ்ந்து முடித்த காலத்திலும் சிலருக்காவது வழிகாட்டியாக இருந்து ஏதேனும் செய்துவிட்டு அதனை விட்டுவிட்டுப்போகவேண்டும. அது அர்ப்பணிப்பாக இருக்கவேண்டும் என்ற அரிய கருத்தைப் பதிவுசெய்துள்ளவிதம் சிறப்பானதாக இக்கட்டுரையில் வெளிப்படுகிறது.

13, வடவாற்றங்கரையில்

                        இளமைக் காலத்தில் துள்ளிக் குதித்து விளையாடிய ஆற்றங்கரையயையும் அது வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருந்ததையும் எண்ணிப் பார்க்கும் விதமும் ஆற்றங்கரையோரம் இருந்த சிவ வழிபாட்டு முறைகளையும் இளமை நினைவுகளையும் கூறும்போது அது மண்வாசனையோடு மணக்கிறது இக்கட்டுரையில்.

14. சபை நாகரிகம்

                         இப்புத்தகத்தில் இது கடைசிக்கட்டுரை. பண்பட்ட மனிதர்கள்கூட  சபை நாகரிகம் தெரியாமல்  இருப்பதையும் சபையில் எப்படி பேசவேண்டும் எப்பொழுது பேசவேண்டும் என்று பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை. இவற்றை மாணவ சமுதாயத்திற்கு எடுத்துக்கூறி நெறிப்படுத்தவேண்டும் என்ற உணர்வை இககட்டுரை உணர்த்துகிறது.

                    மொத்தத்தில் நடைமுறை வாழ்க்கையில்  இளைய தலைமுறையினருக்கும் வளர்ந்த தலைமுறைக்கும் இப்புத்தகம் கற்றுக் கொடுக்கும் நிலையில் அமைந்துள்ளது.  நம்முடைய பண்பாடும் மதிப்புக்களும் சிதைந்துவிடக்கூடாது என்கிற கவலையோடு உருவாக்கப்பட்டிருப்பதே இந் நுர்லின் வெகு சிறப்பாகும்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000