Sunday, October 20, 2013

எழுதி வைக்கப்படாத உயில்.... குறுந்தொடர்..

குறுந்தொடர்...3

                                 

                                                   எழுதி வைக்கப்படாத உயில்...



                                          தினமும் தண்ணீர் ஊற்றினாலும் பூப்பதுதான் பூக்கிறது.

                                          ஆனால் ஒருநாள் லேசாக மழைத்துர்றல் விழுந்தாலும் சரி மறுநாள் பூத்துக் குலுங்குகிறது.

                                          ஒருமுறை செடிகளின் மீது ஒரு மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு விசிறியதுபோல இலைகளை நனைத்துவிட்டு மறுநாள் பார்த்தால் பூத்துக் குலுங்கியது.

                                         செடிகளுக்கு உணர்விருப்பது உண்மைதான்.

                                         இயற்கையாக இருக்கும்போது அவை தன்னை வெளிப்படுத்துகின்றன.

                                       அப்படி மழைபெய்த மறுநாளில்தான் .. அதாவது ஐப்பசி தொடங்கிய முதல்நாளே இயற்கை தவறாது மழையை அனுப்பியிருந்தது.
இனி மழைக்காலம்தான் அனுபவியுங்கள் என்பதுபோல முதல் மழையைத் துர்து அனுப்பியிருந்தது வானம்.

                                      சந்தன முல்லைகள் நன்றாகப் பூத்துக் கிடந்தன.

                                      அதிகாலையில் சூரியன் வராத பொழுதில் ஐந்திலிருந்து ஆறுமணிக்குள்ளாகப் பறித்துவிட்டால் வெயிலும் இல்லை. மொட்டாகவும் இருப்பதால் மலர்வதற்குள் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

                                      ஆறுமணிக்குள் பறித்துவிட்டு மாடியை விட்டுக் கீழே இறங்கிவந்தாள் பரமேசுவரி.

                                       கூடத்தில் எழுந்து உட்கார்ந்திருந்தாள்  அங்கையர்க்கண்ணி.

                                      பரமேசுவரியின் மாமியார்.

                                      என்ன அத்தை அடுப்படியிலே காபி வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டீங்களா? என்றாள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பூவை உள்ளே வைத்தபடி.

                                     சாப்பிட்டேம்மா... என்றாள் அங்கையர்க்கண்ணி.

                                     இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும் என்றாள் பரமேசுவரி.

                                     வெண் பொங்கல் செய். ரொம்ப நாளாச்சு பொங்கல் சாப்பிட்டு. நெய் போடாதே. மிளகை நசுக்கிப் போடு.

                                      சரிங்க அத்தை என்றாள்.

                                      அப்போதுதான் படுக்கையைவிட்டு எழுந்து வெளியே வந்தான் சிவராமன்.

                                      என்னம்மா காபி குடிச்சிட்டியா? என்றான்.

                                      குடிச்சிட்டேம்பா.  பரமு சிவாவுக்கு காபி எடுத்திட்டு வா.

                                       இதே வரேன் அத்தே..

                                       காபியை குடித்து முடித்தான். இந்தா பேப்பர் என்று அவனிடம் தி.இந்துவை எடுத்துக் கொடுத்தாள் அங்கையர்க்கண்ணி.

                                       இந்து தமிழ் நல்லாயிருக்கில்லம்மா? என்றான்.

                                      ஆமாம்மா.. நிறைய செய்திங்க. பல்சுவையா இருக்கு. எல்லாம் கலந்துகட்டி சுவையாப போடறாஙக்..எல்லாரையும் திருப்திபடுத்தற
மாதிரி இருக்கு.

                                      ஆமாம்பா.. நானும் நாலைஞ்சு நாளாப் படிக்கறேன்.. நல்லா யிருக்கு. அதுவும் குட்டிக்கதைங்க ரொம்ப நல்லாயிருக்கு.

                                       பேப்பர் படிக்க ஆரம்பித்தான்.

                                       அப்போதுதான் அங்கையர்க்கண்ணி சொன்னாள்

                                       சிவா.. சாயங்காலம் உங்கண்ணனையும் அண்ணியையும் வீட்டுக்கு வரச்சொல்லி போன் பண்ணு?

                                        என்ன விஷயம் அத்தே என்றாள் பரமேசுவரி.

                                       இருக்கும்மா.முக்கியமான விஷயம்தான். நான் நல்லாயிருக்கறப்பவே முடிச்சுடணும்..

                                        பேப்பரை மடித்தபடி சிவராமன் கேட்டான்

                                        என்னம்மா பேசறே நீ?

                                       அங்கையர்க்கண்ணி சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சொன்னாள்.

                                       ஆமாம்பா.. நான் உயில் எழுதவேண்டிய நேரம் வந்துடுச்சிப்பா என்றாள்.

                                         இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது அங்கையர்க்கண்ணியின் இந்த திடீர் முடிவும் பேச்சும்.

                                                                                                         (உயில் வளரும்)
                                                        .