Friday, May 29, 2015

பத்தி வாசனை...


அந்தத் தெருவிலேயே
எங்கள் வீட்டில்தான் முதலில்
தொலைக்காட்சி பெட்டி வந்தது.

வெள்ளிக்கிழமைதோறும்
தெருவே ஒலிஒளியுமாக இருந்தது
ஓர் அரங்கத்தைப் போல
வருவோரை ஒழுங்குப்டுத்தி 
உட்காரவைத்து அப்பா மட்டும்
நாற்காலியில் அமர்ந்து பார்ப்பார்..

ஒரு பத்தியை ஏற்றி வைக்கச்
சொல்லுவார் பலரின் மூச்சுக்
காற்று ஒரே இடத்தில் என்று..
அம்மாகூட இதை அடக்கிய
பெருமையாகப் பேசித் திரிந்தாள்.

அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
தெருவில் இன்னும் மரியாதை கூடியது..

என் பிள்ளைகளும் அக்காவின்
பிள்ளைகளும் தெருப்பிள்ளைகளும்
என வீடே குழந்தைகளின்
தோட்டமாக இருக்க அப்பாவே 
எல்லாருக்குமான இசையாக இருந்தார்.

அப்பா இறந்துபோன பின்
ஒவ்வொன்றாய் காலையில் 
மாலையில் உதிரும் பூக்களாய்
உதிரத் தொடங்கிவிட்டன

இப்போது யாருமற்ற
வீட்டில் அம்மாவும் அவள்
தனிமையும்தான்..

எப்போதாவது யாரேனும் இருவர்
கூடினால்கூட அந்த வீட்டில்
ஏற்றாமல் வருகிறது
அப்பா ஏற்றிய பத்தி வாசனை.

0000

6 comments:

  1. //இப்போது யாருமற்ற வீட்டில் அம்மாவும் அவள் தனிமையும்தான்..//

    நெகிழ வைக்கும் வரிகள் !

    //ஏற்றாமல் வருகிறது அப்பா ஏற்றிய பத்தி வாசனை.//

    மனதைக் கலங்க வைக்கும் இறுதி வரிகள் .... அருமை.

    ReplyDelete
  2. ///எப்போதாவது யாரேனும் இருவர்
    கூடினால்கூட அந்த வீட்டில்
    ஏற்றாமல் வருகிறது
    அப்பா ஏற்றிய பத்தி வாசனை.///
    மனம் கனக்கிறது ஐயா

    ReplyDelete
  3. சுழற்சி என்பது இதுதான் ஹரணி. போக அப்பான்னா அப்பாதான்.

    ReplyDelete
  4. அன்புள்ள பேராசிரியர் முனைவர் க. அன்பழகன் (ஹரணி) அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (11.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/11.html

    ReplyDelete
  5. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    ReplyDelete