Friday, May 29, 2015

பத்தி வாசனை...


அந்தத் தெருவிலேயே
எங்கள் வீட்டில்தான் முதலில்
தொலைக்காட்சி பெட்டி வந்தது.

வெள்ளிக்கிழமைதோறும்
தெருவே ஒலிஒளியுமாக இருந்தது
ஓர் அரங்கத்தைப் போல
வருவோரை ஒழுங்குப்டுத்தி 
உட்காரவைத்து அப்பா மட்டும்
நாற்காலியில் அமர்ந்து பார்ப்பார்..

ஒரு பத்தியை ஏற்றி வைக்கச்
சொல்லுவார் பலரின் மூச்சுக்
காற்று ஒரே இடத்தில் என்று..
அம்மாகூட இதை அடக்கிய
பெருமையாகப் பேசித் திரிந்தாள்.

அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
தெருவில் இன்னும் மரியாதை கூடியது..

என் பிள்ளைகளும் அக்காவின்
பிள்ளைகளும் தெருப்பிள்ளைகளும்
என வீடே குழந்தைகளின்
தோட்டமாக இருக்க அப்பாவே 
எல்லாருக்குமான இசையாக இருந்தார்.

அப்பா இறந்துபோன பின்
ஒவ்வொன்றாய் காலையில் 
மாலையில் உதிரும் பூக்களாய்
உதிரத் தொடங்கிவிட்டன

இப்போது யாருமற்ற
வீட்டில் அம்மாவும் அவள்
தனிமையும்தான்..

எப்போதாவது யாரேனும் இருவர்
கூடினால்கூட அந்த வீட்டில்
ஏற்றாமல் வருகிறது
அப்பா ஏற்றிய பத்தி வாசனை.

0000