Thursday, June 30, 2016

கதை 6

                சிறுபுத்திக்குக் கிடைத்த நட்பு



 முல்லைப்பூர் என்கிற கிராமத்தில் இருந்தது அந்தப் பெரிய குளம். அந்த கிராமத்து மக்கள் அந்தக் குளத்தைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.
           பெரிய குளம் அது. தாமரை இலைகள் கம்பளம் விரித்தது போல் அந்த குளத்தை மூடிக்கிடந்தன. நடுவில் தாமரைப்பூக்கள் கொக்கின் தலைபோல உயர்ந்து நின்றன.
           முல்லைப்பூர் என்கிற கிராமத்துக்கே அது அழகான குளம்.
           அந்த குளத்தில்தான் பேரன்பி என்கிற ஒரு தவளை வசித்து வந்தது. நெடுங்காலமாக அதன் முப்பாட்டனார், தாத்தா, அப்பா, அம்மா என எல்லோருக்கும் அந்தக் குளம்தான் பூர்வீகம்.


           இப்போது அந்த வரிசையில் பேரன்பியும் அதன் குழந்தைகளும் மட்டுமே வசிக்கிறார்கள்.
           தினமும் கரைக்கு வந்து இரைபிடித்து இளைப்பாறிவிட்டுப் போவது பேரன்பியின் வழக்கம்.
          குளக்கரையின் அருகே சற்று தள்ளியிருந்த ஒரு பொட்டல்வெளியில் ஒரு பொந்து இருந்தது. அந்தப் பொந்தில் சிறுபுத்தி என்கிற எலி வசித்துவந்தது.
           அதுவும் இரைபிடித்து உண்டதும் சற்று இளைப்பாறும்.
ஆனால் இன்று அது ஒரு திட்டத்துடன் வந்து காத்திருந்தது
           குளக்கரையின் அருகே விஷமடக்கி என்கிற ஒரு பாம்பு வசித்து வருகிறது. அதனிடம்  சிறுபுத்தி மாட்டிக்கொண்டது. தான் தப்பிப்பதற்கு வேறு இரை பிடித்துத் தருகிறேன் என்கிற ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது- எனவே அது பேரன்பியை இரையாக மாட்டிவிட்டால் தான் தப்பித்துவிடலாம்.
                இது தெரியாத பேரன்பி குளத்தை விட்டுக் கரையில் தாவியதும் விஷமடக்கி தலையை சருகுக்குள் இழுத்துக்கொண்டு மறைந்துகொண்டது.
            சிறுபுத்தியும் பேரன்பியும் பேச ஆரம்பித்தன.
            சற்று நேரத்தில் சிறுபுத்தி இரு.. எனக்குத் தாகமாக இருக்கிறது. நீரருந்திவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு குளத்தின் ஓரமாகப் போனது.
           சரி என்று பேரன்பி காத்திருந்தது.
           இதுதான் சமயம் என்று விஷமடக்கி தலையை ஒரே பாய்ச்சலில் நீட்டிப் பேரன்பியைக் கவ்விக்கொண்டது. இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்துபோனது பேரன்பி.
           உடனே.. அது அழ ஆரம்பித்துவிட்டது. என் பிள்ளைகள் நான் இல்லாமல் இறந்துபோய்விடுவார்கள். இப்போது அவர்கள் சிறுபிள்ளைகள். சரியாகக்கூட நீந்தத்தெரியாமல் உள்ளார்கள். அவர்கள் நீந்தக் கற்றுக்கொடுத்ததும் நானே வந்து உனக்கு இரையாகிறேன்.
           என்ன இது? நீயும் அதையே சொல்கிறாய் சிறுபுத்தியும் அதையே சொல்கிறது. இருவரும் சேர்ந்து நாடகமாடுகிறீர்களா? என்றது விஷமடக்கி.
           என்ன சொன்னது சிறுபுத்தி? என்றது பேரன்பி.
           அதுதான் உன்னை எனக்கு இரையாகத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்டது என்றதும் பேரன்பிக்கு இன்னும் அழுகை பொங்கி வந்தது.
           ஒன்று செய்.. எனக்கு வேறு இரை ஏற்பாடு செய்துகொடு நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்றது விஷமடக்கி.
           வேண்டாம்.. என் துன்பம் என்னோடு போகட்டும். ஒருபோதும் அதுபோன்று நான் செய்யமாட்டேன்.. என் பிள்ளைகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். நீ என்னை உண்டுவிட்டுப்போ என்றது.
           இதைக் கேட்டதும் சிறுபுத்திக்கு அழுகை வந்து அது ஓடிவந்து நான்தான் நல்ல நட்பைப் புரிந்துகொள்ளவில்லை. அதை விட்டுவிடு.. என்னையே எடுத்துக்கொள் விஷமடக்கியின் வாயருகே வந்து நின்றுவிட்டது.
           சட்டென்று வாயிலிருந்து பேரன்பியை விடுவித்தது விஷமடக்கி.


           உங்களின் நட்பைப் போற்றுகிறேன். நட்பில் இப்படியே இருங்கள். சிறுபுத்தியே பேரன்பியால் உன்னையும் விட்டுவிடுகிறேன். இனி நான் இங்கிருக்கமாட்டேன். இங்கிருந்தால் ஒருவேளை மனசு மாறி உங்களைத் தின்ன எண்ணம் வரும். உங்களின் நட்பிற்குப் பரிசாக நான் இனி இங்கிருக்கமாட்டேன் என்றபடி சரசரவென்று விரைந்து மறைந்தது விஷமடக்கி.
           என்னை மன்னித்துவிடு பேரன்பி என்றது சிறுபுத்தி.
           விடு நண்பா.. அப்போதே மறந்துவிட்டேன். சரி நாளை சந்திக்கலாம். பிள்ளைகள் காத்திருப்பார்கள் என்றபடி ப்ளக் என்று குளத்தில் பாய்ந்தது பேரன்பி.

           நீதி. மனசிருந்தால் துரோகியும் நண்பராவார்.
           

Wednesday, June 29, 2016

கதை 5

                குறி பிசகாத கொடியான்
                   
 
                அந்த இடத்தில் நாலைந்து செடிகள் மட்டுமே இருந்தன. அடங்காதி என்கிற ஆடு ஒன்று மேய்ந்துகொண்டே வந்தது. பச்சையாய் இருந்த செடிகளைக் கண்டதும் சின்ன வாலை  துறுதுறுவென்று ஆட்டியபடியே மேய ஆரம்பித்துவிட்டது. கடைசியாய் ஒரு செடிதான் இருந்தது. அதை மேய வாயை வைத்தபோது சின்னதாய் ஒரு குரல் கேட்டது.
                சட்டென்று வாயை எடுத்துவிட்டு யாரது? என்றது. உடனே தலையை உயர்த்தி சுற்றுமுற்றும் பார்த்தது. யாருமில்லை. அதற்கு லேசாகப் பயம் வந்தது. மறுபடியும் யாரது? என்றது.
                ஆடாரே… கீழே குனிந்து செடிக்கருகில் பாருங்கள் என்று மறுபடியும் அந்தக் குரல் கேட்கக் குனிந்து பார்த்தது.
                 அங்கே பச்சைநிறத்தில் ஒரு புழுவும் அதைச் சுற்றிச் சில குட்டிப் புழுக்களும் நெளிந்துகொண்டிருந்தன.
                என்ன என்றது அலட்சியமாய் அடங்காதி.
                இது கோடைக்காலம். சற்று நேரத்தில் இங்கே வெயில் வந்துவிடும். எங்களால் வெயிலைத் தாங்கமுடியாது. அப்போது இந்த செடிகளின் அடியில்தான் இளைப்பாறுவோம்.. நீங்கள் மேய்ந்துவிட்டால் வெயிலில் நானும் என் பிள்ளைகளும் இறந்துபோய்விடுவோம். ஆகவே இந்த ஒரு செடியை மேயாமல் விட்டுவிடுங்கள் ஆடாரோ.. என்றது.
                முடியாது.. எனக்கு இன்னும் பசி அடங்கவில்லை..மேய்ந்தே தீருவேன் என்றது.
                உங்களால் பசியை அடக்கமுடியும். ஆனால் எங்களால் உயிரை அடக்கமுடியாது. வெயில் எங்களைக் கொன்றுவிடும்.
                முடியவே முடியாது என்றது.
                வாயடக்கி என்கிற அந்தப் புழு தன் பிள்ளைப் புழுக்களைப் பார்த்து.. சீக்கிரம் வேகமாக வாருங்கள்.. வெயில் வருவதற்குள் அந்த காய்ந்த குச்சிகள் இருக்குமிடத்திற்குப் போய்விடலாம்.. என்றபடி வேகவேகமாக நெளிந்து நகர ஆரம்பித்துவிட்டன.
                அந்தச் செடியையும் சுத்தமாக மேய்ந்துவிட்டு நகர்ந்துபோன அடங்காதி.. தூரமாய் வந்த கொடியான் என்கிற புலியைக் கண்டதும் அதிர்ந்துபோய் நின்றுவிட்டது. ஓடவும் முடியாது. புலி அருகில் வந்ததும் அடங்காதி ஆழ ஆரம்பித்துவிட்டது.
                புலியாரே என்னை விட்டுவிடுங்கள்..
                முடியாது. என் பசி இன்னும் தீரவில்லை. உன்னைத் தின்றாலும் பசி அடங்காது. என்றாலும் கொஞ்சம் பசியாவது அடங்கவேண்டும் ஆகவே உன்னைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றபடி அடங்காதி மேல் பாய்ந்தது கொடியான் குறி பிசகாமல்.



நீதி..    பேசும் சொற்களிலேயே வாழ்வும் சாவும்.


Tuesday, June 28, 2016

கதை 4

           பட்டத்தை மறுத்த பட்டாம்பூச்சி…



           பறவைகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள்தான் அழகு என்கிற எண்ணம் இருந்தது. என்றாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
           துடிப்பி என்கிற சிட்டுக்குருவி ஒருநாள் பறவைகளிடம் இதுபற்றிய பேச்சை தொடங்கியது.
           கருப்புகூட அழகுதான் என்பதை குயில் கூவி சொன்னது.
           மேகமும் நானும் ஓர் வண்ணம் என்றது தவிட்டுக்குருவி.
           ஒவ்வொன்றும் அழகுக்கான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
           சரி யாரிடமாவது இதைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று அனைத்தும் ஒருமனதாக முடிவெடுத்தன.
           அந்தக் காட்டில் துள்ளிகுதிப்பான் என்கிற மான் இருந்தது.
           அதனை நடுவராக்கி தங்கள் விவாதங்களை முன் வைத்தன பறவைகள்.
           எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டது.
           சரி இதனை எங்கள் விலங்கு இனத்திடம் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுக்கு வரலாம் என்று துள்ளிக்குதிப்பான் கூற எல்லாமும் சம்மதித்தன.
           அப்படியே வாக்குப் பதிவு நடந்தது.
           கடைசியில் எல்லாமும் மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சிதான் அழகு என்று அதிகமாக வாக்களித்திருந்தன.
           அதை எல்லாமும் ஏற்றுக்கொண்டு அந்தப் பட்டாம்பூச்சிக்கு அழகுடையாள் என்கிற பட்டத்தை அளிக்க முடிவெடுத்து விழா ஏற்பாடு செய்தன.
          முறையான அழைப்பை விடுக்க அந்த மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சி அங்கே வந்து எனக்கு பட்டம் வேண்டாம் என்றதும் அனைத்துப் பறவைகளும் அதிர்ச்சியடைந்தன.
           ஏன் இது நல்ல விஷயந்தானே?


           இல்லை. இது நல்ல விஷயம் இல்லை. இன்றைக்கிருக்கிற பட்டாம்பூச்சியான என்னைப் பார்க்கிறீர்கள். எனது இளமைப் பருவம் அருவருப்பான புழுப்பருவம். அதனைப் பார்த்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு வரமாட்டீர்கள். தவிரவும் உழைப்புதான் நமக்கு எப்பவும் அழகு. இப்படிப் பட்டம் வாங்கிவிட்டால் அப்புறம் உழைப்பு மறந்துவிடும். இந்தப் பட்டத்திலேயே மயங்கிவிடுவோம். நல்ல உள்ளத்தைவிட அழகு எதுவுமில்லை. என்றபடி பட்டாம்பூச்சி பறந்துபோய்விட்டது.

           எல்லாவற்றையும் உள்ளும் புறமுமாய் கலைத்துவிட்டுப் பறவைகளும் பறந்துபோயின.

Monday, June 27, 2016

ஜங்கிள் புக்.. கதை. 3

                     யானையைக் கடித்த பூனை

           சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பூனையின் பெயர் அகங்காரன்.
           அது எப்பவும் ஒரு செயலை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டேயிருக்கும்.
           அதனுடைய வம்சம்தான் என்று புலிகள் என்று கேள்விப்பட்டதில் இருந்து. அதனால் அதற்கு அகந்தை தலைக்கேறிவிட்டது.
           புலிகள் என்னோட வம்சம்.. நான் சின்ன உருவம்னு என்கிட்ட வச்சிக்கிட்டிங்க.. அத்தனைபேரையும் கொன்னுடுவேன்னு.. மிரட்டவும் ஆரம்பித்துவிட்டது.
           எதற்கு வம்பு என்று சின்ன விலங்குகள்  விலகிப்போயின. பெரிய விலங்குகளோ அதை அலட்சியப்படுத்திவிட்டுப்போயின.
           ஆனால் அகங்காரனின் ஆணவம் குறையவேயில்லை.
           ஒரு முறை சாதுவன் என்கிற பெண்யானை இந்த பூனையின் முன் வந்தது. உடனே அகங்காரன் அதனிடம் என்னுடைய வம்சம் புலி என்று சொல்லிப் பெருமைப்பட்டது.
           அதனால் என்ன? என்றது சாதுவன்
           என்ன இப்படிக் கேட்டுவிட்டாய். உனக்கு என்னிடத்தில் பயமே யில்லையா என்றது?
           உடனே சாதுவன் சிரித்துவிட்டது.

           அகங்காரனுக்கு அளவுக்கடந்த கோபம் வந்துவிட்டது. உடனே –ஓடிப்போய் அந்த யானையின் காலைக் கடிக்க ஆரம்பித்தது. உடனே சாதுவன் என்கிற யானை வலிபொறுக்கமுடியாமல் அப்படியே கீழே விழுந்துவிட்டது. அகங்காரனுக்கு நிறைய மகிழ்ச்சி..
           பார்த்தீர்களா என் பலத்தை என்று அந்த யானையின் மேல் நின்று நடனம் ஆட ஆரம்பித்துவிட்டது. அப்படி ஆடும்போது சட்டென்று சறுக்கிவிட கீழே விழுந்தது.
           இப்போது கண் விழிப்பு வந்து இதுவரை கண்டது கனவென்று அதற்கு புரிந்தது. அப்போது பக்கத்தில் சாதுவன் யானை நின்றுகொண்டிருந்தது.
           என்ன அசந்த தூக்கமா? என்றது சாதுவன்.
           ஆமாம் என்றது.

           இனி இப்படித் தூங்காதே.. உன்னை இப்போது ஒரு புலி அடித்து உண்ண வந்தது.. நல்லவேளை நான் இருந்ததால் அதனால் முடியவில்லை. பாவம் அசந்து தூங்குகிறாய் என்று காவலுக்கு நான் இருந்தேன்.. போய் உன் இடத்தில்  தூங்கு என்றபடி சாதுவன் போய்விட்டது.
           அகங்காரன் தாங்கமுடியாத அவமானத்தில் தலைகுனிந்து நின்றது.
          
           நீதி.  அகந்தையின் முடிவு அவமானமே..
           

Sunday, June 26, 2016

ஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.

கதை 1

பேசும் செடி..


          அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது.
           ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும் மிரட்டி விரட்டியது.
           காட்டிலுள்ள மிருகங்கள் அந்த செடி இருந்தபக்கம் செல்ல அஞ்சி ஓடின.
           பேசும் செடி இரண்டு மரங்களுக்கு நடுவில் இருந்தது.
           ஒருநாள் சிறிய மான்குட்டி ஒன்று வழிதவறி பேசும் செடி இருந்த பக்கம் வந்துவிட்டது.
           பேசும் செடி பற்றி அதற்குத் தெரியாது.
           உடனே பேசும் செடி பேச ஆரம்பித்துவிட்டது. இல்லை மிரட்ட ஆரம்பித்துவிட்டது மான்குட்டியை.
           டேய்.. மான்குட்டி.. எங்கே இங்க வந்தே?
           யாரு பேசறது?
           ஹாஹா.. என்னைத் தெரியாதா.. நான்தான் பேசும் செடி.. உன்னை தின்னப்போறேன் என்றது..
           உடனே அய்யோ..அம்மா என்று மான்குட்டி அலறியபடி கீழே விழுந்து மயங்கிவிட்டது.
           கொஞ்ச நேரத்தில் குட்டிமானைத் தேடிக்கொண்டு தாய் மான் வந்தது. உடனே பேசும்செடி.. அந்த தாய் மானையும் மிரட்டியது.

           உன்னையும் தின்னப்போறோம் என்று.
           அதற்குள் மான்குட்டி மயக்கம் தெளிந்து எழுந்து தாய் மான் பின்னே ஒடுங்கிக்கொண்டது.
           அப்போது திடீரென.. எதிரில் உள்ள அரசமரம் பேச ஆரம்பித்துவிட்டது.
           நான்தான் அரச மரம் பேசுகிறேன்.. இப்போது நான் அந்த பேசும்செடியை அழிக்கப்போகிறேன்..


           உடனே தாய்மானும் குட்டிமானும் ஓடிப்போயின.
           அய்யய்யோ எங்களை விட்டுடு என்று பேசும் செடியின் பின்னாலிருந்து இரண்டு கரடிக்குட்டிகள் வெளியே வந்தன.
           ஓ நீங்கள்தான் பேசும் செடியா?
           ஆமா..ஆமா.. எங்களை மன்னிச்சிடு மரமே.. இனிமே இப்படி செய்யமாட்டோம்..
           சரி.. இனி யாரையும் ஏமாற்றக்கூடாது..
           சரி என்றன இரண்டும். அவ்வாறு சொல்லியதும் அரச மரத்தின் பின்னிருந்து கரடி வந்ததும் இரண்டும் அம்மா நீங்களா என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டன.



           நீதி.. யாரையும் ஏமாற்றக்கூடாது


  
கதை.2

                  தாகம் தணித்த காகம்…


           நல்ல வெயில் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது பூமியை.
மண்ணும் கல்லும் எல்லாம் கொதித்துக் கிடந்தன.
           பறந்து களைத்த காகத்திற்குச் சரியான தாகம்.
           தண்ணீர் தேடி அலைந்தது.
           கடைசியாக ஒரு இடத்தில் சிறு ஜாடி கிடந்தது.
           அதில் கால் பங்கு நீர் கிடந்தது.
           நிச்சயம் காகம் தன் அலகால் நுழைத்தாலும் தண்ணீரைக் குடிக்கமுடியாது.
           தலையையும் ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ளே திணிக்க முடியவில்லை.
           காகத்திற்கோ தாகம் அதிகரித்துக்கொண்டேபோனது.
           பக்கத்தில் பார்த்தது எதாவது கிடைக்குமா என்று.
           சுற்றிலும் சிறு சிறு கூழாங்கற்கள் கிடந்தன.
           அந்தக் கற்களும் கொதித்துக் கிடந்தன.
           கற்களை நன்றாக உற்றுப் பார்த்தது காகம்.
           அந்தக் கற்களுக்கிடையில் சின்ன செடியொன்று முளைத்துக்
கிடந்தது. நாலைந்து இதழ்கள் துளிர் விட்டிருந்தன. ஆனால்  அச்செடி
வாடிக்கிடந்தது.
           காகம் பார்த்தது.
           மெல்ல தண்ணீர் உள்ள ஜாடியை நகர்த்திப்போய் அந்த செடியின் மேல் கவிழ்த்தது.


           ஜாடியின் உள்ளே இருந்த கால்பாகம் தண்ணீர் மெல்ல தரையில் பரவி அந்த செடியின் வேருக்குள் இறங்கியது.
           செடியின் வாடிய இலைகள் நிமிர்ந்தன.
           காகம் தண்ணீர் தேடி மீண்டும் சிறகை விரித்தது ஆகாயம் பார்த்து.

            நீதி.  நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.