Thursday, July 7, 2016

கதை 9

                சதிகார நரியும் அதிகார ஓநாயும்…



           அசத்தியன் என்கிற நரிக்கு திடீரென ஆம்லெட் சாப்பிடவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.
           நல்ல கோடைகாலம் அது. வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது அந்தக் காட்டில்.
           அசத்தியன் தேடித்தேடி கடைசியில் ஒரு வெகுளியான் என்கிற காகத்தின் கூட்டைக் கண்டது. அதில் நிறைய முட்டைகள் இருப்பதைக் கண்டதும் அதனைச் சாப்பிட்டுவிடலாம் என்று முடிவெடுத்தது.

           வெகுளியான் கையாலே இந்தக் காரியத்தைச் செய்துவிடவேண்டும் என்று அசத்தியன் சூழ்ச்சி செய்தது.
            அது மெல்ல காகத்திடம் வந்து வெகுளியாரே வணக்கம் என்றது.
         


        வெகுளியான் என்ன இது நரி வந்து வணக்கம் சொல்கிறதே என்ற ஐயம் வந்தாலும்.. உடனே வணக்கம் அசத்தியரே என்றது பதிலுக்கு.
            நான் எப்போதும் உண்மையையே பேசுபவன்.. என்னை எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் ஒரு குயில்தான் என்னை நம்பவில்லை.
            சரி அதனால் என்ன? என்றது வெகுளியான்.
            அது தவறல்லவா? ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்கத்தானே வேண்டும் என்றது அசத்தியன்.
           எதற்கு இந்தப் பேச்சு என்று  வெகுளியானுக்குப் புரியவில்லை.
           எனக்குப் புரியவில்லை என்றது வெகுளியான்.
           உனக்குப் புரியாது வெகுளியாரே? நீர் ஒரு அப்பாவி. இல்லை என்றால் உன்னை எல்லாரும் ஏமாற்றுவார்களா? உனக்கு அதனால்தான் வெகுளியான் என்கிற பெயரும் வைத்துவிட்டார்கள்.
           வெகுளியானுக்கு சிறிது கோபம் வந்துவிட்டது.
           என்னை யாரும் ஏமாற்ற முடியாது? நானும் ஏமாறமாட்டேன்
           உடனே அசத்தியன் சிரிப்பை அடக்கமுடியால் ஊளையிட்டுச் சிரித்தது.
           எதற்கு சிரிக்கிறே?
           பின்னே.. உனக்கு உன் முட்டைகளும் தெரியலே.. குயில் முட்டைகளும் தெரியல.. அதனாலதான குயில்கள் உங்களோட கூட்டுல வந்து முட்டைபோட்டுட்டுப்போயிடுது.. நீயும் .ஏமாந்து அடைகாத்துக் குஞ்சு பொரிச்சு.. வளர்த்துக் குடுத்துடறே..

           வெகுளியானுக்குப் புரிந்தது. அவமானத்தால் அது தலைகுனிந்து பேசாமல் நின்றது.
              நான் சொன்னது உண்மைதானே வெகுளியாரே? என்றது.
             சரி.. நான் எப்படி ஏமாறாமல் இருக்கறது?
             அப்படிக் கேளு.. நீ ஒவ்வொரு முட்டையா கீழே தள்ளிவிடு.. நான் பார்த்துட்டு குயிலு முட்டையை எடுத்துக்கிட்டு உன்னோட முட்டையை உனக்குக் கொடுத்துடறேன்..
              அதை நம்பிய வெகுளியான் முட்டைகளைத் தள்ள ஆரம்பித்தது. மரத்திலிருந்து கீழே விழுந்த முட்டைகள் உடைந்து சிதற.. அசத்தியன் நக்கிச் சாப்பிட்டது.
               வெகுளியானுக்கு இது புரியவில்லை.
               அப்போது அந்தப் பக்கம் ஒரு ஓநாய் வந்தது. அது ஓநாய்க் கூட்டத்தின் அதிகார ஓநாய்.


                இங்கு என்ன நடக்கிறது? என்றது சத்தமாய்.
                உடனே அசத்தியன் ஒன்றுமில்லை அதிகாரியே.. நான் பரிசோதித்துக்கொண்டிருக்கிறேன்.. என்று கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு மெல்லிய குரலில் நீயும் ஆம்லெட் சாப்பிடலாம்.. என்றது.
                என்ன கண்டுபிடித்துவிட்டாயா? என்றது அசத்தியனிடம் வெகுளியான்.
            அடக்கடவுளே இப்படியா அப்பாவியாக இருப்பாய்?
           ஏன்?
            இதுவரை நீ தள்ளியது குயில் முட்டைகளை அல்ல.. உன் முட்டைகளை..
           இல்லையே என்றது வெகுளியான்.
           வேண்டுமானால் இந்த அதிகாரியைக் கேட்டுப்பார்.
           ஆமாம்..ஆமாம்.. அசத்தியன் சொல்வது உண்மைதான். குயில் முட்டைகளுக்குப் பதிலாக உன் முட்டைகளைத் தள்ளியிருக்கிறாய்.
           அப்படியா.. இப்போ என்ன செய்வது?
           மீதியுள்ள முட்டைகளையும் கீழே தள்ளு.. அவைதான் குயிலின் முட்டைகள்..
           அவ்வாறே தள்ளியது வெகுளியான்..
           அதிகார ஓநாயும் நாக்கை நீட்டிச் சப்புக்கொட்டிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.
           எல்லா முட்டைகளையும் தின்றுவிட்டு இரண்டும் ஓடிவிட்டன.
           வெகுளியான் கீழே பறந்துவந்து தன்முட்டைகள் எதுவென்று தேடத் தொடங்கியது அப்பாவியாய்.


நீதி… -  திருடனின் நீதி திருடனுக்கே பொருந்தும்.

Monday, July 4, 2016

கதை 8

                     செயலே செயல்


           பொறுமைநேசன் என்பது அந்தத் தாய்க்கழுதையின் பெயர். தன் குழந்தைகளைக் காணாமல் தவித்துக்கிடந்தது.
           நல்லவேளை இருள் வரத்தொடங்கியவுடன் வந்து சேர்ந்தன.
           தன் இரு குழந்தைகளும் அழுதுகொண்டே வருவதைக் கண்டதும் தாய்க்கழுதை லேசாக கவலை கொண்டது.

           என்னடா செல்லங்களா? அழுதுகிட்டே வர்றீங்க?
           அம்மா..அம்மா.. என்றபடி அழுதன.
           சரி அழுகையை நிறுத்திவிட்டு சொல்லுங்க..
           எங்களை குதிரைக் குட்டிங்க ரொம்ப மோசமா பேசிடிச்சும்மா என்றன.

           என்ன பேசிச்சுங்க?
           சின்ன வயசுலே நீங்க எங்கள மாதிரி இருப்பீங்க.. ஆனா வளர்ந்தா தெரிஞ்சுடும்.. நீங்க கழுதான்னு நாங்க குதிரதான்னு..
           அதனால என்ன? உண்மையதானே அது சொன்னிச்சி?
           என்னம்மா எனக்கு இந்த கழுதைங்கற பெயரே பிடிக்கலே.
           ஆமாமா.. எங்களுக்கு பேர மாத்தி வையுங்க.,.
           இங்க வாங்கடா செல்லம்.. என்னோட பக்கத்துல வந்து உக்காருங்க..
           இரண்டும் கால்களை மடக்கி அம்மாவின் அருகில் உட்கார்ந்துகொண்டன.
           தாய்க்கழுதை பேச ஆரம்பித்தது.
           நாம இருக்கற இந்தக் காட்டைப் பாருங்க.. எத்தனை மரங்க இருக்‘கு.. எத்தனை செடிங்க இருக்கு.. எத்தனை பூக்கள் இருக்கு.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வடிவம்.. வகை.. பேரு.,.
           ஆமாம்மா
           இயற்கையோட படைப்பு அப்படித்தான்.. கழுதைங்கறது நம்மோட இனத்தோட பெயரு.. பெயர்ல என்ன இருக்கு?
            கழுதங்கற பெயரு எங்களுக்குப் பிடிக்கலே.

            ஏன் பிடிக்கலே?
            எல்லாரும் பிடிக்கலேன்னு சொல்றாங்க.. அதான் எங்களுக்கும் பிடிக்கலே..
           சரி.. நீங்க காலையிலேர்ந்து என்ன பண்ணிங்க சொல்லுங்க..

           இரண்டு கழுதைக் குட்டிகளும் ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்துவிட்டன.
           ஒரு மான் அக்கா கொம்போட மரத்துக்கிடையில மாட்டிக்கிச்சு..  நாங்கதான் அதை விடுவிச்சோம்.. இல்லாட்டி புலிக்கிட்ட மாட்டி செத்துப் போயிருக்குமாம்..
             ஆமாமா.. அப்புறம் பறவைக் குஞ்சு மரத்து கூட்டுலேர்ந்து கீழே விழுந்துடிச்சி.. அவங்க அம்மா வர்றவரைக்கு பக்கத்திலேயே இருந்தோம்.. அவங்க அம்மா வந்ததும் ஒப்படைச்சிட்டோம்.. நல்லவேளை இல்லாட்சி ஏதாச்சும் பாம்பு புடிச்சிட்டுப்போயிருக்கும்மா..
                நான் ஒரு எறும்பக் காப்பாத்துனேன்.
                நான் ஒரு வெட்டுக்கிளியக் காப்பாத்துனேன்.
               இப்படி பலவற்றைப் பேசின.
               இப்போது தாய்க்கழுதை சொன்னது.

               நீங்க காப்பாத்துன அத்தனை பேரும்.. தங்கள காப்பாத்துனது கழுதான்னு உங்களையே பேசிக்கிட்டிருக்கும்.. அதுக்கு உங்களோட பேரு பிடிக்கும்தானே?
                ஆமாம்மா..
                இதான். பேருல ஒண்ணும் இல்ல.. நாம செய்யற செயல்கள்தான் நம்மோட பேருக்கு பெருமை.. அதனால எப்பவும் நல்ல செயல்கள் செய்தா போதும்..
                 ஓகே அம்மா என்றன இரண்டு கழுதைக் குட்டிகளும்.
               
        நீதி-   பெயரில் இல்லை செயலில்தான்

           

Sunday, July 3, 2016

கதை 7


                        குளத்து மீன்..

           மீன் பிடிப்பவன் கூடைக்குள் ஆற்று மீன், குளத்து மீன், ஏரி மீன் எனப் பிடித்து வைத்திருந்தான்.
            ஆற்று மீன் சொன்னது.
            நான் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் எத்தனை பெரிய ஆறு தெரியுமா?
            என்ன பெரிய ஆறு? நான் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் சின்ன கடல் தெரியுமா? என்றது ஏரி மீன்-
            ஏரியை விடு ஆறுதான் நீளமானது என்றது ஆற்று மீன்.
            ஆனால் ஓடுகிற ஆறை விடு கடல்போல இருக்கும் ஏரிதான் பெரிசு என்றது ஏரி மீன்.
            குளத்து மீன் பிடிபட்ட கவலையில் இருந்தது.
            இரண்டும் குளத்து மீனை கேலி பேசின.
            நம்மைப் போல சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. அது குளத்துல பிறந்ததுதானே?
            ஆமாம் ஆமாம் அதுக்குப் பெருமை பேச என்ன இருக்கிறது?
            அப்பவும் குளத்து மீன் அமைதியாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.
            ஏய்.. என்ன பேசாம இருக்கே? ஏதாவது பேசு.
            என்ன பேச? என்றது குளத்து மீன்.
             அடக்கடவுளே முட்டாளே உனக்கு என்னதான் தெரியும்? என்றன இரண்டும்.
             அப்போது கூடையை எடுத்த மீன்பிடிப்பவன் ஒரு தடவை அந்தக் கூடையை அப்படியே குளத்து நீரில் ஒரு மூழ்கு மூழ்கியெடுக்கக் கூடையயைப் பாதியளவு நீரில் அமுக்கினான்.
              இதுதான் சமயமென்று.. எனக்கு இதுதான் தெரியுமென்று ஒரு துள்ளு துள்ளி கூடையை விட்டுக் குளத்தில் விழுந்தது குளத்து மீன்.
               அப்போதுதான் இரண்டு மீன்களும் தங்களின் ஆபத்தை உணர்ந்தன. ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது.


நீதி.  ஆபத்துதான் அறிவாளியை அடையாளம் காட்டும்.