Friday, June 30, 2017

ஊட்டும்...(நாவல்) அத்தியாயம் 1 ஊழ்வினை 2



              அத்தியாயம் 1                                                              ஊழ்வினை 2


                      நல்லவேளை சன்னல் கதவுகளைத் தாளிடாமல் இருந்தான்.
                      கண்களுக்குள் வந்த சொர்ணாவும் மித்ராவும் சன்னலில் தெரிந்தார்கள்.
                      சன்னல் வழியே பார்த்த சொர்ணா பெருங்குரலெழுப்பிக் கத்தினாள்.
மித்ரா அப்பா..அப்பா.. என்று அழ ஆரம்பித்தாள்.
                      யாரோ கதவை உடைக்க முயன்றார்கள்.
                      சீக்கிரம் உடைங்க. உடைங்க.. என்று கத்தினார்கள்
                      நாலைந்துபேர் உடைக்க உடைந்தன கதவுகள்.
                      உள்ளே புகுந்தவர்கள் ஓடிவந்து ஒருவர் இருகால்களையும் பிடித்துத் தன் தோளில் தாங்கிக்கொள்ள. யாரோ ஒருவர் ஸ்டுலை அருகே இழுத்துபோட்டு ஏறி புடவையை அறுத்தார்கள்.
                         மூச்சுத் திணறினான் குமரன். பேச முடியவில்லை. கண்கள் மேலே செருகியிருந்தன.
                          கழுத்திலிருந்து புடவையை விடுவித்தார்கள்.
                          பேனை போடுங்கப்பா.
                          பேன் சற்று நின்று பின் வேகமெடுத்தது.
                          காற்று வர குமரனின் கண்கள் இயல்புநிலைக்கு வரவில்லை. மயக்கமானான்.
                          ஓடுங்க ஒரு ஆட்டோ எடுத்துட்டு வாங்க.
                           மாடிப்படியிறங்கி ஓடினார்கள்.
                           நாலாவது வீட்டில் விருந்தாளி யாரையோ இறக்கிவிட்டு திரும்பிய ஆட்டோவைக் கண்டதும் பதறி கூப்பிட்டார்கள்.. ஆட்ட்ட்ட்டோ...
                          அரண்டவன் போல ஆட்டோக்காரர் திரும்பி வந்தார்.
                           என்னம்மா?
                          இருங்க.. எங்க அண்ணன் தூக்கு போட்டுக்கிச்சு.. மயக்கமாயிருக்கு.. ஆசுபத்திரிக்கப் போவணும்..
                           ஆட்டோக்காரர் மிரண்டார்.. தூக்குப்போட்டுக்கிட்டாரா.. யம்மா.. எனக்கு ஸ்கூல் சவாரி இருக்கு.. ஆட்டோவைத் திருப்ப..
                            தெருவிலிருந்த ஒருபெண் குறுக்கே நின்றாள்.
                            ஆளுக்கு உசிரு இருக்குய்யா.. உன்னோட சொந்தம்னா இப்படி கௌம்புவியா.. கொஞ்சம் நில்லுப்பா..கண்ணு..
                              கண்ணு நின்றார்.
                             அதற்குள் குமரனைத் தூக்கிக்கொண்டு படியிறங்கி ஆட்டோவுக்கு வந்துவிட்டார்கள்.
                             அப்படியே உட்கார வையுங்க
                              சொர்ணா நீ முதல்ல ஏறு.. ஏறினாள். ஓரமாக உட்கார்ந்துகொண்டாள். அடுத்து குமரனை ஏற்றி அவளருகே வைத்து அவள் தோள்மீது சாய்த்துகொடுத்தார்கள்.
                           இன்னொருத்தங்க யாராச்சு போங்க.
                            அம்மா.. நானும் வரேன்.. என்றபடி மித்ரா ஏறிக்கொண்டு பயங்கலந்த பார்வையோடு குமரனைப் பார்த்தாள்.
                           எங்கப்பா குமரனோட அப்பா?  வூட்ல இல்லியா?
                           இருக்காரு...
                            அதற்குள் குமரனின் அம்மா ஏறிவந்து ஆட்டோவில் உட்கார்ந்தாள். திருமுருகன் கிளினிக்குப் போப்பா..
                           ஆட்டோ கிளம்பிப்போனது.
                           வீட்டினுள் குளிர்சாதனை அறைக்குள் கட்டிலில் உட்கார்ந்திருந்த முத்துவேல் குளிரின் அளவை அதிகரித்தான். குளிரைத் தாண்டி உடலும் மனமும் கொதித்தது.
                           யார் விட்ட சாபம் இது?
                           குமரனை நினைக்க நினைக்க மனம்  அரிசியிட்ட உலை கொதிப்பதுபோலக் கொதித்து கொதித்து அடங்கியது.
                           என்னப்பா இப்படி உக்காந்திருக்கே?  உள்ளே வந்த எதிர்வீட்டு தனத்தம்மாள் கேட்டாள்.
                            என்ன செய்யச் சொல்றீங்க?  நான் சாகாம இருக்கேன்னு வருத்தமாக இருக்கு. பட்டுன்னு செத்துப்போயிட்டா இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்கவேண்டியதில்ல.
                            என்னப்பா பண்ணறது? நீயும் அந்தக் காலத்துலேர்ந்து படாதபாடு பட்டுத்தான் வந்திருக்கே.. யார் செஞ்ச பாவமோ ஒன் தலயில விடியுது..
                            நாந்தான் யார் குடியயோ கெடுத்திருக்கேன்.
                            சரிப்பா.. போப்பா. எழுந்து ஆசுபத்திரிக்குப் போ..
                             வேணாம்மா அவனப் பாத்தாலே வெறுப்பா இருக்கு.. அவன நம்பி கட்டிக்கிட்டு வந்துட்டேன்.  அந்தப் பொம்பளப் புள்ளங்களுக்காக உசிர விட முடியாம இருக்கேன். இல்லன்னா எனக்கெல்லாம் இருக்கவே பிடிக்கலம்மா..
                           முத்துவேல் தலையை தடவி.. அமைதியா இரு.. நீயே நெஞ்சு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டவன்.. உணர்ச்சிவசப்படாத..
                           வெளியே போய்விட்டாள்.
                           எழுந்து தண்ணீர் குடித்தான்.
                           மனது அடங்கவில்லை. தவித்தது.
                          திருமுருகன் கிளினிக்கில் போய் ஆட்டோ நின்றது.
                          மயக்கம் தெளியாமல் இருந்தான்.
                          உள்ளே கொண்டுபோனார்கள்.
                          என்னாச்சு?
                         விவரம் சொன்னார்கள்.
                          போலிசுக்கு சொல்லணுமே.. இது தற்கொலை கேசு.
                          சொல்லிடறோம் டாக்டர்.. முதல்ல இவனக் காப்பாத்துங்க.
                         உள்ளே கொண்டுபோனார்கள்.
                          ஒருமணிநேரம் கடந்து டாக்டர் வெளியே வந்தார்.
                           சரியாயிட்டாரு. இன்னும் பத்துநிமிஷம் தொங்கியிருந்தா குரல்வளை உடைஞ்சி ஆளு போயிருப்பான். ஆயுசு கெட்டி.
                            டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள் குமரனின் தாய்.
                           எதுக்கு கும்படறீங்க?  ஏற்கெனவே வந்தவன்தானே இவன்.
                          ஆமாம் டாக்டர்.
                           இவன மாதிரி ஆளு எல்லாம் இருக்கறது வேஸ்ட்தான்.. நானே சொல்லக்கூடாது.. ஆனா  எரிச்சலா இருக்கு. உண்மையிலேயே பாதிக்கப்பட்டவன உயிர் காப்பாத்தலாம்.. திமிறுல செய்யறவனக் காப்பாத்தக் கூடாது. அது என் தொழிலுக்கே துரோகம்..
                              சொர்ணா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.
                              டாக்டர் கேட்டார் நீ  அவனோட  வொய்ப்பா?
                               ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள்.
                              பிட்டி கேர்ள் என்றபடி  போனார்.
                               உள்ளே போனார்கள். கண் விழித்தபடி படுத்திருந்தான்.
                               அருகே போய் குமரனின் அம்மா கத்தினாள்.. காலம் முழுக்க என் கொலையறுக்க பாக்கறேல்ல..
                                சொர்ணா எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்.
                                என்னிக்கு உங்கப்பனுக்குப் பொண்டாட்டியா வந்தேனோ அப்பலேர்ந்து எனக்கு நிம்மதியில்ல.. வெந்தத தின்னு விதிவந்தா சாவுன்னுதான் வாழ்ந்துட்டிருக்கேன்..
                                 குமரன் சொர்ணாவைப் பார்த்தத் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
                                  மித்ராவை அருகே அழைத்தான். போனாள்.
                                  நீ ஒரு பேட் பாய்ப்பா என்றாள் மித்ரா.
                                  மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே  சொர்ணாவைப் பார்த்தான் மறுபடியும்.
                                  பக்கத்துவீட்டுக்காரர் பார்க்க வந்திருந்தார்.
                                  என்னப்பா நீ?  ஒரு குடும்பமாச்சு.. பொம்பள புள்ள வச்சிருக்கே.. குடிய மாத்தமாட்டியா,, உன்னால எத்தனபேருக்கு கஷ்டம் பாரு..
                                  சொர்ணாவைப் பார்த்து டாக்டர் என்ன சொன்னாரும்மா..
                                  இப்படி யாராவது கேட்பார்கள் என்று காத்திருந்தது போல..
இருக்கறத வேஸ்ட்னு சொன்னார்.. என்றாள்.
                                   குமரனின் தாய்  சின்ன அதிர்வோடு மருமகளைப் பார்த்தாள்.
                                   குமரனுக்குள்ளும் அதிர்வு வந்தது.
                                   ஏதோ பிடித்திருந்த பிடி கைவிட அப்படியே அந்தரத்திலிருந்து விழுவதுபோல அவனுக்குள் ஒரு காட்சி வந்தது.

                                                                                                   (ஊழ்வினைத் தொடரும்)



“‘

Wednesday, June 28, 2017

ஊட்டும் ..... நாவல்...

அன்புள்ள

              வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும என்கிற முனைப்பில் இப்போது.

             இதற்கிடையில் நான் எழுதிக்கொண்டிருக்கிற நாவல் ஊட்டும் என்னும் தலைப்புடையது. இதனை 100 பக்கங்கள் அளவு எழுதினாலும் அவற்றைத் தொடர்போல வலைப்பக்கத்தில் வெளியிட எண்ணியுள்ளேன். முன்பு பேருந்து நாவலை அப்படித்தான் எழுதி நண்பர்கள் நிறைய பின்னூட்டம் அளித்தார்கள். அவற்றைக்கொண்டு நாவலை செப்பம் செய்து இப்போது அது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது சென்ற ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு.,

               சிலப்பதிகாரத்தின்  காப்பிய உருவாக்கத்தின் அறங்களில் ஒன்று ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது.இந்த அடியின் ஊட்டும் என்கிற ஒன்றை மட்டுமே என் நாவலின் தலைப்பாக வைத்துள்ளேன்.

             எனவே நாவலைத் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளை அளிக்க வேண்டுகிறேன்.

               நன்றி வணக்கம்.

====================================================================


                                                   ஊட்டும்  (நாவல்)

அத்தியாயம் 1                        ஊழ்வினை 1

               

                                காலையில் மித்ராவைப் பள்ளிக்கு கிளப்பும்போதே சண்டை வந்துவிட்டது குமரனுக்கும் சொர்ணாவுக்கும்.
                                இன்னிக்கு நீ கொண்டுபோய் மித்ராவைப் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு வந்துடு.
                               ஏன் நீங்க என்ன செய்யபோறீங்க? என்று கேட்டாள் சொர்ணா.
                               எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பியா நீ?
                               கேக்கற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க?
                               நீ ரொம்ப யோக்யதைதான்
                               யோக்கியதையைப் பத்திப் பேச உங்களுக்கு தகுதி இல்ல.
                               காலையிலேயே எதுக்கு வம்பு இழுக்கறே சொர்ணா?
                               நானா? நல்ல குடும்பம் நடத்துனா நான் ஏன் வம்பு பண்ணறேன்.
                               நீ ஒழுங்கா இருந்தா நான் நல்ல குடும்பம் நடத்துவேன்.
                               நான்தான் தண்ணியப் போட்டுட்டு ஊர் ஊரா சுத்துறேன். வீடு கண்ட இடம் கடன் வாங்கிட்டு வெக்கமில்லாம இருக்கேன். ஏன்னா எங்கப்பா  அம்மா ஒழுங்கா வளக்கலே பாருங்க..
                               எங்கப்பா அம்மா வளத்தது தப்பா?
                               அத நான் வேற சொல்லணுமா.. நல்லாத் தெரியுதே.
                               அடிச்சு மூஞ்சு கீஞ்சிய கிழிச்சிடுவேன்.. நாயே.. ஒழுங்கு மரியாதயா நடந்துக்க.
                                ஆம்பள மட்டுந்தான் அடிப்பீங்களா? பொம்பளக்கி கை ஓங்கத் தெரியாதா?
                                அடிடி பாப்போம்.
                                எனக்கென்ன பைத்தியமா அடிக்கறதுக்கு..
                                அப்ப நான் பைத்தியமா?
                                என் தலையெழுத்து இப்படித்தானே போட்டிருக்கு.. எதுக்குமே வழியில்லாம வக்கத்து மாட்டிக்கிட்டேன்.. நாள் முழுக்க சீரழிஞ்சி சிரிப்பா சிரிக்கிறேன்..
                               எதுக்குடி இப்ப கண்டதையும் பேசறே?
                               தவறாம குடிக்கற மனுஷனுக்குப் பெத்த புள்ளய கொண்டுபோய் பள்ளிக்கூடத்துல விட நேரம் இல்ல.. ஆனா குடிக்க மட்டும் நேரம் இருக்கு.. அது எங்கெங்கோ போய் கடன் வாங்கி குடிக்கவும் கூசல..
                                 குமரனுக்குள் தன்மானம் பொங்கி வெடித்தது.
                                 எது செய்தாலும் பதிலுக்குத் தயங்காமல் எதிர்வினை காட்டுவாள்.
                                அதற்குள் எட்டிப்பார்த்த வசந்தா உள்ளே வந்தாள். குமரனின் தாய்.
                                 நாளு முழுக்க உங்க எழவே பெரிசா போச்ச?
                                 என்ன ஆச்சு?
                                  சொர்ணா அழுதபடியே சொன்னாள். அத்தே.. காலயிலேயே குடிக்கக் கிளம்பியாச்சு. இன்னிக்கு மித்ராவுக்கு பரிச்சை.. கொண்டு போய் விட முடியாதுங்கறாரு.. நான் இன்னிக்கு வீட்டுக்கு வரக்கூடாது.. உடம்பெல்லாம வலி உயிரப் போவுது.. காலையிலேயே உதிரம் போவுது..
                                 சொல்லிவிட்டு அழுதாள்.
                                  ஏண்டா இப்படி பண்ணறே?  பேசாம நானும் உங்கப்பனும் செத்துப்போறோம்.. அப்புறமாச்சும் திருந்துவியாடா.. நாங்க என்னடா பாவம் பண்ணோம்.. இப்படி வந்து பொறந்திருக்கே.. அப்படி குடிக்கச் சொல்லுதா.. இத விட்டுத்தொலக்க மாட்டியா.. ஒத்த பொம்பளப் புள்ள அவள கரையேத்த வேண்டாமா?
                                  பேசாமல் உட்கார்ந்திருந்தான் குமரன். எதிர்த்துப் பேசமாட்டான் தாயை. அப்புறம் குடிக்கக் காசு கிடைக்காது.
                                  ஏதாவது ஒரு காரணம் சொல்லுவன் காசு வாங்க. கிடைக்கவில்லையெனில் அசந்த சமயம் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு சாமானைத் தூக்கிக்கொண்டு போய் விற்றுவிட்டுக் குடித்து வருவான்.
                                  குமரனின் அப்பா முத்துவேல்.  நான் என்ன பண்ணறது. என் தலையெழுத்து. அவன்லாம் திருந்த மாட்டான். ஒண்ணு நாம இதல்லாம் கண்டுக்காம சீக்கிரம் செத்துப்போவணும்.. இல்ல அவன் செத்துப்போவணும். ஏதாவது ஒண்ணு நடந்தாதான் இது முடிவுக்கு வரும்.
                                  குமரனால் குடிக்காமல் இருக்கமுடியவில்லை. அதுவும் முட்ட முட்ட.
                                 இத்தனைக்கும் குமரன் அப்பா,அம்மாவோடுதான் இருக்கிறான். நாலைந்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார் முத்துவேல். அதில் ஒன்றில்தான் குமரனும் குடியிருக்கிறான். பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவேண்டும். எப்படியும் திருத்திவிடலாம் என்கிற நப்பாசையில்.
                               எட்டு மணியாயிற்று. சொர்ணா அவசரமாகக் கிளம்பி மித்ராவை ரெடிபண்ணி அழைத்துக்கொண்டு போனாள்.
                                உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா? அவ வீட்டுக்கு வரக்கூடாது..அந்த அவஸ்தையெல்லாம் உனக்கு எங்க புரியப்போவுது.?  உன்னை ஏண்டா பெத்தோம்னு இருக்கு..
                                சொல்லிவிட்டு  வசந்தா போய்விட்டாள் அவள் வீட்டிற்கு.
                                 சற்று நேரம் உட்கார்ந்திருந்தான்.
                                 குடிக்காமல் இருக்க முடியவில்லை. குடியை நிறுத்தவே முடியவில்லை. என்ன செய்யலாம் பேசாமல் செத்துப்போய்விடலாம். சாவேண்டா என்று நிறைய குரல்கள் அவன் மனத்துள் ஒலித்தன.
                                 வீட்டின் கதவை உட்புறம் தாழிட்டான்.
                                  மர ஸ்டூல் கிடந்தது.
                                 அதை எடுத்துப்போட்டான். ஒரு புடவையை எடுத்து மேலே மின்விசிறியில் கட்டினான். மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி உறுதி செய்தபின் நின்ற மர ஸ்டூலை எட்டி உதைக்க உடல் தொங்கியது. கழுத்தில் சுருக்கு இறுக்கியது. உயிர்போகும் தருணத்தை எண்ணியபடியே இருந்தவன் சட்டென்று வலி தாங்கமுடியாமல் கத்த நினைக்க குரல் வரவில்லை. கால்களை உதைத்து எட்டியுதைத்த மர ஸ்டூலை இழுக்க முயன்றான் எட்டவில்லை. சொர்ணாவும் மித்ராவும் நிழலாக வந்துபோனார்கள். கைகளையும் கால்களையும் உதைக்க ஆரம்பித்தான் விடாது.

                                                                                      (ஊழ்வினை தொடரும்)