Wednesday, June 28, 2017

ஊட்டும் ..... நாவல்...

அன்புள்ள

              வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும என்கிற முனைப்பில் இப்போது.

             இதற்கிடையில் நான் எழுதிக்கொண்டிருக்கிற நாவல் ஊட்டும் என்னும் தலைப்புடையது. இதனை 100 பக்கங்கள் அளவு எழுதினாலும் அவற்றைத் தொடர்போல வலைப்பக்கத்தில் வெளியிட எண்ணியுள்ளேன். முன்பு பேருந்து நாவலை அப்படித்தான் எழுதி நண்பர்கள் நிறைய பின்னூட்டம் அளித்தார்கள். அவற்றைக்கொண்டு நாவலை செப்பம் செய்து இப்போது அது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது சென்ற ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு.,

               சிலப்பதிகாரத்தின்  காப்பிய உருவாக்கத்தின் அறங்களில் ஒன்று ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது.இந்த அடியின் ஊட்டும் என்கிற ஒன்றை மட்டுமே என் நாவலின் தலைப்பாக வைத்துள்ளேன்.

             எனவே நாவலைத் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளை அளிக்க வேண்டுகிறேன்.

               நன்றி வணக்கம்.

====================================================================


                                                   ஊட்டும்  (நாவல்)

அத்தியாயம் 1                        ஊழ்வினை 1

               

                                காலையில் மித்ராவைப் பள்ளிக்கு கிளப்பும்போதே சண்டை வந்துவிட்டது குமரனுக்கும் சொர்ணாவுக்கும்.
                                இன்னிக்கு நீ கொண்டுபோய் மித்ராவைப் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு வந்துடு.
                               ஏன் நீங்க என்ன செய்யபோறீங்க? என்று கேட்டாள் சொர்ணா.
                               எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பியா நீ?
                               கேக்கற மாதிரி ஏன் நடந்துக்கறீங்க?
                               நீ ரொம்ப யோக்யதைதான்
                               யோக்கியதையைப் பத்திப் பேச உங்களுக்கு தகுதி இல்ல.
                               காலையிலேயே எதுக்கு வம்பு இழுக்கறே சொர்ணா?
                               நானா? நல்ல குடும்பம் நடத்துனா நான் ஏன் வம்பு பண்ணறேன்.
                               நீ ஒழுங்கா இருந்தா நான் நல்ல குடும்பம் நடத்துவேன்.
                               நான்தான் தண்ணியப் போட்டுட்டு ஊர் ஊரா சுத்துறேன். வீடு கண்ட இடம் கடன் வாங்கிட்டு வெக்கமில்லாம இருக்கேன். ஏன்னா எங்கப்பா  அம்மா ஒழுங்கா வளக்கலே பாருங்க..
                               எங்கப்பா அம்மா வளத்தது தப்பா?
                               அத நான் வேற சொல்லணுமா.. நல்லாத் தெரியுதே.
                               அடிச்சு மூஞ்சு கீஞ்சிய கிழிச்சிடுவேன்.. நாயே.. ஒழுங்கு மரியாதயா நடந்துக்க.
                                ஆம்பள மட்டுந்தான் அடிப்பீங்களா? பொம்பளக்கி கை ஓங்கத் தெரியாதா?
                                அடிடி பாப்போம்.
                                எனக்கென்ன பைத்தியமா அடிக்கறதுக்கு..
                                அப்ப நான் பைத்தியமா?
                                என் தலையெழுத்து இப்படித்தானே போட்டிருக்கு.. எதுக்குமே வழியில்லாம வக்கத்து மாட்டிக்கிட்டேன்.. நாள் முழுக்க சீரழிஞ்சி சிரிப்பா சிரிக்கிறேன்..
                               எதுக்குடி இப்ப கண்டதையும் பேசறே?
                               தவறாம குடிக்கற மனுஷனுக்குப் பெத்த புள்ளய கொண்டுபோய் பள்ளிக்கூடத்துல விட நேரம் இல்ல.. ஆனா குடிக்க மட்டும் நேரம் இருக்கு.. அது எங்கெங்கோ போய் கடன் வாங்கி குடிக்கவும் கூசல..
                                 குமரனுக்குள் தன்மானம் பொங்கி வெடித்தது.
                                 எது செய்தாலும் பதிலுக்குத் தயங்காமல் எதிர்வினை காட்டுவாள்.
                                அதற்குள் எட்டிப்பார்த்த வசந்தா உள்ளே வந்தாள். குமரனின் தாய்.
                                 நாளு முழுக்க உங்க எழவே பெரிசா போச்ச?
                                 என்ன ஆச்சு?
                                  சொர்ணா அழுதபடியே சொன்னாள். அத்தே.. காலயிலேயே குடிக்கக் கிளம்பியாச்சு. இன்னிக்கு மித்ராவுக்கு பரிச்சை.. கொண்டு போய் விட முடியாதுங்கறாரு.. நான் இன்னிக்கு வீட்டுக்கு வரக்கூடாது.. உடம்பெல்லாம வலி உயிரப் போவுது.. காலையிலேயே உதிரம் போவுது..
                                 சொல்லிவிட்டு அழுதாள்.
                                  ஏண்டா இப்படி பண்ணறே?  பேசாம நானும் உங்கப்பனும் செத்துப்போறோம்.. அப்புறமாச்சும் திருந்துவியாடா.. நாங்க என்னடா பாவம் பண்ணோம்.. இப்படி வந்து பொறந்திருக்கே.. அப்படி குடிக்கச் சொல்லுதா.. இத விட்டுத்தொலக்க மாட்டியா.. ஒத்த பொம்பளப் புள்ள அவள கரையேத்த வேண்டாமா?
                                  பேசாமல் உட்கார்ந்திருந்தான் குமரன். எதிர்த்துப் பேசமாட்டான் தாயை. அப்புறம் குடிக்கக் காசு கிடைக்காது.
                                  ஏதாவது ஒரு காரணம் சொல்லுவன் காசு வாங்க. கிடைக்கவில்லையெனில் அசந்த சமயம் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு சாமானைத் தூக்கிக்கொண்டு போய் விற்றுவிட்டுக் குடித்து வருவான்.
                                  குமரனின் அப்பா முத்துவேல்.  நான் என்ன பண்ணறது. என் தலையெழுத்து. அவன்லாம் திருந்த மாட்டான். ஒண்ணு நாம இதல்லாம் கண்டுக்காம சீக்கிரம் செத்துப்போவணும்.. இல்ல அவன் செத்துப்போவணும். ஏதாவது ஒண்ணு நடந்தாதான் இது முடிவுக்கு வரும்.
                                  குமரனால் குடிக்காமல் இருக்கமுடியவில்லை. அதுவும் முட்ட முட்ட.
                                 இத்தனைக்கும் குமரன் அப்பா,அம்மாவோடுதான் இருக்கிறான். நாலைந்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார் முத்துவேல். அதில் ஒன்றில்தான் குமரனும் குடியிருக்கிறான். பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவேண்டும். எப்படியும் திருத்திவிடலாம் என்கிற நப்பாசையில்.
                               எட்டு மணியாயிற்று. சொர்ணா அவசரமாகக் கிளம்பி மித்ராவை ரெடிபண்ணி அழைத்துக்கொண்டு போனாள்.
                                உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா? அவ வீட்டுக்கு வரக்கூடாது..அந்த அவஸ்தையெல்லாம் உனக்கு எங்க புரியப்போவுது.?  உன்னை ஏண்டா பெத்தோம்னு இருக்கு..
                                சொல்லிவிட்டு  வசந்தா போய்விட்டாள் அவள் வீட்டிற்கு.
                                 சற்று நேரம் உட்கார்ந்திருந்தான்.
                                 குடிக்காமல் இருக்க முடியவில்லை. குடியை நிறுத்தவே முடியவில்லை. என்ன செய்யலாம் பேசாமல் செத்துப்போய்விடலாம். சாவேண்டா என்று நிறைய குரல்கள் அவன் மனத்துள் ஒலித்தன.
                                 வீட்டின் கதவை உட்புறம் தாழிட்டான்.
                                  மர ஸ்டூல் கிடந்தது.
                                 அதை எடுத்துப்போட்டான். ஒரு புடவையை எடுத்து மேலே மின்விசிறியில் கட்டினான். மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி உறுதி செய்தபின் நின்ற மர ஸ்டூலை எட்டி உதைக்க உடல் தொங்கியது. கழுத்தில் சுருக்கு இறுக்கியது. உயிர்போகும் தருணத்தை எண்ணியபடியே இருந்தவன் சட்டென்று வலி தாங்கமுடியாமல் கத்த நினைக்க குரல் வரவில்லை. கால்களை உதைத்து எட்டியுதைத்த மர ஸ்டூலை இழுக்க முயன்றான் எட்டவில்லை. சொர்ணாவும் மித்ராவும் நிழலாக வந்துபோனார்கள். கைகளையும் கால்களையும் உதைக்க ஆரம்பித்தான் விடாது.

                                                                                      (ஊழ்வினை தொடரும்)