Thursday, August 27, 2020

 

குறுங்கதை 19

                      அப்பாவின் நண்பர்கள்

                                          ஹரணி

 

            இந்த மாதம் பதினைந்தாம் தேதிதான் திதி ராகவனுக்கு. இரண்டாண்டுகள் ஆகிவிட்டன ராகவன் இறந்துபோய். ஆனால் நட்சத்திரப்படி முன்கூட்டியே வந்துவிட்டது. ஐந்தாம் தேதி திதி என்பதால் முன்கூட்டியே ஐயரிடம் சொல்லியாகிவிட்டது.  கொரோனா காலம் என்பதால் ஐயர் கொஞ்சம் கூடத்தான் தொகை கேட்டிருந்தார். அவர் கேட்ட காய்கறிகள் மற்றும் எல்லாமும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தன.

            ராகவனின் மகன் கோபி சொன்னான் அம்மா.. இதையெல்லாம் பார்க்கவேண்டாம்… அப்பாவின் திதி நன்றாக நடக்கவேண்டும். அப்பா உயிருடன் இருந்தவரைக்கும் தாத்தாவுக்குக் குறைவின்றிச் செய்தார். நானும் அதை அப்படியே செய்வேன் என்றான்.

            சரி என்றாள் ராகவனின் மனைவி.

           ராகவன் போனபிறகு பொருளாதார ரீதியாக கொஞ்சம் அடி வாங்கியிருந்தது குடும்பம் என்றாலும். சமாளிக்கும் வருமானமும் கிடைத்தது.

            ராகவன் பெருந்தன்மையானவன். உயிருடன் இருந்தபோது பலருக்கு உதவி செய்திருக்கிறான். அவன் இறந்தபோது அவனிடம் கடன் வாங்கியவர்கள் ஒருவர்கூட வரவில்லை. ஏமாற்றுவேலைதான்.

             எப்படிப் போய் கேட்கமுடியும்? ராகவனிடம் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் கொடுத்திருப்பதை வாய்மொழியாகச் சொல்லி வைத்திருந்தான்.

              அதைக் கேட்டபோது சொல்லி வைத்தாறபோல வாங்கிய அத்தனைபேரும்.. தம்பி.. அப்பா உயிருடன் இருந்தப்பவே கொடுத்திட்டோம்பா.. என்றார்கள்.

                 கோபி எதுவும் பேசாமல் திரும்பி வந்தான்.

                திதி அன்று ஐயர் சொன்னபடி எல்லாமும் இருந்தன. உருண்டை தக்காளிபோல ஐயர் வந்து இறங்கினார் ஆக்டிவாவில்.

                எல்லாரும் வந்துட்டாளா என்றார்.

               இல்ல சாமி.. கொரோனா யார்கிட்டயும் சொல்ல முடியல.. எங்க குடும்பம்.. எங்க வீட்டுக்காரரோட தம்பி குடும்பம் அவ்வளவுதான்.. நீங்க ஆரம்பிங்க என்றாள் ராகவன் மனைவி.

               ஐயர் ஆரம்பித்தார்.

              அப்போது வாசலில் வண்டிகள் சப்தம் கேட்டது. நாலைந்து இளைஞர்கள் ஆளுக்கொரு வண்டியில் வந்திருந்தார்கள். எல்லோரும் கோபி வயதொத்தவர்கள். ஆளுக்கொரு பை வைத்திருந்தார்கள்.

               உள்ளே வந்தார்கள்.

              யார் நீங்க?

              சொல்றோம் என்றபடி தாங்கள் வைத்திருந்த பையில் இருந்து பணக்கட்டுகளை எடுத்து தரையில் வைத்தார்கள். கோபியும் அவன் அம்மாவும் அதிர்ந்துபோனார்கள்.

               என்ன இது?

              ராகவன் அங்கிள்கிட்ட எங்கப்பாக்கள் வாங்கினது..  எங்க மூணு பேரோட அப்பாவும் ஒண்ணா ஆக்சிடெண்ட்ல இறந்துபோயிட்டாங்க.. எங்கம்மா சொன்னாங்க… உங்கப்பா ராகவன் அங்கிளை ஏமாத்துனதோட பலன்.. நமக்குப் போதுமான பணம் இருக்கு.. அவரோட பணத்தைக் கொண்டுபோய் கொடுத்திட்டு வந்துடுங்க.. நீங்களாச்சும் மிஞ்சி இருக்கணும்னாங்க.. அதான் கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன் என்றார்கள்.

               கோபியும் அவன் அம்மாவும் ராகவன் போட்டோ பார்த்து அழுதார்கள்.

 

           

 

           

 

 

Tuesday, August 18, 2020

 

குறுங்கதை 18

                        எண்ணம் போல் எல்லாம்

 

                                                ஹரணி

 

      அன்றைக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டிருந்தான் பரசுராமன். வந்தவுடன் அவன் மனைவி வேணி சூடாக காபி போட்டு எடுத்துவந்தாள். வேணிபோல ஒரு மனைவி அமைவதற்கு முன்பிறபி புண்ணியம் என்றுதான் அடிக்கடி நினைத்துக்கொள்வான் பரசுராமன். அடுத்தவர் பற்றி புறணி பேசமாட்டாள். எப்போதும் கடினமாக உழைப்பதையே விரும்புவாள். காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டால் அவள் சாப்பிட்டு சற்றே கண்ணசர இரண்டு மணியாகிவிடும். அத்தனை வேலைகள் பார்ப்பாள். மனதுக்குள்ளேயே நாட்குறிப்பு வைத்திருப்பாள். அப்படியே ஒவ்வொரு வேலையாய் பார்ப்பாள். பார்த்துக்கொண்டேயிருப்பாள். வீட்டை சுத்தமாக பெருக்குவாள்,, சாமானகள் துலக்குவாள்.. செடிகள் வைப்பாள், அதனை அத்தனை சுத்தமாகப் பராமரிப்பாள்.. சின்ன சின்ன பொருட்களை எதையும் வீணாக்காமல் பயன்படுத்துவாள். உதாரணத்திற்கு காளான் வாங்கி வரும் பிளாஸ்டி டப்பாவில் மண்நிரப்பி வெந்தயம் அழுத்தி வைத்து வெந்தயம் செடி வைப்பாள். வளர்ந்ததும் முடிவெட்டுவதுபோல அதனை வெட்டி கூட்டு வைத்து அன்றைக்குக் காலை இட்லிக்குச் சாப்பிடத் தருவாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

            அவளின் திறமையால்தான் பரசுரரமன் ஐந்து சின்ன சின்ன வீடுகளாகக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தான். அந்த வீடு கட்டிய கதையே வெகு சுவாரஸ்யமானது. அதைச் சொன்னால் இக்கதை குறுங்கதையிலிருந்து நீண்ட கதையாகிவிடும்.

 

              வாடகைக்குக் குடி வருபவர்கள் அத்தனை சாமானியமாகக் காலி செய்துபோகமாட்டார்கள். வருடக் கணக்கில் இருப்பார்கள். காரணம் வேணிதான். வாடகைக்கு வந்து குடியேறும்போது வீட்டைக் காண்பிப்பாள். அத்தோடு சரி. உங்கள் வீடு போலப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்வாள். அப்புறம் அவர்கள் வீட்டுப் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டாள். வாடகை கொடுக்கும்போது வாங்கிக்கொள்வான்.

           நீ வீடு வாடகைக்கு விடவே லாயக்கில்லை என்பான் பரசுராமன்.

           எதுக்கு சொல்றீங்க? என்பாள் வேணி.

          ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் வாடகையை அவங்க இஷ்டத்துக்குத் தராங்க வாங்கிக்கறே.. ஒரு வரைமுறை வேண்டாமா?

            இருக்கட்டுங்க.. ஒருத்தங்க வாரக்கூலி. வாரக் கடைசியில தருவாங்கள்.. ஒருத்தர் பிசினஸ்.. பதினைஞ்சாம் தேதி தருவாரு.. ஒருத்தரு முடியாதவரு.. ஆனா ரெண்டு மாசம் சேர்த்து தருவாரு.. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஷ்டம் ஆனாலும் வாடகை வந்துடும்.. அவங்க கொடுக்கற நாளுக்கு ஏற்றமாதிரி நான் என் பட்ஜெட்ட வச்சிருக்கேன். எனக்குப் பிரச்சினையில்ல.. என்பாள்.

             இதான் வேணி.

            அப்புறம் வாடகைக்குக் குடி வருபவர் இடத்து எல்லாம் ஒரு வார்த்தை சொல்வாள்.

             எங்க வீட்டுக்கு வாடகைக்குக் குடி வர்றீங்க.. இதுதான் உங்களுக்குக் கடைசியா இருக்கணும்..அப்புறம் வீடு காலிப்பண்ணிட்டுப் போனா நீங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிக்கிட்டுப்போகணும்.. மனசார வாழ்த்துகிறேன் என்பாள்.

             இதனாலேயே பலபேர் காலி பண்ணாமல் வருஷக்கணக்கில் இருக்கிறார்கள்.

              அன்றைக்கு அப்படித்தான் பரசுராமன் சீக்கிரம் வேலை விட்டு வந்திருந்தான். வேணி குடித்த காபியைச் சாப்பிட்டு முடிக்கவும் சாருமதி அவள் குழந்தையுடன் ஆக்டிவாவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

            மாமா.. வணக்கம் மாமா என்றாள் சாருமதி. யேய் தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு என்று தன்பிள்ளையையும் சொல்ல வைத்தாள்.

             வாப்பா சாரு என்ன விஷேசம்? என்றான் பரசுராமன்.

           சாருமதி முன்னால் பரசுராமன் வீட்டில் குடியிருந்தவள். இப்போது கல்யாணம் ஆனவுடன் காலி பண்ணிவிட்டுப் போய்விட்டாள். இன்னமும் அதே மரியாதை அன்பும் வைத்திருக்கிறாள்.

             மாமா.. ஒரு சந்தோஷமான செய்தி  சரி வேணி அத்தை எங்கே? என்றாள்.

           உள்ளதான் இருக்காள்.. எனக்குக் காபி கொடுத்தாள். பாத்திரத்தை உடனே கழுவி வைக்கப்போயிருக்காள்.

             அத்தை மாறவேயில்லை மாமா.. எதிலும் பர்பக்ட்.

            வேணி உள்ளிருந்து வந்தாள்.. யேய்.. சாருமதி.. வாடாம்மா.. என்னடா பாப்பா விஷேசம்..

           அத்தை , மாமா உங்ககிட்ட முதல்முதல்ல ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல வந்திருக்கேன் என்றாள் படபடப்புடன்.

           சொல்லுடா சாரு.. என்றார்கள்.

          உங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்கும் அடுத்த பிளாட்ட நான் வாங்கிட்டேன்.. இப்பத்தான் அட்வான்ஸ் கொடுத்திட்டு வரேன்.. நீங்க அடிக்கடி சொல்வீங்களே.. எங்க வீட்டைக் காலிப் பண்ணிட்டுப்போனா.. சொந்த வீட்டுக்குத்தான் போவணும்.. இப்ப பிளாட் வாங்கிட்டேன். இனிமே சொந்த வீடுதான்.. உங்க மனசுக்கு முதல்ல உங்ககிட்டதான் சொல்லிட்டுப் போகவந்தேன்.. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று அப்படியே தெரு என்று பார்க்காமல் காலில் விழுந்து  வணங்கினாள்.

            நல்லாயிருப்பா.. மேன்மேலும் வளரணும்.. சீக்கிரம் கிரஹப்பிரவேசம் நடத்தணும் என்றாள் வேணி.

              அதுல முன்பகுதியில மாட்டறதுக்கு நான்தான் விநாயகர் படம் வாங்கித்தருவேன் என்றான் பரசுராமன்.

             சாருவுக்குக் கண்கள் கலங்கின.  எத்தனை மனசு மாமா உங்களுக்கும் அத்தைக்கும்.. நல்லாயிருப்பேன்.. என்றபடி கிளம்பினாள்.

           இரு வரேன் என்று உள்ளே போய் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துவந்து சாருமதி குழந்தை கையில் கொடுத்து நீ ரொம்ப சந்தோஷமான செய்தி சொன்னதுக்காக என்றான் பரசுராமன்.

            குழந்தை வாங்கிக்கொண்டு தேங்ஸ் தாத்தா என்றது.

 

Sunday, August 16, 2020

 

குறுங்கதை 17

சத்தியங்கள்

                                                        ஹரணி

      இரவு எட்டுமணிக்கு கனகத்தின் மகன் வேலு பேசினான் கோபியிடம்.

       மாமா… நம்ப வள்ளிக்கு ரொம்ப முடியாம ஆசுபத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க.. மூச்சுத் திணறலாம். டாக்டர்கள் முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்..

          அதிர்ச்சியாக இருந்தது.

           வள்ளி கோபியின் அண்ணன் மகள் (கோபியின் சித்தப்பா பேத்தி) வாழ்க்கை முழுக்க வறுமை அனுபவித்தவள். அவளுக்குத் திருமணமான நிகழ்வு அப்படியே மனத்தில் நிற்கிறது. அந்தத் தருணம் கோபி வெளியூர் போய்விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் அவன் மனைவி போன் செய்தாள்.

            என்ன சங்கரி?

            ஏங்க நம்ப வள்ளிக்கு நாளைக்குக் கல்யாணம்.

            அதான் தெரியுமே. நாளைக்கு நான் லீவு போட்டுட்டேன்.

            அதுக்கில்லீங்க… என்று இழுத்தாள் சங்கரி.

            தெளிவா சொல்லு. இழுக்காதே என்றான் கோபி.

            இல்லங்க.. கட்டில் பீரோ மெத்தை வாங்கித் தரேன்னு சொன்னவங்க கழுத்தறுத்துட்டாங்களாம்.. அந்த அக்கா வந்து அழுதுகிட்டிருக்காங்க.. எப்படியாச்சும் எம்பொண்ண கரையேத்திடுங்கன்னு.. என்றாள்.

               தெளிவாகப் புரிந்துவிட்டது கோபிக்கு. ஒருவகையில் அண்ணன் மகள் என்றாலும் அவளும் மகள்தான். வள்ளியின் அப்பா டிரைவர். குடிகாரன். எல்லாம் செயலிழந்த நிலையில் வீட்டில் இருக்கிறான். வலிமையற்றவனிடம் வாதம் செய்வது பலனற்றது. கோபி வந்து கடைத்தெருவிற்குப் போய் கட்டில்,பீரோ, மெத்தை எல்லாமும் வாங்கி வந்து கொடுத்தான். கைச்செலவுக்கு என்று வள்ளி அம்மா கேட்டதற்கு எட்டாயிரம் பணத்தையும் கொடுத்தான். என் மகளாக இருந்தால் செய்யமாட்டேனா என்று..

              நினைவுக்கு வந்ததை எண்ணி கலைத்தான். இப்போது உயிருக்குப் போராடுகிறாள் வள்ளி. காரணம் அவள் கணவன். ஆண் குழந்தை வேண்டுமென்று இதுவரை 12 முறை கலைத்து தற்போது இரண்டு பெண்குழந்தைகள் ஒன்றரை வயதில் ஆண்குழந்தை இருக்கிறது. வள்ளிக்கு முதல் பிரசவத்தின்போதிருந்தே அனிமிக். இரத்தச் சோகை. அடுத்தடுத்த குழந்தை பெறுவது ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்கள்.

          கிராமத்தில் வாக்கப்பட்டவள் வள்ளி. வறுமையும் கூட. பலனற்றுபோனது மருத்துவர்களின் எச்சரிக்கைகள்.

           மருத்துவமனைக்கு இரத்தம் தேவைப்படுகிறது என்று வேலு ஏற்பாடு செய்திருந்தான்.

           மாமா.. இப்ப இரத்தம் கேட்டாங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

யாரும் கொரோனான்னு ரத்தம் குடுக்கப் பயப்படறாங்க.. ஆசுபத்திரிக்கே வர யோசிக்கிறாங்க..

           எல்லாம் முடிந்துவிட்டது.

           இரவு பத்துமணிக்கு பக்கத்துப் பெட்காரர் போன் செய்ததாக வேலு சொன்னான். வள்ளி இறந்துப்போயிட்டா மாமா.. கொரோனா டெஸ்ட் பாத்துட்டுதான் பாடியத் தருவாங்களாம். டெஸ்ட்க்காக அடுத்தநாள் காலை வரை காத்திருந்தார்கள். நெகடிவ் என்று வந்து பாடியைத் தந்தார்கள். அதற்குள் வள்ளியின் அம்மா காவல் நிலையம் போய்விட்டாள். என் மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. கணவன்தான் அடித்துக்கொண்டுவந்து என் வீட்டில் விட்டுவிட்டுப்போனான். ஆகவே என் மகள் இறப்புக்கு அவன்தான் காரணம்.

          காவல்நிலையத்தில் பஞ்சாயத்துபோனது. கடைசியில் வள்ளியின் தாய் பிடிவாதமாக இருந்ததால் பாடி போஸ்ட்மார்ட்டம்போய் வந்தது.

           கோபி, வேலு எல்லோரும் போனார்கள்.

           தெருவில் கிடத்தியிருந்தார்கள். நாலைந்துபேர்கள் மட்டுமே ஆண்களும் பெண்களுமாக இருந்தார்கள். தள்ளி தள்ளி நின்றார்கள்.

           வள்ளியின் தாய் கோபியிடம் மாரில் அடித்துக்கொண்டு அழுதாள். உங்க மவள பாத்திங்களா என்று…

           இறந்துபோன மகளிடம் போய்  பாருப்பா.. உன்ன பாக்க எல்லா சித்தப்பாவும் மாமாவும் வந்திருக்காங்க.. என்று சொல்லி அழுதாள்.

           எல்லாம் முடிந்து வேனில் ஏற்றிக்கொண்டு சுடுகாடு போனார்கள்.

            அன்று இரவு வேலுவின் அம்மா ஒரு செய்தி சொன்னாள். வள்ளி இறந்துபோய்விட்டாள். ஆனால் அவள் உயிருடன் இருந்தபோது சம்பாதிக்க வக்கில்ல என்று அவள் அப்பாவை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டாள். என்று. ஒருவேளை அதன் பலனோ என்று சொல்லாமல் நினைக்க வைத்தது. எப்படியாயினும் சிறிய வயதில் கணவன்வராமல் பிள்ளைகள் வந்து அம்மா வென்று சொல்லி அழாமல் ஒரு பிணம் அனாதைபோல வள்ளியின் உடல் சுடுகாட்டிற்குச் சென்றதே ஊழ்வினைதான்.

         குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய ஒரு ஆண்மகன் குடித்துவிட்டு உடல்நிலை கெட்டு இயங்கமுடியாத சூழலில் மனைவியும் மகளும் என்ன செய்வார்கள். கோபத்தைக் காட்டத்தானே செய்வார்கள். மாடிப்படியில் தள்ளிவிடுமளவுக்கு கொடுமைக்காரிகள் அல்ல ஆனால் தொட்டுப் பேசியதில் தடுமாறியிருக்கலாம். எல்லாமும் வறுமையின் நாடகங்கள். இனி வழக்கு நடந்து எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் வள்ளியின் உறவுகள் அத்தனைபேர் இருந்தும் தனித்தவளாய் அனாதைப்போல அவள் உடல் வண்டியில் சென்றது கோபிக்கு உறுத்தலாகவே இருந்தது. அண்ணன் மகள் என்றாலும் அவளும் மகள்தானே? இறைவனின் கணக்குகள் சிலவற்றுக்கு நம்மால் தீர்வு காணமுடியாதுதான்.

Sunday, July 26, 2020


குறுங்கதை 16

                  இன்னார்க்கு இன்னார் என்று

                                                   ஹரணி


           கார்த்திக்கு சோபாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து ஒருவாரந்தான் ஆகிறது. அதுவும் அதிகம் கூட்டம் சேர்க்காமல் கார்த்தி வீட்டு சார்பில் பத்துபேர் சோபா வீட்டு சார்பில் பத்துபேர் கூடுதலாக ஐயர் எனக் குறைந்த பேர்களைக் கொண்டு வீட்டிலேயே வைத்து முடித்துவிட்டார்கள். முகக்கவசம் அணிந்து வந்தோர்களுக்கு எல்லாம் சானிடைசர் கொடுத்து மிகக் கவனமாகச் செய்தார்கள். அக்கம் பக்கம் வீட்டுப் பெண்கள் உதவி செய்ய வந்திருந்தோர்க்கு விருந்தும் செய்தும்போட்டார்கள்.

              சோபா தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவள் சென்னையில். இப்போது ஒர்க் அட் ஹோம் என்கிற சூழலில் வேலை செய்கிறாள்.

              இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

              எந்த அறிகுறியும் இல்லை.

              எதேச்சையாகப் பரிசோதிக்க வந்ததில் சோபாவிற்குப் பாசிடிவ் என்று வந்துவிட்டது
.
              அதிர்ந்துபோனார்கள்.

              லாக்டவுன் முடிந்ததும் திருமணம் வைக்கலாம் என்கிற சூழலில் இப்படியொரு சங்கடம்.

             பயந்தார்கள்.

             ஆனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் சொல்லி அதற்கான விதிமுறைகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சாப்பிடவேண்டிய உணவு முறைகள்.. எல்லாவற்றையும் சோபாவின் குடும்பத்தார்க்குச் சொல்லிவிட்டு.. அவ்வப்போது தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்திவிட்டுப்போனார்கள்.

           மாடியில் ஒரு அறை இருந்தது. கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறை.

            அதை ஓரமாக எடுத்து வெளியே போட்டுவிட்டு பாய், தலையணை, இதர விஷயங்கள் என்று அந்த அறையைத் தயார் செய்து அதற்குள் சோபா போய்விட்டாள்.

              இப்ப என்ன பண்ணறது?

              ஏன் எல்லாம் சரியாயிடும். பயப்படவேண்டாம்.

              இல்ல மாப்பிள்ள வீட்டுக்குத் தெரிவிக்க வேண்டாமா? ஏதாச்சும் நினைச்சுக்கப்போறாங்க…

              ஒருவேளை கல்யாணம் நின்னுடுமோ.. என்று சோபாவின் அம்மா பயந்தாள்.

              அதெல்லாம் நடக்காது.. நீ எந்தக் காலத்துல இருக்கே.. இது ஒரு வைரஸ் தொற்று.. எத்தனையோ பேருக்கு வந்திருக்கு.. பெரிய பெரிய ஆளுங்களுக்கு எல்லாம் வந்திருக்கு.. மினிஸ்டர்.. எம்எல்ஏ கோடீஸ்வரங்க.. நாட்டோட அதிபர்கள்னு .. எல்லாம் சரியாயிடும். இதுக்குப் போய் கல்யாணத்த நிறுத்திடுவாங்கன்னு சொல்றது பைத்தியக்காரத்தனம்.

            எதுவும் நடக்கும். ஆனா நாம எதுக்கும் தயாரா இருந்துக்கணும் என்றார் சோபாவின் அப்பா.

             என்னங்க இப்படி சொல்றீங்க?

            இல்ல.. உண்மையைச் சொன்னேன்.. எது நடந்தாலும் அதை ஏத்துக்கற மனப்பக்குவம் நமக்கு வேணும்.. அவ்வளவுதான்.. என்னம்மா சோபா சொல்றே? என்றார்.

              சரிப்பா.. கார்த்தி வீட்ல சொல்லிடுங்க.. முதல்ல கார்த்திக் கிட்ட போன்பண்ணி பேசிடுங்க.. அப்புறம் அவங்க வீட்டுல சொல்லுங்க என்றாள்.

            சரிம்மா என்று போன்பண்ணி விஷயத்தைச் சொன்னார்கள்.

            அப்ப ஏற்கெனவே இருந்திருக்கு.. உள்ளுக்குள்ளேயே இருந்துருக்கு..  சரி பாருங்க.. இந்தப் பத்திரிக்கை அடிக்கற வேலை எல்லாத்தையும் கொஞ்சம் நிறுத்தி வச்சிடுங்க.. எல்லாம் சரியாகட்டும்.. பார்க்கலாம்.. நானும் என்னோட சொந்தக்காரங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறேன்.. இது மோசமான நோய்ங்கறாங்க.. பின்னாடி வேற பாதிக்கும்னு வேற சொல்றாங்க.. எதுக்கும் யோசிச்சு முடிவு பண்ணிக்கலாம் என்றார் தயவுதாட்சண்யம் இல்லாமல்.

            சரிங்க.. என்றார் சோபாவின் அப்பா.

            அப்புறம் கார்த்திக்கிடமும் பேசினார்.

            சரிங்க.. மாமா அப்பா சொல்றபடி செய்யுங்க.. என்று சொல்லிவிட்டு கச்சேரியை தன் அப்பாவிடம் வைத்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்தான்.

           கார்த்திக்கும் இப்படிச் சொன்னவுடன் சோபாவின் அப்பா அதிர்ந்துபோனார்.. இனி இந்தக் கல்யாணம் நடக்காது என்பதுபோல உறுதி வந்துவிட்டது.

           அன்று இரவு.. கார்த்திக் தன் அப்பாவிடம் பேசினான்.

            என்னப்பா.. நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க.. இது உலகம் முழுக்க இருக்கிற நடக்கற விஷயம்.. கொரோனான்னா எல்லாரும் செத்துப்போயிடமாட்டாங்க.. அதுக்காகப் பத்திரிக்கை அடிக்கறத நிறுத்துங்கன்னு பேசினது தப்புப்பா.. எதுவும் நிலையில்ல.. யாருக்கு வேணா என்ன வேணா வரலாம்.. இதே எனக்கு வந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? நல்லதோ கெட்டதோ சோபா எனக்குன்னு நிச்சயிக்கப்பட்ட பெண்.. அத மாத்தமுடியாது.. மாத்தக்கூடாது.. வாழப்போறவன் நான்.. என் வாழ்க்கையைத் தீர்மானிக்க எனக்கு உரிமை இருக்கு..

             அதற்குமேல் கார்த்திக் அப்பா பேசவில்லை.

             உடனே சோபாவுக்கு அடிச்சுப் பேசினான்.

             சோபா.. நமக்கான வாழ்க்கையை யாரும் மாத்தமுடியாது. பத்திரமா இரு.. கவனமா இருந்தா போதும்.. நான் தினமும் வருவேன்.. உனக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை வாங்கிக்கொடுத்திட்டுப் போவேன்.. எதனாலும்போன்ல பேசு… தினமும் பேசு.. தைரியமா இரு.. நாம வாழப்போற வாழ்க்கைக்கு முன்னாடியே சவாலா இந்தக் காரியம் நடக்குது. எல்லாம் நன்மைக்கே.. நாம பேசிவச்சபடி ஒரு கல்யாணப் பத்திரிக்கையை நான் டிசைன் பண்ணி வச்சிருக்கேன்.. வாட்ஸ் அப்ல அனுப்புறேன்.. பார்த்து திருத்தம் சொல்லு.. கவலைப்படாதே.. உன்னோட அப்பா கிட்ட என்னோட அங்கிள் கிட்ட சொல்லு.. நம்பக் கல்யாணம் திட்டமிட்டபடி நடக்கும்.. நானிருக்கேன்.. என்றான்.

                                   000

Friday, July 24, 2020

குறுங்கதை 15

                       என்னோடு நியிருந்தால்….
                                                        ஹரணி


       வடவாற்றில் தண்ணீர் இல்லை. ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கிக் கிடந்தன. அதில் கொஞ்சம் தண்ணீர் கிடந்தது. சில நாய்கள் அதில் விழுந்து விளையாடிக்கொண்டிருந்தன. மணற்பரப்பைவிட கற்பரப்புகளே அதிகம். ஆறுகள் பெயரளவில் ஆறுகளாக இருந்தன. பாலத்தின் மீது நின்று வெற்றாற்றை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி. தலைக்குமேலே நாலைந்து பச்சைக் கிளிகள் பறந்து கடந்தன கீச்சிட்டபடி. பக்கத்தில் பாவா கோயில். அது ஒரு ஜீவசமாதி கோயில் அருகே பெரிய அரசமரம். அதன்கீழ் ஒரு பிள்ளையார சிலை அருகருகே சில நாகவடிவங்கள். அங்கே போய் உட்கார்ந்தான்.

           மனம் முழுக்கக் கொஞ்சம் வேதனை வழிந்துகொண்டிருந்தது.

           வழக்கம்போல கௌரியுடன் சண்டை போட்டு வந்துவிட்டான்.

           திருமணமாகி நாற்பது வருடங்களில் ஒருநாளாவது சண்டை இல்லாத திருநாளாக விடிந்ததில்லை. முடிந்ததும்.

           சின்ன சின்ன விஷயங்களில் இருவம் கச்சைக் கட்டிக்கொண்டு கத்திக்கொள்வார்கள்.

            எதுக்கு இந்த மேட்டை எடுத்து வாசல்ல போட்டிங்க..

            தண்ணீர் சிந்திப்போச்சு எடுத்துப்போட்டேன்.

            திருப்பி எடுத்த இடத்துல போடணும்ல..

            மறந்துட்டேன்.

           அதெப்படி மறக்கும். அதான் ஒரு வேலைக்காரி இருக்காள்ல பாத்துக்குவாள்னு ஒரு அலட்சியம்.

           எதுக்கு இப்படி நீயா கற்பனை பண்ணிப் பேசறே.
.
           நான் கற்பனை பண்ணிப் பேசறனா.. அதானே நடக்குது.

           என்ன கௌரி இப்படி எதுக்கெடுத்தாலும் சண்டை போடறே… ஒருநாளாச்சும் இப்படி இருந்திருக்கா?

            நான் என்ன வெட்டியாவா வம்பிழுக்கிறேன்.. நீங்க செய்யுற காரியம் அப்படி…

           அப்படி என்ன காரியம் பண்ணறேன்?

           ஒரு சின்ன விஷயம் நாலு நாளா சொல்றேன்.. வெந்தயம் இல்ல.. பெருங்காயம் இல்லன்னு வாங்கிட்டு வந்தீங்களா?

            மறந்துட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு வரேன்.

            எப்படிங்க மறக்கும்? உங்க வேலைன்னா மறக்குதா? வீட்டு வேலைன்னா மறக்குது. அலட்சியம்.

             உண்மையில மறந்துபோயிடுது…

             பசிக்குதுன்னு சொல்லி வடை வாங்கிட்டு வாங்கன்னா என்னிக்காச்சும் நேரத்துல வாங்கிட்டு வந்து தந்திருக்கீங்களா?

             இதெல்லாம் ஒரு பிரச்சினையா?

             நாள் முழுக்க வீட்டையே சுத்திவர்றவ.. என்னிக்காச்சும் ஒரு வடைக்குக் ஆசப்பட்டா உடனே கெடக்குதா? பேசறீங்க.. ரொம்ப யோக்கியம் மாதிரி..

            என்ன இப்படி எல்லாம் பேசறே?
           என்ன பேசறேன்?

            யோக்கியம் இல்ல.. அயோக்கியன்னு.. எல்லாம்.

            அயோக்கியன்னு நான் சொன்னனா நீங்களா நினைச்சிக்கிட்டா நான் பொறுப்பு இல்ல..

             யோக்கியமான்னு கேட்டா என்ன அர்த்தம்?

             ஒழுங்கா ஒரு காரியத்தையும் செய்யறதுல்லேன்னு அர்த்தம்.

             ஒழுங்கா நடக்காமத்தான் இத்தன வருஷம் குடும்பம் நடத்தியிருக்கேனா..

             பகல் போய் இரவு வந்து பகல் வந்துட்டா குடும்பம் நடத்தறதுன்னு அர்த்தமா?

             என்ன கௌரி எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்குப்போட்டியா பேசறே?

             நான் போட்டிப்போடறனா?  அதுவும் நீங்க சம்பாரிக்கிற ஆம்பள.. நான் வீட்டுக்கு வேலைக்காரியா வந்தவ.. போட்டிப்போடமுடியுமா?

             உனக்கு என்ன தோணுதோ பேசு கௌரி.. உன்ன எதுவும் என்னால பண்ணமுடியாது?

              இதுக்குமேலயும் என்ன பண்ணனும்? ஒண்ணுகூட கேட்டப்ப கெடக்காது..

              உன்னோட குடும்பமே நடத்தமுடியாதுடி..

              நான் மட்டும் என்ன இஷ்டப்பட்டா  இருக்கேன்…

              விருப்பம் இல்லாதவ போயிடவேண்டியதுதானே உங்க வீட்டுக்கு?

              ஏன்? என்னோட அப்பாவும் அம்மாவும் உயிரோட இருந்தப்ப சொல்லியிருந்தா போயிருப்பேன். இப்போ அவங்க இல்ல.. கேட்க நாதியில்லேன்னு எதுவேணாலும் பேசலாம்னு பேசறீங்க.. வயசும் ஆயிடிச்சு.. எங்க போவ எனக்கு நாதியிருக்கு..

                ஒரு வார்த்தைக்கு எத்தனை வார்த்தை பேசறே? ரொம்ப உனக்கு வாய் வளந்துடிச்சி கௌரி..

               ஆமா.. நான்தான் நாய் மாதிரி வாய வளத்து வச்சி பொழுதன்னிக்கும் கத்திக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருக்கேன்..

               அப்ப என்னை நாய்ங்கிறீயா?

               எது சொன்னாலும் தனக்குத்தான்னு எடுத்துக்கிட்டா நான் எண்ண பண்ணமுடியும்?

                பேசாமா போயிடலாம்டி உன்னோட மல்லுக்கட்டறதுக்கு..

                இந்தப் பூச்சாண்டியதான் நானும் பல வருஷமாப் பாத்துக்கிட்டிருக்கேன்
                அப்பா புருடா விடுறான்.. சாவமாட்டான்னு நினைச்சிட்டியா?

               நீங்க ஏன் சாமி சாவறீங்க.. வேண்டாம்.. உங்கப் புள்ளங்களோட சந்தோஷமா இருங்க.. எல்லாம் அப்பனுக்குத்தானே நியாயம் பேசுது.. நான் முடிவெடுத்திட்டேன். இத்தனை வருஷம் வாழ்ந்தாச்சு.. ரொம்ப சலிச்சுப்போச்சு.. உங்கள மாதிரி சொல்லமாட்டேன்.. சட்டுனு கதை முடிச்சிடுவேன்.. போதும்டா சாமி..

                இத்தனை வருடத்தில் ஒரு தடவைகூட கௌரி சாகறேன்னு என்று சொன்னதில்லை. கோபி அதிர்ந்துபோனான். வயதாகிவிட்டது. இப்போது தொற்று வேறு.. யாரோ ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தான். உடம்பு முழுக்க உதறியது. உடம்பெங்கும் லட்சக்கணக்கான தேள்கள் கொட்டியதுபோன்ற வலியை அதிர்வுகளாக உணர்ந்தான். இப்படிக் கௌரி சொன்னதில்லை.. அந்தக் கணமே புறப்பட்டு வடவாற்றங்கரை வந்தான்.

             அரச மரத்தினடியில் உட்கார்ந்து இத்தனையையும் மனத்தில் ஓட்டிப்பார்த்தான்.

                ஏதும் செய்துவிடுவாள்.. தன்னைப்போலப் பூச்சாண்டி காட்டுபவள் இல்லை.

               செத்துப்போய்விடுவாளா?  நினைக்கவே கோபிக்கு மயக்கம் வருவதுபோல உணர்ந்தான். நெஞ்சு அடைத்தது. மூச்சு விடமுடியவில்லை. சட்டென்று ஒரு கணம் யாரோ சாட்டையால் அடித்ததுபோல உணர்ந்து எழுந்தான். வீட்டிற்கு அவசரமாகப் போனான். உள்ளே எட்டிப் பார்த்தான் கௌரி சமைத்துக்கொண்டிருந்தாள்.

              இவன் எட்டிப்பார்த்ததை உணர்ந்தவள்போலப் பேசினான். சப்பாத்தியும் கொண்டக்கடலை குருமாவும் வச்சிருக்கேன்.. சூடா இருக்கு சாப்பிடுங்க.. என்றாள் தன்னிச்சையாக.

               சாப்பிட்டார்கள்.

               இரவு சொன்னான் தீர்க்கமாக.. கௌரி அப்படிஎல்லாம் பேசாதே.. நான்கூடப் பூச்சாண்டி காட்டுவேன். நீ அப்படி இல்ல. ஏடாகூடமா எதாச்சும் செஞ்சுடாதடி.. என்னால வாழமுடியாதுடி… சண்டை போடறத்தான்.. இனிமே உயிருள்ளவரைக்கும் போடமாட்டேன்.. இது சத்தியம்.. நீ போய்ட்டா நான ஒரு நிமிஷம்கூட இருக்கமாட்டேண்டி.. இது பூச்சாண்டி இல்லடி.. எதாச்சும் தின்னுட்டுச் செத்துப்போயிடுவேண்டி..

             இப்ப எதுக்குப் புலம்பறீங்க.. இன்னிக்கு நேத்தா சண்டை நடக்குது.. என்ன இப்படி பண்ணறீங்களேன்னு வருத்தமா இருக்கும். அது கொஞ்சநேரம்.. அவ்வளவுதான்.. அதுக்காக உங்கள விட்டுட்டுப்போகமாட்டேன்.. நான் இல்லாம நீங்க எண்ண பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியுங்க.. அப்படி எல்லாம் தவிக்க விடமாடேன்.. நீங்கப் போயிட்டா அப்படி மனசுல தோனிச்சின்னா அந்த நிமிஷமே எங்கதையை முடிச்சிக்குவேன்.. 
      

Thursday, July 23, 2020




குறுங்கதை 14

                             ஒழுக்கம்

                                                                ஹரணி

            அந்தக் கோயிலைச் சுற்றித் தெருக்கள் அகண்டு கிடந்தன. ஒன்று நீண்ட சாலை அதன் ஓரங்களுக்குள் தெருக்கள் செருகிக்கிடந்தன. கோயிலின் இடப்பக்கம் இந்த சாலை. வலப்பக்கம் கடைத்தெரு. பின்பக்கம் கடைத்தெரு. முன்பக்கம் பேருந்துசாலை இவற்றைத்தான் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தான் கோபால்.

             எதேச்கையாகக் கடைத்தெருவிற்கு வந்த கண்ணன் கோபால் கோயில் வெளியே சுற்றுவதைக் கண்டான்.

             என்ன கோபால் இது? என்றான்.

             இரு நாலு சுத்து முடிச்சிட்டேன். இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு முடிச்சிடறேன். அதுக்குள்ள  நீ வாங்கறத வாங்கிட்டு வந்துடு.

             இருவரும் அப்படியே கோயிலின் பின்புறத் தெருவின் பூட்டிக்கிடந்த கடையொன்றின் கட்டையில் உட்கார்ந்தார்கள்.

              ஏன் கோயிலுக்குள்ள போகமுடியலியா கோபால்?

              போகலாம். கொரோனாவால உள்ள வரக்கூடாதுன்னு ஐயர் சொல்லிட்டாரு. தினமும் காலையில கோயிலுக்கு வந்து பழகிட்டேன்.

             அதுக்காக வெளிப்பிரகாரம் இருந்தா சுத்தலாம். இப்படிக் கடைத்தெருவை சுத்தினா சிரமமா இல்ல.

              சிரமமாத்தான் இருக்கு.

              அப்புறம் ஒரு சுத்து சுத்துனா போதாதா?

              இல்ல அஞ்சு சுத்து பழகிட்டேன்.

              அதுக்குன்னு ரொம்பப் பக்திதாண்டா.

               கோபால் சிரித்தபடியே இல்லடா.. சுத்தணும் அவ்வளவுதான்.

              என்ன சொல்றே? கோயிலுக்குத் தினமும் வர்றே பக்தி இல்லன்னு சொல்றேன்.

              ஆமாண்டா..அப்படிப் பழகிட்டேன். கடவுள் பிடிக்கும். ஆனால் அதன்பேர்ல செய்யற எல்லாத்தையும் என்னால ஏத்துக்கமுடியல..

            என்ன சொல்றே?

                சின்ன வயசுல அப்ப ஆறாவது படிச்சிக்கிட்டிருந்தேன். எங்கம்மா வெள்ளிக்கிழமை ஆனாப்போதும் உஜ்ஜயினி காளி கோயிலுக்கு அழச்சிட்டுப்போவாங்க.. சுத்திலும் பெண்கள் உட்கார்ந்திருப்பாங்க. எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக்கொடுத்திருந்தாங்க.. அயிகிரி நந்தினி.. 20 பாட்டுங்க.. படிக்கணும்.. இன்னிவரைக்கும் மறக்காம இருக்கு. இத்தனைக்கு எங்கம்மா கைநாட்டு படிக்கத்தெரியாது.. இப்படி வற்புறுத்தல்லதான் சாமி கும்பிடற பழக்கம் வந்துச்சி.. இன்னி வரைக்கும் தொடருது..

               வற்புறுத்தல்னு சொல்றே அப்புறம் எப்படி ஆறாவதுல தொடங்குனது இன்னிவரைக்கும் தொடருது..

              அது பயிற்சி. ஒண்ணுக்குப் பழகிப்போயிடறது. எனக்கும் அப்படியே பழகிப்போச்சு.

              செய்யாம இருந்தா என்னமோ போல இருக்கும்.

              அதான் கடவுள் செயல் கோபால்.

              இருக்கலாம். ஆனா நான் படிச்சமாதிரி யாருமில்லாம இருக்கற தருணங்களில் கடவுள் வந்து ஏதும் கேட்டு வரங்கொடுத்த அனுபவமே இல்லையே..

               அப்போ கடவுள் இல்லைங்கறியா?

               இல்லை. அவரைப் பார்க்கலேன்னு சொல்றேன்.

               என்னடா குழப்புறே கோபால்.

               குழப்பமே இல்லை. தெளிவா இருக்கேன். அவ்வளவுதான்.

               காலையில எழுந்து பல் விளக்கறதுங்கறது ஒரு பயிற்சி. விடமுடியாது. குளிக்கறதுங்கறது ஒரு பயிற்சி. டிபன் பயிற்சி. அதுபோல ஏழு மணியிலேர்ந்து எட்டு மணிவரை ஏதாவது ஒரு கோயில் சுத்தறது பயிற்சி. ஒரு ஒழுங்கு. அதுவே ஒழுக்கமாயிடிச்சி. ஏன்னு காரணம் சொல்லமுடியாது. என்னால விடவும் முடியாது.

              எனக்குப் புரியலடா கோபால்.

              இதுல புரியாமப் போறதுக்கு என்ன இருக்கு? வாக்கிங் போறமாதிரி கோயில் போறது சாமி கும்பிடறது எல்லாமும் எனக்குள்ள ஒரு பயிற்சியா இருக்கு. இது என்னோட அம்மா ஏற்படுத்துனது.. அம்மா இப்போ செத்துப்போயிட்டா.. அவ சொல்லிக்குடுத்த எதுவும் செத்துப்போகல.. சிம்பிள்..

                   அம்மாவுக்காகப் பக்திய தொடர்ந்து செய்யறே?

                   இல்லை. அம்மாமேல பக்தியால தொடர்ந்து செய்யறேன்.

                   என்னோட அம்மாவுக்காக இது. என்னோட மனைவிக்காக வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு எலுமிச்சை விளக்குப் போடறேன். அவதான் வேண்டிக்கிட்டுப் போடஆரம்பிச்சா.. அவளால முடியல. ராகுகாலத்துல போடணும். என்னப்போடுங்கன்னு சொன்னா செய்யறேன். சனி ஞாயிறு எதுவும் அசைவம் சாப்பிடமாடேன். என் பிள்ளைக்காக சனிக்கிழமை வெங்கடாசலபதிக்கு வேண்டிக்கிட்டாங்களாம் என்னோட மாமியார்.. ஞாயிற்றுக்கிழமை என்னோட பொண்ணுக்காக வேண்டிக்கிட்டது என்னோட அக்கா.. அதனால்.

                 வித்தியாசமா இருக்குடா உன்னோட பக்தி. நீ எதுவும் வேண்டிக்கமாட்டியா?

                 எப்பவும் வேண்டினது இல்ல. எதுவும் வேண்டாம அப்படியே சுத்துவேன். ஆனா சுத்தும்போது என்னன்ன செய்யவேண்டியிருக்கு நம்மோட குடும்பம் பத்தி.. பிள்ளைங்க பத்தின்னு யோசிச்சுக்கிட்டே சுத்துவேன். புது ஐடியா கிடைச்சிருக்கு.

                 திரும்பவும் சொல்றேன்…இது ‘ஒரு ஒழுங்கு. மனசையும் உடம்பையும் ஒழுங்குல வச்சிக்கப் பயிற்சி செய்யறமாதிரி.. யோகா செய்யறமாதிரி.. இதுவும். அவ்வளவுதான். நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதுல மனைவி பிள்ளைகள்னு உறவுகள் இருக்கு.. இது எல்லாமும் பின்னிப்பிணைந்து ஒரு வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. ஓடுற வாழ்க்கையில உள்ள இருக்கறவங்க ஆளுக்கொரு திசையில இயங்கறாங்க.. அவ்வளவுதான். இது வாழ்க்கை சக்கரம்.

                  சரி வா டீ சாப்பிடலாம்.

                  வேண்டாம். நான் கோயிலுக்கு வர்றப்ப எதுவும் சாப்பிடமாட்டேன். அதேபோல கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்குத்தான் போகணும்.. வேற எங்கயும் போகக்கூடாது. இது என் அம்மா சொன்னது. பார்ப்போம் என்றபடி எழுந்து போனான் கோபால்.

                        000000