Wednesday, May 14, 2014

மனம் திறந்து,,,



அன்புள்ள.


                    ஹரணி வணக்கமுடன்.

                   படைப்புலகில் இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு எந்த ஒன்றையும் தள்ளிப் போட்டதில்லை. எதைத் தொடங்கினாலும் அதனைக் குறித்த காலத்தில் முடித்தே பழக்கம். இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக இது சாத்தியமற்றிருக்கிறது. ஒரு போராட்டம் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

                         இதை எழுதுவதற்குக் காரணம் நிறைய பதிவிடவேண்டும் தரமாகப் பதிவிடவேண்டும் புதுமையாகப் பதிவிடவேண்டும் என்று முடிவு செய்து அதற்கெனக் குறிப்புக்களை எழுதி வைத்தும் தொடர்ந்து வெளியிட
முடியாமல் போகிறது.

                         கடந்த ஒரு மாதமாக கணிப்பொறியின் பழுது,

                         அதற்கு நேரம் ஒதுக்கமுடியாமை.

                        மேலும் தற்போது மே. சூன் ஆகிய இருமாதங்கள் கோடை விடுமுறை என்றாலும் அதற்குள் நிரம்பி வழியும் பணிகளின் இறுக்கம்.

                         ஐந்து புத்தங்களை எழுதித்தர கட்டாயம், அலுவலகச் சூழல்.

                         சில முக்கியமான கல்விசார் கூட்டங்கள்.

                         இந்த இரு மாதங்களில்தான் எல்லா இதழ்களுக்கும் கட்டுரை. கவிதை. சிறுகதைகளை நிரப்பும் தேவையும் உள்ளது.

                          இருப்பினும் இதையும் மீறி வலைப்பக்கத்தில் எழுதவேண்டும என்பது நெருப்பாக இருக்கிறது.

                           இதன் மூலம் நான் வேண்டுவது, எப்படியும் விட்டுவிட்டாவது பதிவுகளை இடுவது என்பது உறுதியானது. எனவே என் வலைப்பக்கம் வந்து கருத்துரை வழங்கும் சகோதர சகோதரிகள் எப்போதும் போல இதனைப் பொறுத்து வந்து பார்வையிடவேண்டும் என்பதுதான், படைப்பின் மகிழ்வையும் அதற்கிணையாக உங்களின் கருத்துரையும் என்னை மேலும் தொடர்ந்து இயங்க வைக்கும்.

                               நன்றிகள் பல.

                              அன்புடன் ஹரணி.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


                  இம்மாத இரு மகிழ்ச்சியான செய்திகள்.


                   1. என் நத்தையோட்டுத் தண்ணீர் கட்டுரைத் தொகுப்பிற்கு முதல்பரிசு
                       சேலம் அருணாச்சலம் அறக்கட்டளை வழங்குகிறது. பரிசு
                       ரூ. 10000 - விழா இம்மாதம் மூன்றாம் வாரத்தில்.

                   2, என்னுடைய சிறுகதை புத்தகம்  செல்லாத நோட்டு - கரூர் சிகரம்
                       இதழின் சார்பில் முதல்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 11.5.2014
                       அன்று சான்றிதழ். கேடயம். பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்பட்டது,


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



                                        ஒரு சிறுகவிதை


                                        காலத்தின் கட்டாயத்தில்
                                        தானுதிர்க்கும் சருகுகளிடம்
                                        வழியனுப்பலின் அழுகையை
                                        மரம் மௌனமாய் சொல்ல
                                        அதை சங்கீதமாக்குகிறது
                                        காற்று
                                        அடுத்தவரின் துயரில்
                                        ஆறுதலைச் சங்கீதமாக்கும்
                                        காற்று அருவமற்றிருக்கிறது
                                        என்பதை உலகிற்குச் சொல்ல
                                        சருகுகள் அதை
                                        ஆமோதிக்கின்றன
                                   
                                         00000000000000

                                         சந்திக்கலாம்.                ஹரணி.