Saturday, June 27, 2020

என்னமோ நடக்குது.... அத்தியாயம் 5




                       கோபி மனதுடைந்து போயிருந்தான். அமெரிக்காவில் படித்தாலும் அவன் இந்திய குணாதிசயங்களுடன்தான் இருந்தான். அவனையும் நிறையபேர் அணுகியிருந்தார்கள். அவன் யாரையும் தேர்வு செய்யவில்லை. அன்பாக மறுத்திருந்தான்.
                        மன்னிததுவிடுங்கள். எனக்குக் காதல் பிடிக்காது. காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. எனக்குப் பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்தான் மனைவியாக வரவேண்டும். என்னை நம்பிக்கையோடு வளர்த்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நான் மண்ணள்ளிப் புதைக்கமாட்டேன். பெற்றெடுத்தது முதல் இன்றுவரை பார்த்துப் பார்த்து எல்லாமும் செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் என் வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று. காதல் மேல் நம்பிக்கையுள்ளவர்கள் விரும்புகிறவர்கள் இவர்களை அணுகுங்கள்.. நான் பொருத்தமானவன் இல்லை. பழமைவாதி என்று முத்திரை குத்தலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.  அவர்கள் இல்லையென்றால் எனக்கு இந்த அமெரிக்க வாழ்க்கை இல்லை.  நவீனமாக வந்துவிட்டால் எல்லாமும் மாறிவிடுமா? என்னுடைய நண்பர்கள் பலர் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் வாழ்வதுபோல நடிக்கிறார்கள். என்னுடைய உறவுப்பெண் ஒருத்தி கல்யாணத்திற்கு முதல்நாள் வரை மறைத்து வைத்து மறுநாள் அவளுக்குப் பிடித்தமானவனுடன் ஓடிப்போய்விட்டாள். அவளுடைய தந்தை மனம் வெடித்துச் சிதறிப்போனார். ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என்று பதறினார். மாப்பிள்ளை பார்த்தபோது, பெண் பார்க்க வந்தபோது, நிச்சயம் நடந்தபோது, பத்திரிக்கை அடித்தபோது, எல்லோருக்கும் விநியோகம் செய்தபோது, முதல்நாளில்  ஏன் இப்படி செய்தாள் என்று அப்படியே நொந்து அவமானப்பட்டு இறந்துபோனார். இப்போது அந்தப்பெண்ணுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவன் சொல்கிறான் அப்பா  தினமும் மாமா ஒருத்தர் வீட்டுக்கு வர்றாறு.. அம்மா எனக்கு எதுவுமே தரமாட்டேங்குது.. சாப்பிட.. ஆகவே எனக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கைஇல்லை. ஆயிரம் விவேகம் புரட்சிப் பேசலாம்.. எனக்கு வேண்டாம். எனக்கு என் அப்பாவும் அம்மாவும் மிக முக்கியம்.. ஆகவே அவர்கள் பார்க்கிற பெண்தான் இந்த ஜென்மத்தில் மனைவி...
                  ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
                 இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்கும் நடக்காத அதிசயம்.
                 பெண் பார்க்கப்போன பெண் கொலைசெய்யப்படுவாளா?
                  யாருக்கும் நேரக்கூடாது.
                  பெண்ணைப் பெற்றவருக்கு எப்படி இருக்கும்?
                  ஒரு பெண்ணுக்கு எவ்வளவுதான் நேரும் சங்கடங்கள்?
                   எம் பொண்ணுக்கு இத்தனை வயசாகுது இன்னமும வயதுக்கு வரவில்லை... டாக்டருகிட்ட  ட்ரீட்மெண்ட் நடக்குது சார்..
                   இல்ல சார்.. கொஞ்சம் மனவளர்ச்சி இல்ல சார்.. பிறந்ததுலேர்ந்து இப்படித்தான்.. எத்தனை காலத்துக்கு இப்படி படப்போறோமோ.. நாங்க போயிட்ட அவ கதி.. யார் கிட்ட ஒப்படைக்கமுடியும்?  நாங்க ஒரு முடிவு எடுத்து வச்சிருக்கோம்...
                     நல்லாத்தான் படிக்கிருக்கா.. கேம்பஸ்ல கெடக்கலே... சார்..
                     கேம்பஸ்ல கெடச்சு வேல பாக்கறா சார்.. மாசம் சுளையா எம்பதாயிரம் சம்பளம் சார்.. நாக தோஷங்கறாங்க.. மாங்கல்யத் தோஷங்கறா.. ஒரு வரன் அமைய மாட்டேங்குது.. வயசு வேற ஏறிக்கிட்டே போவுது எங்க கவலையபோல..
                      கல்யாணம் பண்ணிக்கொடுத்த விதவிதமா பிரச்சினை..
                      கல்யாணம் பண்ணி எல்லாமும் நல்லா அமைஞ்சவங்க எத்தனை விழுக்காடுன்னு கணக்கு எடுக்கணும் சார்..
                      ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும்.. எம் பொண்ணுகூட ரொம்பக் கஷ்டப்பட்டா மாமியார் கொடுமை.. இப்ப சரியாயிடிச்சு.. சார்..
                      இதுமாதிரி சொல்றதுக்கு இல்லாம பெண் அதுவும் நல்ல குடும்பத்துப் பெண்ண கொலை செய்யற அளவுக்கு என்ன பிரச்சினையா இருக்கும்?
                      கோவி காயத்ரி குடும்பத் நினைச்சுக் கலங்கினான்.கூடவே தன் முதல் பெண் பார்க்கும் படலம் இப்படி திடுக்கிடும் சம்பவமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை..

                     காயத்ரி அப்பா எம்பொண்ணு அப்படி இல்ல தம்பி.. அத்தனை திறமைசாலி.. அவ உண்டு அவ வேலையுண்டுன்னு இருப்பா.. அவளுக்கு எதிரிங்களே கெடயாது.. சாது.. புள்ளப்பூச்சி... தம்பி நீங்க மாப்பிள்ளையா வர எனக்குக் கொடுத்து வைக்கலே.. எம் பொண்ணுக்கும் கொடுத்து வைக்கலே.. ஆனா இத சும்மா விடமாட்டேன்.. எவனோ சினிமாக்காரன் கொன்னுட்டான்னு கேஸ முடிக்கப் பாக்கறாங்க.. நான் டெல்லி வரைக்கும் போவேன்..  எனக்குத் தம்பி முறை ஒருத்தன் டில்லியில இருக்கான்.. பெரிய பதவி.. அவனுக்குப் போன் பண்ணி சொல்லிட்டேன்.. அடுத்த வாரத்துல வரேன்.. நான் வந்து பார்த்துக்கறேன்னுட்டு சொல்லியிருக்கான்.. தம்பி..
                         கோபிக்கும் இதில் அக்கறையும் கவலையும் வந்தது.
                         காயத்ரி கொல்லப்படுவதற்குக் காரணம் யாராக இருக்கும்?
                         எப்படியும் கண்டுபிடிப்பதில் தன்னுடைய பங்கும் இருக்கவேண்டும என்று நினைத்தான். அவனுடைய நண்பன் வளவன் நினைவுக்கு வந்தான். கோபியைப் போல நன்றாகப் படிப்பவன். ஆனால் இன்னும் வேலை கிடைக்காமல் இருக்கிறான்.. எதையும் புத்திசாலித்தனமாக யோசிப்பான். எல்லோரும் ஒரு வழியை யோசித்தால் அவன் வேறு வழியை யோசித்து சொல்வான். அது வித்தியாசமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கவும் செய்யும்.  அவனைப் பார்த்தே வெகு ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது எப்படி இருப்பான் என்று தெரியாது. ஆனால் அவன் வீடு தெரியும். போய் பார்க்கலாம்..
                         வளவன் இருக்கும் தெருவிற்கு வந்தான். வீடு பூட்டிக் கிடந்தது.
                         பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் வந்தார். யார தம்பி தேடறீங்க?
                         வளவன்னு என்னோடு படிச்சாரு...
                         அவங்களா தம்பி.. வீட்டை க் காலி பண்ணிட்டு போயிட்டாங்களே...
                        சட்டென்று மூடு அவுட்டானான் கோபி.
                        அப்படியா?
                        எதிர் புறத்திலிருந்து ஒருவன் வந்தான்... சார்.. வளவன்  வீடு மாறினது எனக்குத் தெரியும் சார்? என்றான்.
                        சொல்லுங்களேன்.
                         நம்ப புது பஸ்டாண்ட் இருக்குதுல்ல..
                         ஆமாம்..
                          அங்கே ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு சார்.. அதுக்குப் பக்கத்துல காத்தபெருமாள் தெருன்னு பேரு சார்.. அந்தத் தெருதான்.. அவங்க அப்பா ஆசாரி.. அம்மா சித்தாள் வேலை பாக்கறாங்க..
                             ரொம்பத் தேங்க்ஸ்  என்றபடி புதிய பேருந்துநிலையம் வந்து குறிப்பிட்ட தெருவிற்குப் போனான்..
                              வளவன் வீட்டில் இல்லை. அவன் பெற்றோர் இருந்தார்கள்.
                              விவரம் சொன்னான்.
                              இருங்க தம்பி.. அவனோட படிச்சவங்களா.. இப்ப வந்துடுவான்.. கொஞ்சம்புத்தி மதி சொல்லுங்க.. காலா காலத்துல ஒரு வேலைக்குப் போவச்சொல்லுங்க..
                             எங்க போயிருக்கான் இப்போ?
                             என்னமோ கண்டுபிடிக்கறானாம்.. போலிஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கான்.. வயித்துல புளிய கரச்சிட்டு உக்காந்திருக்கோம் தம்பி என்றார்கள்.
                              போலிஸ் ஸ்டேஷனுக்கா.. வளவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

                                                                                   (இன்னும் நடக்கும்)

Friday, June 26, 2020


அன்புள்ள

              ஹரணி வணக்கமுடன்.

              என் மடிக்கணினி பழுது. இனி பயன்படுத்த முடியாது.

              ஆகவே புதிது வாங்க  ஒரு வாரமாகும்.

              அன்புக்கூர்ந்து பொறுத்துக்கொள்க.

              நன்றி வணக்கம்.

              அன்புடன் 
              ஹரணி 

Thursday, June 18, 2020


என்னமோ நடக்குது… குறுந்தொடர்… அத்தியாயம் 4

            அழகான வடிவமைப்பில் வண்ணப்பெட்டி ஒன்றைக் குப்புறக் கவிழ்த்ததுபோல் இருந்தது அந்த தனியார் மருத்துவமனை. நாலைந்து ஆங்கிலஎழுத்துகள் இடையிடையே புள்ளிகள் பெற்றிருக்க குரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ் என்று பெயரிட்டு மயில் தொண்டைவரையிலான உருவத்தின் வரைகோடாய் அந்த மருத்துவமனையில் சின்னமும் அமைந்திருந்தது. அந்த மருத்துவமனையின் உரிமையாளர் குடும்பத்தில் யாருக்கோ மயில் பிடித்திருக்கிறது. அதற்காக மயில்போன்ற குணமுடையவர்கள் என்று கணித்துவிடமுடியாது.

            ஐந்து மாடிகளும் ஒரு மொட்டைமாடியும் அந்த மொட்டை மாடியில் தனியார் நிறுவன செல்போன் டவரும் உயர்ந்திருக்கும் மருத்துவமனை அது. உரிமையாளர் ஒரு டாக்டர். அவர் மகனும் மருமகளும் டாக்டர்கள். அவர்களுக்கென்று ஆளுக்கொரு மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் உள்ளன. இதுதான் தலைமை மருத்துவமனை. மற்றவை இதன்கிளைகள். இங்கு அனுமதிபோட்டு அங்கே மருத்துவமும் அறுவையும் செய்வார்கள். கிளைகளில் அனுமதி போட்டு இங்கு வசதிக் குறைவு தலைமை மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும் என்று ஒரு மருத்துவக்கதையை ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசி அனுப்புவார்கள்.

                இத்தகைய மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் உள்ள 303 ஆம் எண் அறையில் படுத்திருக்கிறார். இல்லை படுக்க வைத்திருக்கிறார்கள் கோபாலகிருஷ்ணனை. சாலையில் போய்க்கொண்டிருந்தவர் திடீரென சாலையோரத்தில் மயங்கி விழுந்தார். உடன் உதடுகள் கோணி வலதுகை இழுத்தது. உடன் செய்திகள் செல்போனில் பறந்து இங்கே கொண்டுவந்தார்கள்.

                 கொண்டு வந்து சேர்த்தவன் லோகு என்கிற லோகநாதன். அவன் தந்தையார்தான் கோபாலகிருஷ்ணன்.

               மூன்றாம் தளத்தின் அறைக்கு வெளியே வராண்டாவில் உட்கார்ந்திருக்கிறான் லோகு. அவனோடு சில உறவுகள்.

              எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆவுது? அவர் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சாரு.. இப்படிக் கெடக்கறாரு.லோகுவின் அம்மா சாவித்திரி அழுதுகொண்டிருந்தாள்.

                சர்க்கரை அதிகமாகிவிட்டது.கூடவே இரத்த அழுத்தமும். கொண்டுவந்ததிலிருந்து மயக்கத்திலிருக்கிறார். லேசாக கோமா தாக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் சொல்லி  பயமுறுத்தியிருக்கிறார். எப்படியும் நாலைந்து மணிநேரங்கள் கடக்கவேண்டும் என்கிறார்கள். இவர்கள் அழுதபடியே காத்திருக்கி‘றார்கள். எதிர்பாராமல் தலையில் கல்விழுந்ததுபோல லோகு கவிழ்ந்துகிடக்கிறான்.

                தம்பி லோகு ஏதாச்சும் சாப்பிடுப்பா.. அப்பாவுக்குச் சரியாயிடும். சுகர் லெவல் குறைஞ்சா எழுந்திரிச்சு உக்காந்துடுவார்..

                 எனக்கு வேணாம் சித்தி எதுவும்? அப்பா எழுந்து வரணும்..

                கண்டிப்பா அவருக்கு ஒண்ணும் ஆகாது.. அதுக்காக நேத்துலேர்ந்து நீ வெறும் வயிறா இருக்கக்கூடாது.. ஏதாச்சும் சாப்பிடு.. வெறும் வயித்துல ஆசுபத்திரியில இருக்கக்கூடாது.. ஏதாச்சும் கோளாறு ஆயிடும்..

            வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்தார்கள்.குடித்தான்.

             இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கின்றன. லோகு கல்யாணத்திற்கு. எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது லோகு அப்பா மருத்துவமனையில் மயக்கமாய்..

            பெண்ணின் அப்பா வந்திருந்தார் மருத்துவமனைக்கு.

           தம்பி.. இந்த நேரத்துல கேக்கறேன்னு தப்பா நெனக்காதீங்க. நல்ல காரியம் தள்ளிப்போடக்கூடாது. நாம நிச்சயித்த நாள்ல திருமணத்த முடிச்சுடலாம்..

            மன்னிச்சுக்கங்க அங்கிள்.. எங்கப்பா வராம நான் தாலி கட்டமாட்டேன். இது அவரோட கனவு.. அவர் நினைச்சபடிதான் நடக்கணும் இந்தக் கல்யாணம். அவர் எப்ப எழுந்து வர்றாரோ அப்பத்தான் என் கல்யாணம்.. என்ன வற்புறுத்தாதீங்க.. அப்படின்னா இந்தக் கல்யாணத்த நிறுத்திடலாம்.. எங்கப்பாவிட எதுவும் முக்கியமில்ல.. லோகு தெளிவாக அதேசமயம் வருத்தமுடன் பேசினான்.

              என்ன லோகு இப்படிப் பேசறே? நல்ல காரியத்த நடத்திடலாம். அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது..

              வேணாம் சித்தப்பா.. எங்கப்பா வந்தாதான் எனக்குக் கல்யாணம் இல்லாட்டி எனக்கு எதுவும் வேணாம்.

            பிடிவாதம் பிடிக்காதே… கல்யாணம் நின்னுட்டா.. கல்யாணப் பொண்ண தப்பா பேசுவாங்க.. அவ வந்த நேரம்னு..

             அப்ப அதுக்காக எங்கப்பா இல்லாம கல்யாணம் பண்ணப் பாக்கறீங்களா?

            இல்ல லோகு…

            சித்தப்பா.. எங்கப்பா.. உங்க அண்ணன் பத்தி உங்களுக்குத் தெரியும்.. தயவுசெஞ்சு கட்டாயப்படுத்தாதீங்க.. அப்பா இல்லாம அவர் வாழ்த்தாம எந்த ஒரு வாழ்க்கையும் எனக்கு வேணாம்..
             மருத்துவர் வந்து சொன்னார்..

            சாரி.. உங்கப்பா கோமாவுக்குப்போயிட்டார்.. நாங்களுக்கும் முயற்சிப் பண்ணறோம்.. கொஞ்சம் நாளாகும்.. ஏன் நாளைக்கே எழுந்து வரலாம்.. தொடர்ந்து சிகிச்சை நடந்தாதான் இது சாத்தியம்..

            வேறு வழியில்லை.. விதியின் திட்டமிட்ட செயல்.

           உட்கார்ந்து புலம்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் லோகுவிடம்..

           லோகு உங்கப்பா போன்ல யார்கிட்டயே பேசியிருக்காரு.. அதுக்கப்புறம்தான் கீழே விழுந்திருக்காரு.. அங்கே பக்கத்துலேயே செல்போன் கெடந்துச்சி.. அப்பாக்கிட்ட பேசினவரு குரல் செல்போன்ல ரெக்கார்ட் ஆகியிருக்கு.. அப்பா எந்த காலையும் ரெக்கார்ட் பண்ணித்தானே பேசுவாரு..

             கொடுங்க மாமா.. என்று தாவி வாங்கினான் லோகு.

            செல்போனில் ரெக்கார்ட் ஆகியிருந்ததைக் கேட்டார்கள்.

            டேய் கோபாலகிருஷ்ணா ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டீயா? உனக்கு அறிவில்லியா? எத்தன தடவ சொல்றது.. உம் பையனோட கல்யாணத்த நிறுத்து.. கல்யாணப்பொண்ணு எனக்குச் சொந்தம்..

             நான் நிறுத்தமுடியாது.. உன்னால ஆனதப் பாத்துக்கோ..

            சரி.. நல்லா போய் உம் பையன தாலிக்கட்டச்சொல்லு.. அட்சதைப் போடற ஒவ்வொருத்தர் கையிலும் நான் போட்டோவ கொடுத்துடறேன்.. கல்யாணப்பொண்ணோட காதல் லீலைகள் போட்டோவை.. எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்து பாத்துட்டு ஆசிர்வாசம் பண்ணட்டும்..

             அடப்பாவி.. அய்யோ…

            அப்புறம்தான் கோபாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தது.

            லோகு.. டேய் யாருடா நீ? என்று மருத்துவமனை வளாகத்தில் கத்திவிட எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

              ஒரு நர்சு ஓடிவந்தாள்.. என்ன சார் இது ஹாஸ்பிட்டல்… கத்தக்கூடாது. பேஷண்ட்ஸ்ங்க டிஸ்டர்ப் ஆகியிடுவாங்க.. டாக்டரு சத்தம்போடுவாங்க.. அமைதியா இருங்க சார்..

             யாராக இருக்கும் என்று லோகு யோசிக்க ஆரம்பித்தான். மனதுக்குள் கோபி வந்து நின்றான். கோபி… என்று பல்லைக்கடித்தான் லோகு.
                                                       (இன்னும் நடக்கும்)

      
           

         

Monday, June 15, 2020


என்னமோ நடக்குது…
                          குறுந்தொடர்  - அத்தியாயம் 3

முன்னிரு அத்தியாயச் சுருக்கம்
              ராகவன் என்பவர் தன் மகனுக்குப் பெண் பார்க்கப்போன இடத்தில் அந்தப் பெண் கொலைசெய்யப்படுகிறாள். படித்த பட்டதாரியான வளவன் என்பவன் தன்னைத்தானே துப்பறிவாளன் என்று சொல்லிக்கொள்கிறான்.
இனி……
             நொந்துபோய் உட்கார்ந்திருந்தான் கதிர். எதிரே அவனுக்குப் பிடித்தமான உணவு ரவா தோசை ஆறிக்கொண்டிருந்தது. பக்கத்தில் சின்ன வெங்காயம் மிதக்கும் சாம்பாரின் மேல் முட்டை உள் ஓட்டுச் சவ்வு போலப் படலம் படர்ந்துகொண்டிருந்தது.
              ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து யார் துணையுமில்லாமல் வாழ்வது சவால்தான். அப்படியும் அவன் தன்னை எல்லோருக்கும் அறிய வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுதைகயில் அதைக் கலைத்து விளையாட ஒரு கூட்டம் எப்போதும் கண்கொத்திப் பாம்பாகவே இருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெல்லமுடியும் நம்பிக்கை வை என்று அறிவுரை மழை பொழிய ஆயிரம் பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நாக்கைத் தொங்க வைத்துக்கொண்டு.
                கரும்புக்கொல்லையும் வாழைத்தோப்பும் அகத்திகீரையும் என பச்சை செழிக்கும் கிராமத்தின்  மண்ணில் பிறந்தவன் கதிர். ஒரு பட்டப்படிப்பு மட்டுமே அவனால் படிக்கமுடிந்தது. இளம் அறிவியல் வேதியியல் சிறப்புநிலையில் படித்திருந்தான். அதற்குமேல் படிப்பதற்கு விதி அனுமதிக்கவில்லை. ஆனால் ஏராளமான அறிவையும் அதை சமயோசிதமாகப் பயன்படுத்தும திறனையும் ஆண்டவன் அவனுக்கு அள்ளிக்கொடுத்திருந்தான்.
                 எப்படி முளைவிட்டது அந்த ஆசை அவனுக்குள் என்று தெரியாது. சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தான். அப்படியே புறப்பட்டு சென்னைக்கு வந்துவிட்டான். இரண்டு பெரிய இயக்குநர்களைப் படாதபாடு சந்தித்து ஒரு கதையை இரண்டு விதமாகச் சொன்னான். அவர்கள் முகத்தில் சரவிளக்குகள் பளிச்சென்று எரிவதைக் கண்டு இவன் கனவுலகத்தில் மிதந்தான்.
                  யேய்… தம்பி.. என்ன பெயர் சொன்னே? கதிரா? உண்மையிலே நீ சூரியக் கதிர்தாண்டா.. இத்தனை நாளா எங்கடா இருந்தே.. இதுவரைக்கும் இப்படியொரு கதையை எவனும் சொல்லிக் கேக்கலடா.. கேட்ட முதல் கதையிலே நெஞ்சுல ஓங்கி அறைஞ்சுட்டே.. இதைப் படமா எடுத்தா கோடிக்கோடியா பணம் கொட்டும்டா.. உன்ன என்ன லெவல்ல வைக்கிறேன் பாரு…
                 இரண்டு இயக்குநர்களும் யாருமறியாவண்ணம் சூழ்ச்சியாய் பொய்யைக் கரைத்து வெண்ணெய்யாய் கதிரின் நெஞ்சில் கரைத்தார்கள்.
                 அவர்கள் வாங்கிக்கொடுத்த அல்வாவும் ரவாதோசையும் இவனுள் அழுத்தமான நம்பிக்கையைத் தந்தது.
                 முடிந்தது.
                அதற்குப் பின் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. நொந்துபோனான் கதிர்.
                அவர்கள் இயக்கத்தில் புதுப்படம்  வந்தபோது கதிர் தியேட்டருக்குப் போனான். போனவன்  இதயம் வெடித்ததுபோல உணர்ந்தான். அந்தப் படம் இவன் சொன்ன கதை..
               ஆத்திரம் அடங்காமல் கையில் இருந்த மிச்சக்காசை ஆட்டோவுக்குத் தந்து போனான்..
               அந்த ஸ்டுடியோ வாசலில் தாக்கப்பட்டான் கதிர். முகம், கைகால் சிராய்ப்புகளுடன்  திரும்பி வந்து.. எங்கே செல்வது என்று தெரியாமல் சாலையோர்ப் பிளாட்பாரத்தில் எல்லாம் மறந்து தூங்கினான்.
              சென்னை வந்து பஞ்சம் பட்டினியாகக் கிடந்து ஒரு இளம் இயக்குநரிடம் எடுபிடியாக ஒரு வேலைக்குச் சேர்ந்தான். தன்னுடைய ஆசை இயக்குநராக ஆவது என்பதை மறைத்தான்.
              அதற்கான காலக் கொக்காய் காத்திருந்தான்.
             இன்றைக்கு செட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த இளம் இயக்குநர் சற்று முன்கோபக்காரன். ஒரு காட்சி எடுத்தார்கள். அது சரியாக அமையவில்லை.
              என்னதான் மறைத்துக்கொண்டாலும் இவனால் இவன் உள்ளத்தை அடக்கமுடியவில்லை.
              சார்.. நான் இந்தக் காட்சியை எப்படி எடுக்கலாம்னு சொல்லட்டுமா சார்.. என்றான்.
              நீ பெரிய புடுங்கியா? உன்னக் கேட்டனா.. மயிறு.. உன்னோட வேலைமயிறு என்னவோ அதைப்பாரு.. உன் யோசனை மயிறு எல்லாம் வேண்டாம்… போ சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி வை…
             திரும்பி வந்தான்.
             மதியம் சற்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள். இவன் ஸ்டுடியோ வாசலில் செக்யூரிட்டி அறையில் உட்கார்ந்திருந்தான். செக்யூரிட் சொன்னான்
              தம்பி கதிரு உனக்கு இதெல்லாம் தேவையா? இந்த சென்னையில பொழக்க வந்திருக்கே.. அறிவுரை சொல்லாதே.. இங்க உள்ளவனுக்கு எல்லாமும் தெரியும்னு சொல்லுவான்.. ஆனா எதுவும் தெரியாது.. கழுகு மாதிரி அடுத்தவன முழுங்கறது தெரியாம முழுங்கிப் பொழப்பான். ஆனா கௌரவம்.. தன்மானம்.. சொந்தத் திறமைம்பான்.. பொழக்கற வழிய பாரு கதிர் என்றான் அன்பாக.
          இல்லண்ணே இந்த இயக்குநர் ரொம்ப நல்லவரு.. கஷ்டப்பட்டுப் படம் எடுக்கறாரு.. நானும் சினிமா இயக்குநர் ஆவணும்னுதான் சென்னைக்கே வந்தேன்.. அவரு எடுத்தக் காட்சிய கொஞ்சம் ‘மாத்துனா போதும்.. படத்துலேயே அதுதான் பேசப்படற அளவுக்கு வ‘ரும்.. என்றான் கதிர்.
            சரி எதுக்கு இப்படி ஆதங்கப்படறே.. எங்கிட்டட அந்தக் காட்சிய சொல்லு.. நான் கேக்கறேன்..
              கதிர் ஆர்வமாகச் சொல்ல ஆரம்பித்தான்.
             எதற்கோ சிகரெட் பிடிக்க வந்த அந்த இளம் இயக்குநர் கதிர் செக்யூரிட்டியிடம் சொல்வதைக் கேட்டு முடித்தான்.
              சட்டென்று போனான்.. அந்தக் காட்சிய எடுத்துடலாம் என்றான்.
              கதிர் சொன்னதுபோலவே எடுத்தான்.
              காட்சி பிரமாதமாக வந்திருந்தது. கதிர் பார்த்துக்கொண்டிருந்தான்.
             மாலையில் அந்த இயக்குநர் கூப்பிட்டான்..
             டேய் இங்க வாடா..
             என்ன சார்? என்றபடி அருகில் போனான் கதிர்.
            அவன் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து நாளையிலேர்ந்து உனக்கு இங்க வேலை இல்ல. சொல்ற வேலய விட்டு மயிறுமாதிரி யோசனை சொல்லவருவே.. சுத்தப்படாது கௌம்பு..
             வாசலுக்கு வெளியே துரத்தாத குறைதான்.
              கதிர் வெளியே வந்தான்.
             என்ன உலகம்டா? திறமைக்கு மதிப்பே இல்லியா  வயிறு பசித்தது. கையில் பணம் இருந்தது. போய் ஒரு கையேந்திப் பவனில் போய் உட்கார்ந்து நாலு தோசை ரெண்டு ஆப் பாயில் ஒரு ஆம்லெட் என்று நிறைய சாப்பிட்டான். படுக்க இடம் தேடினான். எதிரே பிளாட்பாரம். அருகே புங்க மரம். இன்னிக்கு ராத்திரி இங்கதான்.. என்று அந்தப் பிளாட்பாரம் நோக்கிப் போனான்.
                 நள்ளிரவில் எழுப்பினார்கள். எழுந்தான்.
                போலிஸ்.. சார்..
                வாடா.. எழுந்திரு.. செய்யறவேலைய செஞ்சுட்டு பேசாமா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இங்க வந்து படுத்திருக்கே..
                நான் என்ன சார் பண்ணே?
               என்ன பண்ணியா? கொலை பண்ணிட்டு எவ்வளவு அமைதியா பேசறே.. அழுத்தமான கொலகாரன் ஏட்டு இவன்…
                 என்ன சார் சொல்றீங்க.. நான் ஸ்டுடியோவுல வேல பார்த்தவன் சார்.. என்னப் போயி..
                   என்ன வேலை பார்த்தே? டைரக்டரா? கேலியாகச் சிரித்தார்கள்.
                உண்மை சார்.. நான் டைரக்டர் ஆகத்தான் சார் கிராமத்துலேர்ந்து சென்னைக்கு வந்தேன் சார்..
                  நல்லா கதை சொல்றே?
                 எனக்கு கதை சொல்லத் தெரியும் சார்.
                கன்பார்ம்டு.. கௌம்பு.
                காவல் நிலையத்தின் உள்ளே போய் தரையில் உட்கார வைத்தார்கள்.
                 யோவ் இவன் பேர்ல காயத்ரி கொலை வழக்கு எப்ஐஆர் ரெடி பண்ணு.  சப்பை மேட்டரு.. அவளோட அப்பன் பெரிய ஆபிசர எல்லாம் பாப்பேன்னு மிரட்டிப் பாக்கறான்.. இவன்தான் கொன்னான்னு மேட்டர முடி. பேரு என்ன கதிரா. டைரக்டர் ஆசையில் சென்னை வந்த வாலிபர். பெண் மர்மக்கொலையில் தொடர்பு. கைது. பேப்பருக்கு செய்தி கொடுத்துடு. நாளைக்குக் கோர்ட்டுல புரடியூஸ் பண்ணிடலாம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா..
             வந்துடுச்சு சார்..
                                                 (இன்னும் நடக்கும்)
         

Friday, June 12, 2020

என்னமோ நடக்குது... அத்தியாயம் 2

என்னமோ நடக்குது.....

                                  (குறுந்தொடர்... அத்தியாயம் 2)


முதலின் சுருக்கம்

                ராகவன் என்பவரின் குடும்பம் அவரின் மகனுக்காகப் பெண் பார்க்கப் போகிறார்கள். அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுப் பேருந்து நிலையத்தில் கிடக்கிறாள். எல்லோரும் ஓடுகிறார்கள்.

                                           000


              மணி ஒன்பதாகியும் வளவன் எழுந்திருக்கவில்லை.  அவன் உறங்கிக்கொண்டிருக்கும் வீட்டில் இனிதான் எல்லாமும் ஆரம்பிக்கும். சொல்லி முடிப்பதற்குள் ஆரம்பித்துவிட்டது
                      அஞ்சு பைசாவுக்குப் பிரயோசனப்படாது.. எப்பப் பாரு தூக்கம் தூக்கம்.. எப்படித்தான் தூக்கம் வருதோ.. படிச்சு முடிச்சு அதது வேல வெட்டிக்குப் போய் நாலுகாசு கொண்டாந்து குடுத்து அப்பனயும் ஆயியயும்  காப்பாத்துது.. இங்க எல்லாம் தலகீழதான்.. வடிச்சுக் கொட்டியே என் வாழ்க்கை முடிஞ்சிடும்போல..
                      செல்லம் குடுத்தில்லடி.. அனுபவி.. இது உருப்படற நாயியா இருந்தா இந்நேரம் உருப்புட்ருக்காது.. எல்லாம் என் தாலிய அறுக்க வந்துருக்கு.. நல்லா மூணு வேளையும் கொட்டிக்குது.. பொழுதன்னிக்கும் செல்லு நோண்டுது.. என்னதான் இருக்குமோ.. அந்த செல்லு வெடிக்கவும் மாட்டேங்குது.. ஒரேடியா முடிச்சிடலாம்..
                       சரி வாங்க.. சாப்பிட்டு நீங்க கௌம்புங்க..
                        வளவனின் தாய் சித்தாள் வேலைக்குப் போகிறாள். தந்தை ஆசாரி.  இருவருக்கும் எப்போதாவதுதான் வேலை இருக்கு.. லாக்டவுனில் வயிற்றுப் பிழைப்பு காய்ந்துபோய் கிடக்கிறது.
                        ஆகவே வேலை கிடைக்கும்போது ஓடிவிடவேண்டும்.
                         கட்டிட வேலையில் சித்தாள்கள் அதிகம்.. ஆகவே வளவனின் அம்மாவிற்கு டோக்கன் சிஸ்டப்படி இன்னும் இரண்டுநாட்கள் கழித்துதான். ஆனால் ஆசாரிக்கு வேலை நிற்காது. வளவனின் அப்பா வளவன் தூங்கும் அறையைப் பார்த்து.. தூ.. கம்மனாட்டி.. இதுக்கு எல்லாம் ஒண்ணும் வரமாட்டேங்குது..
                           வளவன் எழுந்தபோது மணி பத்தாகிவிட்டிருந்தது.
                           அம்மா.. என்றான்.
                           என்ன அம்மா?  வந்து கொட்டிக்க எல்லா வச்சிருக்கேன் சூடா.. என் வயித்தெரிச்சலோட..
                           ஏம்மா.. நீயும் அப்பாவும் இப்படி கரிச்சுக் கொட்டறீங்க?  தினமும வேலைதேடிதான் போறேன்.. ஒண்ணும் அமைய மாட்டேங்குது.. காசு வேணும்..இல்லாட்டி நாலுபெரிய மனுஷன் சிபாரிசு வேணும்.. ஆசாரி க்கும் சித்தாளுக்கும் பொறந்தவனுக்கு யார் வருவா? உங்க ரெண்டுபேருக்கும் புரிய மாட்டேங்குது. சொன்னாலும் கேக்க மாட்டேங்குறிங்க.. ஆனா நிச்சயம் வேலை தேடிடுவேன். கிடைக்கும்.. எம் மனசுல ஆயிரம் இருக்கும்மா.. உன்னயும் அப்பாவையும் நல்லா வச்சுக்கணும்.. தினமும் வெளியே போகும்போது முக்குல உள்ள கோயில்ல வேண்டிக்கிட்டுதான் போறேன்.. என்ன பண்றது? உங்கள மாதிரியே அந்த ஆண்டவனும் என்னப் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்..
                      சொல்லியபடியே அந்த ஆறிப்போன டீயை எடுத்து வாயில் வைத்தான்.
                        கொண்டா.. அது ஆறி அவலாச்சு.. சுட வச்சுத் தரேன்..
                        சூடு பண்ணிய டீயை உறிஞ்சினான்.
                         வளவா.. இல்லாத கொடுமை கத்தறேண்டா.. ஒன்ன பத்தி தெரியும்டா.. ஏதோ ஆத்தாமை வார்த்தைய கொட்டிப்புடுறேன்.. மனசுல வச்சுக்காத.. மகமாயிய வேண்டி மஞ்சத் துணியில காசு முடிஞ்சு வச்சிருக்கேன். அது வீணாகப் போவாது..
                       குளித்து உடை மாற்றி டிபன் சாப்பிட்டுவிட்டு  வெளியே வந்தான் வளவன்.
                         தெரு முக்கு கோயிலில் ஒரு கும்பிடு போட்டான்.
                         வெள்ளாளத்தெருவைத்தாண்டும்போது யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தான். அவன் நண்பன் ஒருவன்.
                           என்னடா வளவா எங்க கிளம்பிட்டே?
                           ஒங்கயும் இல்லடா.. நான் என்ன ஆபிசுக்கா போறேன்..
                           ஒருநாள் நாம போவோம்டா..
                          அதுக்குத்தாண்டா அலையறேன்.. வீட்டுலேயும் படிச்சுட்டு இருக்கறதால பிரச்சினையா இருக்கு..
                           எங்க வீட்டுல நீ புள்ளயே இல்லங்கறாங்க என்னோட அம்மாவும் அப்பாவும் வளவா..
                           என் வீட்டுலே சொல்லுலே கிட்டத்தட்ட அப்படித்தான்.
                             இருவரும் டீக்கடைக்கு வந்து டீ சொன்னார்கள்.
                             வளவா.. பாக்கி இருக்குப்பா..
                             சாரிண்ணே.. அப்ப டீ வேண்டாம்.. என்றபடி எழுந்தான்.
                             என்னப்பா படிச்ச புள்ள பொசுக்குன்னு கோவிச்சுக்கறே.. இந்த கோவம்தான் உன்னோட நேர்மைய எனக்குச் சொல்லுது.. குறிச்சு வச்சுக்கறேன்.. டீய குடி.. வேலக்கிப் போய் மொத்தமா கொடு.. எல்லார்கிட்டயும் சொல்லி சொல்லி உன்கிட்டயும் சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காதப்பா..
                              டீ குடித்தார்கள்.
                              ஏதும் பிசுனஸ் பண்ணக்கூடாதா?
                               எந்தப் பிசினஸ்ம் பண்ணலாம். அதுக்கு கொஞ்சமாவது முதல் வேணும்..
                                முதலுக்காக ஒரு வேலைக்குப் போவணும் என்றான் வளவன்.
                                என்ன வேலை ?
                                யாருக்குத் தெரியும்? யாரு என்ன வேலை கொடுக்கறாங்களோ அதை  செய்யவேண்டியதுதான்.
                                யாரு கொடுப்பாங்க வளவன்?
                                தெரியலியே?
                                அவங்கள தேடணும்..
                                 அவங்கள எப்படித் தேடறது?
                                 நம்ப கண்ணுல வந்து படுவாங்க..
                                 இது என்னடா வளவ்ன் லாஜிக்..புரியலியே.
                                 புரியாதுடா.. இப்போதைக்கு விடு.. பார்த்துக்கலாம்.
                                அப்படியே மெல்ல நடந்தார்கள் கடைத்தெரு நோக்கி.
                                சில அடிகள் எடுத்து வைத்திருப்பாரகள். அவர்களை நோக்கி ஒருவர் வந்தார். பார்க்க நாகரிகமாக இருந்தார்.
                                 ஔவையார தெரு எங்க இருக்கு?
                                  வளவன் சொன்னான்.
                                 அங்க யார சார் பாக்கணும்? வளவன் நண்பன் கேட்டான்.
                                 ஒரு நண்பரை. ஒருவகையில அவர் என்னோட சொந்தக்காரர்.
                                  பேரு தெரியுமா?
                                   கோவிந்தராஜன்.
‘                                  ஓ அந்த ரிட்டயர்டு பார்ட்டியா.. அவரு மாடர்ன் ரை மில்லுல வேலப்பாத்து ரிட்டயர்டு ஆனவரு சரியா என்றான்.
                                   முகவரி கேட்டவர் சரிதான். அவரேதான்.
                                   வாங்க நான் வீடு காட்டறேன். வளவா வாடா போகலாம்.
                                  எனக்கு வேலை இருக்குடா?
                                   அட வாடா.. பெரிய வேலை... சாரை கொண்டு போய் விட்டுட்டு அப்படியே குறுக்கு சந்து வழியா பஸ் ஸ்டாண்ட் போயிடலாம்.
                                    கூடவே போனார்கள்.
                                     வளவனின் நண்பன் கேள்விகளை அடுக்கினான். எங்கருந்து வர்றீங்க சார்?  இங்க அடிக்கடி வந்திருக்கீங்களா?  உங்கள நான் பாத்ததில்லியே? ஏதும் பிசினஸ் விஷயமா சார்?  கோவிந்தராஜ் ரொம்ப நல்ல மனுஷன் சார்... எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டாரு சார்.. ஒரு பொண்ணு ஒரு பையன் இரண்டும் தங்கக்கட்டிங்க.. இருக்கற இட ம் தெரியாதுசார்..
                                ஏன் தம்பி இத்தன கேள்வியும் விவரமும் சொல்றீங்க.. நீங்க என்ன டிடெக்டிவா?
                                அப்படியா சார் என்றான் அப்பாவியாக.
                                டிடெடிக்டிவா..
                                வளவனுக்கு முகத்திற்குத் தெரிந்துவிட்டது. வேல கொடுக்கற ஆளு கண்ணுக்குத் தெரிஞ்சுடிச்சு...
                                 அவரை கோவிந்தராஜ் வீட்டுத் தெருவில் விட்டுவிட்டுத் திரும்புகையில் வளவன் சொன்னான்.
                                டேய் முருகா.. நமக்கு வேல கொடுக்கற ஆளு கண்ணுக்குத் தெரிஞ்சாச்சு?
                                என்னடா சொல்றே?
                                ஆமாண்டா.. இப்ப முகவரி கேட்டுப்போனாரே அவர் வேலக்கி வழி காமிச்சிட்டார்..
                                என்ன வழிடா காமிச்சார்?
                                 எனக்கான வேலைய நான் தீர்மாசிச்சுட்டேன்.. எனக்குவேல கெடச்சுடிச்சி..
                                 என்னடா சொல்றே? என்ன வேலைடா?
                                  வளவன் எம்காம்.. டிடெக்டிவ்
                                  டிடெக்டிவா?
                                  நான் இனிமே துப்பறிவாளன்.. சமூகத்தில் எந்த குற்றம் நடந்தாலும் அதைக் கண்டுபிடிக்கற வேலை.. இனி வளவன் துப்பறிவாளன்.. என்றபடி சிரித்தான்.
                                 என்னடா ஆச்சு?
                                  ஆமாண்டா இனி இந்த ஊர்லே நான் துப்பறிவாளன்.
                                  என்னடா பண்ணுவே?
                                   வா. சொல்றே... என்றபடி வளவன் அவனை ஒரு  ஜாப் டைப்பிங் சென்டருக்கு அழைத்துககொண்டுபோனான்.
                                   வாங்க என்ன வேணும்?
                                   ஒரு துண்டு பேப்பர் தாங்க..
                                    கொடுதத துண்டு சீட்டில்  வளவன். எம்காம் டிடெடிக்வ்
மகா டிடெக்டிவ் ஏஜன்சி. அதனைத் தொடர்ந்து வீட்டு முகவரி. கீ ழே செல் நம்பர். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு.. சார்.. இதை அப்படியே விசிட்டிங் கார்டு சைசுக்கு டைப் பண்ணி ஒரு இருவது காபி எடுத்துக் கொடுங்க.. சார்.. என்றான் வளவன்.
                                      அவன் வாங்கி முகவரியைப் படித்துவிட்டு வளவனைப் பார்த்து.. சார்.. உக்காருங்க.. இதோ அடிச்சு தரேன் என்றான். வளவனின் நண்பன் முருகனுக்கு ஆச்சர்யம் சாரா....அது என்னடா சாரா...
                                     அடித்துக்கொடுத்து செராக்ஸ் எடுத்துக் கொடூத்தார்.
                                      எவ்வளவு சார்?
                                        பணம் வேண்டாம் சார்.. அடிக்கடி வாங்க நம்ப கடைக்கு எது வேணாலும் செஞ்சுதரேன்.
                                      முருகனுக்கு ஆச்சர்யம் பறவைகளாயின.
                                       என்னடா வளவா?
                                        இதுதாண்டா உலகம். இதுதான் நம்ப வேலை. அதாவது என்னோட வேலை.. இனிமே பாரு...
                                        அது சரி.. வேல சம்பளம்..
                                        அது எல்லாம் தானா வரும.
                                        பேருந்து நிலையம் வந்திருந்தார்கள்.
                                         அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் வளவன் கேட்டான்..
                                            என்ன சார் கூடடம்?
                                           அங்க ஒரு பொண்ண கொன்னுப் போட்டிருக்காங்க சார்.. பாவம் சார்.. சின்ன வயசு.  நம்ப ஏரியா பொண்ணு சார்..
                                            முருகா.. என்றான் வளவன்.
                                             என்னடா வளவா?
                                             சரி வா.. நமக்கு வேலை வந்துடுச்சி...
                                             விறுவிறுவென்று போய் கூட்டத்தை விலக்கி.. ஒரு போலிஸ்காரரிடம் என்ன சார்? யார் சார் இப்படி பண்ணாங்க? என்றான்.
                                             கேள்வி கேட்ட வளவனை போலிஸ்காரர் ஒரு பார்வை பார்த்தார்.. யாரு நீ?
                                              சட்டென்று பையிலிருந்து அந்த துண்டு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினான்.
                                            வாங்கிப் பார்த்தவர்.. சட்டென்று ஒரு சல்யூட் அடித்தார்.. சாரி சார் என்றார். முருகன் ஆச்சர்ய மலையுச்சிக்குப் போனான்.
                                                                                            (இன்னும் நடக்கும்)
                             
                               


Wednesday, June 10, 2020

என்னமோ நடக்குது........குறுந்தொடர்.... ஹரணி

'
               ரபரப்பான அந்த நகரின் மத்தியில் நீண்டு கிடந்த தெருக்களில் ஒரு தெரு பாரதியார் தெரு. அந்தத் தெருவின் 15 ஆம் எண் வீட்டில் சிறு பரபரப்புக் கூடிக்கிடந்தது.
         ஏம்பா.. மணி என்னாச்சுன்னு பார்த்தீங்களா காலத்தோட போகவேண்டாமா? என்றார் ராகவன்.
என்னங்க நீங்க என்னமோ இண்டர்வியுக்குப் போறமாதிரி பறக்க அடிக்கறீங்க?
அப்பா எப்பவுமே சின்சியர் சிகாமணி. அப்பா பொறுமையாக இருங்க. நாம மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. கெத்து காமிக்கணும்.. இல்லாட்டி தலையில மொளகா அரைச்சிட்டுப்போயிடுவாங்க..பொண்ணு வீட்டுக்காரங்க..
அப்படிச் சொல்லும்மா சௌமி என்று சொன்னாள் ராகவனின் மனைவி சௌந்தர்யா.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கைப்பேசியைக் ஆள்காட்டி விரலால் குடைந்துகொண்டிருந்தான் கோபி. அவன்தான் மாப்பிள்ளை. அவனுக்குத்தான் பெண் பார்க்கப் போகிறார்கள். அமெரிக்காவில் எம்பிஏ முடித்தவன். ஒரு சிறிதும் பந்தா இல்லாதவன். படிப்பு என்பது ஒரு மனிதனைப் பண்படுத்துவது என்ற ஒழுக்கத்தைக் கற்றவன். என்னப்பா கோபி எதுவுமே பேசாமல இருக்கே? என்றார் ராகவன்.
என்னப்பா பேசறது? விடுங்க. அம்மா இப்படித்தான் எதுக்கும் அலட்டிக்க மாட்டாங்க. உங்களுக்குத் தெரியாதா? அவங்க போக்குல விடுங்க. பெண் பார்க்கத்தானே போறோம். அவங்களும் காத்திருப்பாங்க. போகலாம். எதையும் நிதானமா செய்வோம்பா.. ஒண்ணும் பதறவேண்டாம்.. என்று பதில் சொல்லிவிட்டு மறுபடியும் ஆள்காட்டிவிரலோடு கைப்பேசிக்குள் புகுந்துகொண்டான்.
சௌமி அப்படியே அடுப்படிய பாரு கேஸ் ஆப் பண்ணிட்டனான்னு..
பண்ணியாச்சும்மா.
இங்கருந்து பதில் சொல்லாதம்மா. ஒரு தடவ பாத்துடேன்.
அம்மா.. டீயை நான்தானே சுட வச்சி சாப்பிட்டேன். அபபவே நிறுத்திட்டேன். பதறாதே.
நல்ல காரியத்துக்குப் போறோம்மா.. எதும் ஏடாகூடமா சகுனம் அமைஞ்சிடக் கூடாதுல்ல.
சௌமி அப்படியே கொல்லக் கதவ சாத்தி பூட்டுப்போட்டு வா.. நாம திரும்ப நேரமாயிடும்.. இருட்டிடும்.
சரி.. சஜினுக்குப் போன் அடிங்க.. கிளம்ப சரியா இருக்கும்.
சஜின் ஆக்டிங் டரைவர். எதுக்குமே அவனைத்தான் கூப்பிடுவார் ராகவன். ராசியான பையன். ஒழுங்கா நிதானமா கார் ஓட்டுவான். ராகவனுக்குக் கார் ஓட்டத்தெரியும். சில காரியங்களுக்கு அவர் ஓட்டமாட்டார்.
ஏங்க.. இன்னிக்கு வியாழக்கிழமை. மூணு வரைக்கும் ராகுகாலம் இருக்கு. அதுக்குமேலத்தான் கௌம்பணும்.. மணி இப்போ இரண்டரைதான் ஆவுது. மூணு மணிக்கு மேல சஜினுக்குப் போன் அடிக்கலாம். உடனே வந்துடுவான்.
ராகவன் சட்டென்று தளர்வானார்.
ஒரு ஜாதக யுத்தமே நடத்தி அதில் இந்த ஜாதகம் பொருந்தி வந்திருக்கிறது. இரு தரப்பிலும் சரிதான். ஜாதகமும் பார்த்தாச்சு. ஏழு பொருத்தம் இருப்பதாக வழக்கமாகப் பார்க்கும் ஜோதிடர் சொல்லிவிட்டார். கோபிக்கு ஏற்ற ஜாதகப்பொருத்தம். பெண்ணும் பரவாயில்லை. ஓரளவு கருப்பைத் தாண்டிய நிறம். மாநிறத்திற்குச் சற்று மேல்நிறம். கொஞ்சம் சிகப்பு என்றும் சொல்லாம். அவளும் எம்பிஏ படித்திருக்கிறாள். கோல்ட் மெடலிஸ்ட். தற்போது ஒரு ஐரோப்பிய நிறுனத்தின் சார்பு கம்பெனியில் வேலை பார்க்கிறாள். பெயர் காயத்ரி.
இங்கிருந்து சரியாக 10 கிலோ மீட்டர் தூரத்தில் பெண் வீடு உள்ளது. பெண்ணின் அப்பா பள்ளித் தலைமையாசிரியராக இருந்து பணி ஒய்வு பெற்றவர். ராகவன் தாசில்தாராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். கோபி, சௌமி இரு பிள்ளைகள் மட்டுமே அவருக்கு. சௌமிக்குத் திருமணம் ஆகிவிட்டது எற்கெனவே. இரண்டு பேத்திகள் இருக்கிறார்கள் ராகவனுக்கு. நல்ல குடும்பம். திருப்தியான வாழக்கை.
காயத்ரி குடும்பமும் அப்பர் மிடில் கிளாஸ்தான். கைக்கு அடங்கியதுதான் வாய்க்கும் அடங்கும் என்பார்கள். பெண் வீடு குறித்து விசாரித்தாகிவிட்டது. எல்லோரும் நல்ல கருத்துதான் சொல்லியிருக்கிறார்கள்.
மூன்றரை மணிக்கு சஜின் வரக் கிளம்பினார்கள்.
பெண் வீட்டிற்குப் போக மணி நாலரை ஆகியிருந்தது. வழியில் பழங்கள் பூ என்னென்னமோ வாங்கியதில் மணி ஆகிவிட்டிருந்தது
வாசலிலேயே காத்திருந்தார்கள். பெண்ணின் அப்பா முகத்தில் டென்ஷன் தெரிந்தது.
வாங்க..வாங்க.. நேரமாச்சுன்னு படபடப்பா இருந்துச்சி..
உங்களுக்குத்தான் தெரியுமே பெண்களக் கிளப்பறது தேர கிளப்பற மாதிரின்னு..
நாங்க தேருன்னா நீங்க என்ன தேர இழுக்கற வடமா என்றாள் சௌந்தர்யா.
அம்மா என்ன ரைம்மிங்காப் பேசறே.. வாழ்க்கைங்கற தடத்துல தேரும் வடமும்தான் கணவனும் மனைவியும்.. என்றாள் சௌமியா கிண்டலாக.
என்னோட பொண்ணு படபடன்னு பேசுவா மனசுல வச்சுக்க மாட்டா..
எல்லோரும் காத்திருந்தார்கள். இன்னிக்கு லீவு போட முடியலே.. நீங்க சாயங்காலம்தானே வர்றேன்னு சொன்னதால அதுக்குள்ள ஆபிசு போயிட்டு ஒன் அவர் பர்மிசன்ல வந்துடறேன்னு சொன்னா...
வரட்டும்... வரட்டும்..
அதுக்குள்ள நீங்க சுவீட்டும் காபி சாப்பிடுங்க.. காயத்ரி வந்ததும் பேசிக்கலாம்..
சுவீட்டும் காரமும் காபியும் சாப்பிட்டு முடித்தபோது மணி ஆறாகிவிட்டிருந்தது.
என்னப்பா இன்னும் காயத்ரிய காணோம்.. போன் அடிங்க என்றாள் பெண்ணின் அம்மா.
இப்போது ராகவன் டென்ஷன் ஏற்றிக்கொண்டிருந்தார்.
கோபி வழக்கம்போல கைப்பேசிக்குள் சுறிறிக்கொண்டிருந்தான்.
மணி ஆறேகால் ஆகியிருந்தது.
சார்.. சார்.. சார்.. எனத் தொடர்ந்த குரலில் வாசலில் பரபரப்பும் அவசரமும் தெரிந்தது.
ஏதோ விபரீதம் போல உணர்ந்தார்கள் அனைவரும். வாசலுக்கு ஓடினார் பெண்ணின் அப்பா. கூடவே ராகவனும்.
வாசலில் ஒரு போலிஸ்கார் நின்றுகொண்டிருந்தார். முகத்தில் பரபரப்பு.
காயத்ரி உங்க பொண்ணா சார்?
ஆமாம். என்னாச்சு?
சாரி.. சார்.. உங்க பொண்ணை யாரோ கொன்னுட்டாங்க.. பஸ் டாப்புல கெடக்காங்க.. அவங்க பேக்குலேர்ந்து முகவரி பார்த்து வரேன் சார்..
காயத்ரீ என்றலறினார்.
யாரோ திடிரென தாக்கியதுபோல கோபி அதிர்ந்துபோனான்.
மின்னல் தாக்கியதுபோல அவன் குடும்பம் உறைந்துபோனது.
பஸ்ஸ்டாப் நோக்கி எல்லோரும் ஓடினார்கள்.
                                                                                                    (இன்னும் நடக்கும்)
.