Sunday, July 12, 2020


குறுங்கதை 5

                              தீர்வு  
                                                            ஹரணி


          காலையில் போதை தெளிந்திருந்தான் தனபால். மனைவியைக் கூப்பிட்டான் யேய்  கனகா இங்க வாடி…

               என்ன என்றபடி அலட்சியமாக வந்தாள் உள்ளிருந்து.
               ஆமா.. நம்ப பொண்ணு காயத்ரி எங்கேடி?

               அவள அனுப்பிட்டேன்
.
               எங்கடி?

               உங்க அக்கா வீட்டுக்கு.

               எதுக்கு?

               இனிமே அவ அங்கதான் இருக்கப்போறா.. படிப்பு முடிஞ்சிதான் இனிமே இங்க வருவா.

               என்ன ஆயியும் மவளும் விளையாடுறீங்களா?

               இதுல என்ன விளையாட்டு வேண்டிக் கெடக்கு?

              எதுக்குடி அவ வீட்டுக்கு அனுப்பினே?

               அது ஒண்ணும் பொறத்தியார் வீடுல்ல அவளோட அத்த வீடு அவளுக்கு அங்க எல்லா உரிமையும் இருக்கு.

               அக்காள வேணாம்னு உறவறுத்துட்டேன் நானு.. ஆடு  பகை குட்டி ஒறவா?

                 நீரடிச்சு நீர் வெலகாது.. அக்காங்கற உறவு போயிடாது.  அவங்க ஒறவு அறுந்ததுக்கு நீங்கதானே காரணம்? நல்லா இருந்த மனுஷனுக்கு மச்சான் மச்சான்னு குடிக்கக் கத்துக்கொடுத்துப் பாதியிலே உங்கக்கா தாலியறுத்துட்டா.. மிச்சம் நாந்தான் இருக்கே… திக்கு திக்குன்னு..

                 குடிக்கிறவ எல்லாம் செத்துப்போயிடுவானா?

                 ஆமாம் செத்துத்தான் போவான்.. இல்லாட்டி எல்லாரையும் உசிரோட கொன்னுடுவான்..

                உங்களுக்கு என்னடி கொற வச்சே?

               வாய்க்கும் வயித்துக்கும் என்னாத்த பத்துது. வெந்தத தின்னு விதி வந்தா சாவலாம்னு வாழறோம்.. ஒரு நாளாச்சும் குடிக்காம வந்திருக்கியா? ரத்தக் காட்டேரி மாதிரி மூலைக்கு மூலைக்கு திறந்து வச்சிருக்கானுங்க.. பாவிங்க.. பொழுதன்னிக்குக் கொறயக்கொறய நொப்பிட்டு வரே.. அதுவும் இப்ப யாருக்கு வந்துடுமோன்னு பயந்து சாவறோம்.. வயசுக்கு வந்த  பொம்பளப்புள்ள.. அதுவும் நல்லாப் படிக்குது வுட்டுடாதீங்கன்னு வாத்தியாருங்க வீடு தேடி வந்து சொல்லிட்டுப்போறாங்க.. அதாச்சு நாலு படிப்பு படிச்சி குடிகாரனா இல்லாம நல்லவனக் கட்டிக்கிட்டு நல்ல பொழப்பு பொழக்கட்டும்னுதான்.. உன்னால அவளுக்குப் புடிச்சிடுச்சனா.. உசிரே போயிடும.. எனக்குப் புடிச்சாச் செத்துட்டுப்போறோம்.. உன்னோட வாழறதவிடச் சாவறது ரொம்ப மேலு.. நீ திருந்தப்போறதில்ல எங்களயும் நிம்மதியா வாழப்போறது இல்ல.

              அங்க ஒருத்தன் இருக்கான் எங்கக்கா மவன்.. வயசுக்கு வந்தப் பொண்ண அங்க அனுப்பிவச்சிருக்கே… நாளக்கி ஊரு சாதி சனம் என்ன சொல்லும்?

              அடேங்கப்பா அரிச்சந்திர மகாராஜா… குடிச்சிப்புட்டுக் குட்டிச்சுவரு… சாக்கடை.. சால்னா கடைன்னு விழுந்து கெடக்கறப்ப ஊருசனம் கண்ண மூடிக்குதா… நீ பெத்தப் பெண்ணுன்னா வலிக்குது.. எங்கப்பன் என்ன புழுதியிலாப் பெத்துப்போட்டு உனக்கு தார வாத்துட்டுப்போயிருக்கான்.. எனக்கெல்லாம் சூடு சொரணை வலி எல்லாம் கெடயாது..

              போய் மரியாதயா அழச்சிட்டு வந்துடு..

              உன்னோட கூடப்பொறந்தவ அப்படி இல்ல. அவ மவன அவன்  சிநேகிதன் வீட்டுக்கு அனுப்பிட்டா.. அந்தப் புள்ளயும் அது என்னப் பாத்தா கூச்சப்படும்னு போயிட்டா.. அவம் புள்ள. அவ மனுஷி.. அவ வாழ்க்கைய அழிச்சிட்டே நீ.. உன் வாழ்க்கய அவ காப்பாத்துறா..

               அப்படியே கதவிடுக்கில் நசுங்கிய பல்லியாய் பேசாதிருந்தான்.

                உடனே மகளுக்குப் போன் செய்தான்..

                நான் வரலப்பா என்றாள் காயத்ரி. நீ குடிய விட்டா வருவேன். இல்லாட்டி வரமாட்டேன்.. கொரனா எல்லாருக்கும் பரவுதாம்.. உனக்குப் பரவுனா பரவாயில்ல.. எனக்கு வரக்கூடாது.. நீதான் குடும்பத்த வுட்டுட்டே.. நான் காப்பத்தணும்லே.. அதான்.. போன வை. என்றாள்.

                                       0000