
நிசப்தம்
யாருமறியாத வேளையில்
யாருமறியாமல் இழந்த கனவுகளைச்
சேகரிக்கும்
இறைந்துகிடக்கும் தானியங்களைப்
பொறுக்கும் குருவிகளைப்போல....
என்றைக்கோ தவறவிட்ட யாருக்கோ
உதவ மறுத்த உதவியை
மீட்டெடுக்கும்
எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும்
மகிழ்ச்சியைப்போல...
தவறிச் செய்துவிட்ட குற்றத்தின்
பரிகாரச் சந்தர்ப்பத்தைக்
காத்து வைத்திருக்கும்
பொரிந்த குஞ்சுகளை காக்கும்
தாய்க் கோழியைப்போல....
மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட
காதலின் தடங்களைத் துருவித்துருவி
காட்சிப்படுத்தும்
வயது தளர்வில் தவிர்க்கமுடியாத
நரையைப்போல....
கனிந்த பழத்தைப்போல
எல்லாப் பக்கமும் சுவைக்கும்
கனியவைத்துண்ணும்போது...
கவனமாகவும் கையாளவேண்டும்
கச்சிதக் கூராய் முனையிரண்டிருக்கும்
கத்தியைப் போலவும்...
நிசப்தம்.