Thursday, July 16, 2020


குறுங்கதை 9
                        மொய்
                                                       ஹரணி

         வேதமூர்த்திக்கு மிக வருத்தம். பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயித்துக் கல்யாண நாளையும் குறிச்சி மண்டபம், சமையல், மேளம், எல்லாம் அட்வான்ஸ் தந்து பத்திரிக்கையும் அடிச்சு வீட்டுக்கு வந்த ஒருவாரத்தில கொரோனா லாக்டவுன்.

         நகரத்தில் பெரிய இரும்புக்கடை பிசினஸ் வேதமூர்த்திக்கு. நிறைய தொழிலதிபர்கள் பழக்கம். வியாபாரிகள் சங்கத்திற்கு வேறு தலைவர். மிகப் பிரமாண்டமாக நடத்துவது சைவத்துக்கு ஒரு மண்டபம் அசைவத்துக்கு ஒரு மண்டபம் என்று பிடித்ததெல்லாம் வீணாகப் போயிற்று,

             இப்ப என்னங்க பண்ணறது?  என்று புலம்பினார் அவர் மனைவி ஈசுவரி.

            எனக்கும் அதான் புரியலே… முப்பது பேருக்குமேல கூடாது… மண்டபத்துல கல்யாணம் வைக்கக்கூடாது.. ரேடியோ வைக்கக்கூடாது.. வாண வேடிக்கைக் கூடாது.. சே.. பரதேசி கல்யாணம் மாதிரி என் வீட்டுக் கல்யாணம் நடக்கக்கூடாது..

             என்னங்க பண்ணப்போறே? என்றாள் அவரின் மனைவி ஈசுவரி.

             அவர் மனசுக்குள் வரவேண்டிய மொய் போய்விட்டதே என்று வருத்தம். உள்ளுக்குள் வைத்திருந்தார். காட்டிக்கொள்ளக்கூடாது. ஆனால் எப்படியும் வசூலித்துவிடவேண்டும். சொந்தக்காரனும் நண்பர்களும் பலே கில்லாடிகள் அப்படியே கொரோனா அழுகை அழுதிட்டு நடிச்சிட்டுப் போயிடுவானுங்க..

                யோசித்தார். சமையல் காரர்களைக் கூப்பிட்டார்.

              என்னண்ணோ சொல்லுங்க?

              தனித்தனியாக சமையல்காரர்களைப் பிரித்து சொன்னார்.

              நீங்க வழக்கம்போல 200 பேருக்கு சைவம் 100 பேருக்கு சைவம் தயார் செய்யணும். ஆனா ஒரே நாள்ல இல்ல. அசைவம் நீங்க நாலு நாளைக்குச் செய்யுங்க.. சைவம் மூணு நாளைக்குச் செய்யுங்க.. நான் ஐட்டம் சொல்லிடறேன்.. என்று அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் குழப்பமுடன் போனார்கள். ஆனால் ஒத்துக்கொண்டார்கள்.

        என்னங்க சொல்றீங்க ஏழு நாளைக்கு விருந்தா?

           ஆமாம். ஏழு நாளைக்கு ஏழு தேதில பத்திரிக்கை அடிக்கணும். ஒரு நாள் விட்டு ஒருநாள் விருந்து. ஏன்னு கேளு.. என்னோட பார்ட்னர்ஸ் மத்தவங்க எல்லாருக்கும் அவங்க வீட்டுத் தேவைல ஐயாயிரம் பத்தாயிரம் பவுனுன்னு செஞ்சு வச்சிருக்கேன். அவங்க எல்லாரூம் வரணும். அதுல லிஸ்ட் எடுத்தா 200 பேரு தேருவாங்க. அவங்க மொய் செஞ்சா போதும்.. மேக்சிமம் வந்துடும். அவங்க எல்லாரும் அசைவந்தான் சாப்பிடுவாங்க.. அதனால ஐம்பது ஐம்பது பத்திரிக்கையாப் பிரிச்சுக் கொடுத்திட்டா ஒரு நாளைக்கு ஐம்பது பேரு பிரச்சினையில்லாமப் போயிடும்.. நம்ப வீட்டு மாடியிலே டைனிங் டேபிள் சேர் வாடகைக்கு எடுத்து ஒருவாரம் கழிச்சு கொடுத்திடலாம்.. அதேபோல சைவம் 30 பேருன்னு வச்சிக்கிட்டா மூணு நாளைக்குப் போட்டுடலாம்.. அங்கயும் ஐந்நூறுக்குக் கொறையாம செஞ்சு வச்சிருக்கேன்.. மத்தவங்கள விட்டுடலாம். அவங்களையும் கூப்பிட்டமாதிரியும் இருக்கும் நம்ப கல்யாணமும் கிராண்ட்டா நடக்கும். அந்தக் காலத்துக் கல்யாணம் மாதிரி எழுநாள் கல்யாணம்னு சிறப்பாப் பேசிக்குவாங்க.. நாம்பளும் அப்படியே சொல்லிப்புடணும்.. கொரோனா வாழ்கன்னு சொல்லுடி.. என்றார்.

                   0000
              
           


குறுந்தொடர்   என்னமோ நடக்குது 
                          அத்தியாயம் 9

         அழகான வண்ண ஓவியங்களால் நிரப்பப்பெற்ற குளிரூட்டப்பட்ட அறை அது.

            அகலமான வெல்வெட் சோபா தங்கக் கலரில் மின்னியது. அறை முழுக்க வெள்ளை விளக்குகள் ஒளியை இறைத்துக் கிடந்தன, தடிமனான உடம்பைப் பொருத்துவதற்கென்றே செய்தது போன்ற சோபாவில் அமர்ந்திருந்தார் பகவன்தாஸ் சேட். தமிழ் சினிமா உலகின் பிதாமகன். பைனான்சியர். தயாரிப்பாளர். பல வெற்றிப்படங்களைத் தயாரித்து கோடிக்கணக்கில் ஈட்டி அவற்றின் எண்ணிக்கையை மறந்து இருப்பவர்.

            கழுத்தில் விரல்கள் அளவுக்கு தங்க செயின் மின்னியது. அதில் வைரத்தில் ஸ்வஸ்திக் பளபளத்தது.

             எதிரே உட்கார்ந்திருந்த சோபாவே வெட்கப்படும்படியாகக் கூனிக் குறுகி அமர்ந்திருந்தான் இளம் இயக்குநர் பரதன்.

             சொல்லுங்க பரதன்ஜி என்றார் சேட்.

             பகவான்ஜி… அதான் இந்த எட்டுக்காட்சிகள்தான் நாம எடுக்கப்போற படம். ஒவ்வொரு காட்சியும் கொஞ்சம் டெவலப் பண்ணினா 16 ரீல் படம் வரும். இடையிடையே சில காமெடி டிராக்.. அப்புறம் கொஞ்சம் சண்டைக் காட்சிங்க.. டைட்டில் சாங்க் அப்புறம் நாலஞ்சு சாங்க் போட்டுடலாம்.. ஒவ்வொரு காட்சி இணைப்பும் திரிலிங்கா செஞ்சுடலாம்.

              பரதன்ஜி எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. இதை ரொம்ப மர்மமா இணைச்சு திரைக்கதை எழுதிடுங்க.. அப்புறம் இதுல சில விடுபாடுங்க இருக்கு அத எப்படி இணைக்கணும் பாருங்கஜி…

              ஐயா அந்த வளவன் துப்பறிவாளன் கேரக்டர்… வேறமாதிரி போய் அவனே ஒரு கொலைகேசுல மாட்டிக்கறமாதிரி வச்சு கிளைமாக்ஸ் முன்னால அவனக் காப்பாத்தறோம். அதக் காப்பாத்தபோறது காமெடியன்ஜி., அப்புறம் நான் இளம் இயக்குநர் கதிர்ங்கற பேர்ல வரேன். போலிஸ் ஸ்டேஷனில் கொலைக்குற்றவாளியா போற நான்.. அங்க புதுசா வர்ற ஏஎஸ்பி என்னோட கிளாஸ்மேடன்னு வச்சி.. அங்கிருந்து வேறொரு திருப்பம் வச்சிருக்கேன். அப்புறம் ராகவனுக்குத் தண்டனை, அந்தப் பணக்காரிக்குத் தண்டனை எல்லாம் இயற்கையா நடக்கறமாதிரி பிளான் இருக்கு சேட்ஜி…

             ஓகே… திருப்தி பரதன்ஜி. ரெண்டு படம் நம்பளுக்கு ஜெயிச்சுக் கொடுத்துருக்கு.. இது மூணாவது படம்.. என்னமோ நடக்குது நல்லாயிருக்கு தலைப்பு..

             ஆமாம் சேட்ஜி.. தலைப்பிலேயே டைட்டில் சாங்ககூட நான் எழுதியிருக்கேன்..

              ஓ.. வெரிகுட் பரதன்ஜி… இந்தாங்க அட்வான்ஸ் என்றபடி சிறிய சூட்கேஸ் ஒன்றைத் தூக்கு பரதன் கையில் கொடுத்தார். பரதன் வாங்கிக்கொண்டான்.

               பரதன்ஜி அந்த டைட்டில் சாங்க சொல்லுங்க  என்றார் சேட்.

              சொல்றது என்ன ஜி பாட்டாவே ட்யூன் போட்டிருக்கேன். கேளுங்க என்றபடி தன் செல்லை அமுக்கி அந்தப் பாட்டைப் போட்டான் பரதன். பாடல் ஒலிக்க ஆரம்பித்தது

.
                என்னமோ என்னமோ நடக்குது
                எங்கெங்கோ எங்கெங்கோ நடக்குது
                எதுவும் தெரியல எதுவும் புரியல
                இதயத்தில் வெடிக்குது வெடிக்குது…
                                                      (என்னமோ) 

                கண் பார்க்கத் தெரியல..தெரியல..
                கண் பார்க்கத் பார்க்கத் துடிக்குது
                பயத்துல ரத்தம் ரத்தம் கொதிக்குது
                பக்கத்தில் போனா துப்பாக்கி வெடிக்குது..

                                                      (என்னமோ)

                நல்லவன் எல்லாம் சாவறான் சாவறான்
                கெட்டவன் எல்லாம் சுகமாத் திரியறான்
                கடவுள் வேடிக்கைப் பார்ப்பானா இல்ல
                கணக்க முடிச்சி சீக்கிரம் வைப்பானா

                                                     (என்னமோ)


           பகவான் தாஸ் அப்படியே கண்களை மூடிக்கொண்டார். பரதன்ஜி அவரை ஆர்வமாய் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

                               (முடிந்தது)