Friday, June 12, 2020

என்னமோ நடக்குது... அத்தியாயம் 2

என்னமோ நடக்குது.....

                                  (குறுந்தொடர்... அத்தியாயம் 2)


முதலின் சுருக்கம்

                ராகவன் என்பவரின் குடும்பம் அவரின் மகனுக்காகப் பெண் பார்க்கப் போகிறார்கள். அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுப் பேருந்து நிலையத்தில் கிடக்கிறாள். எல்லோரும் ஓடுகிறார்கள்.

                                           000


              மணி ஒன்பதாகியும் வளவன் எழுந்திருக்கவில்லை.  அவன் உறங்கிக்கொண்டிருக்கும் வீட்டில் இனிதான் எல்லாமும் ஆரம்பிக்கும். சொல்லி முடிப்பதற்குள் ஆரம்பித்துவிட்டது
                      அஞ்சு பைசாவுக்குப் பிரயோசனப்படாது.. எப்பப் பாரு தூக்கம் தூக்கம்.. எப்படித்தான் தூக்கம் வருதோ.. படிச்சு முடிச்சு அதது வேல வெட்டிக்குப் போய் நாலுகாசு கொண்டாந்து குடுத்து அப்பனயும் ஆயியயும்  காப்பாத்துது.. இங்க எல்லாம் தலகீழதான்.. வடிச்சுக் கொட்டியே என் வாழ்க்கை முடிஞ்சிடும்போல..
                      செல்லம் குடுத்தில்லடி.. அனுபவி.. இது உருப்படற நாயியா இருந்தா இந்நேரம் உருப்புட்ருக்காது.. எல்லாம் என் தாலிய அறுக்க வந்துருக்கு.. நல்லா மூணு வேளையும் கொட்டிக்குது.. பொழுதன்னிக்கும் செல்லு நோண்டுது.. என்னதான் இருக்குமோ.. அந்த செல்லு வெடிக்கவும் மாட்டேங்குது.. ஒரேடியா முடிச்சிடலாம்..
                       சரி வாங்க.. சாப்பிட்டு நீங்க கௌம்புங்க..
                        வளவனின் தாய் சித்தாள் வேலைக்குப் போகிறாள். தந்தை ஆசாரி.  இருவருக்கும் எப்போதாவதுதான் வேலை இருக்கு.. லாக்டவுனில் வயிற்றுப் பிழைப்பு காய்ந்துபோய் கிடக்கிறது.
                        ஆகவே வேலை கிடைக்கும்போது ஓடிவிடவேண்டும்.
                         கட்டிட வேலையில் சித்தாள்கள் அதிகம்.. ஆகவே வளவனின் அம்மாவிற்கு டோக்கன் சிஸ்டப்படி இன்னும் இரண்டுநாட்கள் கழித்துதான். ஆனால் ஆசாரிக்கு வேலை நிற்காது. வளவனின் அப்பா வளவன் தூங்கும் அறையைப் பார்த்து.. தூ.. கம்மனாட்டி.. இதுக்கு எல்லாம் ஒண்ணும் வரமாட்டேங்குது..
                           வளவன் எழுந்தபோது மணி பத்தாகிவிட்டிருந்தது.
                           அம்மா.. என்றான்.
                           என்ன அம்மா?  வந்து கொட்டிக்க எல்லா வச்சிருக்கேன் சூடா.. என் வயித்தெரிச்சலோட..
                           ஏம்மா.. நீயும் அப்பாவும் இப்படி கரிச்சுக் கொட்டறீங்க?  தினமும வேலைதேடிதான் போறேன்.. ஒண்ணும் அமைய மாட்டேங்குது.. காசு வேணும்..இல்லாட்டி நாலுபெரிய மனுஷன் சிபாரிசு வேணும்.. ஆசாரி க்கும் சித்தாளுக்கும் பொறந்தவனுக்கு யார் வருவா? உங்க ரெண்டுபேருக்கும் புரிய மாட்டேங்குது. சொன்னாலும் கேக்க மாட்டேங்குறிங்க.. ஆனா நிச்சயம் வேலை தேடிடுவேன். கிடைக்கும்.. எம் மனசுல ஆயிரம் இருக்கும்மா.. உன்னயும் அப்பாவையும் நல்லா வச்சுக்கணும்.. தினமும் வெளியே போகும்போது முக்குல உள்ள கோயில்ல வேண்டிக்கிட்டுதான் போறேன்.. என்ன பண்றது? உங்கள மாதிரியே அந்த ஆண்டவனும் என்னப் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்..
                      சொல்லியபடியே அந்த ஆறிப்போன டீயை எடுத்து வாயில் வைத்தான்.
                        கொண்டா.. அது ஆறி அவலாச்சு.. சுட வச்சுத் தரேன்..
                        சூடு பண்ணிய டீயை உறிஞ்சினான்.
                         வளவா.. இல்லாத கொடுமை கத்தறேண்டா.. ஒன்ன பத்தி தெரியும்டா.. ஏதோ ஆத்தாமை வார்த்தைய கொட்டிப்புடுறேன்.. மனசுல வச்சுக்காத.. மகமாயிய வேண்டி மஞ்சத் துணியில காசு முடிஞ்சு வச்சிருக்கேன். அது வீணாகப் போவாது..
                       குளித்து உடை மாற்றி டிபன் சாப்பிட்டுவிட்டு  வெளியே வந்தான் வளவன்.
                         தெரு முக்கு கோயிலில் ஒரு கும்பிடு போட்டான்.
                         வெள்ளாளத்தெருவைத்தாண்டும்போது யாரோ கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தான். அவன் நண்பன் ஒருவன்.
                           என்னடா வளவா எங்க கிளம்பிட்டே?
                           ஒங்கயும் இல்லடா.. நான் என்ன ஆபிசுக்கா போறேன்..
                           ஒருநாள் நாம போவோம்டா..
                          அதுக்குத்தாண்டா அலையறேன்.. வீட்டுலேயும் படிச்சுட்டு இருக்கறதால பிரச்சினையா இருக்கு..
                           எங்க வீட்டுல நீ புள்ளயே இல்லங்கறாங்க என்னோட அம்மாவும் அப்பாவும் வளவா..
                           என் வீட்டுலே சொல்லுலே கிட்டத்தட்ட அப்படித்தான்.
                             இருவரும் டீக்கடைக்கு வந்து டீ சொன்னார்கள்.
                             வளவா.. பாக்கி இருக்குப்பா..
                             சாரிண்ணே.. அப்ப டீ வேண்டாம்.. என்றபடி எழுந்தான்.
                             என்னப்பா படிச்ச புள்ள பொசுக்குன்னு கோவிச்சுக்கறே.. இந்த கோவம்தான் உன்னோட நேர்மைய எனக்குச் சொல்லுது.. குறிச்சு வச்சுக்கறேன்.. டீய குடி.. வேலக்கிப் போய் மொத்தமா கொடு.. எல்லார்கிட்டயும் சொல்லி சொல்லி உன்கிட்டயும் சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காதப்பா..
                              டீ குடித்தார்கள்.
                              ஏதும் பிசுனஸ் பண்ணக்கூடாதா?
                               எந்தப் பிசினஸ்ம் பண்ணலாம். அதுக்கு கொஞ்சமாவது முதல் வேணும்..
                                முதலுக்காக ஒரு வேலைக்குப் போவணும் என்றான் வளவன்.
                                என்ன வேலை ?
                                யாருக்குத் தெரியும்? யாரு என்ன வேலை கொடுக்கறாங்களோ அதை  செய்யவேண்டியதுதான்.
                                யாரு கொடுப்பாங்க வளவன்?
                                தெரியலியே?
                                அவங்கள தேடணும்..
                                 அவங்கள எப்படித் தேடறது?
                                 நம்ப கண்ணுல வந்து படுவாங்க..
                                 இது என்னடா வளவ்ன் லாஜிக்..புரியலியே.
                                 புரியாதுடா.. இப்போதைக்கு விடு.. பார்த்துக்கலாம்.
                                அப்படியே மெல்ல நடந்தார்கள் கடைத்தெரு நோக்கி.
                                சில அடிகள் எடுத்து வைத்திருப்பாரகள். அவர்களை நோக்கி ஒருவர் வந்தார். பார்க்க நாகரிகமாக இருந்தார்.
                                 ஔவையார தெரு எங்க இருக்கு?
                                  வளவன் சொன்னான்.
                                 அங்க யார சார் பாக்கணும்? வளவன் நண்பன் கேட்டான்.
                                 ஒரு நண்பரை. ஒருவகையில அவர் என்னோட சொந்தக்காரர்.
                                  பேரு தெரியுமா?
                                   கோவிந்தராஜன்.
‘                                  ஓ அந்த ரிட்டயர்டு பார்ட்டியா.. அவரு மாடர்ன் ரை மில்லுல வேலப்பாத்து ரிட்டயர்டு ஆனவரு சரியா என்றான்.
                                   முகவரி கேட்டவர் சரிதான். அவரேதான்.
                                   வாங்க நான் வீடு காட்டறேன். வளவா வாடா போகலாம்.
                                  எனக்கு வேலை இருக்குடா?
                                   அட வாடா.. பெரிய வேலை... சாரை கொண்டு போய் விட்டுட்டு அப்படியே குறுக்கு சந்து வழியா பஸ் ஸ்டாண்ட் போயிடலாம்.
                                    கூடவே போனார்கள்.
                                     வளவனின் நண்பன் கேள்விகளை அடுக்கினான். எங்கருந்து வர்றீங்க சார்?  இங்க அடிக்கடி வந்திருக்கீங்களா?  உங்கள நான் பாத்ததில்லியே? ஏதும் பிசினஸ் விஷயமா சார்?  கோவிந்தராஜ் ரொம்ப நல்ல மனுஷன் சார்... எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டாரு சார்.. ஒரு பொண்ணு ஒரு பையன் இரண்டும் தங்கக்கட்டிங்க.. இருக்கற இட ம் தெரியாதுசார்..
                                ஏன் தம்பி இத்தன கேள்வியும் விவரமும் சொல்றீங்க.. நீங்க என்ன டிடெக்டிவா?
                                அப்படியா சார் என்றான் அப்பாவியாக.
                                டிடெடிக்டிவா..
                                வளவனுக்கு முகத்திற்குத் தெரிந்துவிட்டது. வேல கொடுக்கற ஆளு கண்ணுக்குத் தெரிஞ்சுடிச்சு...
                                 அவரை கோவிந்தராஜ் வீட்டுத் தெருவில் விட்டுவிட்டுத் திரும்புகையில் வளவன் சொன்னான்.
                                டேய் முருகா.. நமக்கு வேல கொடுக்கற ஆளு கண்ணுக்குத் தெரிஞ்சாச்சு?
                                என்னடா சொல்றே?
                                ஆமாண்டா.. இப்ப முகவரி கேட்டுப்போனாரே அவர் வேலக்கி வழி காமிச்சிட்டார்..
                                என்ன வழிடா காமிச்சார்?
                                 எனக்கான வேலைய நான் தீர்மாசிச்சுட்டேன்.. எனக்குவேல கெடச்சுடிச்சி..
                                 என்னடா சொல்றே? என்ன வேலைடா?
                                  வளவன் எம்காம்.. டிடெக்டிவ்
                                  டிடெக்டிவா?
                                  நான் இனிமே துப்பறிவாளன்.. சமூகத்தில் எந்த குற்றம் நடந்தாலும் அதைக் கண்டுபிடிக்கற வேலை.. இனி வளவன் துப்பறிவாளன்.. என்றபடி சிரித்தான்.
                                 என்னடா ஆச்சு?
                                  ஆமாண்டா இனி இந்த ஊர்லே நான் துப்பறிவாளன்.
                                  என்னடா பண்ணுவே?
                                   வா. சொல்றே... என்றபடி வளவன் அவனை ஒரு  ஜாப் டைப்பிங் சென்டருக்கு அழைத்துககொண்டுபோனான்.
                                   வாங்க என்ன வேணும்?
                                   ஒரு துண்டு பேப்பர் தாங்க..
                                    கொடுதத துண்டு சீட்டில்  வளவன். எம்காம் டிடெடிக்வ்
மகா டிடெக்டிவ் ஏஜன்சி. அதனைத் தொடர்ந்து வீட்டு முகவரி. கீ ழே செல் நம்பர். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு.. சார்.. இதை அப்படியே விசிட்டிங் கார்டு சைசுக்கு டைப் பண்ணி ஒரு இருவது காபி எடுத்துக் கொடுங்க.. சார்.. என்றான் வளவன்.
                                      அவன் வாங்கி முகவரியைப் படித்துவிட்டு வளவனைப் பார்த்து.. சார்.. உக்காருங்க.. இதோ அடிச்சு தரேன் என்றான். வளவனின் நண்பன் முருகனுக்கு ஆச்சர்யம் சாரா....அது என்னடா சாரா...
                                     அடித்துக்கொடுத்து செராக்ஸ் எடுத்துக் கொடூத்தார்.
                                      எவ்வளவு சார்?
                                        பணம் வேண்டாம் சார்.. அடிக்கடி வாங்க நம்ப கடைக்கு எது வேணாலும் செஞ்சுதரேன்.
                                      முருகனுக்கு ஆச்சர்யம் பறவைகளாயின.
                                       என்னடா வளவா?
                                        இதுதாண்டா உலகம். இதுதான் நம்ப வேலை. அதாவது என்னோட வேலை.. இனிமே பாரு...
                                        அது சரி.. வேல சம்பளம்..
                                        அது எல்லாம் தானா வரும.
                                        பேருந்து நிலையம் வந்திருந்தார்கள்.
                                         அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவரிடம் வளவன் கேட்டான்..
                                            என்ன சார் கூடடம்?
                                           அங்க ஒரு பொண்ண கொன்னுப் போட்டிருக்காங்க சார்.. பாவம் சார்.. சின்ன வயசு.  நம்ப ஏரியா பொண்ணு சார்..
                                            முருகா.. என்றான் வளவன்.
                                             என்னடா வளவா?
                                             சரி வா.. நமக்கு வேலை வந்துடுச்சி...
                                             விறுவிறுவென்று போய் கூட்டத்தை விலக்கி.. ஒரு போலிஸ்காரரிடம் என்ன சார்? யார் சார் இப்படி பண்ணாங்க? என்றான்.
                                             கேள்வி கேட்ட வளவனை போலிஸ்காரர் ஒரு பார்வை பார்த்தார்.. யாரு நீ?
                                              சட்டென்று பையிலிருந்து அந்த துண்டு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினான்.
                                            வாங்கிப் பார்த்தவர்.. சட்டென்று ஒரு சல்யூட் அடித்தார்.. சாரி சார் என்றார். முருகன் ஆச்சர்ய மலையுச்சிக்குப் போனான்.
                                                                                            (இன்னும் நடக்கும்)