Sunday, July 26, 2020


குறுங்கதை 16

                  இன்னார்க்கு இன்னார் என்று

                                                   ஹரணி


           கார்த்திக்கு சோபாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து ஒருவாரந்தான் ஆகிறது. அதுவும் அதிகம் கூட்டம் சேர்க்காமல் கார்த்தி வீட்டு சார்பில் பத்துபேர் சோபா வீட்டு சார்பில் பத்துபேர் கூடுதலாக ஐயர் எனக் குறைந்த பேர்களைக் கொண்டு வீட்டிலேயே வைத்து முடித்துவிட்டார்கள். முகக்கவசம் அணிந்து வந்தோர்களுக்கு எல்லாம் சானிடைசர் கொடுத்து மிகக் கவனமாகச் செய்தார்கள். அக்கம் பக்கம் வீட்டுப் பெண்கள் உதவி செய்ய வந்திருந்தோர்க்கு விருந்தும் செய்தும்போட்டார்கள்.

              சோபா தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவள் சென்னையில். இப்போது ஒர்க் அட் ஹோம் என்கிற சூழலில் வேலை செய்கிறாள்.

              இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

              எந்த அறிகுறியும் இல்லை.

              எதேச்சையாகப் பரிசோதிக்க வந்ததில் சோபாவிற்குப் பாசிடிவ் என்று வந்துவிட்டது
.
              அதிர்ந்துபோனார்கள்.

              லாக்டவுன் முடிந்ததும் திருமணம் வைக்கலாம் என்கிற சூழலில் இப்படியொரு சங்கடம்.

             பயந்தார்கள்.

             ஆனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் சொல்லி அதற்கான விதிமுறைகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சாப்பிடவேண்டிய உணவு முறைகள்.. எல்லாவற்றையும் சோபாவின் குடும்பத்தார்க்குச் சொல்லிவிட்டு.. அவ்வப்போது தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்திவிட்டுப்போனார்கள்.

           மாடியில் ஒரு அறை இருந்தது. கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறை.

            அதை ஓரமாக எடுத்து வெளியே போட்டுவிட்டு பாய், தலையணை, இதர விஷயங்கள் என்று அந்த அறையைத் தயார் செய்து அதற்குள் சோபா போய்விட்டாள்.

              இப்ப என்ன பண்ணறது?

              ஏன் எல்லாம் சரியாயிடும். பயப்படவேண்டாம்.

              இல்ல மாப்பிள்ள வீட்டுக்குத் தெரிவிக்க வேண்டாமா? ஏதாச்சும் நினைச்சுக்கப்போறாங்க…

              ஒருவேளை கல்யாணம் நின்னுடுமோ.. என்று சோபாவின் அம்மா பயந்தாள்.

              அதெல்லாம் நடக்காது.. நீ எந்தக் காலத்துல இருக்கே.. இது ஒரு வைரஸ் தொற்று.. எத்தனையோ பேருக்கு வந்திருக்கு.. பெரிய பெரிய ஆளுங்களுக்கு எல்லாம் வந்திருக்கு.. மினிஸ்டர்.. எம்எல்ஏ கோடீஸ்வரங்க.. நாட்டோட அதிபர்கள்னு .. எல்லாம் சரியாயிடும். இதுக்குப் போய் கல்யாணத்த நிறுத்திடுவாங்கன்னு சொல்றது பைத்தியக்காரத்தனம்.

            எதுவும் நடக்கும். ஆனா நாம எதுக்கும் தயாரா இருந்துக்கணும் என்றார் சோபாவின் அப்பா.

             என்னங்க இப்படி சொல்றீங்க?

            இல்ல.. உண்மையைச் சொன்னேன்.. எது நடந்தாலும் அதை ஏத்துக்கற மனப்பக்குவம் நமக்கு வேணும்.. அவ்வளவுதான்.. என்னம்மா சோபா சொல்றே? என்றார்.

              சரிப்பா.. கார்த்தி வீட்ல சொல்லிடுங்க.. முதல்ல கார்த்திக் கிட்ட போன்பண்ணி பேசிடுங்க.. அப்புறம் அவங்க வீட்டுல சொல்லுங்க என்றாள்.

            சரிம்மா என்று போன்பண்ணி விஷயத்தைச் சொன்னார்கள்.

            அப்ப ஏற்கெனவே இருந்திருக்கு.. உள்ளுக்குள்ளேயே இருந்துருக்கு..  சரி பாருங்க.. இந்தப் பத்திரிக்கை அடிக்கற வேலை எல்லாத்தையும் கொஞ்சம் நிறுத்தி வச்சிடுங்க.. எல்லாம் சரியாகட்டும்.. பார்க்கலாம்.. நானும் என்னோட சொந்தக்காரங்ககிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறேன்.. இது மோசமான நோய்ங்கறாங்க.. பின்னாடி வேற பாதிக்கும்னு வேற சொல்றாங்க.. எதுக்கும் யோசிச்சு முடிவு பண்ணிக்கலாம் என்றார் தயவுதாட்சண்யம் இல்லாமல்.

            சரிங்க.. என்றார் சோபாவின் அப்பா.

            அப்புறம் கார்த்திக்கிடமும் பேசினார்.

            சரிங்க.. மாமா அப்பா சொல்றபடி செய்யுங்க.. என்று சொல்லிவிட்டு கச்சேரியை தன் அப்பாவிடம் வைத்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்தான்.

           கார்த்திக்கும் இப்படிச் சொன்னவுடன் சோபாவின் அப்பா அதிர்ந்துபோனார்.. இனி இந்தக் கல்யாணம் நடக்காது என்பதுபோல உறுதி வந்துவிட்டது.

           அன்று இரவு.. கார்த்திக் தன் அப்பாவிடம் பேசினான்.

            என்னப்பா.. நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க.. இது உலகம் முழுக்க இருக்கிற நடக்கற விஷயம்.. கொரோனான்னா எல்லாரும் செத்துப்போயிடமாட்டாங்க.. அதுக்காகப் பத்திரிக்கை அடிக்கறத நிறுத்துங்கன்னு பேசினது தப்புப்பா.. எதுவும் நிலையில்ல.. யாருக்கு வேணா என்ன வேணா வரலாம்.. இதே எனக்கு வந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? நல்லதோ கெட்டதோ சோபா எனக்குன்னு நிச்சயிக்கப்பட்ட பெண்.. அத மாத்தமுடியாது.. மாத்தக்கூடாது.. வாழப்போறவன் நான்.. என் வாழ்க்கையைத் தீர்மானிக்க எனக்கு உரிமை இருக்கு..

             அதற்குமேல் கார்த்திக் அப்பா பேசவில்லை.

             உடனே சோபாவுக்கு அடிச்சுப் பேசினான்.

             சோபா.. நமக்கான வாழ்க்கையை யாரும் மாத்தமுடியாது. பத்திரமா இரு.. கவனமா இருந்தா போதும்.. நான் தினமும் வருவேன்.. உனக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை வாங்கிக்கொடுத்திட்டுப் போவேன்.. எதனாலும்போன்ல பேசு… தினமும் பேசு.. தைரியமா இரு.. நாம வாழப்போற வாழ்க்கைக்கு முன்னாடியே சவாலா இந்தக் காரியம் நடக்குது. எல்லாம் நன்மைக்கே.. நாம பேசிவச்சபடி ஒரு கல்யாணப் பத்திரிக்கையை நான் டிசைன் பண்ணி வச்சிருக்கேன்.. வாட்ஸ் அப்ல அனுப்புறேன்.. பார்த்து திருத்தம் சொல்லு.. கவலைப்படாதே.. உன்னோட அப்பா கிட்ட என்னோட அங்கிள் கிட்ட சொல்லு.. நம்பக் கல்யாணம் திட்டமிட்டபடி நடக்கும்.. நானிருக்கேன்.. என்றான்.

                                   000

Friday, July 24, 2020

குறுங்கதை 15

                       என்னோடு நியிருந்தால்….
                                                        ஹரணி


       வடவாற்றில் தண்ணீர் இல்லை. ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கிக் கிடந்தன. அதில் கொஞ்சம் தண்ணீர் கிடந்தது. சில நாய்கள் அதில் விழுந்து விளையாடிக்கொண்டிருந்தன. மணற்பரப்பைவிட கற்பரப்புகளே அதிகம். ஆறுகள் பெயரளவில் ஆறுகளாக இருந்தன. பாலத்தின் மீது நின்று வெற்றாற்றை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி. தலைக்குமேலே நாலைந்து பச்சைக் கிளிகள் பறந்து கடந்தன கீச்சிட்டபடி. பக்கத்தில் பாவா கோயில். அது ஒரு ஜீவசமாதி கோயில் அருகே பெரிய அரசமரம். அதன்கீழ் ஒரு பிள்ளையார சிலை அருகருகே சில நாகவடிவங்கள். அங்கே போய் உட்கார்ந்தான்.

           மனம் முழுக்கக் கொஞ்சம் வேதனை வழிந்துகொண்டிருந்தது.

           வழக்கம்போல கௌரியுடன் சண்டை போட்டு வந்துவிட்டான்.

           திருமணமாகி நாற்பது வருடங்களில் ஒருநாளாவது சண்டை இல்லாத திருநாளாக விடிந்ததில்லை. முடிந்ததும்.

           சின்ன சின்ன விஷயங்களில் இருவம் கச்சைக் கட்டிக்கொண்டு கத்திக்கொள்வார்கள்.

            எதுக்கு இந்த மேட்டை எடுத்து வாசல்ல போட்டிங்க..

            தண்ணீர் சிந்திப்போச்சு எடுத்துப்போட்டேன்.

            திருப்பி எடுத்த இடத்துல போடணும்ல..

            மறந்துட்டேன்.

           அதெப்படி மறக்கும். அதான் ஒரு வேலைக்காரி இருக்காள்ல பாத்துக்குவாள்னு ஒரு அலட்சியம்.

           எதுக்கு இப்படி நீயா கற்பனை பண்ணிப் பேசறே.
.
           நான் கற்பனை பண்ணிப் பேசறனா.. அதானே நடக்குது.

           என்ன கௌரி இப்படி எதுக்கெடுத்தாலும் சண்டை போடறே… ஒருநாளாச்சும் இப்படி இருந்திருக்கா?

            நான் என்ன வெட்டியாவா வம்பிழுக்கிறேன்.. நீங்க செய்யுற காரியம் அப்படி…

           அப்படி என்ன காரியம் பண்ணறேன்?

           ஒரு சின்ன விஷயம் நாலு நாளா சொல்றேன்.. வெந்தயம் இல்ல.. பெருங்காயம் இல்லன்னு வாங்கிட்டு வந்தீங்களா?

            மறந்துட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு வரேன்.

            எப்படிங்க மறக்கும்? உங்க வேலைன்னா மறக்குதா? வீட்டு வேலைன்னா மறக்குது. அலட்சியம்.

             உண்மையில மறந்துபோயிடுது…

             பசிக்குதுன்னு சொல்லி வடை வாங்கிட்டு வாங்கன்னா என்னிக்காச்சும் நேரத்துல வாங்கிட்டு வந்து தந்திருக்கீங்களா?

             இதெல்லாம் ஒரு பிரச்சினையா?

             நாள் முழுக்க வீட்டையே சுத்திவர்றவ.. என்னிக்காச்சும் ஒரு வடைக்குக் ஆசப்பட்டா உடனே கெடக்குதா? பேசறீங்க.. ரொம்ப யோக்கியம் மாதிரி..

            என்ன இப்படி எல்லாம் பேசறே?
           என்ன பேசறேன்?

            யோக்கியம் இல்ல.. அயோக்கியன்னு.. எல்லாம்.

            அயோக்கியன்னு நான் சொன்னனா நீங்களா நினைச்சிக்கிட்டா நான் பொறுப்பு இல்ல..

             யோக்கியமான்னு கேட்டா என்ன அர்த்தம்?

             ஒழுங்கா ஒரு காரியத்தையும் செய்யறதுல்லேன்னு அர்த்தம்.

             ஒழுங்கா நடக்காமத்தான் இத்தன வருஷம் குடும்பம் நடத்தியிருக்கேனா..

             பகல் போய் இரவு வந்து பகல் வந்துட்டா குடும்பம் நடத்தறதுன்னு அர்த்தமா?

             என்ன கௌரி எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்குப்போட்டியா பேசறே?

             நான் போட்டிப்போடறனா?  அதுவும் நீங்க சம்பாரிக்கிற ஆம்பள.. நான் வீட்டுக்கு வேலைக்காரியா வந்தவ.. போட்டிப்போடமுடியுமா?

             உனக்கு என்ன தோணுதோ பேசு கௌரி.. உன்ன எதுவும் என்னால பண்ணமுடியாது?

              இதுக்குமேலயும் என்ன பண்ணனும்? ஒண்ணுகூட கேட்டப்ப கெடக்காது..

              உன்னோட குடும்பமே நடத்தமுடியாதுடி..

              நான் மட்டும் என்ன இஷ்டப்பட்டா  இருக்கேன்…

              விருப்பம் இல்லாதவ போயிடவேண்டியதுதானே உங்க வீட்டுக்கு?

              ஏன்? என்னோட அப்பாவும் அம்மாவும் உயிரோட இருந்தப்ப சொல்லியிருந்தா போயிருப்பேன். இப்போ அவங்க இல்ல.. கேட்க நாதியில்லேன்னு எதுவேணாலும் பேசலாம்னு பேசறீங்க.. வயசும் ஆயிடிச்சு.. எங்க போவ எனக்கு நாதியிருக்கு..

                ஒரு வார்த்தைக்கு எத்தனை வார்த்தை பேசறே? ரொம்ப உனக்கு வாய் வளந்துடிச்சி கௌரி..

               ஆமா.. நான்தான் நாய் மாதிரி வாய வளத்து வச்சி பொழுதன்னிக்கும் கத்திக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருக்கேன்..

               அப்ப என்னை நாய்ங்கிறீயா?

               எது சொன்னாலும் தனக்குத்தான்னு எடுத்துக்கிட்டா நான் எண்ண பண்ணமுடியும்?

                பேசாமா போயிடலாம்டி உன்னோட மல்லுக்கட்டறதுக்கு..

                இந்தப் பூச்சாண்டியதான் நானும் பல வருஷமாப் பாத்துக்கிட்டிருக்கேன்
                அப்பா புருடா விடுறான்.. சாவமாட்டான்னு நினைச்சிட்டியா?

               நீங்க ஏன் சாமி சாவறீங்க.. வேண்டாம்.. உங்கப் புள்ளங்களோட சந்தோஷமா இருங்க.. எல்லாம் அப்பனுக்குத்தானே நியாயம் பேசுது.. நான் முடிவெடுத்திட்டேன். இத்தனை வருஷம் வாழ்ந்தாச்சு.. ரொம்ப சலிச்சுப்போச்சு.. உங்கள மாதிரி சொல்லமாட்டேன்.. சட்டுனு கதை முடிச்சிடுவேன்.. போதும்டா சாமி..

                இத்தனை வருடத்தில் ஒரு தடவைகூட கௌரி சாகறேன்னு என்று சொன்னதில்லை. கோபி அதிர்ந்துபோனான். வயதாகிவிட்டது. இப்போது தொற்று வேறு.. யாரோ ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தான். உடம்பு முழுக்க உதறியது. உடம்பெங்கும் லட்சக்கணக்கான தேள்கள் கொட்டியதுபோன்ற வலியை அதிர்வுகளாக உணர்ந்தான். இப்படிக் கௌரி சொன்னதில்லை.. அந்தக் கணமே புறப்பட்டு வடவாற்றங்கரை வந்தான்.

             அரச மரத்தினடியில் உட்கார்ந்து இத்தனையையும் மனத்தில் ஓட்டிப்பார்த்தான்.

                ஏதும் செய்துவிடுவாள்.. தன்னைப்போலப் பூச்சாண்டி காட்டுபவள் இல்லை.

               செத்துப்போய்விடுவாளா?  நினைக்கவே கோபிக்கு மயக்கம் வருவதுபோல உணர்ந்தான். நெஞ்சு அடைத்தது. மூச்சு விடமுடியவில்லை. சட்டென்று ஒரு கணம் யாரோ சாட்டையால் அடித்ததுபோல உணர்ந்து எழுந்தான். வீட்டிற்கு அவசரமாகப் போனான். உள்ளே எட்டிப் பார்த்தான் கௌரி சமைத்துக்கொண்டிருந்தாள்.

              இவன் எட்டிப்பார்த்ததை உணர்ந்தவள்போலப் பேசினான். சப்பாத்தியும் கொண்டக்கடலை குருமாவும் வச்சிருக்கேன்.. சூடா இருக்கு சாப்பிடுங்க.. என்றாள் தன்னிச்சையாக.

               சாப்பிட்டார்கள்.

               இரவு சொன்னான் தீர்க்கமாக.. கௌரி அப்படிஎல்லாம் பேசாதே.. நான்கூடப் பூச்சாண்டி காட்டுவேன். நீ அப்படி இல்ல. ஏடாகூடமா எதாச்சும் செஞ்சுடாதடி.. என்னால வாழமுடியாதுடி… சண்டை போடறத்தான்.. இனிமே உயிருள்ளவரைக்கும் போடமாட்டேன்.. இது சத்தியம்.. நீ போய்ட்டா நான ஒரு நிமிஷம்கூட இருக்கமாட்டேண்டி.. இது பூச்சாண்டி இல்லடி.. எதாச்சும் தின்னுட்டுச் செத்துப்போயிடுவேண்டி..

             இப்ப எதுக்குப் புலம்பறீங்க.. இன்னிக்கு நேத்தா சண்டை நடக்குது.. என்ன இப்படி பண்ணறீங்களேன்னு வருத்தமா இருக்கும். அது கொஞ்சநேரம்.. அவ்வளவுதான்.. அதுக்காக உங்கள விட்டுட்டுப்போகமாட்டேன்.. நான் இல்லாம நீங்க எண்ண பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியுங்க.. அப்படி எல்லாம் தவிக்க விடமாடேன்.. நீங்கப் போயிட்டா அப்படி மனசுல தோனிச்சின்னா அந்த நிமிஷமே எங்கதையை முடிச்சிக்குவேன்.. 
      

Thursday, July 23, 2020




குறுங்கதை 14

                             ஒழுக்கம்

                                                                ஹரணி

            அந்தக் கோயிலைச் சுற்றித் தெருக்கள் அகண்டு கிடந்தன. ஒன்று நீண்ட சாலை அதன் ஓரங்களுக்குள் தெருக்கள் செருகிக்கிடந்தன. கோயிலின் இடப்பக்கம் இந்த சாலை. வலப்பக்கம் கடைத்தெரு. பின்பக்கம் கடைத்தெரு. முன்பக்கம் பேருந்துசாலை இவற்றைத்தான் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தான் கோபால்.

             எதேச்கையாகக் கடைத்தெருவிற்கு வந்த கண்ணன் கோபால் கோயில் வெளியே சுற்றுவதைக் கண்டான்.

             என்ன கோபால் இது? என்றான்.

             இரு நாலு சுத்து முடிச்சிட்டேன். இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு முடிச்சிடறேன். அதுக்குள்ள  நீ வாங்கறத வாங்கிட்டு வந்துடு.

             இருவரும் அப்படியே கோயிலின் பின்புறத் தெருவின் பூட்டிக்கிடந்த கடையொன்றின் கட்டையில் உட்கார்ந்தார்கள்.

              ஏன் கோயிலுக்குள்ள போகமுடியலியா கோபால்?

              போகலாம். கொரோனாவால உள்ள வரக்கூடாதுன்னு ஐயர் சொல்லிட்டாரு. தினமும் காலையில கோயிலுக்கு வந்து பழகிட்டேன்.

             அதுக்காக வெளிப்பிரகாரம் இருந்தா சுத்தலாம். இப்படிக் கடைத்தெருவை சுத்தினா சிரமமா இல்ல.

              சிரமமாத்தான் இருக்கு.

              அப்புறம் ஒரு சுத்து சுத்துனா போதாதா?

              இல்ல அஞ்சு சுத்து பழகிட்டேன்.

              அதுக்குன்னு ரொம்பப் பக்திதாண்டா.

               கோபால் சிரித்தபடியே இல்லடா.. சுத்தணும் அவ்வளவுதான்.

              என்ன சொல்றே? கோயிலுக்குத் தினமும் வர்றே பக்தி இல்லன்னு சொல்றேன்.

              ஆமாண்டா..அப்படிப் பழகிட்டேன். கடவுள் பிடிக்கும். ஆனால் அதன்பேர்ல செய்யற எல்லாத்தையும் என்னால ஏத்துக்கமுடியல..

            என்ன சொல்றே?

                சின்ன வயசுல அப்ப ஆறாவது படிச்சிக்கிட்டிருந்தேன். எங்கம்மா வெள்ளிக்கிழமை ஆனாப்போதும் உஜ்ஜயினி காளி கோயிலுக்கு அழச்சிட்டுப்போவாங்க.. சுத்திலும் பெண்கள் உட்கார்ந்திருப்பாங்க. எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக்கொடுத்திருந்தாங்க.. அயிகிரி நந்தினி.. 20 பாட்டுங்க.. படிக்கணும்.. இன்னிவரைக்கும் மறக்காம இருக்கு. இத்தனைக்கு எங்கம்மா கைநாட்டு படிக்கத்தெரியாது.. இப்படி வற்புறுத்தல்லதான் சாமி கும்பிடற பழக்கம் வந்துச்சி.. இன்னி வரைக்கும் தொடருது..

               வற்புறுத்தல்னு சொல்றே அப்புறம் எப்படி ஆறாவதுல தொடங்குனது இன்னிவரைக்கும் தொடருது..

              அது பயிற்சி. ஒண்ணுக்குப் பழகிப்போயிடறது. எனக்கும் அப்படியே பழகிப்போச்சு.

              செய்யாம இருந்தா என்னமோ போல இருக்கும்.

              அதான் கடவுள் செயல் கோபால்.

              இருக்கலாம். ஆனா நான் படிச்சமாதிரி யாருமில்லாம இருக்கற தருணங்களில் கடவுள் வந்து ஏதும் கேட்டு வரங்கொடுத்த அனுபவமே இல்லையே..

               அப்போ கடவுள் இல்லைங்கறியா?

               இல்லை. அவரைப் பார்க்கலேன்னு சொல்றேன்.

               என்னடா குழப்புறே கோபால்.

               குழப்பமே இல்லை. தெளிவா இருக்கேன். அவ்வளவுதான்.

               காலையில எழுந்து பல் விளக்கறதுங்கறது ஒரு பயிற்சி. விடமுடியாது. குளிக்கறதுங்கறது ஒரு பயிற்சி. டிபன் பயிற்சி. அதுபோல ஏழு மணியிலேர்ந்து எட்டு மணிவரை ஏதாவது ஒரு கோயில் சுத்தறது பயிற்சி. ஒரு ஒழுங்கு. அதுவே ஒழுக்கமாயிடிச்சி. ஏன்னு காரணம் சொல்லமுடியாது. என்னால விடவும் முடியாது.

              எனக்குப் புரியலடா கோபால்.

              இதுல புரியாமப் போறதுக்கு என்ன இருக்கு? வாக்கிங் போறமாதிரி கோயில் போறது சாமி கும்பிடறது எல்லாமும் எனக்குள்ள ஒரு பயிற்சியா இருக்கு. இது என்னோட அம்மா ஏற்படுத்துனது.. அம்மா இப்போ செத்துப்போயிட்டா.. அவ சொல்லிக்குடுத்த எதுவும் செத்துப்போகல.. சிம்பிள்..

                   அம்மாவுக்காகப் பக்திய தொடர்ந்து செய்யறே?

                   இல்லை. அம்மாமேல பக்தியால தொடர்ந்து செய்யறேன்.

                   என்னோட அம்மாவுக்காக இது. என்னோட மனைவிக்காக வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு எலுமிச்சை விளக்குப் போடறேன். அவதான் வேண்டிக்கிட்டுப் போடஆரம்பிச்சா.. அவளால முடியல. ராகுகாலத்துல போடணும். என்னப்போடுங்கன்னு சொன்னா செய்யறேன். சனி ஞாயிறு எதுவும் அசைவம் சாப்பிடமாடேன். என் பிள்ளைக்காக சனிக்கிழமை வெங்கடாசலபதிக்கு வேண்டிக்கிட்டாங்களாம் என்னோட மாமியார்.. ஞாயிற்றுக்கிழமை என்னோட பொண்ணுக்காக வேண்டிக்கிட்டது என்னோட அக்கா.. அதனால்.

                 வித்தியாசமா இருக்குடா உன்னோட பக்தி. நீ எதுவும் வேண்டிக்கமாட்டியா?

                 எப்பவும் வேண்டினது இல்ல. எதுவும் வேண்டாம அப்படியே சுத்துவேன். ஆனா சுத்தும்போது என்னன்ன செய்யவேண்டியிருக்கு நம்மோட குடும்பம் பத்தி.. பிள்ளைங்க பத்தின்னு யோசிச்சுக்கிட்டே சுத்துவேன். புது ஐடியா கிடைச்சிருக்கு.

                 திரும்பவும் சொல்றேன்…இது ‘ஒரு ஒழுங்கு. மனசையும் உடம்பையும் ஒழுங்குல வச்சிக்கப் பயிற்சி செய்யறமாதிரி.. யோகா செய்யறமாதிரி.. இதுவும். அவ்வளவுதான். நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதுல மனைவி பிள்ளைகள்னு உறவுகள் இருக்கு.. இது எல்லாமும் பின்னிப்பிணைந்து ஒரு வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. ஓடுற வாழ்க்கையில உள்ள இருக்கறவங்க ஆளுக்கொரு திசையில இயங்கறாங்க.. அவ்வளவுதான். இது வாழ்க்கை சக்கரம்.

                  சரி வா டீ சாப்பிடலாம்.

                  வேண்டாம். நான் கோயிலுக்கு வர்றப்ப எதுவும் சாப்பிடமாட்டேன். அதேபோல கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்குத்தான் போகணும்.. வேற எங்கயும் போகக்கூடாது. இது என் அம்மா சொன்னது. பார்ப்போம் என்றபடி எழுந்து போனான் கோபால்.

                        000000

Wednesday, July 22, 2020




குறுங்கதை 13

                    ஆதலினால் திருமணம் செய்வீர்

                                                   ஹரணி


            உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களாக நிறைந்து வழிந்த நகரமொன்றைக் கண்ட கவிஞன் ஒருவன் இப்படிக் கவிதை எழுதினான்.

                      கல்மரங்கள்
                      முளைத்த
                      காடு

என்ன அருமையான கவிதை. அப்படித்தான் அந்த சிறு நகரத்தில் நாகரிகமான நகரத்தில் மையத்தில் கிட்டத்தட்ட ஆறு ஏழு எட்டு ஒன்பது அடுக்குகள் என மொத்தம் ஒன்பது கட்டிடங்கள் முளைத்துக் கிடந்தன. ஒன்பது கட்டிடங்களிலும் அடுக்கிற்கு ஐந்து வீடுகள் வசதியான வீடுகள் அமைந்திருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு பேர்களும் அதாவது கணவன் மனைவி ஆண் பிள்ளை ஒன்று பெண் பிள்ளை ஒன்றும் என்கிற கணக்கிலும் அல்லது ஆறு பேர்கள் இவர்களோடு பாட்டியும் தாத்தாவும் என்கிற கணக்கிலும் வசித்து வந்தார்கள்.

                   காவிரி அடுக்ககம் எனும் கட்டிடத்தில் 23 என்கிற எண் பித்தளையில் பொறித்திருக்க மத்தியமாவதி இல்லம் எனும் பெயர்ப்பலகை பளபளத்துக்கிடந்த வீட்டில் இப்போது நாம் உள்ளே நுழைகிறோம்.

                  சோபாவில் உட்கார்ந்து லாப்டாப்பில் கோழிக்குஞ்சுகள் இரை பொறுக்குவதுபோல தன விரல்களால் மேய்ந்துகொண்டிருந்த தனஞ்செயன் விரல்களை விடுவித்துத் தலையைத் திருப்பி மகளைப் பார்த்தார் ஆச்சர்யமாக.

                 என்ன சொல்றே ஷிகா.. (இப்போதெல்லாம் ஷ்ஸ் இல்லாமல் பெயர் வைப்பது தேசக்குற்றம்)…

                 எஸ் டாட்… நான் ஒரு பையனைச் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்.. பட் நீங்க அதக் காதல்னு முத்திரைக் குத்திடாதீங்க.. இப்போ லாக்டவுன் பீரியட்.. வி ஆல் காண்ட் மூவ்.. அதனாலா கிடைச்ச ஐடியாவுல அந்தப் பையனக் கேட்ச் பண்ணியிருக்கேன்..

                வாவ்.. பிரமாதம்.. உன் மூளையே மூளைடி… சொல்லு சொல்லு.. வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமலேயே.. இப்படி ஒரு செலக்சன் பண்ணியிருக்கே.. ஹவ் இட்ஸ் பாசிபிள்? என்றபடியே கையில் உள்ள கரண்டியை அப்படியே டைனிங் டேபிளில் படுக்கவைத்துவிட்டு வந்து ஷிகா அருகில் உட்கார்ந்தாள் அவள் அம்மா முல்லைமதி.

                சொல்றேம்மா.. அவசரப்படாதே.. என்று சற்று வியர்த்தாள் ஷிகா. (டென்ஷனானாள்)

                 சொல்லு ஷிகா என்றார் தனஞ்செயன் மகளைப் பார்த்து.

                 இப்போ லாக்டவுன் பீரியட்.. வீட்டுக்குள்ளேதான் அடஞ்சு கிடக்கோம். வெளியே போக முடியல.. அதனால.. நம்ப ஷிட் அவுட்ல தொட்டிச் செடிகள் போடலாம்னு பிளான் பண்ணேன்.. அதுக்கான முயற்சியிலே ஈடுபடும்போது.. எதேச்சையா எதிர்ல பார்த்தேன்.. எதிர்ல பிரைட் அபார்ட்மெண்ட்.. அங்க மொட்டை மாடில ஒரு பையன் சுவற்றுல வலை கட்டி அவன் மட்டும் பேஸ்கட் பால் ஆடினா.. சிங்கிள்.. அப்புறம் என்னமோ பர்னிச்சர்களை அடுக்கி அதுமேல என்னமோ வித்தைகள் பண்ணான்.. அப்புறம் பைனாகுலர் வச்சி வானத்தைப் பார்த்துக்கிட்டிருந்தான்.. திடீர்னு மொட்டைமாடில எட்டு போட்டமாதிரி ஓடினான்.. வெரி இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சி.. சரின்னு அவனைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்னு முடிவுபண்ணேன்..

                 ஓகே அவன எப்படி காண்டாக்ட் பண்ணே?

                ஒரு நாள் பைனாக்குலர்ல நம்ப அபார்ட்மெண்ட பார்த்தான்.. அப்போ நான் ஹாய்னு ஒரு கையசைப்பு அசைச்சேன்.. சட்டுனு அவனும் கை ஷேக் பண்ணான்..

                இப்படி தினமும் அவனைப் பார்த்து ஒரு ஹலோ சிம்பள் பண்ணினேன்.. அப்புறம் அவன யாருன்னு தெரிஞசுக்கலாம்னு ஒரு க்யூரியாசிட்டி  வந்துச்சி..

                அவன்கிட்ட பைனாகுலர்ல பாருன்னு சொல்லிப் பார்க்கவச்சி.. என் ஏர்ல ஹேண்ட  வச்சி உன் போன் நம்பர் சொல்லுன்னு சொன்னேன்..

                 உடனே அவன் பக்கா பிரிலியண்ட் என்ன பண்ணான் தெரியுமா.. ஏதோ சம் கிராக்கர்ஸ் வச்சி  ஒவ்வொரு கிராக்கர்ஸ்லேயும் ஒரு நம்பரா காத்துல எழுதிக்காட்டுனான்.. அப்படியே எழுதிப் போன் பண்ணி அவன் மொத்தப் பயோடேட்டாவும் வாட்ஸ் அப்புல வாங்கிட்டேன்..

                 வாட்ஸ் அப்பிலயா?

               ஆமாம் நானும் அவனும் வாட்ஸ் அப் பிரெண்ட்ஸ்.
              
               அவன் பேரு.. பத்ரிநாத்.. அமெரிக்கன் ஹார்டுவேர்ல பிடிஎப் பண்ணறான்.. மாதம் 4 லட்சம் புராஜக்ட்.. அப்பா ரிசர்ர் பேங்கு ரிட்டயர்டு. அம்மா புரபசர்.. பிசிக்ஸ்ல.. ஒரு தங்கை.. அவ ஜெர்மனில ஒரு பல் டாக்டருக்குப் பேக்கப் பண்ணிட்டாங்க.. ஒரு குட்டீஸ் இருக்கு.. பேரு ரிஷிவந்திகா.. ஒன்றரை வயசு.. முதல் பர்த்டே முடிஞ்சுப்போச்சு.
.
                தனஞ்செயன் அதிர்ந்துபோனார்.. அடக்கடவுளே இவ்வளவு விஷயமா..

               ஷிகா.. யூ ஆர் கிரேட் என்றாள் அம்மா.

               என்ன முல்லை பேசறே நீ? என்றார் தனஞ்செயன்.

               ஏங்க இந்த லாக்டவுன் பீரியட்ல இப்படி ஒரு அலையன்ஸ் இருந்த இடத்திலேயே என் மகள் கேட்ச் பண்ணி வச்சிருக்கா.. அதப் பிக்ஸ் பண்ண பாருங்க.. நம்ப பொண்ணும் லண்டன் எம்பிஏ.. பேட்மிட்டன்.. மியிசிக்.. டிராயிங் இண்ட்ரஸ்ட்.. ஐந்தேமுக்கால் அடி.. உயரம் ஒல்லியான முல்லைக்கொடிபோல உடம்பு.. நல்ல சிவப்பு.. கிள்ளவேண்டாம்.. தொட்டால் சிவக்கும் எம்பொண்ணுக்கு.. பாருங்க.. பாருங்க..

                 சரி அந்தப் பையனக் காமி என்றார்கள்.

                 வாட்ஸ் அப்பில் போட்டோக்கள் பூத்துக் குலுங்கின. ஆறடி உயரம். வாட்ட சாட்டம் அழகு வேற.. சிரித்தபோட்டோவில்.. பல் வரிசை குறுமீசை அழகு.. பக்கத்தில் ரிஷவந்திகாவுடன் அட்டகாசப் போஸ் கொடுத்திருந்தான்.. பக்கத்தில் பறக்கும் ஒரு பிளாஸ்டிக் பறவையுடன்.

                   சரி வருகிறேன் என்று முல்லைமதி உள்ளே போய் அரைமணிநேரத்தில் திரும்பிவந்தாள்.

                  உங்களுக்கு எல்லாம் ஒரு ஹேப்பி நீயுஸ்

                  என்னம்மா?

                  என்ன முல்லை?

                  நான் அந்தப் பத்ரிநாத் அம்மா, அப்பாவோட பேசி முடிச்சிட்டேன். எங்க ஊருக்குப் பக்கத்துஊருதான். ஒருவகையில் நமக்குச் சொந்தம்தான்.. வேற சாதியா இருக்குமோன்னு கொஞ்சம் மனசுக்குள்ளே மருவிட்டிருந்தேன். கிளியர் ஆயிடிச்சி.. ஒருவகையில் நம்ப ஷிகாவுக்குக் கட்டிக்கிற முறைதான்.. லாக்டவுன் முடிஞ்சவுடனே தாம்பூலம் மாத்தி இந்த ஆவணியிலேயே கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க..

                   தனஞ்செயன் அப்படியே மகள் ஷிகாவைப் பார்த்தார்.

                கண்களால் அப்பாவை ஒரு சந்தோஷ டுவிட் செய்தாள்.

                                                                                 00000