Friday, December 4, 2015

ஈழத்துப் பெண் கவிதையியல்



தமிழ்ப் பல்கலைக்கழக அயல் நாட்டுத் தமிழ்க்  கல்வித்துறை மற்றும் சென்னைத்  தமிழ்ச்  சங்கம் இணைந்து  ஈழத்துப் பெண் கவிதையியல் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக்  கருத்தரங்கு ஒன்றை 3.12.2015 மற்றும் 4.12.2015 ஆகிய இரு நாட்கள் சிறப்பாக நடத்தியது.

            ஐந்து அமர்வுகளில் முழுக்க இலங்கையின்   பல்வேறு  பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மட்டும் கட்டுரைகளை  வாசித்தளித்தார்கள்.

               ஈழத்துப் பெண் கவிதைகளில்  தொடக்கக் காலப்  பெண் கவிகள்,  சங்கக் கால நீட்சி, போரும் வாழ்வும் , நாடார் இலக்கியக் கூறுகள். முஸ்லிம் பெண்  கவிதைகள், ஆண்களும் அதிகாரமும், அலைவும் உலைவும் , பால்நிலை அரசியல், உணர்த்து முறை உத்திகள், பாடு பொருள் வெளிப்பாடுகள் .மலையகப் பெண் கவிதைகள், மனிதம், மொழி, உடல்சார் அரசியல், தொன்மங்கள்  என மொத்தம் 15 தரமான உண்மையான ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டன.

                வலியும் உணர்வும் பெருகிக் கிளைத்த கட்டுரைகள்.  பேசாப் பொருளைப் பேசியக் கட்டுரைகள். அவர்களின் இருப்புக் குறித்தும் வாழ்க்கையின் ஏக்கம் குறித்தும் போரை மறுதலித்தல் குறித்தும் உடல்சார் அரசியலின் தன்மைகள் குறித்தும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து  எழுந்த கட்டுரைகள்.

                  நீண்ட நாட்களுக்குப் பின் உண்மையான  கருத்தரங்கு கட்டுரைகளைக் கேட்ட மனநிறைவு. ஒவ்வொரு கட்டுரையும் மனதுள் நிறைய சிந்தனைகளை   ஏற்படுத்தின. ஒரு ஆய்வுக் கட்டுரை என்பது வெறும் பத்திகளை இணைத்தல் அல்ல என்பதை உணர்த்தி நிற்கும் கருத்தரங்கம் ஆக அமைந்திருந்தது.

                 எப்போதும் தன்னலமற்றுக்  கல்வி சிந்தனையோடு இயங்கும் பேராசிரியர்  சா. உதயசூரியன் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் அயல்நாட்டுக் கல்வித்துறையின் சாதனைக்  கருத்தரங்காகும்.  இக்கருத்தரங்கு எல்லா நிலைகளிலும் சிறப்புற அமையக் காரணம் மாண்பமை துணைவேந்தர்  பேராசிரியர்  க. பாஸ்கரன் அவர்கள்.