Sunday, June 26, 2016

ஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.

கதை 1

பேசும் செடி..


          அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது.
           ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும் மிரட்டி விரட்டியது.
           காட்டிலுள்ள மிருகங்கள் அந்த செடி இருந்தபக்கம் செல்ல அஞ்சி ஓடின.
           பேசும் செடி இரண்டு மரங்களுக்கு நடுவில் இருந்தது.
           ஒருநாள் சிறிய மான்குட்டி ஒன்று வழிதவறி பேசும் செடி இருந்த பக்கம் வந்துவிட்டது.
           பேசும் செடி பற்றி அதற்குத் தெரியாது.
           உடனே பேசும் செடி பேச ஆரம்பித்துவிட்டது. இல்லை மிரட்ட ஆரம்பித்துவிட்டது மான்குட்டியை.
           டேய்.. மான்குட்டி.. எங்கே இங்க வந்தே?
           யாரு பேசறது?
           ஹாஹா.. என்னைத் தெரியாதா.. நான்தான் பேசும் செடி.. உன்னை தின்னப்போறேன் என்றது..
           உடனே அய்யோ..அம்மா என்று மான்குட்டி அலறியபடி கீழே விழுந்து மயங்கிவிட்டது.
           கொஞ்ச நேரத்தில் குட்டிமானைத் தேடிக்கொண்டு தாய் மான் வந்தது. உடனே பேசும்செடி.. அந்த தாய் மானையும் மிரட்டியது.

           உன்னையும் தின்னப்போறோம் என்று.
           அதற்குள் மான்குட்டி மயக்கம் தெளிந்து எழுந்து தாய் மான் பின்னே ஒடுங்கிக்கொண்டது.
           அப்போது திடீரென.. எதிரில் உள்ள அரசமரம் பேச ஆரம்பித்துவிட்டது.
           நான்தான் அரச மரம் பேசுகிறேன்.. இப்போது நான் அந்த பேசும்செடியை அழிக்கப்போகிறேன்..


           உடனே தாய்மானும் குட்டிமானும் ஓடிப்போயின.
           அய்யய்யோ எங்களை விட்டுடு என்று பேசும் செடியின் பின்னாலிருந்து இரண்டு கரடிக்குட்டிகள் வெளியே வந்தன.
           ஓ நீங்கள்தான் பேசும் செடியா?
           ஆமா..ஆமா.. எங்களை மன்னிச்சிடு மரமே.. இனிமே இப்படி செய்யமாட்டோம்..
           சரி.. இனி யாரையும் ஏமாற்றக்கூடாது..
           சரி என்றன இரண்டும். அவ்வாறு சொல்லியதும் அரச மரத்தின் பின்னிருந்து கரடி வந்ததும் இரண்டும் அம்மா நீங்களா என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டன.



           நீதி.. யாரையும் ஏமாற்றக்கூடாது


  
கதை.2

                  தாகம் தணித்த காகம்…


           நல்ல வெயில் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது பூமியை.
மண்ணும் கல்லும் எல்லாம் கொதித்துக் கிடந்தன.
           பறந்து களைத்த காகத்திற்குச் சரியான தாகம்.
           தண்ணீர் தேடி அலைந்தது.
           கடைசியாக ஒரு இடத்தில் சிறு ஜாடி கிடந்தது.
           அதில் கால் பங்கு நீர் கிடந்தது.
           நிச்சயம் காகம் தன் அலகால் நுழைத்தாலும் தண்ணீரைக் குடிக்கமுடியாது.
           தலையையும் ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ளே திணிக்க முடியவில்லை.
           காகத்திற்கோ தாகம் அதிகரித்துக்கொண்டேபோனது.
           பக்கத்தில் பார்த்தது எதாவது கிடைக்குமா என்று.
           சுற்றிலும் சிறு சிறு கூழாங்கற்கள் கிடந்தன.
           அந்தக் கற்களும் கொதித்துக் கிடந்தன.
           கற்களை நன்றாக உற்றுப் பார்த்தது காகம்.
           அந்தக் கற்களுக்கிடையில் சின்ன செடியொன்று முளைத்துக்
கிடந்தது. நாலைந்து இதழ்கள் துளிர் விட்டிருந்தன. ஆனால்  அச்செடி
வாடிக்கிடந்தது.
           காகம் பார்த்தது.
           மெல்ல தண்ணீர் உள்ள ஜாடியை நகர்த்திப்போய் அந்த செடியின் மேல் கவிழ்த்தது.


           ஜாடியின் உள்ளே இருந்த கால்பாகம் தண்ணீர் மெல்ல தரையில் பரவி அந்த செடியின் வேருக்குள் இறங்கியது.
           செடியின் வாடிய இலைகள் நிமிர்ந்தன.
           காகம் தண்ணீர் தேடி மீண்டும் சிறகை விரித்தது ஆகாயம் பார்த்து.

            நீதி.  நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.