Thursday, June 30, 2016

கதை 6

                சிறுபுத்திக்குக் கிடைத்த நட்பு



 முல்லைப்பூர் என்கிற கிராமத்தில் இருந்தது அந்தப் பெரிய குளம். அந்த கிராமத்து மக்கள் அந்தக் குளத்தைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.
           பெரிய குளம் அது. தாமரை இலைகள் கம்பளம் விரித்தது போல் அந்த குளத்தை மூடிக்கிடந்தன. நடுவில் தாமரைப்பூக்கள் கொக்கின் தலைபோல உயர்ந்து நின்றன.
           முல்லைப்பூர் என்கிற கிராமத்துக்கே அது அழகான குளம்.
           அந்த குளத்தில்தான் பேரன்பி என்கிற ஒரு தவளை வசித்து வந்தது. நெடுங்காலமாக அதன் முப்பாட்டனார், தாத்தா, அப்பா, அம்மா என எல்லோருக்கும் அந்தக் குளம்தான் பூர்வீகம்.


           இப்போது அந்த வரிசையில் பேரன்பியும் அதன் குழந்தைகளும் மட்டுமே வசிக்கிறார்கள்.
           தினமும் கரைக்கு வந்து இரைபிடித்து இளைப்பாறிவிட்டுப் போவது பேரன்பியின் வழக்கம்.
          குளக்கரையின் அருகே சற்று தள்ளியிருந்த ஒரு பொட்டல்வெளியில் ஒரு பொந்து இருந்தது. அந்தப் பொந்தில் சிறுபுத்தி என்கிற எலி வசித்துவந்தது.
           அதுவும் இரைபிடித்து உண்டதும் சற்று இளைப்பாறும்.
ஆனால் இன்று அது ஒரு திட்டத்துடன் வந்து காத்திருந்தது
           குளக்கரையின் அருகே விஷமடக்கி என்கிற ஒரு பாம்பு வசித்து வருகிறது. அதனிடம்  சிறுபுத்தி மாட்டிக்கொண்டது. தான் தப்பிப்பதற்கு வேறு இரை பிடித்துத் தருகிறேன் என்கிற ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது- எனவே அது பேரன்பியை இரையாக மாட்டிவிட்டால் தான் தப்பித்துவிடலாம்.
                இது தெரியாத பேரன்பி குளத்தை விட்டுக் கரையில் தாவியதும் விஷமடக்கி தலையை சருகுக்குள் இழுத்துக்கொண்டு மறைந்துகொண்டது.
            சிறுபுத்தியும் பேரன்பியும் பேச ஆரம்பித்தன.
            சற்று நேரத்தில் சிறுபுத்தி இரு.. எனக்குத் தாகமாக இருக்கிறது. நீரருந்திவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு குளத்தின் ஓரமாகப் போனது.
           சரி என்று பேரன்பி காத்திருந்தது.
           இதுதான் சமயம் என்று விஷமடக்கி தலையை ஒரே பாய்ச்சலில் நீட்டிப் பேரன்பியைக் கவ்விக்கொண்டது. இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்துபோனது பேரன்பி.
           உடனே.. அது அழ ஆரம்பித்துவிட்டது. என் பிள்ளைகள் நான் இல்லாமல் இறந்துபோய்விடுவார்கள். இப்போது அவர்கள் சிறுபிள்ளைகள். சரியாகக்கூட நீந்தத்தெரியாமல் உள்ளார்கள். அவர்கள் நீந்தக் கற்றுக்கொடுத்ததும் நானே வந்து உனக்கு இரையாகிறேன்.
           என்ன இது? நீயும் அதையே சொல்கிறாய் சிறுபுத்தியும் அதையே சொல்கிறது. இருவரும் சேர்ந்து நாடகமாடுகிறீர்களா? என்றது விஷமடக்கி.
           என்ன சொன்னது சிறுபுத்தி? என்றது பேரன்பி.
           அதுதான் உன்னை எனக்கு இரையாகத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்டது என்றதும் பேரன்பிக்கு இன்னும் அழுகை பொங்கி வந்தது.
           ஒன்று செய்.. எனக்கு வேறு இரை ஏற்பாடு செய்துகொடு நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்றது விஷமடக்கி.
           வேண்டாம்.. என் துன்பம் என்னோடு போகட்டும். ஒருபோதும் அதுபோன்று நான் செய்யமாட்டேன்.. என் பிள்ளைகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். நீ என்னை உண்டுவிட்டுப்போ என்றது.
           இதைக் கேட்டதும் சிறுபுத்திக்கு அழுகை வந்து அது ஓடிவந்து நான்தான் நல்ல நட்பைப் புரிந்துகொள்ளவில்லை. அதை விட்டுவிடு.. என்னையே எடுத்துக்கொள் விஷமடக்கியின் வாயருகே வந்து நின்றுவிட்டது.
           சட்டென்று வாயிலிருந்து பேரன்பியை விடுவித்தது விஷமடக்கி.


           உங்களின் நட்பைப் போற்றுகிறேன். நட்பில் இப்படியே இருங்கள். சிறுபுத்தியே பேரன்பியால் உன்னையும் விட்டுவிடுகிறேன். இனி நான் இங்கிருக்கமாட்டேன். இங்கிருந்தால் ஒருவேளை மனசு மாறி உங்களைத் தின்ன எண்ணம் வரும். உங்களின் நட்பிற்குப் பரிசாக நான் இனி இங்கிருக்கமாட்டேன் என்றபடி சரசரவென்று விரைந்து மறைந்தது விஷமடக்கி.
           என்னை மன்னித்துவிடு பேரன்பி என்றது சிறுபுத்தி.
           விடு நண்பா.. அப்போதே மறந்துவிட்டேன். சரி நாளை சந்திக்கலாம். பிள்ளைகள் காத்திருப்பார்கள் என்றபடி ப்ளக் என்று குளத்தில் பாய்ந்தது பேரன்பி.

           நீதி. மனசிருந்தால் துரோகியும் நண்பராவார்.