Thursday, November 17, 2011

குழந்தைப் பாடல்கள்

குழந்தை இலக்கியம் குறித்து அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத சூழல் இன்றைக்கும் நிலவுகிறது. இன்னொருபக்கம் குழந்தைகள் இலக்கியம் குறித்து அக்கறையுள்ள இலக்கியப் படைப்பாளிகளும் இதழ்களும் கவனம் செலுத்துகின்றன. நம்முடைய பங்கிற்கும் எதாவது செய்யவேண்டும் என்கிற உந்துத்ல் எப்போதும் மனத்தில் சுழன்றுகொண்டேயிருக்கிறது. தவிரவும் நீண்ட நாட்களாகிவிட்டன குழந்தைப் பாடல்கள் எழுதி. எனவே சில பாடல்கள் மறுபடியும்.



அணில்குட்டி

அணில்குட்டி அணில்குட்டி
அழகான அணில்குட்டி
முதுகுமேல திருநீறு
பூசிக்கிட்ட அணில்குட்டி
தாவிதாவி ஓடுமாம்
தரைமேலேயே தாவுமாம்
வாலவால ஆட்டிக்கிட்டு
ராம்ராம்னு பாடுமாம்
கருப்புமுழி கருகமணி
முழிச்சிக்கிட்டு கத்துமாம்
கட்டைசுவத்துமேல
நின்னுகிட்டு வரம்கேட்டு
ஆடுமாம்...

000000


வானம் முழுக்கப் பாருங்க
கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
காடடும் அழகு நட்சத்திரம்...

அம்மா நிலவு மெல்ல வந்து
அன்பாய் சிரித்துப் பாலுர்ட்டும்
கர்ற்று அடித்து காற்று அடித்து
மேகம் நிலவை மறைக்குமாம்...

கண்ண சிமிட்டி கண்ண சிமிட்டி
நட்சத்திரம் வேண்டாம் வேண்டாம்
என்குமாம்...

மேகம் ஓடி அழுவுமாம்
அம்மா நிலவு சிரிக்குமாம்..

அன்பு என்ற சக்தியை
அம்மா என்ற சக்தியை
யாரும் மறைக்க முடியாதாம்...

அம்மாபோல அன்புகாட்டி
அனைவருமே வாழுவோம்...

00000


காட்டுக்குள்ளே திருவிழா
கலகலன்னு நடக்குமாம்..

குயிலு அக்கா பாடுமாம்
மயில அக்கா ஆடுமாம்
ஓடிஓடி முயலு அண்ணா ஓயாம
அழைக்குமாம் வாங்க..வாங்க்..வாங்க..

சிங்கம் மாமா தலைமையில்
சிறுத்தை அண்ணா கச்சேரி
மான்கள் கூட்டம் மத்தளம்
மயக்கும் இசையில் நடக்குமாம்..

வகைவகையா விதவிதமா
விருந்து எல்லாம் நடக்குமாம்
பச்சைப்பச்சை காய்கறி
பழுக்கப் பழுக்க பழங்களாம்
பட்டாம்பூச்சி மெத்தையாம்
பளபளன்னு மின்னுமாம்...

குருவி வந்து சிரிக்குது...கரடி வந்து உறுமுது
யானை வநது பிளிறுமாம்..குதிரை வந்து கனைக்குமாம்..
எல்லாம் வந்து கூடிக்கூடி
பேசிப்பேசி களிக்குமாம்...

மிருகமெல்லாம் மிருகமா
பறவையெல்லாம் பறவையா
பண்போடு இருக்கணும்
பாழும் மனுசன் குணத்தைப் பார்த்து
பாதை மாறக்கூடாதாம்..

அதுக்குத்தான் திருவிழான்னு
தீர்மானமா சொன்னிச்சாம்
விருந்து வாசம் வந்துச்சாம்
திருவிழாவும் முடிஞ்சிச்சாம்..

00000