Friday, October 18, 2013

                      
அன்புள்ள 

             ஹரணி வணக்கமுடன்.

             என் நுர்ல் நத்தையோட்டுத் தண்ணீருக்கு விமர்சனக் கடிதங்கள் என்னை மேலும் பொறுப்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன. ஏனென்றால் இவற்றைத் தக்க வைத்துக் 
கொள்ளவேண்டும் என்கிற அச்சமும் எனக்குள் பரமபதத்தில் ஏறிக்கிடக்கும் பாம்புபோல ஏறிக்கிடக்கிறது. சில தினங்களுக்கு முன் என் நண்பன் மதுமிதாவின் அத்தை. எழுத்தாளர் அமரர் அகிலன் அவர்களின் சகோதரி மகள் திருமதி ஆர். மங்கையர்க்கரசி எழுதியதைப் பதிவிட்டிருந்தேன். தற்போது அவரின் இரண்டாவது விரிவான விமர்சனம் அதே என் நுர்லுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அவற்றைக் கீழே தந்துள்ளேன். ஒரு படைப்பாளனின் கருத்துக்களுக்கு இரு விமர்சனங்களும் ஒரே நபரிடமிருந்து வருவது எத்தனை கொடுப்பினையானது. அது எனக்கு வாய்த்திருக்கிறது. உங்கள் அனைவரின் முன்னிலையிலும் திருமதி ஆர்.மங்கையர்க்கரசியின் அவர்களுக்கு நன்றியும் அவர்கனின் அன்பிற்கும் பணிகிறேன். 

               கூடவே நன்றி மதுமிதா.

=================================================================================
ஆர். மங்கையர்க்கரசி
/////////////////////////////////////////////


 நத்தையோட்டுத் தண்ணீர்
                                  (ஹரணி)
01.   வாசித்தல் - சுவாசித்தல்
       வாசித்தலில் மேலோட்டமாக வாசித்தல், நுனியும் அடியும் மட்டும் வாசித்தல், தூங்குவதற்காக வாசித்தல் மற்றும் பொழுது போக்கிற்காக வாசிக்கும் பழக்மும் பலரிடம் உள்ளதைக் குறிப்பிட்டு, வாசித்தலின் பலன்களையும் கூறியுள்ளார்.
       குழந்தைகளையும் வாசிக்கத் தூண்டுதல், நேயம் வளர்த்தல், ஒற்றுமையாக வாழ்தல், உறவை வளர்த்தல், எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதையும் வாசிப்பு வழங்குகிறது. அத்துடன் தன்னம்பிக்கையொடு செயல்படுவதற்கும் வாசித்தல் உறுதுணையாகிறது என்கிறார். வாசித்தல் சுவாசிப்பதைப் போன்றது. அதில் ஒரு சுகமும் உண்டு என்பதை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
02.   நட்பு
   
       தாயின் நட்பு வட்டமோ பெரிது. அனால் தனயனின் நட்பை தடை செய்கிறாள் ஜாதகத்தை நம்பிய தாய். பள்ளிப் பருவ நட்பு ஆசிரியரை மிகவும் பாதித்திருப்பதாகத் தெரிகிறது. நட்பின் வலியை நெறி கட்டிய வலி என்று கூறும் போது அதனை,வலியின் வலியை உணர முடிகிறது.

                    எதிர்பார்ப்பது உறவு
                    எதிர்பாராதது நட்பு

       உண்மையான நட்பு அமையும் போது நெறி கட்டிய வலி குறைந்து சுகம் மேலோங்குகிறது என்பதை ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

03.   மடலேறுதல் 

       குடைக் கம்பிக்குள் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகளை, நன்றிகளை, ஏக்கங்களை, நட்பின் மேன்மைகளை, எண்ணப் பகிர்தல்களை எப்போழுது வேண்டுமானாலும் எடுத்துப் படித்து சுகம் கணலாம். வார்த்தைகள் பேச முடியாததை வரிகள் பேசும். எனவே கடிதம் எழுதுங்கள், எழுதப் பழகுங்கள், கடிதம் எழுதச் சொல்லிக் கொடுங்கள், காற்று நுழைய முடியாத இடத்திலும் கடித உணர்வுகள் நுழையும். உள்ளத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்க்க் கூடியது கடிதம் எனும் பொக்கிஷம் மட்டுமே என்கிறார் ஆசிரியர்.



04.   சந்தர்ப்பவாதிகள்
   
   நற்பண்பு இல்லாதோர்,தூய்மையற்றோர்,சுயநலவாதிகள் ஆகியோரை மண்குதிரை, எட்டிக்காய்,வெறி பிடித்த மிருகம் என்றும் பெயர் சூட்டுகிறர். காரியவாதிகளான இவர்களை அடையாளம் கண்டு தவிர்த்திடுங்கள், ஏமாறாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் ஆசிரியர்.

05.   பண உறவுகள்
 
  
    மனிதனை காசுஆசை ஆட்டிப்படைப்பதாக திரைப்படப் பாடல்களையும். தமிழ் அறிஞர்கள் மற்றும் பட்டினத்தாரின் வரிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். கடவுளுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணமும்,பக்தியும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதாகத் தெரிகிறது.
 
    உறவுகளைச் சொல்லிக் கொள்ள, அடையளப் படுத்த,உயிரூட்ட உயிரற்ற பணமே தேவைப் படுகிறது. அனைத்தையும் மாற்றும் சக்தி பணத்திற்கு உண்டு, பணம் பெருத்து உறவு சிறுத்ததாகத் தோற்றம்தான். ஆனால் உண்மையில் உணர்வுள்ள உறவுகளே வளர்ந்து வருகிறது. வரவேண்டும் என்றும் வரலாற்றை முன்னுதாரணமாக்குகிறர் ஆசிரியர்.

06.   வழிகாட்டிகள்

   செயல்,எழுத்து,நடத்தை,வள்ளன்மை,பொறுமை,சகிப்புத்தன்மை போன்ற அரிய பொக்கிஷங்கள் தான் வழிகாட்டிகள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து. பிரதிபலன் கருதா அவ்வழிக்காட்டிகளின் முக்கியமானதான தொல்காப்பியம் இன்றும்,என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    பெற்றோரும்,ஆசிரியரும் நல்ல வழிகாட்டிகளாக அமைந்தால் தலைமுறையும் சீர்படும். இல்லையேல் வரம்பில்லா நதி போல் சீர் கெட்டுவிடும். வழிகாட்டிகள் அருகிவரும் இத்தருணத்தில் இளைஞர்களின் நிலை என்னாவது என்று தனது ஏக்கத்தையும்,வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ள ஆசிரியர் நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.



07.   இளம் பருவமும், மனவெளி விளையாட்டுக்களும்

    குழந்தைகள் கூடி விளையாடும் விளையாட்டினால் கூடி வாழ்தல், விட்டுக் கொடுத்தல்,சகோதரப்பான்மை, உதவி செய்ய வேண்டும் போன்ற உந்துதலைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. உடலும் வளருது,உள்ளமும் வளருது என்பதைக் கூறியவர் குழந்தைகளுக்கு கதை மற்றும் பாட்டு மூலம் உணவின் அவசியத்தையும்,பலன்களையும் விளையாட்டாக்கக் கூறி சோறு ஊட்டலாம் என்கிறார் ஆசிரியர்.

    கணிணியின் வளர்ச்சி குழந்தைகளின் வளர்ச்சியை முடக்கி விடுவதாகவும் கூறியவர் பிள்ளைகள் வியர்வை சிந்தி விளையாடவும்,குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கும் பெற்றோரும் இருந்தால் குழந்தைகள் எப்படி நோயாளிகளாக இருக்க முடியும் என்று பெற்றோர்களுக்கும் அறைகூவல் விடுகிறர்.
08. தமிழாய்வுகள்
    வேறு வழியின்றி தமிழை எடுத்துப் படிப்போரும் சிபார்சுகளாலும், குறுக்கு வழியின் மூலமும் முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர். மேலும் படைப்பாளிகளைச் சந்திக்காமலும்,உரையாடாமலும் அவரின் அனுமதி இன்றியும் முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர் என்று மிகவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    வாசித்துக் கொண்டும்,சொற்பொழிவு,கருத்தரங்குகள் மூலமும் தமிழின் மேன்மையை பறைசாற்றிகொண்டு எவ்வித அடையாளமும் அங்கீகாரமும் வழங்கப்படாமல் இருக்கின்றவர்களையும் வேதனைப்பட வைத்து விடுவதையும்,இருப்பினும் உண்மையான ஆய்வுகள் சிலவும் நம்பிக்கையூட்டுவனாகவும் இருப்பதாகவும் சிறிய ஒளிவிளக்கை கையில் ஏந்தி நிற்கிறார் ஆசிரியர்.


09.   எனது ஆசிரியர்கள்
  அன்றைய ஆசிரியர்களின் எளிமையான தோற்றம்,பழக்கவழக்கம், பண்பு ஆகிய நற்குணங்களால் மாணவர் மற்றும் பெற்றோர்களின் மனதிலும் உயர்ந்து நின்றனர் ஆசிரியர்கள். அன்னையைப் போன்ற மேரி டீச்சர் எளிமையாக இலக்கணத்தைக் கற்பித்த ஆசிரியர்,வரலாற்றைக் கண்முன்னே கொண்டுவந்த வரலாற்று ஆசிரியரையும் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சிலரையும் நினைவு கூர்ந்து தனது நன்றிகளைக் காணிக்கையாக்கியுள்ளார் நூலாசிரியர். இதைவிட வேறு என்ன வேண்டும் ஆசிரியர்களுக்கு?

10.   நீதிபோதனை வகுப்பும்,நீர்த்துப்போகா வாழ்வும்

   உலகம் விரிவடைந்து வருகிறது. மனதின் மனமோ குறுகி வருகிறது. கூட்டுக் குடும்பம் சிதைக்கப்பட்டதே சீரழிவிற்குக் காரணம். இதுவே அழிவை நோக்கிச் செல்லும் பயணம் ஆகும்.


   உறவுமுறை,விட்டுக் கொடுத்தல்,பாசம்,நேசம் யாவும் கற்றவர்கள் தனது வாரிசுகளுக்கும் அதனைக் கற்பித்தனர். பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் மூலம் நற்பண்புகளை ஆசிரியர்கள் வளர்த்தனர். ஆனால் இன்று தீயசெயல்களும் ஒழுக்கக் கேடுகளும்,வன்முறைகளும், பாலியல் குற்றங்களூம் பெருகி சமூகத்தைக் கெடுத்து வருகின்றன. நீர்த்துப் போகா வாழ்வு வேண்டுமெனில் நீதிபோதனை வகுப்புகள் மீண்டும் தொடங்கப் படவேண்டும் என்கிறார் ஆசிரியர்


11.   நம்பிக்கையான அனுபவ வைத்தியம்
      முதியவர்கள் வீட்டின் சொத்து. கைமருந்து பாட்டி வைத்தியம்       மூலம்    குழந்தைவளர்ப்பு,சுளுக்கு,விஷக்கடி,வயிற்று உப்புசம் போன்ற நோய்கள் எளிதில் குணமானதைக் குறிப்பிட்டு தனது அனுபவத்தை நினைவு கூறுகிறார்.

12.   சில அர்ப்பணிப்புகள்

புராண,வரலாற்றுக் காலங்களிலும் அறிஞர் பெருமக்கள் தங்கள் அர்ப்பணிப்புகளை நிலைநாட்டியுள்ளதை எடுத்துரைத்துள்ளார். அரிச்சந்திரன்,மணிமேகலை,வள்ளலார்,ராஜராஜன்,அன்னைதெரசா ஆகியோர் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். அதே போன்று ஒரு பார்வையற்றவர் தன்னால் இயன்ற உதவிகளை இட்லி கடை வைத்து அதன் மூலம் தனது அர்ப்பணிப்பை நல்கி வருவதை குறிப்பிடுகிறார். நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும் என உணர்த்திய ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.   


13.   வடவாற்றங்கரையில்  

ஆசிரியரின் வாழ்வில் வடவாற்றங்கரை முக்கிய பங்கேற்றுள்ளதை உணர முடிகிறது. ஆற்றில் அன்னையுடன் சென்று குளியல்,நீச்சல் கற்றல்,ஆடிப்பெருக்கில் கொண்டாட்டம்,குதிகாலைத் தேய்த்து தூய்மையாக வைத்திருப்பதைத் தந்தையிடம் இருந்தே தானும் பின்பற்றி வருவதாக்க் குறிப்பிடும் ஆசிரியர், மகிழ்ச்சியைக் கொடுத்த அதே வடவாற்றங்கரைதான் பின்னர் உறவுகளின் மரணங்களால் ஏற்பட்ட துயரங்களையும் தந்துள்ளது என்கிறார். தன் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த வடவாற்றங்கரையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


14.   சபை நாகரீகம்

சபை நாகரீகம் என்றால் என்ன? சபையில் எப்படி கலந்து கொள்ள வேண்டும்,எப்படிப் பேச வேண்டும்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தான் சபை நாகரீகம். இது பலருக்குத் தெரிந்திருந்தும் அதனை பின் பற்றுவதில்லை. பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்திருந்தும் அதை மீறுபவர்கள் பாமரர்கள் அல்ல, மிகவும் படித்த மேதாவிகளே என்பது வருத்தத்திற்குரியது என்கிறார்.

நாகரீகம், பண்பாடு இவற்றில் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கே நாகரீகத்தைப் பற்றிச் சொல்லித்தர வேண்டி இருக்கிறதே என்று வேதனையை வெளிப்படுத்துகிறார். தனி மனித ஒழுக்கமும்,கடமையும் அடிப்படைக் குணங்களாகும். இனியாவது சபை நாகரீகம் அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் முடிக்கிறார் ஆசிரியர்.