Saturday, November 9, 2013

விகடனில்..... கவிதை...


அப்பா 
இறந்துபோனபின்
ஒரு மாலையில்
பிள்ளை கேட்டான்
நீ எப்போ
தாத்தா ஆவே?


                              ஏனென்றேன்

 நான அப்பா 
ஆவணுமே
என்றான்.

                         இயல்பாய் கேட்டான்
                         பிள்ளையென்றாலும்
                         உள்ளுக்குள்
                         பெருக்கெடுக்கிறது
                         இயல்பற்ற
                         பேரச்சம்...

                                                                                                     (நன்றி விகடன்.... 06.11.2013)
                                                              
                                                                                               
முதல் திதி என்பதால்
முன்கூட்டியே
வந்திருந்தார்கள்.

பெரியக்கா
நடு அக்கா
சின்ன அக்கா
கடைசித் தம்பி
அவரவர் குடும்பங்களுடன்

பணியோய்வு பெற்றதிலிருந்து
பாடையேறும்வரை பராமரித்து
நின்ற பொழுதெல்லாம் திதிநாளில்
மேலும் துன்பத் தேள்
கொட்டியதாய்...
புகைப்படத்தில் அப்பா
சிரித்தபடியே...

எல்லாம் முடிந்து அவரவர்
ஊருக்குத் திரும்புமுன்
சொல்லிவிட்டுப்
போனார்கள்..

கடைசிவரைக்கும் அப்பா
அவனுக்குத்தான் எல்லாம்
செஞ்சாரு பென்ஷன் உள்பட...

வீட்டுக்காக வாங்கிய
வங்கிக்கடன்
அப்பா மருத்துவமனை
செலவுக்காக வாங்கிய
கூட்டுறவுச் சங்கக் கடன்
பிஎப் கடன் என
எல்லாக் கடன்களும் போக
பிடித்தமாக வருவது
பிடித்தமில்லை என்பதை
எப்படியுரைக்கமுடியும்
என மௌனித்திருக்க
மௌனம் சம்மதம்
என்று
போகிறார்கள்...

புகைப்படத்தில்
அப்பா சிரித்தபடியே...

  (நன்றி விகடன்.... 13.11.2013)