Thursday, July 7, 2016

கதை 9

                சதிகார நரியும் அதிகார ஓநாயும்…



           அசத்தியன் என்கிற நரிக்கு திடீரென ஆம்லெட் சாப்பிடவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.
           நல்ல கோடைகாலம் அது. வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது அந்தக் காட்டில்.
           அசத்தியன் தேடித்தேடி கடைசியில் ஒரு வெகுளியான் என்கிற காகத்தின் கூட்டைக் கண்டது. அதில் நிறைய முட்டைகள் இருப்பதைக் கண்டதும் அதனைச் சாப்பிட்டுவிடலாம் என்று முடிவெடுத்தது.

           வெகுளியான் கையாலே இந்தக் காரியத்தைச் செய்துவிடவேண்டும் என்று அசத்தியன் சூழ்ச்சி செய்தது.
            அது மெல்ல காகத்திடம் வந்து வெகுளியாரே வணக்கம் என்றது.
         


        வெகுளியான் என்ன இது நரி வந்து வணக்கம் சொல்கிறதே என்ற ஐயம் வந்தாலும்.. உடனே வணக்கம் அசத்தியரே என்றது பதிலுக்கு.
            நான் எப்போதும் உண்மையையே பேசுபவன்.. என்னை எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் ஒரு குயில்தான் என்னை நம்பவில்லை.
            சரி அதனால் என்ன? என்றது வெகுளியான்.
            அது தவறல்லவா? ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்கத்தானே வேண்டும் என்றது அசத்தியன்.
           எதற்கு இந்தப் பேச்சு என்று  வெகுளியானுக்குப் புரியவில்லை.
           எனக்குப் புரியவில்லை என்றது வெகுளியான்.
           உனக்குப் புரியாது வெகுளியாரே? நீர் ஒரு அப்பாவி. இல்லை என்றால் உன்னை எல்லாரும் ஏமாற்றுவார்களா? உனக்கு அதனால்தான் வெகுளியான் என்கிற பெயரும் வைத்துவிட்டார்கள்.
           வெகுளியானுக்கு சிறிது கோபம் வந்துவிட்டது.
           என்னை யாரும் ஏமாற்ற முடியாது? நானும் ஏமாறமாட்டேன்
           உடனே அசத்தியன் சிரிப்பை அடக்கமுடியால் ஊளையிட்டுச் சிரித்தது.
           எதற்கு சிரிக்கிறே?
           பின்னே.. உனக்கு உன் முட்டைகளும் தெரியலே.. குயில் முட்டைகளும் தெரியல.. அதனாலதான குயில்கள் உங்களோட கூட்டுல வந்து முட்டைபோட்டுட்டுப்போயிடுது.. நீயும் .ஏமாந்து அடைகாத்துக் குஞ்சு பொரிச்சு.. வளர்த்துக் குடுத்துடறே..

           வெகுளியானுக்குப் புரிந்தது. அவமானத்தால் அது தலைகுனிந்து பேசாமல் நின்றது.
              நான் சொன்னது உண்மைதானே வெகுளியாரே? என்றது.
             சரி.. நான் எப்படி ஏமாறாமல் இருக்கறது?
             அப்படிக் கேளு.. நீ ஒவ்வொரு முட்டையா கீழே தள்ளிவிடு.. நான் பார்த்துட்டு குயிலு முட்டையை எடுத்துக்கிட்டு உன்னோட முட்டையை உனக்குக் கொடுத்துடறேன்..
              அதை நம்பிய வெகுளியான் முட்டைகளைத் தள்ள ஆரம்பித்தது. மரத்திலிருந்து கீழே விழுந்த முட்டைகள் உடைந்து சிதற.. அசத்தியன் நக்கிச் சாப்பிட்டது.
               வெகுளியானுக்கு இது புரியவில்லை.
               அப்போது அந்தப் பக்கம் ஒரு ஓநாய் வந்தது. அது ஓநாய்க் கூட்டத்தின் அதிகார ஓநாய்.


                இங்கு என்ன நடக்கிறது? என்றது சத்தமாய்.
                உடனே அசத்தியன் ஒன்றுமில்லை அதிகாரியே.. நான் பரிசோதித்துக்கொண்டிருக்கிறேன்.. என்று கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு மெல்லிய குரலில் நீயும் ஆம்லெட் சாப்பிடலாம்.. என்றது.
                என்ன கண்டுபிடித்துவிட்டாயா? என்றது அசத்தியனிடம் வெகுளியான்.
            அடக்கடவுளே இப்படியா அப்பாவியாக இருப்பாய்?
           ஏன்?
            இதுவரை நீ தள்ளியது குயில் முட்டைகளை அல்ல.. உன் முட்டைகளை..
           இல்லையே என்றது வெகுளியான்.
           வேண்டுமானால் இந்த அதிகாரியைக் கேட்டுப்பார்.
           ஆமாம்..ஆமாம்.. அசத்தியன் சொல்வது உண்மைதான். குயில் முட்டைகளுக்குப் பதிலாக உன் முட்டைகளைத் தள்ளியிருக்கிறாய்.
           அப்படியா.. இப்போ என்ன செய்வது?
           மீதியுள்ள முட்டைகளையும் கீழே தள்ளு.. அவைதான் குயிலின் முட்டைகள்..
           அவ்வாறே தள்ளியது வெகுளியான்..
           அதிகார ஓநாயும் நாக்கை நீட்டிச் சப்புக்கொட்டிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.
           எல்லா முட்டைகளையும் தின்றுவிட்டு இரண்டும் ஓடிவிட்டன.
           வெகுளியான் கீழே பறந்துவந்து தன்முட்டைகள் எதுவென்று தேடத் தொடங்கியது அப்பாவியாய்.


நீதி… -  திருடனின் நீதி திருடனுக்கே பொருந்தும்.