Sunday, July 9, 2017

ஊட்டும் .... (நாவல்)....

அத்தியாயம் 2    ஊழ்வினை 2

                          கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா  கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நின்று பார்த்தாள்.
                         உலையிலிட்ட அரிசிக்குப் போதுமான தண்ணீர் இல்லாமல் அடிச்சோறு கருகிவிட்ட நெடியது.
                        இதுபோன்று நிகழ்ந்தது இல்லை.
                        அரிசிக்குத் தகுந்த நீரை வைக்கத் தெரியாத பெண் இருக்கமுடியாது. கவனம் சிதறுகிறது. ஏன்?
                        மங்களா யோசித்துப் பார்த்தாள். அடுப்பை நிறுத்திவிட்டு வேறு உலை வைத்தாள். கொஞ்சம் கருகல்கூட நித்தியானந்தத்திற்குப் பிடிக்காது. சாப்பிடமாட்டான். எதுவும் குறையும் சொல்லமாட்டான். பட்டினி வயிறோடு படுத்துக்கொள்வான்.
                         விடு.. பரவாயில்லை. ஒரு டம்ளர் பால் கொடு குடித்துவிட்டுப் படுத்துக்கொள்கிறேன் என்பான்.
                           எனவே வேறு உலை வைத்தாள். சரியான நீரும் வைத்து கொதி வந்ததும் அரிசியைக் களைந்து உலையிலிட்டாள்.
                              கொதிக்க ஆரம்பித்தது அரிசியை வாங்கிய உலை.
                              என்னமோ மனதைப் பிசைகிறது. பிள்ளைகளைப் பார்த்தாள். கூடத்தின் மத்தியில் அமர்ந்து பள்ளிப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தார்கள் வீட்டுப்பாடமாக.
                              பிள்ளைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
                               இப்படிப் பார்ப்பது பழக்கமில்லை. ஆனாலும் தொடர்ந்து பார்க்கவேண்டும் என்கிற உந்துதல் அவளுள் எழும்பியிருந்தது.
                              இன்றைக்கு எல்லாமும் மாறாக நடக்கின்றன.
                               இதற்கு என்ன பொருள்?
                               எதற்கான விளைவு இந்த மாறுதலான செயற்பாடுகள்.
                               மங்களாவால் யோசிக்க முடியவில்லை.
                               மறுபடியும் அடுப்படிக்குள் போய் சாதத்தைக் கஞ்சி வடிய பாத்திரத்திற்குள் கவிழ்த்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு கூடத்திற்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
                                மனசுக்குள் ஏதோ பிசைவதுபோலவே மறுபடியும் தோனியது.
                                நித்தியானந்தத்தை நினைத்துக்கொண்டாள்.
                                அவனுக்குப் பிடித்தமான பருப்பு உருண்டை குழம்பு வைத்திருக்கிறாள். பக்கோடா வற்றல் வறுத்திருக்கிறாள். கொஞ்சம் கூடவே சாப்பிடுவான்.
                                வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்தாள்.
                                தண்ணீர் குடிக்கவேண்டும்போலிருந்தது. குடித்தாள். லேசாகப் பசிப்பதுபோலிருந்தது.
                                என்ன இருக்கிறது என்று யோசித்து இருந்த ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துவந்து பிரித்தாள். உடனே பிள்ளைகள் வந்து சூழ்ந்துகொண்டன.
                              அம்மா எனக்குக் கொடு.
                              எனக்கும் கொடும்மா.
                               பிரித்துக் கொடுத்தாள்.
                               தான் இரண்டு பிஸ்கட்களை எடுத்துக்கொண்டாள்.  ஒரு டம்பளர் தண்ணீர் எடுத்துவந்து வைத்துக்கொண்டு அதில் அந்த பிஸ்கட்டை நனைத்துச் சாப்பிட்டாள். பின் அந்த தண்ணீரை எடுத்து குடித்தாள். டம்ளரை வைக்கும்போது வாசலில் யாரோ அலறும் குரல் கேட்டது.
                                 மங்களாக்கா....மங்களாக்கா...
                                 பதறிப்போய் வாசலுக்கு ஓடினாள்.
                                 குமார் நின்றுகொண்டிருந்தான்.
                                 என்னடா?  இப்படி கத்தறே? என்றாள் பதட்டமுடன்.
                                 அக்கா..அக்கா.. என்றபடி அழ ஆரம்பித்துவிட்டான்.
                                 என்னடா ஆச்சு?
                                 அண்ணனுக்கு...  என்றபடி அழ ஆரம்பித்தான்.
                                 சட்டென்று ஒரு நெருப்பு மங்களாவிற்குள் பற்றியது.
                                 என்னடா ஆச்ச அண்ணனுக்கு சொல்லுடா?
                                 பெரிய கோயிலுக்கிட்ட ஆக்சிடெண்டு ஆயிடிச்சுக்கா.. லாரிக்காரன் அண்ணன்மேல மோதிட்டான்..
                                 ஐய்யய்யோ.. என்றபடி தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு மங்களா கத்த தெரு கூடிவிட்டது.
                                 என்னடா ஆச்சு?
                                 நித்தி அண்ணனுக்கு ஆக்சிடெண்ட்..  லாரி மோதிடிச்சு..
                                அவனுக்கு என்னடா ஆச்சு?
                                 அங்கேயே உயிர் போயிடிச்சு..
                                என்னங்க,,, என்றபடி பெருங்குரலெடுத்து மங்களா கத்தியபடி மயங்கிப்போனாள்.
                               தெருவே குலை நடுங்கி நின்றது.
                               அடக்கடவுளே?
                               அடப்பாவி.. இப்பத்தான பாத்தேன்.. புள்ளங்கள விட்டுட்டுப்போனான்..
                                யார் யாரோ என்னன்னவோ பேசினார்கள். ஓடினார்கள். மங்களாவை மயக்கம் தெளிவித்தார்கள். பிள்ளைகள் ஓடிவந்து மிரண்டு நின்றன.
                            யாரோ ஆட்டோ எடுத்து வந்தார்கள்.
                            எங்கடா கொண்டுபோயிருக்காங்க..
                            மெடிக்கலுக்கு..
                            ஓடினார்கள்
                             இவர்கள் போனபோது நித்தியானந்தத்தின் உடலை மார்ச்சுவரிக்கு முன்னால் தரையில் போட்டிருந்தார்கள்.
                              மங்களா விழுந்து புரண்டு அவன் உடல்மேல் கட்டிக் கொண்டு அழுதாள்.
                               என்னங்க.. இப்படிப் பண்ணிட்டுப்போயிட்டீங்க.. நான் என்ன பண்ணுவேன். புள்ளங்களா பாருங்க.. பிள்ளைகள் அப்பா.. அப்பா என்று கதறின.
‘                             மங்களாவிடம் கையெழுத்து வாங்கி மார்ச்சுவரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யக் கொண்டுபோனார்கள்.
                               மருத்துவமனைக்கு வெளியே வேப்ப மரத்தடியில் கவிழ்ந்து கிடந்தாள் மங்களா. அதற்குள் அவளின் உறவுகளுக்குச் சொல்லி அவர்களும் வந்து கூடிக்கிடந்தார்கள்.
                               உள்ளே போஸ்ட் மார்ட்டம் நடந்துகொண்டிருந்தது.

                                                                                              (ஊழ்வினை தொடரும்)


                     

2 comments: