Sunday, May 21, 2017


                     ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்தே கவிதைகளையும் கதைகளையும் பொதுக்கட்டுரை மற்றும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வருகிறேன்.

                       இவ்வாண்டும் அவ்வாறே திட்டமிட்டபடி நடந்துகொண்டிருக்கிறது.

                      என்றாலும் இவற்றுக்கிடையில் வாசிப்புக் கூடியிருக்கிறது. அருமையான நூல்கள் வாசிக்கக் கிடைப்பது கொடுப்பினையாகும்.

                       அண்மையில் வாசித்த புத்தகங்கள்.

                        பிஎல். இராஜகோபாலன் -    லீ குவான் யு
 
                         சிங்கப்பூரை நிர்ணயிக்க அதை  உலகமே வியந்து பார்க்கும் பார்க்கும் ஓர்அழகிய நாடாக  எல்லா வகையிலும் உருவாக்க லீ பட்ட பாட்டை தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்புக் குறையாமல் சுவையாக வாசிக்கத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டை ராஜா என்கிற பிஎல் இராஜகோபாலன்.

                        தி இந்துவில் வெளிவரும்போதே தொடர்ந்து வாசித்தாலும் புத்தக வடிவில் வாசித்த புத்தகங்கள் பின்வருவன

                       1. ஆயிஷா நடராசன் - என்னைச் செதுக்கிய  மாணவர்கள்
                      2. எஸ்.இராமகிருஷ்ணன் - வீடில்லாப் புத்தகங்கள்

                      இரு புத்தகங்களும் இருவேறு களத்தில் இயங்குபவை. மாணவ உலகத்தின் வைரங்களைப் பட்டை தீட்டியிருப்பது முதல் புத்தகம்.

                       வாசிப்பின் மேன்மையை நல்ல படைப்பாளிகளைப் புத்தகங்களை அடையாளப்படுத்துவது பின்நூல்.

                       எங்களின் கல்வியுலகில் மிகச் சிறந்த பேராசிரியர், கல்வியாளர், மாண்புசால் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அத்தோடு தமிழ், ஆங்கிலம், பௌத்தம் எனப் பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் சோ.ந.கந்தசாமி அவர்களின் சீன இலக்கியம் எனும் 685 பக்கங்களில் ஓர் அற்புதக் களஞ்சியம்.

                    இந்நூல் உருவாக்கம் குறித்து தன்னுடைய முன்னுரையிர் பேராசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

                      இந்த நூலினை எழுதுவதற்குமுன் ஆங்கிலத்தில் சீன இலக்கியம் பற்றி வந்துள்ள வரலாற்று நூல்களையும் ஆராய்ச்சி நூல்களையும், மொழிபெயர்ப்புக்களையும் கலைக்களஞ்சியங்களையும் பயின்று போதிய தரவுகளைத் தொகுத்துக்கொண்டேன்..

                        எளிமையான இந்த தொடர்களுக்குப் பின் இருக்கும் கடுமையான உழைப்பை எண்ணி அதிர்ந்துபோனேன்..

                         ரசித்து வாசித்து முடித்திருக்கிறேன் இந்த நூலை. விரிவாக முடிந்தவரை எளிமையாக உங்களுக்குக் கருத்துரைக்கிறேன் விரைவில்.

                        தற்போது வாசித்துக்கொண்டிருக்கிற நூல்  திவே கோபாலய்யர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு எழுதிய விளக்கவுரையை..

                       விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னதுபோல ...

                       என் முன்னே சத்திய சமுத்திரம் கோஷித்துக்கொண்டிருக்கிறது. நானோ கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவனாக நின்றுக்கொண்டிருக்கிறேன் என்று..

                      நான் நிச்சயமாக ஐன்ஸ்டீன் இல்லை. ஆனால் வாசிக்கவேண்டியவை கடலாப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. நானோ வாசிப்புத் தாகம் அடங்காமல்..

                     இயன்றவரை வாசிப்போம் இருக்கும்வரையாக.
..
                     
                    
அன்புள்ள சகோதர  சகோதரிகளுக்கு

           ஹரணி வணக்கமுடன்.

           சூலை 2016 க்குப் பின் வலைப்பக்கம் வந்தாலும் எதுவும் பதிவிடவில்லை.
என் வேலையின் சுமைகள் கூடிப்போயின.

           இது தொடர்ந்து நிகழும் எனவே என்னுடைய பதிவுகளை ஒவ்வொரு ஆண்டும் கோடைவிடுமுறையான மே மற்றும் சூன் மாதங்களில் மட்டும் தொடர்ந்து பதிவிடமுடியும்.

              இடையில் வாய்ப்பு அமைகையில் பதிவிடுவேன்.

              வழக்கம்போல உங்களின் அன்பையும் கருத்தையும் பணிவுடன் வேண்டி.

               நன்றி வணக்கம்.

                அன்புடன்
                 ஹரணி.