Tuesday, June 28, 2016

கதை 4

           பட்டத்தை மறுத்த பட்டாம்பூச்சி…



           பறவைகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள்தான் அழகு என்கிற எண்ணம் இருந்தது. என்றாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
           துடிப்பி என்கிற சிட்டுக்குருவி ஒருநாள் பறவைகளிடம் இதுபற்றிய பேச்சை தொடங்கியது.
           கருப்புகூட அழகுதான் என்பதை குயில் கூவி சொன்னது.
           மேகமும் நானும் ஓர் வண்ணம் என்றது தவிட்டுக்குருவி.
           ஒவ்வொன்றும் அழகுக்கான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
           சரி யாரிடமாவது இதைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று அனைத்தும் ஒருமனதாக முடிவெடுத்தன.
           அந்தக் காட்டில் துள்ளிகுதிப்பான் என்கிற மான் இருந்தது.
           அதனை நடுவராக்கி தங்கள் விவாதங்களை முன் வைத்தன பறவைகள்.
           எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டது.
           சரி இதனை எங்கள் விலங்கு இனத்திடம் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுக்கு வரலாம் என்று துள்ளிக்குதிப்பான் கூற எல்லாமும் சம்மதித்தன.
           அப்படியே வாக்குப் பதிவு நடந்தது.
           கடைசியில் எல்லாமும் மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சிதான் அழகு என்று அதிகமாக வாக்களித்திருந்தன.
           அதை எல்லாமும் ஏற்றுக்கொண்டு அந்தப் பட்டாம்பூச்சிக்கு அழகுடையாள் என்கிற பட்டத்தை அளிக்க முடிவெடுத்து விழா ஏற்பாடு செய்தன.
          முறையான அழைப்பை விடுக்க அந்த மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சி அங்கே வந்து எனக்கு பட்டம் வேண்டாம் என்றதும் அனைத்துப் பறவைகளும் அதிர்ச்சியடைந்தன.
           ஏன் இது நல்ல விஷயந்தானே?


           இல்லை. இது நல்ல விஷயம் இல்லை. இன்றைக்கிருக்கிற பட்டாம்பூச்சியான என்னைப் பார்க்கிறீர்கள். எனது இளமைப் பருவம் அருவருப்பான புழுப்பருவம். அதனைப் பார்த்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு வரமாட்டீர்கள். தவிரவும் உழைப்புதான் நமக்கு எப்பவும் அழகு. இப்படிப் பட்டம் வாங்கிவிட்டால் அப்புறம் உழைப்பு மறந்துவிடும். இந்தப் பட்டத்திலேயே மயங்கிவிடுவோம். நல்ல உள்ளத்தைவிட அழகு எதுவுமில்லை. என்றபடி பட்டாம்பூச்சி பறந்துபோய்விட்டது.

           எல்லாவற்றையும் உள்ளும் புறமுமாய் கலைத்துவிட்டுப் பறவைகளும் பறந்துபோயின.

1 comment:

  1. நல்லதோர் நீதிக்கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete