Wednesday, October 18, 2023

 அன்புள்ளங்களுக்கு வணக்கம். 


 இருபத்து மூன்றாண்டுகள் கற்பித்தலுக்காகத் தமிழகமெங்கும் பயணித்திருக்கிறேன். பயண அனுபவங்கள் மனத்தில் காத்துக் கிடக்கின்றன. எழுதத் தொடங்கலாம் என முடிவு. 

       உங்களிடம் அன்பு ஆலோசனை. கட்டுரைத் தொடராக எழுதவா? நாவலாக எழுதவா?

         காத்திருக்கிறேன். 


பேரன்புடன்

ஹரணி

Friday, September 29, 2023

 

           அன்புள்ளங்களுக்கு

                       ஹரணியின் அன்பும் நன்றியும் மறவாத வணக்கங்கள்.

                        கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்திருக்கிறேன். இனித் தொடர்ந்து எழுதுவேன். வலைப்பக்கம் மற்றவற்றில் விடாது எழுதியதின் விளைவு இங்கே வரமுடியவில்லை. இனி முக நூலில் எழுதுவதை இங்கேயும் பதிவிடுவேன். என்றும்போல உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.


பேரன்புடன் 

ஹரணி

இன்று ஒரு பதிவுடன்.     






    கதைசொல்லி தஞ்சை ப்ரகாஷின் சிறுகதை –

                              ஜானுப்பாட்டி அழுதுகொண்டிருக்கிறாள்..

 

                                                                        ஹரணி

 

அறிமுகம்

                    தஞ்சை ப்ரகாஷ் மிகச் சிறந்த கதைசொல்லி. பன்முக ஆளுமைகொண்ட படைப்பாளி. கதைசொல்வதைப்போன்றே எழுதுவார். அல்லது எழுதுவதைப்போன்றே கதைசொல்லும் பாங்கு அவருடையது. மனித மனங்களின் உன்னதங்களைப் படம் பிடிக்கும் அவர் கதைகள். மனித மன வக்ரங்களைக் கண்டறிந்து பேசும் திறன்  கொண்ட கதைகள் அவருடைய கதைகள். துணிவுடன் அவருடைய சொற்கள் படிப்போரை மிரளவைக்கும். அழுத்தமான உணர்வுகளோடு பண்பாட்டின் அசைவுகளையும் காட்சிப்படுத்தும் கதைகள். இக்கட்டுரை அவருடைய ஜானுப்பாட்டி அழுதுகொண்டிருக்கிறாள் எனும் கதையின் பன்முகப் பரிமாணங்களை அடையாளப்படுத்துவதாய் அமைகிறது.

 

கதையின் பொருண்மை

           எண்பது வயதானவள் ஜானுப்பாட்டி. கண் சரியாகத் தெரியாதவள். அவளின் பேத்தி சீதா பதினாறு வயதுக்குரியவள் உலகம் அறியாதவள். வேறு யாருமற்ற அந்த அந்த வீட்டின் முகப்பில் இருக்கும் பிள்ளையார்கோயில் பாதுகாப்பிற்கு. இதற்குள்தான் கதை இயங்குகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வயதானவர்கள் எத்தகைய பாதுகாப்பு எல்லாவகையிலும் என்பதைக் குறிப்பாய் அதேசமயம் வலுவுடனும் உணர்த்திப் போகிறது இச்சிறுகதை.

 

கதை அமைப்பு

ஜானுப்பாட்டி, சீதா, ராஜாராமன் என்கிற எதிர்வீட்டுக்காரன். மனைவி   ஊருக்குப் போயிருக்கிற தனிமையில் இருக்கிற ராஜாராமன் சீதாவைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான்.  இதனை ஜானுப்பாட்டி உணர்ந்துகொள்கிறாள். உடல் வலுவற்ற அவள் தன்னுடைய மன வலுவால் எளிதாக இதனை  எதிர்கொண்டு   முடித்துவிடுகிறாள். இதை சீதா அறியாமல் முடிப்பதுதான் அருமையானது.

 

      உரையாடல் வன்மை

                      கதையின் தொடக்கமும் இடை வளர்ச்சியும் முடிவும் உரையாடலில் கருக்கொண்டு அழுத்தமாக நகர்ந்துபோகிறது.

                       அடீ சீத்தீ..அடி ஏ சீத்தீ

                       தோ வந்துட்டேன் பாட்டி

                       பாய்ந்து உள்ளே ஓடி வருகிறாள் சீதா.

                       இப்படி  திங்திங்குன்னு ஓடி வரப்படாதுன்னு எத்தினை தடவெ

சொல்லீர்க்கேண்டி நோக்கு.

பெண் பிள்ளையின் வளர்ப்புமுறையின் தொடக்கம் இது. எதை செய்யவேண்டும் எப்படி நடக்கவேண்டும் ஏன் ஓடக்கூடாது என்பது போன்ற செயல்பாடுகளில் கவனம் வைக்கிற அக்கறை இது.

                        பரபரன்னு குளிச்சோமா நெத்திக்கு இட்டுண்டோமா கோவுல்ல

                        எண்ணெ போட்டோமா ஏதானும் பொஸ்கத்தெ எடுத்துண்டமான்னு

                        இருக்க வாண்டாமோ பொண்ணுன்னா இப்படியா?

        இது உடல் வலுவற்ற நிலையில் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை.

கோயிலில் ஏற்றிய விளக்கையணைத்துவிட்டு வருகிற ராஜாராமனை ஒலிகளால் கண்டறிகிறாள் ஜானுப்பாட்டி.

           ராஜராமா எங்கேருக்கே  இப்டி பக்கத்ல வாயேன்… இதென்ன சட்டே..

வழுவழுன்னு இருக்கே.. டெரிலினா.. இன்ஸ்டிட்யூட்டெ இப்பெல்லாம் சீக்கிரமா   அடச்சுப்ட்டு இஞ்ச வந்துப்டுறயே..டைப் அடிக்கவரவாள்ளாம் சிரமப் பட மாட்டாளோ?

         குறிப்பாய் அவன் வந்த நோக்கத்தை தனக்குத் தெரியும் என்று அவனுக்கு உணர்த்துகிறாள். அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஜானுப்பாட்டியிடம் பேசத் தடுமாறுகிறான்.

                     அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி.. இப்டி ஒன்னெப் பாத்துப்ட்டு

மாமாவையும்.. வீட்லேயும் யாரு இருக்கா? பொழுது போகவேண்டாமோ?

                தன்னுடைய நோக்கத்தை மாற்றி நல்லவன் போல பேசும் ராஜாராமன் மனத்தைப் படித்தவளாக ஜானுப்பாட்டி சொற்களால் சாட்டை விளாசுகிறாள்.

                   கெடுக்கறதுன்னு கௌம்பீட்டே அதுக்குன்னு

                   என்ன சொல்றே பாட்டி? என்னது

                   அதாண்டா கோவில் சித்த நாழிக்கு மிந்தி வௌக்கு எரியறதான்னு பாக்க அங்க வந்தேண்டா… முசுமுசுன்னு மூச்சு விட்டா குருடிக்கு எங்க தெரியப் போறதுன்னு நெனச்சிண்டியோ?

                 ராஜாராமன் முகம் திடீரென்று வெளிறியது. உடல் திமிறியது. நெஞ்சில் பாம்பாய் பூணூல் நெளிந்து சுண்டியது. பாட்டிக்கு அதுவும்..

                மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறான்.

                 பாட்டி பட்டவர்த்தமாகப் போட்டு உடைக்கிறாள்.

                 நேத்தி வரைக்கும் பச்சகொழந் அவ… வஸ்த்ராபரணம்  பண்ணிபட்டே

இப்போ… இனிமே நெலகொள்ளுமா அவளுக்கு? பதினாறு வயசாகல்லே லோகந் தெரிஞ்சுடுத்து தரிப்பளோ இனிமே…அது எப்டியும் போறது தபார்னா… இனிமே இங்க வந்தே ஒம் பொண்டாட்டிகிட்ட நேரா போய்டும் விஷயம் ஆமா? ல்லேன்னா அவங்கிட்டச் சொல்லி.. அப்றம் நடக்கறதே வேற..தெரிஞ்சுக்கோ போய் தொலைடா…

             அவனுக்கு எளிதாக அவனின் கெட்ட நோக்கத்தை எடுத்துக் காட்டி அது இங்க செயற்படுத்தமுடியாது நானிருக்கும் வரை என்பதையும்  எடுத்துரைத்துவிடுகிறாள் ஜானுப்பாட்டி.

              தன்னுடைய பேத்தி சீதாவிடமும் குறிப்பாக எச்சரிக்கை செய்கிறாள்.

              வந்து..அப்போவே.. ஏத்தினேன்.. காத்துல..

              அனஞ்சுடுத்தோல்யோ பரவால்லே போயி ஏத்தி வெச்சு விழுந்துகும்பிட்டு வா.. போடி போனயா?

              கதையின் மையத்தை சுற்றியே உழலும் இந்த உரையாடல் கதைக்கு வன்மையாக அமைகிறது.

கதையின் நுட்பம்

                கதையின் மையக்கரு சிறிதாக இருந்தாலும் அதனை உருவாக்கும் கதையின் பின்னல் நுட்பமாகப் பின்னப்படுகிறது.  கதையின் சூழலில் முக்கியமானது பாட்டியும் அந்தப் பிள்ளையார் கோயிலுமே. சீதா என்னும் பெண்ணிற்குப் பாதுகாப்பு அரண்கள்.. கோயில் சூழல்

 

               அந்த சந்துக்குள் இருந்த அந்த பிள்ளையார் வரப்ரசாதி. ராமசாமி ஐயருக்கு கோவிலோடேயே இருந்த ஒரே வீட்டையும் கொடுத்து கோயிலையும் அந்த கையலகப் பிரஹாரத்தையும் பிரகாரத்தோடு ஒட்டினாப்போல இருக்கும் கிணற்றையும் ஆறுபத்து மல்லிகை, ஜெண்டி, ரோஜா, செடிக்கும்பலையும் ரெண்டு தென்னை, மூணு மா, இப்படி ஒரு மாட்டு கொட்டகை. ஒரு குப்பைக்குழியையும் கொடுத்து தன்னையும் பார்த்துக்கொள்ள ஏற்பாடு பண்ணியிருந்தார் அந்த மூலையடி பிள்ளையார்.

                  …சந்து ஜனம் அத்தனையும் உற்சவம் எடுத்தால் பிள்ளையாருக்கே இடமிருக்காது நிற்க. கோயில் நிலம் எல்லாமே ரெண்டு திண்ணை மூணு திண்ணையில் அடங்கிவிடும்.. விசித்திர நிலப்பரப்பில் சந்து மூலையில் பிள்ளையார் நிற்கிறார்..

              இதுதான் ஜானுப்பாட்டியி  உலகம். இந்த உலகத்தில்தான் வைத்து தன்னுடைய பேத்தியை வளர்க்கிறாள். அங்கிருக்கும் செடிகளோடு ஒரு செடியாய். கண் பார்வை தெரியவில்லை என்றாலும் நுட்பமாக காதுகளால் எல்லா ஒலியையும் வாங்கி வேறுபடுத்தி உணர்கிறாள்.

              கூடத்துக் கடிகாரத்தின் ஒலி…லொட் எனும் சிறு சப்தம்.. வலியன் குருவி சிடுசிடுக்கும் சப்தம், தென்னை காற்றில் சிலுசிலுக்கும் ஓசை, பிரகாரத்தில் நடக்கிற ஓசை..சுவர்க்கோழிகளின் இசை, மூச்சுக்கள் மோதும் ஓசை, மல்லிகை வாசனை, நெடி..

                வாசனைக்கும் நெடிக்குமான வேறுபாட்டை ஜானுப்பாட்டி உணர்த்துகிறாள்.

                  இது மல்லிகை வாசனைகூட அல்ல, மல்லிகை நசுங்கினால் தலையணையில் புரண்டால் வீசுகிற மல்லிகை நெடி.. அப்படியானால் நெடி வேறு வாசனை வேறா?

                நுட்பமான கதைசொல்லியின் சித்திரிப்பில் ஜானுப்பாட்டி காட்சிப்படுத்துகிறாள்.

                  இப்படி பல நுட்பங்களை ப்ரகாஷ் கதையின் பொருண்மையினூடே நகர்த்திப்போகிறார். இது வல்லமையான படைப்பாளுமையின் தெறிப்பாக ஒளிர்கிறது இக்கதையில்.

 

சொல்லாளுமை

                கதையின் போக்கிற்கு இடையூறு விளைவிக்காமல் சொற்பிரயோகம் புரண்டோடுகிறது நிறைநதியாய். புதுமையான சொல்லாட்சிகள் கதைசொல்லியின்  தேர்ந்த படைப்பாற்றலைப் படம்பிடிக்கிறது.

                   கண்ணாடியில் குலவிக் கொண்டிருந்த சீதாவை…

                    எண்ணை மினுங்க விரல்களில் கோதி நுனி வாங்கி பினைந்தாள்..

                    பால் நுரைக்க அவள் எவர்ஸில்வர் உருளியில் சலசலக்க ஊற்றுகிறான் அவன்.

                        இடுப்பில் வாயு உட்கார்ந்திருக்கிறது எப்போதும்.

                      பாட்டி இறங்குகிறாள் இருள் கவிந்துவிட்டது.

                      சுவர்க்கோழிகளின் அமைதியுடன் நசுங்கிய சப்தம்

                      பால் குடித்துக்கொண்டிருக்கும்போது தலைதூக்கிப் பூனை பார்ப்பதுபோல் வினோத சப்தம்.

                       கண்ணாடிப் பாத்திரம் சுவரில் உரசவதுபோல வேறு ஒரு சப்த அனுபவம்.

                       எவர்சில்வர் டம்ளரில் காப்பி ஆற்றுகிறாள் நுரைக்க நுரைக்க. மணம் முதல் தரம். புதிதாய் வறுத்து போட்டாயிருக்கிறது.

             இப்படியான சொற்றொடர்களே கதையைச் சொல்லிப்போவதுபோலவும் அதனைக் காட்சியோடு சொல்லிப்போவதுபோலவும் உருவாக்கியிருப்பது ப்ரகாஷின் தனித்த எழுத்தாளுமையையும் ஆழத்தையும் உறுதிப்படுத்துகிறது.

                  அக்காலச் சூழலின் நிலையில் ஜானுப்பாட்டியின் செயற்பாடுகளைப் பட்டியலிடுகிறபோது அது அவளுக்குச் சிரம்மானதல்ல என்பதையும் அக்காலத்தின் வரையறுக்கப்பட்ட விதி என்பதையும் ப்ரகாஷ் எடுத்துரைக்கிறார்.

 

                  இந்த ஆடி கடந்தால் பாட்டிக்கு எண்பது வயது ஆகிறது. காலையில் ஜபம் நீராகாரம் மழை காலமானாலும் தலையைச் சிரைப்பதோ பட்டினி கிடப்பதோ அவலைப் போட்டுக்கொண்டு வேளையை ஓட்டுவதோ ஈரத்தோடே  ஸ்தோத்திரத்தைச் சொல்லிக்கொண்டு செடிகளுடன் முனகுவதோ தண்ணீர் விடுவதோ எதுவுமே சிக்கலாகாது ஜானுப்பாட்டிக்கு..

 

கதையின் சிறப்பு

 

            கதையின் பொருண்மை சாதாரணமானது. ஆதரவற்ற ஒரு இளம் வயது பெண்ணுக்கு அவளுடைய கண்தெரியாத  எண்பது வயதுகடந்த பாட்டியே ஆதாரம். பற்றுக்கோடு. பாதுகாப்பு எல்லாமும். அப்படியிருக்கையில் அச்சிறு பெண்ணின் மனத்தைக் கலைத்துவிடுகிறான் ராஜாராமன். இவன் ஏற்கெனவே கல்யாணம் ஆனவன். என்றாலும் அவனின் இடைஞ்சலைத் தடுத்துவிடுகிறாள் ஜானுப்பாட்டி என்றாலும் இதனை கடைசிவரை செய்யமுடியுமா என்கிற சஞ்சலமே அவளை அழவைக்கிறது. இருப்பினும் தெய்வம் துணையிருக்கும் என்பதான ஒரு  நம்பிக்கையை அவளுடைய பேத்தி சீதாவை பிள்ளையாருக்கு விளக்கேற்றிவைத்து உருவாக்குகிறாள். தனக்குப் பின் தெய்வம் காக்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும் வயதாகியும் மனோபலம் எதனையும் எதிர்கொள்ளும் ஒரு செயற்பாட்டையும் இக்கதையின் சிறப்புக்களாக எண்ணிப் பார்க்கலாம்.

                 சிறு பொருண்மை அதைச் சுற்றிய பாத்திரங்கள் மூன்று அதற்குள்ளாக இயங்காப் பாத்திரம் பிள்ளையார். காட்சி, கதை சொல்லும் முறை, உரையாடல் வன்மை, கதையின் உத்தி நுட்பம், சிறப்பு எனும் பல்வேறு நிலைப்பாடுகளில் இக்கதை வெகு எளிமையாகவும் நுட்பமான உணர்வுகளின் பிரதிபலிப்பாலும் சொல்லுகிற முறையாலும் முடிக்கிற முடிப்பிலும் மேலோங்கி நிற்கிறது எனலாம்.  கதைக்கான உத்திகள் யாவும் அக்கதைப் பொருண்மையின் எல்லைக்குள்ளே நின்று அவற்றையே அழுத்தமுறப் பேசும் பாங்கைப் புலப்படுத்துவது கதைசொல்லி ப்ரகாஷின் மிகத் தேர்ந்த படைப்புத்திறனை வெளிப்படுத்துகிறது. ஒரு கதையின் வடிவத்தையும் அது உரைக்கும் பொருளையும் பல்வேறு உத்திகளால் இக்கதை எடுத்துக்காட்டுவிதம் வாசிப்போருக்கு வாசித்தலைத் தாண்டிய ஓர் அனுபவத்தைப் புதுமையாக்கி நிற்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.



000

 

 

                  

                     

 

    

 

 

 

 

Saturday, August 21, 2021

                                               திராட்சைக்கொத்து…

(மனம் போன போக்கில்)…

கொஞ்சம் கட்டுரை-க்கலாம்..

அன்புள்ளங்களுக்கு

வணக்கம்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மனத்துள் சுழன்றவண்ணம் இருக்கின்றன பல. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்புதியக் களம். வாரம் ஒரு முறை பகிரப்போகும் இப்பகுதிக்குத் திராட்சைக்கொத்து என்று பெயரிட்டிருக்கிறேன்.
திராட்சைக்கு இரு குணங்கள் உண்டு. புளிப்பும் இனிப்பும். புளிப்பை அப்படியே சாப்பிடுவோரும் உண்டு. ஆனால் புளிப்புத் திராட்சை எப்போதும் திரவ நிலையில் ஜுஸ் ஆக அருந்தச் சுவையாக இருக்கும். உங்களின் எந்தச் சுவையையும் இப் பகுதிக்கான வளர்பிறையாக எடுத்துக் கொள்கிறேன்.

முதல் கொத்தை எதிர்வரும் திங்கள் அன்று தருகிறேன். அடுத்தடுத்த வாரங்களில் அடுத்தடுத்தக் கிழமைகளில் தரலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. (இந்த வாரம் திங்கள் என்றால் அடுத்த வாரம் செவ் வாய்.. அப்புறம் புதன்.. இப்படியாக)

திங்களன்று சந்திப்போம். என்றும் உங்கள் அன்பிற்காகப் பேரன்புடன் ஹரணி.
வணக்கம்.

Sunday, June 27, 2021

 

              கண்ணதாசனின் வசந்த காலங்கள்…

                                     

 

     கண்ணதாசனை ஆசைதீர எல்லோரும் எழுதிப் பார்த்துவிட்டார்கள். அவன் படைப்புகளை ஆராய்ந்து பல பட்டங்கள் பெற்றும் விட்டார்கள். இனி எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தால் எவர் கிரீன் என்று சொல்வார்களே அப்படி அவனைப் பற்றி எழுதுவதற்கு இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அவனும் அவன் படைப்புகளை வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவத்தைக்  கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறான்.

     ஒரு படைப்பு என்றைக்குப் படைக்கப்பட்டிருந்தாலும் அது புழங்குகிற காலத்துப் பொருத்தத்தையுடையதாக அமைதல் என்பது அந்தப் படைப்பின் அசல் தன்மையையும் திறனையும் அடையாளப்படுத்துவதாகும். கண்ணதாசன் படைப்புகள் பெரும்பான்மையும் அப்படித்தான்.

      அவர் எழுதியுள்ள பல நூல்களில் ஒரு சிறுநூல் ஒரு மணிநேரத்திற்குள் வாசித்து முடித்துவிடக்கூடிய நூல் எனது வசந்த காலங்கள் என்பதாகும். ஒரு மணிநேரத்திற்குள் படித்து முடித்துவிடக்கூடிய திறன் இருந்தாலும் அது ஏற்படுத்தும் உணர்வுகள் ஆண்டுகளைக் கடக்கும் வல்லமை பெற்றவை.

         இந்த வசந்தகாலங்களும் அப்படித்தான். நான் தவற விட்டதை என் வாழ்வில் என்னைக் கடந்துபோனவற்றைத் திரும்ப அனுபவிக்க முடியாமல் அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நூலை எழுதுகிறேன் என்கிறான். அவருடைய சுயசரிமை வனவாசம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். என்றாலும் இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது

         வாழ்க்கை எப்படித் துவங்கி, எப்படிப் போய்விட்டது என்பதில் முடிந்தது.

           சொல்லப்போனால் எனது வனவாசத்தைக்கூட இதுதான் நிறைவு செய்யும் என்கிறார்.

         இந்நூலில் எட்டுக்கட்டுரைகள் உள்ளன. எட்டு என்பது ராசியான எண் என்பார்கள். ஒருவேளை இப்படிக் கழித்துவிட்ட வசந்தகாலங்களைத் திரும்பப் பெறமுடியாத நிலையில் எட்டு என்பதை வைத்தாரோ என்று நினைக்கவும் தோனுகிறது. இச்சிறுநூல் உணர்த்தவருவது இன்றைய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் பலவற்றைப் பேசியிருப்பதுதான். எல்லாவற்றையும் தன் வாழ்வின் அனுபவத்திலிருந்துதான் எடுத்துக் காட்டுகிறார். முதல் மூன்று கட்டுரைகள் தாய்மை குறித்தது. ஒரு தாய்மை எப்படி இருக்கவேண்டும் என்கிறார். தன் பெற்ற தாயையும் தத்துஎடுத்து வளர்த்த தாயையும் குறிப்பிடுகிறார். என்றாலும் நிறைய செய்திகளை இங்கே பதிவு செய்கிறார். தாய் தாலாட்டுப் பாடுவதில் உள்ள பண்பாடு, அவர்கள் பயன்படுத்தும் சொற்களிலுள்ள பண்பாடு என எல்லாவற்றையும் அழகுறப் பதிவுசெய்கிறான்.

        கண்ணதாசனின் சகோதரி மூன்று பிள்ளைகளைப் பெற்று மாண்டபோது பாடிய தாய் வண்ண மக்கள் ஆத்தா உன் வயிறெல்லாம் பிள்ளையல்லோ என்று வருணித்தாளாம். முப்பது வயதில் செத்துவிட்ட அவளைப் பார்த்து ஒப்பாரியிடும்போது அநியாயச் சாவுக்கு அடியெடுத்து வைத்த ஆத்தா என்று பாடினாளாம். ஜனனத்திலும் மரணத்திலும் தாய்மையின் சங்கீதம் பரமனையே மெய்சிலிர்க்க வைக்கிறது என்கிறான். அவர்கள் செய்த கிராமத்து வைத்தியத்தை வீட்டிலே உள்ள அஞ்சறைப்பெட்டி சொல்லும் என்கிறார். சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, தைவளை, தூதுவளை, பிரண்டை இப்படியே தாய்மை வளர்த்த ஆரோக்கியம் என்கிறார். பேதி ஆகிறது என்றால் வேவு குடித்தல் என்கிற வைத்தியம். கொதிக்கிற பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவார்கள். அது திரைந்துபோய் விடும். அதை வடிகட்டி சக்கையை எறிந்துவிட்டுச் சாற்றை மட்டும் அருந்தினால் வயிறு சரியாகிவிடும்.

      வள்ளிக்கிழங்கை மாமிசத்தில் போட்டு சமைத்தால் யாரும் மாமிசத்தைச் சாப்பிடமாட்டார்கள் அதைத்தான் சாப்பிடுவார்கள் என்கிறான். அதிகம் கிழங்கை உண்டுவிட்டால் நாலைந்து பூண்டுகளைச் சுட்டுச் சாப்பிட அதிகாலையில் வாயு முழுவதும் வெளியேறிவிடும் என்கிறான். தாய்மைக்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை என்கிறான். தன் பிள்ளைகளுக்குப் பெண் பார்க்கும்போதுகூட தாயைவிட்டு மகனைப் பிரிக்காத குடும்பமாகப் பார்க்கவேண்டும் என்று கருதியவன்.பெற்ற தாயின் மடியிலும் வளர்த்த தாயின் நிழலிலும் குடியிருந்த காலங்களே என் வாழ்வின் வசந்தகாலங்கள். வசந்தம் பூமியில் வருஷம் ஒருமுறை வரும். வாழ்வில், ஒரே ஒரு முறைதான் வரும் என்கிறான்.

     கல்லாதான் பெற்ற கருந்தனங்கள் என்னும் கட்டுரையில் வாசிப்பின் எழுதுவதின் சுகத்தை அனுபவிக்கத் தருகிறான். ஒருவனது உள்ளுணர்வில் என்ன தோன்றுகிறதோஅதே வழியில் அவனை விட்டுவிடவேண்டும். வேறு தொழில்களுக்கு அவனைத் திருப்பக்கூடாது என்கிறான்.

       இப்படிக் கூறுகிறான் கேளுங்கள்.

         சொல்லிக்கொடுத்த புத்தியும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாளைக்குக் கூடவரும்.

         நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறியே மிகும் என்றான் வள்ளுவன்..

         ஆட்டுக்கு இலை தழைகள் பிடிக்கும். மாட்டுக்குப் வைக்கோல் புண்ணாக்குப் பிடிக்கும். யானைக்குக் கரும்பு பிடிக்கும். குரங்குக்கு வாழைப்பழம் பிடிக்கும்.

         புண்ணாக்குத் தின்னும்படி குரங்கை வற்புறுத்தக்கூடாது. என்னை எங்கெங்கோ வேலைக்கு அனுப்ப என் பெற்றோர்கள் முயன்றார்கள்.

          அந்த வேலைகளும் கிடைக்கவில்லை. எழுத்தாசையும் என்னை விடவில்லை என்கிறான்.

            தன் வாழ்வின் அனுபவத்தின் அடிப்படையில் பாடல்கள் பிறந்ததை ஆற்றொழுக்கில் சொல்லிப்போகிறான். பைரன் என்னிடத்தில் தோற்றான். அனுபவத்தில் உமர்கய்யாம் என்னிடம் பிச்சை வாங்க வேண்டும். என்று தன் பாடல் புனையும் ஆற்றலைப் பெருமைப்படுத்துகிறான்.

      அதை எழுது இதை எழுது என்று ஏதோ ஒரு தேவதை என்னைப் பிடித்துத் தள்ளும் என்கிறான்.

        உலகத்தை முற்றும் உணர்ந்துகொண்ட பின்னாலேதான் என் எழுத்துகள் பிரகாசிக்கத் தொடங்கின என்கிறான். மெய்யாலும் மனத்தாலும் அனுபவித்தவற்றைப் பகிரும்வேளையே பாடல்களாகக் களங்கொண்டன அவனிடத்தில். மதுவின் சுகமும் அறிவேன். மதுவின் தீமையுமி அறிவேன். என்னைவிடச் சக்தி ஏது இவற்றை அறிவதற்கு என்கிறான்.

          ஒரு காலை சந்தனத்தில் வைத்தால் மறு காலைச் சேற்றில் வைப்பதே என் வாழ்க்கையின் விதி என்றாகிவிட்டது என்கிறான்.

        தலைக்கு மேலே தேவர்கள் பூமாரி பொழிவார்கள். காலுக்குக் கீழே கருநாகங்கள் படையெடுத்துக்கொண்டிருக்கும்.

      என் பக்கத்தில் மனிதர்களும் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பேய்களும் உட்கார்ந்துகொண்டிருக்கும்.

       வசனம் எழுதிக்கொண்டிருப்பேன். விசனம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும். நாம் எல்லாரிடத்திலும் அக்கறை செலுத்துகிறோம். நம் வாழ்க்கையில் யார் அக்கறை செலுத்துகிறார்கள்?

      எல்லாரும் நலம் வாழ நான் பாடுவேன்..நான் வாழ யார் பாடுவார்? என்று கேட்கிறான்.

         கோர்ட்டிலே என் பெயர் கூப்பிடாத நாள் கிடையாது.

         ஆனால் பாட்டெழுதுவதற்கு என் வீட்டை முற்றுகையிடாத ஆள்  கிடையாது.

          நதியினில் வெள்ளம். கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு.

          நிம்மதியில்லாமல் எழுதிய பாடல்களையே நீங்கள் நிமிமதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றான்.

          பத்துபேர் சொல்லும் புத்திமதியைக் கேட்க வேண்டியவன் பத்துப் பேருக்குப் புத்திசொல்லும் நிலைக்கு வந்தான் என்று அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய சூழலைக் குறிப்பிடுகிறான்.

          எனது தென்னை மரங்களில் இன்னும் சில இளநீர்கள் செழிக்கட்டும்.

         எனது நந்தவனத்தில் இன்னும் சில புஷ்பங்கள் மலரட்டும்.

         எனக்கு விளக்குகள் இன்னும் பிரகாசமாக எரியட்டும்.

         எனது சங்கீதம் தாளம் தப்பாமல் எழட்டும்.

         எல்லாம் கண்ணனுக்கே என்கிறான் ஒவ்வொன்றிலும்.

         கண்ணதாசன் என்னும் கவிஞன் இன்னும் கொண்டாடப்படட்டும் நமக்காக. நம் வாழ்வின் வசந்தக் காலங்களைத் தொலைத்துவிடாமல் அனுபவிக்கவும் சேமிக்கவுமாக.

         கண்ணதாசன் பிறந்தநாளான 24.6.21 அன்று எழுதியது.

                          00000         

Monday, June 21, 2021

 ரவா தோசையும் நாக்குப் பதுங்குகுழியும்…

பணி நிமித்தமாக தஞ்சைத் தொடங்கி நாகர்கோயில் வரையில் ஒரு மாவட்டம் விடாமல் எல்லா மாவட்டங்களிலும் தங்கியிருக்கிறேன். சனி. ஞாயிறு இரண்டு நாட்கள்.

இரண்டு நாட்களிலும் உணவு என்பது மாறாதது. காலையில் இட்லி. மதியம் விலை அதிகமுள்ள சாப்பாடு. இரவு மட்டும் ஒரேயொரு ரவா தோசை.

ரவா தோசையைத் தவிர வேறு எதையும் மனது விரும்புவதில்லை.

தஞ்சை நகராட்சிப் பள்ளியில் ஐந்தாவது படிக்கும்போது பள்ளிக்கு எதிரில் அப்பா வேலை பார்த்த மருத்துவமனை. அப்போது கரந்தையில் இருந்த ஓட்டல்கள் இரண்டுதான். ஒன்று ராமைய்யர் ஹோட்டல் மற்றொன்று கணேச பவன்.

அப்படி அடிக்கடி அங்கே ரவாதோசைதான் வாங்கித் தந்து நாக்கை யோகாசனப் பயிற்சிபோல ஆக்கிவிட்டார். அப்பாவை எல்லோருக்கும் தெரியும் என்பதால் (மருத்துவமனையில் பணிபுரிந்ததால். மருந்தாளுநர்) ரவா தோசையில் சிறப்புக் கவனமிருக்கும். தோசையைச் சுற்றி அளவிட்டதுபோல ஒட்டைகள் உடைந்த சோப்புக் குமிழிகளைப்போல இருக்கும். ஒரு ஓட்டைக்கும் இன்னொரு ஓட்டைக்கும் இடைபட்ட பகுதி லேசான சிவப்பில் வெந்திருக்கும். சுற்றுவட்டம் பிளேடுபோல கூர்மை. அதை மடக்கி எடுத்து வரும்போது முருங்கைக்காயைத் துண்டுபோட்டு தோலுரித்தது போலப் படக்கென்று மையப்பகுதி உடைந்து துருத்தி நிற்கும். நெய் வாசனை தூக்கும். சிவப்பு மிளகாய் போட்டு அரைத்த சட்னி சுவையைப் பெருக்கும். பெரும்பான்மைப் பச்சை மிளகாய் சட்னிதான்…அப்புறம் சாம்பார் ஊற்றுவார்கள். அந்த சாம்பாரின் மேல் லேசாக மேகத் திட்டுகளைப் போல ஜீனி தூவுவார் அப்பா..

ஒரு முறை பள்ளி விட்டதும் ரவா தோசை நினைப்பில் எதிரில் மருத்துவமனைக்குப் போய் அப்பாவைப பார்க்க வழிதெரியாமல் அந்த மருத்துவமனை கேட்டைப் பிடித்துக்கொண்டு உறங்கிவிட.. உள்ளே போய் தகவல் சொல்லி அப்பா வந்து என்னடா தம்பி..என்று லேசாய்க் கடிந்துவிட்டு அப்புறம் ரவா தோசை சாப்பிடவைத்து.. (வீட்டில் வந்து அம்மாவிடம் துடை திருகல் வாங்கியது வேறுகதை) வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இன்று வரை ரவாதோசை நாக்கின் நிழலாக நிற்கிறது. தஞ்சாவூரில் கோல்டன் கபே… ஆரிய பவன்.. ஹோட்டல்கார்த்திக். வெங்கடா லாட்ஜ் காபி பேலஸ் ( காபிபேலசில் மட்டும் சின்ன வெங்காயம் முழுசாப் போட்ட சாம்பார் வாசம் நாக்கைப் பியானோ வாசிக்க வைக்கும்) வசந்த பவன் மங்களாம்பிகா அப்புறம் சின்ன சின்ன உணவுக்கடைகள் இப்படி எல்லாவற்றிலும் ரவாதோசைக்குப் படையெடுத்தக் காலங்கள் போக. தஞ்சைத் தொடங்கி நாகர்கோயில் வரையிலும் இந்த நாக்கு ரவாதோசை வேட்டை யாடியது. . இருப்பினும் தஞ்சையின் ரவாதோசையே நாக்கை அரசாள்கிறது.

பொதுமுடக்கக் காலமாதலால் ரவாதோசை சாப்பிட்டு மாதங்களாகிவிட்டன. பார்சல் என்றாலும் கொரோனா பயம் ரவாதோசையின் ஆசையை நாக்கிற்குக் கீழாகப் பதுங்குகுழியில் பதுங்க வைத்திருக்கிறது.

00000
Maana Baskaran மற்றும் வடுவூர் சிவ. முரளி
2 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

2 கருத்துகள்