Sunday, July 3, 2016

கதை 7


                        குளத்து மீன்..

           மீன் பிடிப்பவன் கூடைக்குள் ஆற்று மீன், குளத்து மீன், ஏரி மீன் எனப் பிடித்து வைத்திருந்தான்.
            ஆற்று மீன் சொன்னது.
            நான் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் எத்தனை பெரிய ஆறு தெரியுமா?
            என்ன பெரிய ஆறு? நான் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் சின்ன கடல் தெரியுமா? என்றது ஏரி மீன்-
            ஏரியை விடு ஆறுதான் நீளமானது என்றது ஆற்று மீன்.
            ஆனால் ஓடுகிற ஆறை விடு கடல்போல இருக்கும் ஏரிதான் பெரிசு என்றது ஏரி மீன்.
            குளத்து மீன் பிடிபட்ட கவலையில் இருந்தது.
            இரண்டும் குளத்து மீனை கேலி பேசின.
            நம்மைப் போல சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. அது குளத்துல பிறந்ததுதானே?
            ஆமாம் ஆமாம் அதுக்குப் பெருமை பேச என்ன இருக்கிறது?
            அப்பவும் குளத்து மீன் அமைதியாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.
            ஏய்.. என்ன பேசாம இருக்கே? ஏதாவது பேசு.
            என்ன பேச? என்றது குளத்து மீன்.
             அடக்கடவுளே முட்டாளே உனக்கு என்னதான் தெரியும்? என்றன இரண்டும்.
             அப்போது கூடையை எடுத்த மீன்பிடிப்பவன் ஒரு தடவை அந்தக் கூடையை அப்படியே குளத்து நீரில் ஒரு மூழ்கு மூழ்கியெடுக்கக் கூடையயைப் பாதியளவு நீரில் அமுக்கினான்.
              இதுதான் சமயமென்று.. எனக்கு இதுதான் தெரியுமென்று ஒரு துள்ளு துள்ளி கூடையை விட்டுக் குளத்தில் விழுந்தது குளத்து மீன்.
               அப்போதுதான் இரண்டு மீன்களும் தங்களின் ஆபத்தை உணர்ந்தன. ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது.


நீதி.  ஆபத்துதான் அறிவாளியை அடையாளம் காட்டும்.