Saturday, July 11, 2020

குறுங்கதை… 4

                            கடமையாளன் 
                                                            ஹரணி 

                 இனி டாக்டர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இது முதல் அட்டாக் என்றாலும் கடுமையான அட்டாக். சங்கரன் பிழைப்பது மிகச் சிரமம் என்று சொல்லிவிட்டார்கள். இன்னும் நினைவு திரும்பாமல் கிடக்கிறார்.

                 அருகில் மனைவியும் மகனும் மட்டுமே மாறி இருக்கிறார்கள். வேறு சொந்தங்கள் யாரையும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

                   ஏம்மா என்று கேட்டான் மகன்.

                   வேண்டாம்.. இது தொற்றுக் காலமாக இருக்கிறது. அதுவும் நாம இருக்கிறது மருத்துவமனையில். யாரும் வந்து பார்த்து ஏதாவது ஆயிடிச்சின்னா அவங்களுக்கும் துன்பம் நமக்கும் துன்பம். உங்களாலதான் வந்துடுச்சின்னு சட்டுன்னு சொல்லிடுவாங்கள். காலம் முழுக்கச் சொல்லுவாங்க வேண்டாம் நம்மோட நோய்க்கு நாமளே வழி பாத்துக்கலாம்.

                   அதற்கு மேல் மகன் பேசவில்லை.

                   சங்கரன் குடும்பம் அப்படித்தான். யாருக்கும் துன்பம் கொடுக்காத குடும்பம். முடிந்தவரை சங்கரனே எல்லாவற்றையும் பார்ப்பார். அலுவலகத்திலும் அப்படித்தான் இழுத்துப்போட்டு செய்வார்.

                   நல்லா காக்காப் புடிக்கிற ஆளு சங்கரன்.

                   காரியக்காரன் நல்ல பேரு எடுக்கறானாம்.

                  முன்னாடி பிரமோசன் கொடுத்துடுவாங்களாம்.

                   இது எல்லாம் ஒரு பொழப்பு.

                   அவவன் வேலய பாத்துட்டுப் போவ வேண்டியது தானே? இவனுங்க மாதிரி ஆளுங்களால அடுத்தவங்களுக்குத்தான் தொந்திரவு..சே..
                   வாயுள்ளவர்கள் எல்லாம் பேசிக் களித்தார்கள்.

                 பக்கத்துச்சீட்டு சாமி நாராயணன் கேட்டார். சங்கரா அவா என்னப் பேசறாங்கன்னு கேட்டியோல்லியோ.. என்றார்.

                 கேட்டுக்கிட்டுதான் இருக்கேன் சாமி.

                  உனக்கெல்லாம் கோவமே வராதாடா அம்பி..

                  சாமி.. கோபப்படறதுக்கு இதுல என்ன இருக்கு. எங்கப்பாவுக்கு இதே பேருதான். வலிய வலியப் போய் வேலை செய்வார். சொல்லுவாரு.. சங்கரா.. நமக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. அத நடத்தறதுக்கு ஒரு வேல அமைஞ்சிருக்கும். வாழ்க்கையை எப்படி ரசித்து வாழறமோ அதுமாதிரி அதுக்குக் காரணமான வேலயயும் ரசித்து செய்யணும். நமக்குப் புடிச்சமான சாப்பாட்டை யார் சொன்னாலும் கேப்பமா? எப்படி அனுபவிச்சிச் சாப்பிடமாட்டோம். அதுமாதிரிதான்.. ஒவ்வொரு நாளும் வேலயப் பெண்டிங் வைக்காம முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பி வா எத்தனை நிம்மதியா தூக்கம் வரும். நாம ஒரு பைல் எழுதறோம்னா அதுல எத்தனை பேரு வாழ்க்கை இருக்கு.. அதப் பாதிச்சிடக்கூடாது சங்கரா.. மனுசங்களுக்காக எதையும் செய்யக்கூடாது நம்ப மனசாட்சிக்காகச் செய்யணும். அவரோட புள்ள சாமி நான்.. சொல்லிட்டுப் போகட்டும்.

      சங்கரனைப் பெருமையாகப் பார்த்தார் சாமி நாராயணன்.

              இப்போது எல்லாம் மறந்து அல்லது நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறாரா என்று தெரியவில்லை. தூங்குவதுபோலத்தான் இருந்தார்.
                 அன்று வெள்ளிக்கிழமை. அதிகாலை 3 மணிக்கு சங்கரன் உயிர் போய்விட்டது.

                 வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்.

                 சங்கரனின் மகன் உறவுகளுக்கு எல்லாம் தகவல் தெரிவிக்க ஆரம்பித்தான். அந்தத் தகவல் இதுதான்.

                அன்புள்ள…

                         என் தந்தையார் மு.சங்கரன் அவர்கள் இறந்து போய்விட்டார்கள். இன்று காரியங்கள் நடக்கவுள்ளன. அன்புகூர்ந்து யாரும் வரவேண்டாம். இது கொரோனாக் காலம். என் அப்பா உயிருடன் இருக்கும்போது யாரோ இறந்த மரணம் குறித்துப் பேசும்போது சொன்னவை இது. அவரவர்கள் வீட்டிலேயே இருங்கள். தொற்றுப் பரவ என் அப்பா மரணம் காரணமாக இருக்கக்கூடாது. கடைசிவரை யாருக்கும் தொந்தரவு தராமல் அப்பா இறந்தார் என்றுதான் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். என் அப்பாவின் மீதான் உங்கள் அன்பை நீங்கள் விடும் கண்ணீர்த்துளிகளில் தெரிவியுங்கள். கைப்பேசியில் ஆறுதலைக் கூறுங்கள். அக்கம் பக்கம் இருக்கும் ஒருசிலரைக் கொண்டு அப்பாவின் காரியங்களை முடிக்கிறோம்.  நன்றி வணக்கம். இப்படிக்கு மு.சங்கரனின் மகன்.

            கைப்பேசியில் தட்டச்சிட்டு அம்மாவிடம் காண்பித்தான். அவள் பெருமிதமாக மகனைப் பார்த்தபடி அனுப்பு என்று கண்களால் சம்மதம் சொன்னாள். சங்கரனின் மகன் அனுப்ப ஆரம்பித்தான்.

                                 00000                  


            

2 comments:

  1. தந்தை வழியிலேயே மகன். நல்லதொரு கதை. ‘

    தொடரட்டும் நல்வழிக் கதைகள்.

    ReplyDelete