Friday, July 10, 2020

என்னமோ நடக்குது.. குறுந்தொடர் 8


குறுந்தொடர்  
              என்னமோ நடக்குது…
                                    அத்தியாயம் 8
 000

            துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டவுடனேயே திறந்த கேட்டைக் கூட மூடாமல் அப்படியே திரும்பி ஓடினார் ராகவன். சற்று தூரம் தாண்டி ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். நெஞ்சம் முழுக்கப் படபடப்பு குதிரையாய் ஓடியது. மாட்டிக்கொண்டு விட்டோம் என்பதுவே அவரை நிலைகுலைய வைத்தது. மிச்சமிருக்கும் வாழ்க்கை முழுக்க சிறையில் என்ற நினைவு வந்து அவரைத் தேளாய் கொட்டியது. மனைவி, மகன், உறவுகள் எல்லாம் தன்னைக் கேவலமாக எண்ணி ஒதுக்கும்.  யாருமற்ற அனாதையாய் காலம்போன கடைசியில் சாகப்போகிறோம் அதுவும் குற்றவாளியாய் சிறையில். அவர் தப்பான உறவுக்கு ஆசைப்பட்டதுதான் செய்த குற்றமே தவிர. காயத்ரியைக் கொன்றது அவருக்குத் தெரியாது. அதுவும் விளையாட்டாய் தட்டப்போக உயிர்போகும் என்று நினைக்கவேயில்லை. காயத்ரியின் குடும்பம் தன்னை என்ன நினைக்கும்? காயத்ரியைக் கொன்றவர்கள் மிரட்டுகிறார்கள். அவர்கள் உண்மையைச் சொல்லிவிட்டால் தண்டனை நிச்சயமாகிவிடும். நடக்க முடியவில்லை. மெயின் ரோட்டிற்கு வந்தபோது தலைசுற்றியது. ஏற்கெனவே பிரசர் இருக்கு. கண்கள் லேசாய் இருண்டன. பக்கத்தில் பார்த்தார் ஒரு டீக்கடை தெரிந்தது. வேகமாய் நடந்து அப்படியே டீக்கடையில் போடப்பட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்து பையில் இருந்த பிரசர் மாத்திரையை அவச7ரமாக எடுத்து டீக்கடைக்காரனிடம்.. தம்பி சீக்கிரம் தண்ணி கொடு என்று வாங்கி மாத்திரையை விழுங்கினார். கண்களைச் சுற்றிச்சூழ்ந்த மேகங்கள் விலகின. ஆனால் படபடப்பு நீங்கவில்லை.
             என்ன சார் ? உடம்பு சரியில்லியா டீ போடவா
             கொடுப்பா.. சர்க்கரை வேண்டாம்.
             டீயைக் குடித்தார். சற்று அமைதியாக இருந்தது. டீக்குக் காசைக் கொடுத்துவிட்டு நடந்தார். நாளை அவள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் செய்தித்தாளில் வரும்போது தன்வீடு என்னவாகும்?
            முதன்முதலாக தன் இலட்சியமாகக் கட்டிய வீடு அவருக்கு அந்நியமாகிப்போனதோடு அதுவே சிறைச்சாலையாக உணர ஆரம்பித்தார். உப்புத் தின்றவர் தண்ணீர் குடிக்கவேண்டும். ஆனால் ராகவன் உப்புக்கடலை அல்லவா குடித்திருக்கிறார்.

            ஆம் தவறான காம உறவு உப்புக்கடல்தான்.

000

            அந்தப் பங்களாவில் துப்பாக்கி வெடிப்பதற்குச் சற்றுமுன் நிகழ்ந்த உரையாடல்கள்.

             எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அதுக்காகத்தான் நாள் முழுக்க நேரங்காலம் பார்க்காமல் உழைச்சேன். இன்னிக்கு கோடிக்கணக்கில் செல்வம் இருக்கும். ஆனா வாழ்க்கை இல்ல. அன்னிக்கு வறுமையால என் வாழ்க்கை தள்ளாடுனிச்சி. இன்னிக்கு உன்னால தூர்ந்துபோவப்போவுது..  நம்பிக்கைதானடி வாழ்க்கை. ஆம்பள வீட்டவிட்டு வெளியே போறான்னா வீட்டுலே உள்ள பொம்பள நமக்காக இருக்கா.. அவளோட துக்கம் மகிழ்ச்சி எல்லாமும் நம்மோடதான்.. அவ பாத்துக்குவா.. புள்ளங்களப் பாத்துக்குவா குடும்பத்த பாத்துக்குவான்னு நம்பித்தானே போறோம்.. நாள் முழுக்க உழைச்சி ராத்திரி வந்து பொம்பள முகத்துல முழிக்கும்போது எத்தனை நிம்மதியா இருக்கு.. நாள் முழுக்க உழைக்கறதுக்கு அர்த்தம் இருக்கும். கேவலம் உடம்புக்காக இப்படியொரு காரியத்த பண்ணிட்டியே அடங்காத எதுவும் நிலைக்காது. அழிஞ்சிடும். அது மத்தவங்களயும் அழிச்சிடும்.. நான் என்னடி குறை வச்சேன்?  நமக்குப் பிறந்த புள்ளங்கள நினைக்கலியே… என்ன குறைச்சல் உனக்கு? பணம், பங்களா.. எல்லாம் சம்பாதிச்சு வச்சிருக்கேன்.. இன்னும் நாலு தலைமுறைக்குக் குறையாக சேத்திருக்கேன்.. நான் செத்துப்போயிட்டாக்கூட நீ கையேந்தாம மகராணி மாதிரி இருக்கலாமே.. அப்படியொரு ஆசை உனக்கு இருக்குன்னா நான் செத்தப்பிறவு எப்படியோ போயிருக்கலாம்.. நான் உயிரோட இருக்கும்போதே.. அந்தக் காயத்ரி சொன்னப்பா செத்துப்போயிட்டேண்டி.. உனக்கு தண்டனை கெடச்சாகணும்.. விடமாட்டேன் உனக்குத் தண்டனை கொடுக்கமா விடமாட்டேன்…

          ஓடிப்போய் அவன் கால்களில் விழுந்து கதறினாள்.. மன்னிச்சிடுங்க.. மன்னிச்சிடுங்க.. என்று கெஞ்சினாள்.

            அவன் கேட்கவில்லை.

           உன்ன மன்னிக்க முடியாது.. நல்லா கேட்டுக்க உனக்குத் தண்டனை கொடுத்துடடுத்தான் போவேன்..  ஆனா உன்ன துப்பாக்கியால சுடமாட்டேன் உன்ன கொல்லமாட்டேன்.. உன்ன தவிர யாரையும் நான் பாக்கலே பொண்டாட்டியா.. அப்படி உன்னை நேசிச்சேன்.. அதுல மண்ண அள்ளிப்போட்டுட்டே.. இனி உன்னோட நான் வாழமாட்டேன்.. உன்னக் கொல்லமாட்டேன்.. நான் சாகப்போறேன்.. காலம் முழுக்க ஒரு நல்லவன சாகடிச்சிட்டோம்னு உனக்கு நினப்பு வரும.. இன்னொருத்தன் நினைப்புல இருக்கிறவளுக்கு எப்படி வரும்னு நினைக்கலாம்.. நாளக்கி நான் செத்தபிறகு பிள்ளைகள் வருவாங்க.. உன்னைக் கேள்வி கேப்பாங்க.. பதில் சொல்லும்போது நினைப்பு வரும்.. அதான் உனக்குத் தண்டனை… அடிப்பாவி உன்னோட எப்படிஎல்லாம் வாழணும்னு புள்ளங்களுக்கு எப்படி எல்லாம் வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு நினைச்சேன்.. அத்தனையையும் நெருப்பு வச்சி கொளுத்திட்டியேடி.. நான் என்னடி தப்பு பண்ணேன்.. என்று அழுதபடி அறைக்குள் ஓடித் தாழிட்டுக்கொண்டான்.

                சற்று நேரத்தில் துப்பாக்கி வெடித்தது.

                அய்யோ.. அய்யோ.. இப்படி பண்ணிட்டேனே… என்று தாழிட்ட கதவிற்கு முன் அமர்ந்து கதறினாள். அப்படியே தெருவுக்கு ஓடி தெருவில் கத்தினாள்.

                 சற்று நேரத்தில் தெரு கூடிவிட்டது.

                 யாரோ போலிசுக்குப் போன் செய்தார்கள்.

                 போலிஸ் வந்து கதவை உடைத்தார்கள். வாய்க்குள் வைத்து சுட்டுக்கொண்டு முகம் சிதைந்து இறந்துபோயிருந்தான். எல்லா காரியங்களும் நடந்து உடல் போஸ்ட் மார்ட்டம் போனது. அவளை விசாரணை செய்தார்கள். அவன் சுட்டுக்கொண்ட அறையில் ஒரு கடிதம் கிடைத்தது.

                  என் வாழ்க்கையில் நடக்கக்கூடாத தவறு நேர்ந்துவிட்டது. அதற்கு நானே பொறுப்பு. இதனை அறிந்துகொண்ட என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் காயத்ரியை நான்தான் ஆள் ஏற்பாடு செய்து கொன்றேன். என் குடும்பக் கௌரவம் மானம் போய்விடக்கூடாதே என்று. என் மனைவியைப் பிரிவதில் வேதனை அடைகிறேன். இப்படிக்கு என்று எழுதிக் கையொப்பமிட்டிருந்தான்.

             மனைவிமேல் கொண்ட அன்பினால் அவளைக் கொலைக் குற்றத்திலிருந்தும் அவன் காப்பாற்றியிருந்தான்.

                 மறுநாள் செய்தித்தாளில் செய்தி நிறைய படங்களுடன் வெளிவந்திருந்தது. பிரபல தொழிலதிபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை. காயத்ரி எனும் இளம்பெண்ணை கொன்ற வழக்கில் திருப்பம். மனைவி கதறல். போலிஸ் விசாரணை நடைபெறுகிறது.

                0000

            ராகவன் தலை குனிந்து அமர்ந்திருந்தவர் நிமிர்ந்தார். என்ன இது? அவளின் கணவன் பழியைத் தன்மீது போட்டுக்கொண்டு போயிருக்கிறான். அப்போ அவள் நிரபராதி. கடவுளே தன்னையும் பாதிக்காது. நிம்மதியடைந்தார்.

             பார்த்தியா.. இதுதான் நாளைக்கு உனக்கும் கதி.. என்று கோபி கத்தினான்.

               ஒழுங்கா வேலய பாத்துக்கிட்டுப் போடா…

               இவர் அவள் வீட்டுக்குப் போனதைப் பார்த்த சாட்சி இல்லை. அவளுக்கும் இவருக்குமான உறவுகுறித்து நிருபிப்பார் யாருமில்லை. கடவுள் மட்டுமே சாட்சி.

              அவளை விசாரணை முடித்து அனுப்பிவிட்டார்கள். சற்றே நிம்மதி அடைந்தாலும் பிள்ளைகளுக்கு செய்தி அனுப்ப அவர்கள் உடன் விமானத்தில் வந்து சேர்ந்தார்கள். வயதுக்கு வந்த மகன் மற்றும் மகள். எல்லாக் காரியங்களையும் முடித்தார்கள். உடன் எங்களுக்கு வேலையிருக்கிறது என்று மறுபடியும் விமானத்தில் பறந்துபோனார்கள்.

             அவரின் விதி முடிந்துவிட்டது. நாங்கள் வாழவேண்டுமே என்கிற அயல் நாட்டின் தத்துவார்த்தங்களுடன்  பின்னிப் பிணைந்தவர்கள்.

              இப்போது இவள் தனிமரமாக நின்றாள். கிட்டத்தட்ட எல்லாம் இருந்தும் அநாதைதான்.

              யாரோ செய்த வினைக்கு யாரோ பலி ஆகிவிட்டார்கள்.

              கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?

              உண்மையாய் மனைவியை நேசிப்பவன் வாழக்கூடாதா இவ்வுலகில்?

               கணவனுக்குத் துரோகம் செய்பவர்கள் உள்ளம்தான் முக்கியம் காமம் அல்ல என்று ஏன் உணர மறுக்கிறார்கள்?

            விதி எனும் கயிற்றில் வித்தியாச நிறங்கொண்ட மனிதர்களை ஏன் கடவுள் ஒன்றாகக் கோர்த்து மாலையாக்கி விளையாடுகிறார்? அதை ஏன் நல்லவர்கள் மேல் சூடிப்பார்க்கிறார்?
கடவுள் அப்படிப்பட்டவரா? நல்ல மனிதர்களுக்குத் தீங்கிழைப்பவரா கடவுள்? 
                                                     
                                                          (இன்னும் நடக்கும்)
              
        

4 comments:

  1. முந்தைய பகுதியும் வாசித்து விட்டு வந்தேன் ஐயா...

    ReplyDelete
  2. மனதைத் தொட்டது அந்த மனிதரின் வார்த்தைகள்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நன்றிகள் ஐயா

      Delete