Thursday, July 9, 2020



                                மாண்புடை மாதரசி பெருங்கோப்பெண்டு
                    (இலக்கிய நாடகம்)

முன் குறிப்பு
           ஒல்லையூர் வென்று மீட்டுத்  தந்த பூதப்பாண்டியன் எனும் அரசனின் மனைவி பெருங்கோப்பெண்டு. போரில் அரசன் இறந்தபின்பு பெருங்கோப்பெண்டும் உயிர்துறக்கிறாள். இதுதான் நாடகத்தின் மையச் சுருக்கம். இலக்கியச் சுவைக்காக சில கற்பனை பாத்திரங்களும் காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. புறநானூற்றில் உள்ள முக்கியப் பாடல்களுள் இப் பாடலும் ஒன்று.

                        காட்சி ஒன்று

            இடம் – பேராலவாயர் எனும் புலவனின் இல்லம்.

            மாந்தர்கள் – பேராலவாயர், அவரின் மனைவி மற்றும் சிலர்

    பேராலவாயர் தன் இல்லத்தின் முன்றிலில் போடப்பட்டுள்ள அழகான வடிவமைக்கப்பட்ட உயரமான ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். வலது காலைக் குத்துக்காலிட்டும் இடது காலைத் தொங்கவிட்டும் குத்துக்காலிட்ட காலின் முழங்கால் பகுதியில் வலது கையை முட்டுக்கொடுத்து நெற்றியை நாகம் படமெடுத்ததுபோல ஐந்துவிரல்களையும் மடக்கி அதன் மேல் வைத்துப் பெருங்கவலை தோய்ந்த முகத்துடன் தலை குனிந்தமர்ந்திருக்கிறார்.

           அப்போது அவரின் இல்லாள் வருகிறாள். கையில் வெள்ளிக் குவளையில் பால் எடுத்து வருகிறார் . பேராலவாயர் அருந்துவதற்காக. அவளுக்கு முன்னால் அந்தப் பாலின் மணம் கமழ்ந்து மிதந்து பேராலவாயர் நாசிகளில் படர்ந்து படபடக்கிறது. நிமிர்கிறார்.

இல்லாள் – மதுரை பேராலவாயர் என்றால் மாநகரே கைகூப்பி 
             வணங்கும் புலவர் பெருமான. வானம் விழுந்துவிடுமோ 
              வையகம் தாழ்ந்து அழியுமோ என்பதுபோல 
             இத்தனை விசனத்தை வரைவதேன் ஐயா..

பேராலவாயர் -   என்னருமை  இல்லக் கிழத்தியே.. விசனம்தான்.. 
          கூடவே பெருங்கவலையும் பூத்துக் கிடக்கிறேன். பாகனுக்குக் 
          கட்டுப்படாத வேழம் போல மனம் அலைகிறது.. 
          அடக்க முடியாமல்  தவிக்கிறேன்..

இல்லான் -    நீங்கள் இத்தனை துயர்பூத்த முகத்தைக் கொண்டிருப்பது
               என்னைக் கலக்கமுற வைக்கிறது. இந்தாருங்கள் இந்தப்
               பாலை அருந்துங்கள்.. படபடக்கும் மனத்தைச் சற்றே
               ஆறுதல் படுத்துங்கள்..

பேராலவாயர் – வேண்டாம். பாலின் சுவை அறிந்து அருந்து நிலையை
               நான் மறந்திருக்கிறேன். மனம் எதனையும் அருந்தவோ
               அணியவோ மறுக்கிறது. பெருங்கவலை என்னைக்
               கொன்றுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்..

இல்லாள் – (பதட்டமுடன் பால் குவளையை அருகில் தரையில் 
        வைத்து)  என்ன இது அமங்கலச் சொல்லை அஞ்சாமல் 
         கொட்டுகிறீர் சற்றே இதழ்களை மூடுங்கள்.. சொல்லுங்கள்.. 
         ஏன் இப்படி ஒருநாளுமில்லாத திருநாளாய் அவலச்சொற்கள் 
          உங்கள் உள்ளம் உடைந்து அணிவகுகின்றன..

பேராலவாயர் – (இல்லாளை ஒருமுறைக் கூர்ந்து பார்க்கிறார்)
               என் ஐயன்.. தலைவன்.. பாண்டிய நாட்டின் இறைவன்..
               பூதப்பாண்டியன் மறைந்துபோனான்.. அந்த வேதனையே
            நாடெங்கும் ஒவ்வொரு உயிரின் உள்ளும் அணைக்கமுடியா
               அனலாய்ப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அது இன்னும்
            அணைய வில்லை.. அதற்குள் மாதரசி.. பெருங்கோப்பெண்டு
               உயிர்துறக்க உறுதிபூண்டுவிட்டாள்.. அய்யோ நான் என்
               செய்வேன்.. அரசியே அன்னையே என்று விளித்தால்
               அமுதுண்டீரா என்று அன்பொழுகப் கேட்பார்.. அவரின்
               முடிவு என்னைக் கொல்லாமல் கொன்று சிதைக்க
              முயல்கிறது.. அந்த விசனம்தான்..

        அப்போது வீதியில் பெரிய களிறுகள் உலர் விறகுகளைச் சுமந்து போகின்றன.. அந்தக் காட்சியைக் கண்டதும் பேராலவாயர் வாய்விட்டுக் கதறுகிறார்.. கண்ணீர் கண்களை நிறைத்துத் தளும்பி கன்னங்களில் நதியாகிறது.
         
       பேராலவாயர் – அய்யோ.. இதோ மதக் களிறுகள் உலர்
                     விறகெடுத்துப் போகின்றனவே.. உறுதியாகிவிட்டதே..
                      ‘அன்னையே இனி உங்களை என்று காண்பேன்..?

       இல்லாள் சற்றே ஓடிப்போய் பார்க்கிறாள். அரசியார் பெருங்கோப்பெண்டு தீப்பாய்வதற்கான மூட்டப்படுவதற்கான எரிவிறகுகள் அவை. யானைகள்தாம் எடுத்துச்செல்லும். இல்லாள் மனம் குலைவுடன் விரைந்து திரும்பி வருகையில் பேராலவாயர் கண்ணீர் பெருகும் கண்களுடன் பாடத் தொடங்குகிறார்.

         யானை தந்த முளிமர விறகின்
         கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
         மடமான் பெருநிரை வைகுதுயிர் எடுப்பி
         மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
         பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
         தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
         முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
         சிறுநனி தமியள் ஆயினும்
         இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

பாடலில் நடுக்கம் தெரிகிறது. சொற்கள் ஒவ்வொன்றும் துயரக் கங்குகளைச் சிந்துகிறது. இல்லாள் பாடும் பேராலவாயரைக் கண்டு அவளும் கண்ணீர் விடுகிறாள். பக்கத்தில் உள்ள பால்குவளையில் ஆடை படிந்து அதில் சிறுபூச்சிகள் விழுந்து துடித்துக்கொண்டிருக்கின்றன.

                                    000000                 ( துயர் பரவும்)

No comments:

Post a Comment