Saturday, June 27, 2020

என்னமோ நடக்குது.... அத்தியாயம் 5




                       கோபி மனதுடைந்து போயிருந்தான். அமெரிக்காவில் படித்தாலும் அவன் இந்திய குணாதிசயங்களுடன்தான் இருந்தான். அவனையும் நிறையபேர் அணுகியிருந்தார்கள். அவன் யாரையும் தேர்வு செய்யவில்லை. அன்பாக மறுத்திருந்தான்.
                        மன்னிததுவிடுங்கள். எனக்குக் காதல் பிடிக்காது. காதல் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. எனக்குப் பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்தான் மனைவியாக வரவேண்டும். என்னை நம்பிக்கையோடு வளர்த்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நான் மண்ணள்ளிப் புதைக்கமாட்டேன். பெற்றெடுத்தது முதல் இன்றுவரை பார்த்துப் பார்த்து எல்லாமும் செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் என் வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று. காதல் மேல் நம்பிக்கையுள்ளவர்கள் விரும்புகிறவர்கள் இவர்களை அணுகுங்கள்.. நான் பொருத்தமானவன் இல்லை. பழமைவாதி என்று முத்திரை குத்தலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.  அவர்கள் இல்லையென்றால் எனக்கு இந்த அமெரிக்க வாழ்க்கை இல்லை.  நவீனமாக வந்துவிட்டால் எல்லாமும் மாறிவிடுமா? என்னுடைய நண்பர்கள் பலர் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் வாழ்வதுபோல நடிக்கிறார்கள். என்னுடைய உறவுப்பெண் ஒருத்தி கல்யாணத்திற்கு முதல்நாள் வரை மறைத்து வைத்து மறுநாள் அவளுக்குப் பிடித்தமானவனுடன் ஓடிப்போய்விட்டாள். அவளுடைய தந்தை மனம் வெடித்துச் சிதறிப்போனார். ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என்று பதறினார். மாப்பிள்ளை பார்த்தபோது, பெண் பார்க்க வந்தபோது, நிச்சயம் நடந்தபோது, பத்திரிக்கை அடித்தபோது, எல்லோருக்கும் விநியோகம் செய்தபோது, முதல்நாளில்  ஏன் இப்படி செய்தாள் என்று அப்படியே நொந்து அவமானப்பட்டு இறந்துபோனார். இப்போது அந்தப்பெண்ணுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவன் சொல்கிறான் அப்பா  தினமும் மாமா ஒருத்தர் வீட்டுக்கு வர்றாறு.. அம்மா எனக்கு எதுவுமே தரமாட்டேங்குது.. சாப்பிட.. ஆகவே எனக்கு காதல் திருமணத்தில் நம்பிக்கைஇல்லை. ஆயிரம் விவேகம் புரட்சிப் பேசலாம்.. எனக்கு வேண்டாம். எனக்கு என் அப்பாவும் அம்மாவும் மிக முக்கியம்.. ஆகவே அவர்கள் பார்க்கிற பெண்தான் இந்த ஜென்மத்தில் மனைவி...
                  ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
                 இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்கும் நடக்காத அதிசயம்.
                 பெண் பார்க்கப்போன பெண் கொலைசெய்யப்படுவாளா?
                  யாருக்கும் நேரக்கூடாது.
                  பெண்ணைப் பெற்றவருக்கு எப்படி இருக்கும்?
                  ஒரு பெண்ணுக்கு எவ்வளவுதான் நேரும் சங்கடங்கள்?
                   எம் பொண்ணுக்கு இத்தனை வயசாகுது இன்னமும வயதுக்கு வரவில்லை... டாக்டருகிட்ட  ட்ரீட்மெண்ட் நடக்குது சார்..
                   இல்ல சார்.. கொஞ்சம் மனவளர்ச்சி இல்ல சார்.. பிறந்ததுலேர்ந்து இப்படித்தான்.. எத்தனை காலத்துக்கு இப்படி படப்போறோமோ.. நாங்க போயிட்ட அவ கதி.. யார் கிட்ட ஒப்படைக்கமுடியும்?  நாங்க ஒரு முடிவு எடுத்து வச்சிருக்கோம்...
                     நல்லாத்தான் படிக்கிருக்கா.. கேம்பஸ்ல கெடக்கலே... சார்..
                     கேம்பஸ்ல கெடச்சு வேல பாக்கறா சார்.. மாசம் சுளையா எம்பதாயிரம் சம்பளம் சார்.. நாக தோஷங்கறாங்க.. மாங்கல்யத் தோஷங்கறா.. ஒரு வரன் அமைய மாட்டேங்குது.. வயசு வேற ஏறிக்கிட்டே போவுது எங்க கவலையபோல..
                      கல்யாணம் பண்ணிக்கொடுத்த விதவிதமா பிரச்சினை..
                      கல்யாணம் பண்ணி எல்லாமும் நல்லா அமைஞ்சவங்க எத்தனை விழுக்காடுன்னு கணக்கு எடுக்கணும் சார்..
                      ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும்.. எம் பொண்ணுகூட ரொம்பக் கஷ்டப்பட்டா மாமியார் கொடுமை.. இப்ப சரியாயிடிச்சு.. சார்..
                      இதுமாதிரி சொல்றதுக்கு இல்லாம பெண் அதுவும் நல்ல குடும்பத்துப் பெண்ண கொலை செய்யற அளவுக்கு என்ன பிரச்சினையா இருக்கும்?
                      கோவி காயத்ரி குடும்பத் நினைச்சுக் கலங்கினான்.கூடவே தன் முதல் பெண் பார்க்கும் படலம் இப்படி திடுக்கிடும் சம்பவமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை..

                     காயத்ரி அப்பா எம்பொண்ணு அப்படி இல்ல தம்பி.. அத்தனை திறமைசாலி.. அவ உண்டு அவ வேலையுண்டுன்னு இருப்பா.. அவளுக்கு எதிரிங்களே கெடயாது.. சாது.. புள்ளப்பூச்சி... தம்பி நீங்க மாப்பிள்ளையா வர எனக்குக் கொடுத்து வைக்கலே.. எம் பொண்ணுக்கும் கொடுத்து வைக்கலே.. ஆனா இத சும்மா விடமாட்டேன்.. எவனோ சினிமாக்காரன் கொன்னுட்டான்னு கேஸ முடிக்கப் பாக்கறாங்க.. நான் டெல்லி வரைக்கும் போவேன்..  எனக்குத் தம்பி முறை ஒருத்தன் டில்லியில இருக்கான்.. பெரிய பதவி.. அவனுக்குப் போன் பண்ணி சொல்லிட்டேன்.. அடுத்த வாரத்துல வரேன்.. நான் வந்து பார்த்துக்கறேன்னுட்டு சொல்லியிருக்கான்.. தம்பி..
                         கோபிக்கும் இதில் அக்கறையும் கவலையும் வந்தது.
                         காயத்ரி கொல்லப்படுவதற்குக் காரணம் யாராக இருக்கும்?
                         எப்படியும் கண்டுபிடிப்பதில் தன்னுடைய பங்கும் இருக்கவேண்டும என்று நினைத்தான். அவனுடைய நண்பன் வளவன் நினைவுக்கு வந்தான். கோபியைப் போல நன்றாகப் படிப்பவன். ஆனால் இன்னும் வேலை கிடைக்காமல் இருக்கிறான்.. எதையும் புத்திசாலித்தனமாக யோசிப்பான். எல்லோரும் ஒரு வழியை யோசித்தால் அவன் வேறு வழியை யோசித்து சொல்வான். அது வித்தியாசமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கவும் செய்யும்.  அவனைப் பார்த்தே வெகு ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது எப்படி இருப்பான் என்று தெரியாது. ஆனால் அவன் வீடு தெரியும். போய் பார்க்கலாம்..
                         வளவன் இருக்கும் தெருவிற்கு வந்தான். வீடு பூட்டிக் கிடந்தது.
                         பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் வந்தார். யார தம்பி தேடறீங்க?
                         வளவன்னு என்னோடு படிச்சாரு...
                         அவங்களா தம்பி.. வீட்டை க் காலி பண்ணிட்டு போயிட்டாங்களே...
                        சட்டென்று மூடு அவுட்டானான் கோபி.
                        அப்படியா?
                        எதிர் புறத்திலிருந்து ஒருவன் வந்தான்... சார்.. வளவன்  வீடு மாறினது எனக்குத் தெரியும் சார்? என்றான்.
                        சொல்லுங்களேன்.
                         நம்ப புது பஸ்டாண்ட் இருக்குதுல்ல..
                         ஆமாம்..
                          அங்கே ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு சார்.. அதுக்குப் பக்கத்துல காத்தபெருமாள் தெருன்னு பேரு சார்.. அந்தத் தெருதான்.. அவங்க அப்பா ஆசாரி.. அம்மா சித்தாள் வேலை பாக்கறாங்க..
                             ரொம்பத் தேங்க்ஸ்  என்றபடி புதிய பேருந்துநிலையம் வந்து குறிப்பிட்ட தெருவிற்குப் போனான்..
                              வளவன் வீட்டில் இல்லை. அவன் பெற்றோர் இருந்தார்கள்.
                              விவரம் சொன்னான்.
                              இருங்க தம்பி.. அவனோட படிச்சவங்களா.. இப்ப வந்துடுவான்.. கொஞ்சம்புத்தி மதி சொல்லுங்க.. காலா காலத்துல ஒரு வேலைக்குப் போவச்சொல்லுங்க..
                             எங்க போயிருக்கான் இப்போ?
                             என்னமோ கண்டுபிடிக்கறானாம்.. போலிஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கான்.. வயித்துல புளிய கரச்சிட்டு உக்காந்திருக்கோம் தம்பி என்றார்கள்.
                              போலிஸ் ஸ்டேஷனுக்கா.. வளவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

                                                                                   (இன்னும் நடக்கும்)

4 comments:

  1. ம்ம்ம்ம்... கோபியும் வளவனும் நண்பர்கள்...

    தொடரட்டும் கதை. நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள
      வணக்கம். தங்களின் அன்பிற்கு நன்றிகள்.

      Delete
  2. // கல்யாணம் பண்ணி எல்லாமும் நல்லா அமைஞ்சவங்க எத்தனை விழுக்காடுன்னு கணக்கு எடுக்கணும் //

    அதானே...!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள தனபாலன் சார்

      வணக்கம். தங்களின் அன்பிற்குப் பணிகிறேன். நன்றிகள்.

      Delete