Sunday, December 28, 2014

உரையாடல் சுவை....




               இலக்கியங்கள் சுவையானவை.  அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என்பது சொற்சுவை, பொருட்சுவை, கருத்துச்சுவை, ஓசை எனப் பல்வகை சுவையும் கொண்ட இலக்கியம் அதிலிருந்து சிறு உரையாடல். இது சிங்கனுக்கும் சிங்கிக்கும் நடந்த உரையாட்ல்.

              உலா வரும் திருக்குற்றால நாதரிடம் ஏழுவகைப் பெண்களிடம் ஒருத்தியான வசந்தவல்லி என்னும் அழகி அவர் மேல் காதல் கொள்கிறாள். அவளுக்குக் குறி சொல்ல வருபவள் குறத்தி. அவள் குறி சொல்லி ஏராளமான பரிசுகளைப் பெறுகிறாள். அவள் கணவன் குறவன். இவர்கள்தான் சிங்கனும் சிங்கியும்.

             சிங்கியைக் காணாமல் சிங்கன் பல இடங்களில் தேடிக் கடைசியில் திருக்குற்றாலத் தெருவில் அவளைக் கண்டுபிடிக்கிறான். அவள் உடம்பெங்கும் அணிகலன்களையும் புதிய புடவையையும் அணிந்திருக்கிறாள். சிங்கன் அவற்றில் மயங்குகிறான். அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெறும் உரையாட்ல் இது. வெகு சுவையாக உள்ளது. நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.


சிங்கன்  -  இத்தனை நாளா சொல்லாமல் எங்கேடி போனே சிங்கி?
சிங்கி     -   பெண்களுக்கு வித்தாரமாக குறி சொல்லப் போனேனடா சிங்கா.


சிங்கன் -   உன்னைப் பார்க்க அதிசயமா இருக்கு. சொல்ல அச்சமாவும்
                     இருக்குதடி சிங்கி.
சிங்கி     -   அஞ்சாமல் மனத்தில் தோன்றியதை சொல்லடா சிங்கா.


சிங்கன்  -  உன் காலுக்கு மேலே பெரிய வீரியன் பாம்பு கடித்துக் கிடப்பானேன்
                     சிங்கி?
சிங்கி     -   சேலத்து நாட்டில் குறிச் சொல்லக் கிடைத்த சிலம்பட அது சிங்கா.


சிங்கன் -   சிலம்புக்கு மேலே ஏதோ திருகலும் முறுகலும் அது என்னடி சிங்கி?
சிங்கி     -   அது கலிங்க நாட்டார் கொடுத்த முறுக்கிட்ட தண்டையடா சிங்கா.


சிங்கன் -   நீண்டும் குறுகியும் நாங்கூழ்ப் புழுவைப் போல  நெ ளிவு அது
                      என்னடி சிங்கி?
சிங்கி     -   பாண்டியனார் மகள் கேட்ட குறிக்கிட்ட பாவிகமடா சிங்கா.


சிங்கன் -   செத்த தவளையை உன் காலிலே கட்டிய காரணம் என்னடி சிங்கி?
சிங்கி    -   குற்றாலருடைய சந்நிதியில் வாழும் பெண்கள் தநத மணிகொச்ச
                     மடா சிங்கா.


சிங்கன் -  உன் சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பானேன்
                    சிங்கி?
சிங்கி     -  கண்டிய தேசத்தில்  நான் பெற்ற காலாழியும் பீலியுமடா சிங்கா.


சிங்கன் -  உன் தொடைமேல வாழைக்குருதை இப்படி விரித்து மடித்து
                     வைத்தது யாரடி சிங்கி?
சிங்கி    -   திருநெல்வேலியார் தந்த சல்லாச் சேலைதான் அது சிங்கா.


சிங்கன் -  உன் தொடைகளின்மேல சாரைப்பாம்புபோல கிடப்பது ஏதடி
                     சிங்கி?
சிங்கி     -  சோழ அரச குமாரத்தி தந்த செம்பொன் அரைஞாணடா சிங்கா.


சிங்கன் -   உன் மார்புக்கு மேலே கொப்புளஙகள் அது ஏனடி சிங்கி-
சிங்கி    -    காயப் பட்டினத்தால் தந்த பெரிய முத்தாரமடா சிங்கா.


சிங்கன் -  எட்டுப் பறவைகள் குமுறுவதுபோனறு குரல் எழும்பும் கமுகு
                    போன்ற உன் கழுத்திலே எட்டுப் பாம்புகள் ஏதடி சிங்கி?
சிங்கி     -  குட்டத்து நாட்டாரும் காயங்குளத்தாரும் இட்ட சவடியடா சிங்கா.


சிங்கன் -   காதில் கள்ளிப்பூ பூத்திருக்கேடி சிஙகி?
சிங்கி     -   அது தெற்கு வள்ளியூரார் தந்த மாணிக்க தண்டொட்டியடா சிங்கா.


சிங்கன் -    குமிழமலர்  மூக்கில் புன்னை அரும்பு ஏதடி சிங்கி?
சிங்கி     -    முத்து மூக்குத்தியடா சிங்கா.


சிங்கன் -   சொருகி முடித்த உன் கூந்தலில் துர்க்கணாங்குருவிக் கூடு ஏதடி
                      சிங்கி?
சிங்கி    -    தென் குருகையூரார் தந்த குப்பியும் தொங்கலுமடா சிங்கா.


இப்படியாக நீண்டுபோகிறது உரையாடல் . இறுதியில்


சிங்கன் - விந்தைக்காரியான உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது சிங்கி.
சிங்கி     - அதில் சந்தேகமோ, உன் தலைப்  பேனைக் கேளடா சிங்கா.


என்கிறாள்.

                    எத்தனை இலக்கியவளமும் சுவையும் பாருங்கள்.



Tuesday, December 23, 2014

ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்



வணக்கம்.

                       என்னுடைய  குரு  பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன். இதுவரை 64 நுர்ல்களை எழுதியுள்ளார். ஒவவொரு புத்தகம் ஒவ்வொரு தளத்தில் இயங்குபவை.

                         இவரைப் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவு நெடுநாட்களுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

                          இந்தப் பதிவு இவருடைய ஒரு நுர்ல் பற்றி.

                          நுர்லின் பெயர்  ஊசிக்கதைகளும் சில உண்மை நிகழ்வுகளும்.

                          எத்தனையோ சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன. என்றாலும் இச்சிறுகதை தொகுப்பு மாறுபட்டது.

                         காலங்காலமாக நமக்குச் சொல்ப்பட்டு வந்த நீதிக்கதைகள் பல தந்திரங்களை உள்ளடக்கியவை. இவற்றை தன்னுடைய அனுபவத்தில் வேறாகப் பார்த்துப் புதிய சிந்தனையை உண்டாக்குகிறார் பேராசிரியர் அவர்கள்.

                       இதற்கு இன்றையக்கான அவசியம் நேர்ந்திருக்கிறது.


                     இன்றைய சமுகத்தை மாசுபடுத்துபவர்களை ஒரு சிறிய
                     ஊசியாலாவது குத்திப் பார்க்கவேண்டுமென்ற துடிப்பு
                    எனக்கிருந்தது. பெருமைப்படத்தக்க சில உண்மை நிகழ்வு
                     களை எடுத்துச் சொல்லி இவற்றில் உள்ளதுபோல வாழ்ந்து
                     பாருங்களேன் என்று இளைஞர்களைத் துர்ண்டும் நோக்கம்
                     எனக்கிருந்தது. இவற்றின் விளைவே இந்த நுர்லாகும்.


என்கிறார். ஆனால் உண்மை மிகக் கசப்பானது. எப்படியென்றால் இன்றைக்கு தேவை ஊசிகளல்ல கடப்பாரைகள். லட்சக்கணக்கில் கடப்பாரைகள் தேவை. ஆனால் கடப்பாரைகள்தான் முறிந்துபோகும் செயலற்று. இப்படியெண்ணி மறநதுபோகலாம். இங்கு குவெபா அவர்கள் ஊசியால் குத்துவது என்பது உண்மையின் ஊசியால் மனத்தில் தைப்பது என்கிறபொருளாகும்.

                       .........................நீதிக் கருவூலங்கள் இன்று பூட்டுத் திறக்கப்படாமல்
                     இரும்புப் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்டுவிட்டன. அந்த வாழும்
                     மறைகள் வாழ்க்கை மறைகளாகவில்லை. அந்த நீதிகளை எளிமை
                     யாக என் அனுபவக் கல்வியில் பெற்ற பயிற்சியோடு சேர்த்து இந்த
                     நுர்லை உருவாக்கி உங்கள் முன் அளிக்கின்றேன். இளைஞர்களின்
                     வாழ்க்கையில் இந்த நுர்ல் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கும்
                     என்பது என் உறுதியான நம்பிக்கை. வெறுங்கதை சொல்லிச் சிரிக்க
                     வைத்துப் படிப்போர் பொழுதை வீணடிக்க நான் விரும்பவில்லை.
                     விழலுக்கு நீர்பாய்ச்சுவதால் பயன் ஏது? விளைவயல்களாக இருக்க
                     வேண்டிய இளைஞர் உலகில் களைகள் மண்டிக் கொண்டிருக்கின்றன.
                     பொழுதுபோக்கே வாழ்க்கை நோக்கம் எனப் பூரித்துப் போயிருக்கிறது.
                     இளைஞர் உலகம். அதனைத் திசை திருப்பவே இந்நுர்ல் ஆக்கப்
                     பட்டுள்ளது.


                              கதைத்தொகுப்பின் நோக்கம் இது.

                        இத்தொகுப்பில் 45 கதைகள் உள்ளன.  இரு கதைகள் உங்களின் பார்வைக்கு சான்றாக.

                            ஆற்றில் விழுந்த கோடாரி என்கிற கதை எல்லோரும் அறிந்ததுதான். விறகு வெட்டியின் நேர்மையால் தங்கம், வெள்ளி, இரும்பு எனக் கோடரி கிடைத்தது. இதனைப் பின்வருமாறு மாற்றி யோசித்து நம்மையும் பலமாக சிந்திக்கத் துர்ண்டுகிறார்.

                   விறகு வெட்டுபவரே ஆற்றில் கோடரி விழுந்துவிட்டதா? பரிவோடு
              கேட்டது தேவதை. 

                     ஆம் அம்மா. அவன் இயல்பாகக் கூறினான்.

                    கவலைப்படவேண்டாம் நான் இந்த ஆற்றில் மூழ்கி உன் கோடரியை
              எடுத்துத் தருகிறேன் என்றது வனதேவதை.

                     ..................நீ போய்வா.. நான் நீந்தத் தெரிந்தவன்.. நான் கைதவறவிட்ட
              கோடரியை நானே எடுத்துக்கொள்வேன் என்றான் கோடரிக்காரன்.

                      ...........................................

                       காலகாலமாக இப்படித்தானே கதை சொல்லி வருகின்றனர். ஆனால்   என் கதை வேறு. கோடரி என்றால் அது விறகு பிளக்கவேண்டும். தங்கத்தால் செய்த கோடரி வீட்டின் தரித்திரத்தை மாற்றலாம். ஆனால் உழைப்பை மறக்கடிக்கும். அதை அணிகலனாகச் செய்து அணிந்துகொண்டால், கடினமான   உழைப்பைப் புறக்கணிக்கும். பாதுகாப்பாக வைக்கப் பெரிய இடம் கேட்கும். பிறகு உதவிக்கு ஆள்கேட்கும். வெள்ளிக்கோடரியை அழகிய தட்டாக்கி உணவு     உண்ணலாம். ஆனால் நான் குடிக்கும் கூழுக்கு அது மிகை. ஆகவே என்    உழைப்பு மூலதனத்திற்கு ஏற்ற துணைக்கருவி இரும்புக் கோடரிதான். அதை ஆற்றில் மூழ்கி நானே எடுத்துக்கொள்வேன். வேலைசெய்யும் நேரம் உன்னோடு பேசி வீணாகிவிட்டது. உன் பட்டாடை கசங்காமல் அணிகலன்கள் பறிபோகாமல்
              பத்திரமாகப் போய்வா என்றான் விறகுவெட்டி.
இன்னொரு  கதை

       நான் யார் தெரியுமா? என்கிற கதை. இக்கதையில் வரும உரையாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும்.

                  திரு கந்தசாமி அவர்களே உங்கள் சிறப்புத்தகுதி?

                     ஐயா, நான் கலியுகக் கலைக்காவலர் என்ற சிறப்புப்
                     பெயரைப் பெற்றவன்.

                  அப்பாடா, கவலை இல்லை. இந்த யுகமுழுவதும் நீங்கள்
                  கலைகளைக் காப்பாற்றி விடுவீர்கள். அது சரி இந்தப் பட்டத்தை
                  உங்களுக்கு யார் கொடுத்தார்கள்.

                      கள்ளிக்காரன் புதுக்குடி மழலையர் பள்ளித் தொடக்க
                  விழாவின்போது அதன் தாளாளர் மாட்டுத்தரகர் மாடசாமி
                  கொடுத்தது.

                      மிகச் சிறப்பு கந்தசாமி அடுத்து சண்முகவேலன் அவர்களே
                   உங்கள் சிறப்புப் பெயர்?

                           சாதிக் கழக்கறுத்த சண்டமாருதம் சண்முகவேலன் என்பார்கள்
                    என்னை.

                           உங்களுக்கு இந்தப் பட்டத்தைத் தந்தவர்?

                        கொண்டையாம்பட்டி கோபாலகிருஷ்ணக் கோனாலும் ஐயன்வாடி
                    சுந்தரசாமித் தேவரும் ஐயா.

                          மிக நன்று பாராட்டுகள் அடுத்து நீங்கள்.

                     புரட்சி எழுத்துப் புயல்வேகச் சிந்தனை வேந்தன் பொழிலன்.

                          உங்களுக்கு இந்தப் பட்டத்தை வழங்கியவர்
.
                     மனவளர்ச்சியற்ற மக்கள் மன்றத்தார்.

                          எதற்காகக் கொடுத்தார்கள்?

                     அவர்கள் மன்றத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.

                     அதற்கு ஒரு மரியாதையாக.

                           மிக நன்று நர்மதா உங்கள் தகுதி.

 நாட்டியக்கலை அரசி அபிநயக் கூடாரம் அங்கலாவண்யள அழகு சித்திரம்    என்பது நான் பெற்ற பட்டம்.

                            இவற்றை வழங்கியவர்.

                            என் பாட்டி பிறவி நாட்டியக் கலாராணி பிரேமலதா அவர்கள்.

                            அவர்கள் அவ்வளவு சிறப்பாக ஆடுவார்களா?

                            அவர்கள் நடப்பதே நாட்டியம் போல இருக்கும்.

                            ஏன்?

                            பிறவியிலேயே அவர்களுக்கு ஒரு கால் ஊனம்.

இதுபோன்று ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு ஊசியாய் தைக்கின்றன. நியாமுள்ளவர்கள் தர்மவான்கள் என்பதுபோல இது சரியான தளத்திற்குச் சென்றால் உரிய நியாயத்தின் முத்திரையாகப் பதியும்.

                அவசியம் படிக்கவேண்டிய தொகுப்பு இது. 

               புத்தக விவரம் . அனுராதா பப்ளிகேஷன்ஸ்
                               விடையல் கருப்பூர், கும்பகோணம். 612 605.
                                  பேச. 04366-262237, 263237



                   


                             






                       

Wednesday, December 17, 2014

தாயற்ற பாவிகாள்....




                                     ஒரு கணம் இதயம் உறைந்துவிட்டது இயங்காமல்.  மிருகங்கள்கூட  குழந்தைகள்  என்றால் இரக்கம் காட்டும் என்பதற்கு ஏராளமான செய்திகள் வருகின்றன.

                                     மிருகத்தைவிடக் கேவலமானவர்கள் என்பதை தாலிபான்கள்......காட்சிப்படுத்தியிருக்கும் கொடூரச் செயல் இது.

                                     பிள்ளைகள் என்ன செய்தன?

                                     படிக்கிற வகுப்பறைக்குள்  மரணத்தையா பாடமாகப் போதிப்பது.

                                     என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள்  அம்மாவைக் கூட நினைக்கமுடியாமல் உயிர் போயிருக்குமே... தாலிபான்  பாவிகளே.. நீங்கள் ஒருவர்கூட தாய்க்குப் பிறக்கவில்லை...

                                     அம்மா என்று  மிருங்கள்கூட  உச்சரிக்கின்றன.  உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டன.

                                     இவர்களைப் பிள்ளைகளாகப் பெற்றதாக எண்ணிய  தாய் உள்ளங்களே.. உங்கள் இதயத்தை அடைத்துவிடுங்கள் இந்தப் பாவிகளுக்குத் துளிகூட கருணையின்றி..

                                      இயக்கம் என்பதற்குப் பெரிய பொருள் உண்டு.  ஒவவொரு தேசத்திலும் விடுதலைப் போராட்டச் சூழமைவில் இயக்கங்கள் மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கின்றன. அவை அந்தந்த தேசத்தில் மிகப்பெரும் நன்மைகளை ஏற்படுத்தியவை.

                                         குழந்தைகளைக் கொல்கிற ஒன்று எப்படி இயக்கமாக இருக்கமுடியும்?  உலகின் மிகச்சிற்ந்த கோழைகள், எதற்கும் தகுதியற்ற தீவிரவாதம் என்கிற ஒரு விஷத்தை மட்டுமே உண்கிற கொலைகார பாவிகள்... ஒன்று சேர்ந்திருக்கிற மலமடிக்கும் சாக்கடை.. இயக்கமல்ல...

                                         காலையில் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளைகளை பிணங்களாகப் பெற்ற தாய்களுக்குத் தந்திருக்கிறீர்கள்... அந்த தாய் உள்ளங்கள் என்ன பாடுபடும்?  அவர்களின் சாபம் உங்களைப் போன்ற இயக்கங்களை விரைவில் அழித்து சாம்பல் ஆக்கிவிடும்.. இது சத்தியம்..

                                            அல்லா உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... அல்லாவின் தண்டனை உங்களுக்கு நிச்சயம் உண்டு.



                                              இளம் பட்டாம்பூச்சிகளே
                                              சிறகடிக்க வழியற்று
                                              உயிரறுத்துப்போனார்கள் பாவிகாள...

                                               இதயத்தின் வேதனை அடங்கவில்லை.
                                               பிள்ளைகளே....பிள்ளைகளே...

                                               உங்களின் ஆன்மாவில் என்னைப்
                                                புதைக்கிறேன்...  செய்வதறியாமல்...

                                               மீண்டும் பிறந்து வாருங்கள்
                                               உங்களின் தாயின் கருவறைக்குள்...

                                               அல்லாவையும் ஆண்டவனையும்
                                               வேண்டி நிற்கிறேன்...




                                         

                                           

                                         

Monday, December 15, 2014

உள்ளம் இடிகிறது...




                     தமிழ் செம்மொழியாகி வேண்டுமென்கிற அளவிறகு விழாவும் கொண்டாடியாகி முடிந்துவிட்டது.

                     செம்மொழி என்பதற்கு அடிப்படை தமிழின் சங்க இலக்கியங்கள்.  பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்கிற இலக்கியங்கள்.

                     இவ்விலக்கியங்களைப் பாடிய புலவர்களும் அவர்கள் பட்டபாடும் எழுத்தில் வடிக்கமுடியாதவை.

                     ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த மனித  வாழ்வைத் தேடி இரவும் பகலும் பாராமல் ஓயாமல் எந்தவித வாகன வசதியுமற்ற காலவெளியில் ஓயாத மனத்துடன் அலைந்தவர் தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதய்யர் அவர்கள். உவேசா என்று அழைக்கப்படுபவர்.

                    அவர் பட்ட பாடுகளும் அத்தனை துன்பங்களுக்கிடையில் அவர் சேகரித்துப் பாதுகாத்துத் தந்துவிட்டுப்போயிருக்கிற இலக்கியங்கள் ஏராளமானவை.

                       அவர் இல்லையென்றால் அவ்விலக்கியங்கள் இல்லை. அவ்விலக்கியங்கள் இல்லையென்றால் இன்றைக்குப் பலருக்கு பிழைப்பே இல்லை.

                        தமிழ்மொழி உள்ளளவும் தமிழ்பேசும் உள்ளம் உள்ளளவும் அவரை மற்க்கக்கூடாது. மறந்தால் அவர்களை மன்னிக்கவும் முடியாது.

                         அப்படிப்பட்டவரின் வீடு இடிக்கப்பட்டுவிட்டது.

                         முன்பிருந்தே தமிழுணர்வு உள்ளவர்கள் போராடியும் பலனற்று அவ்வீட்டை வாங்கியவர்கள் அதன் அருமை தெரியாமல் இடித்துவிட்டார்கள். அரசும் பேசாமல் இருந்துவிட்டது.

                          அவ்வீட்டை நினைவு இல்லம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமான தானே வரவேண்டிய உணர்வுள்ள கோரிக்கை விடுக்கப்பட்டும் இடிக்கப்பட்டுள்ளது தமிழ்த்தாத்தாவின் வீடு.

                            அரிய பல நுர்ல்களைப்  புதிப்பித்தவர் (பதிப்பித்தவர்)

                             கருத்தரங்குகள் அல்லது அவரின் பிறந்த நாளில் அல்லது நினைவுநாளில் புகைப்படத்திற்கு மாலையிட்டுப் புகைப்படம் எடுத்து மறந்துவிடுவதைத்தான் காலங்காலமாக ஒவ்வொரு தமிழறிஞருக்காகவும் நாம் செய்கிற அதிகப்பட்சத் தமிழ்த்தொண்டு.

                               தமிழுக்காக நம்முடைய தாய்மொழிக்காகப் பாடுபட்டவர்களை நாம் என்றைக்கும் நினைத்து அவர்கள் உரைத்துவிட்டுப்போன வாழ்வின் சொற்களில் ஏதேனும் ஒன்றையாவது நாம் பின்பற்றி வாழவேண்டும்.

                              உள்ளம் இடிகிறது..

                              அரசிடம் ஒரு  வேண்டுகோள்...  அவர் வீடு இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவிடம் கட்டியாவது  நாம்  பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.  தமிழுக்காக தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர்வது என்பதும்கூட தமிழ்த்தொண்டுதான்.