Wednesday, July 9, 2014

வருத்தம்...




                           

                                   வெள்ளத்தனையது மலர்நீட்டம்....



                     இலக்கியம் என்கிற சொல்லுக்கான வரையறையாக விழுமியப்  பொருளைக் கொண்டது என்றும் அது இலட்சியத்தை நோக்கியதும்
என்பதும் மேனாட்டார் குறிப்பிடுவது.

                      காலங்காலமாகத் தமிழ் மொழி தோன்றிய காலத்திலிருந்து
அதில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் அந்தந்தப் படைப்பாளிகளின் அர்ப்பணிப்பு உணர்வாலும் தேர்ந்த படைப்பாளுமையாலும் உருவாக்கப்
பட்டது. மேலும் அது எல்லா மக்களுக்குமான பொது வாழ்வியலையும்
உள்ளடக்கியும் உருவாக்கப்பட்டதால் இன்றைக்கும் சாகா இலக்கியங்களாகத்
திகழ்கின்றன. அதேபோன்று படைப்பாளிகள் பெரும்பான்மையும் தங்களை
இனங்காட்டிக்கொண்டதில்லை. இது எல்லோரும் அறிந்த வரலாறு.

                       எனவே படைப்பாளன் எனும் நிலை மேன்மையானது. உயர்வானது. மதிக்கத்தக்கது. ஆனால் இன்றைக்கு நடக்கும் சில நிகழ்வுகள் இத்தகைய படைப்பாளிகள் மேல் சந்தேகங் கொள்ளவைக்கிறது.

                  1.  சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடன் இதழில்
தன்க்குப் பிடித்த எழுத்தாளர்கள் ஒரு பட்டியலைத் தந்திருந்தார். அது இப்போது ஒரு அரசியலாகிகொண்டிருக்கிறது. நாஞ்சில் நாடனுக்கு முன்னர் பலரும் இதுபோன்ற பட்டியலைத் தயாரித்துத் தங்களின் படைப்பாளுமையாகத் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதுபோன்ற பட்டியலே ஒருஅரசியல்தான்.

                      இதுபோன்ற பட்டியலைக் கண்டு தன் பெயர் இல்லையே.. விடுபட்டிருக்கிறதே.. ஏன் தரவில்லை. என்பதுபோன்ற காய்ச்சல்கள் எழுந்து
கொண்டேயிருக்கின்றன. இது குறித்த விவாதங்களையும் இதழ்கள் வெளியிடுகின்றன. நாஞ்சில் நாடன் வெளியிட்டிருப்பது அவருடைய தனித்த
விருப்பத்தின்பேரில் தரப்பட்டது. அவர் குறிப்பிட்ட பட்டியலில் உள்ள படைப் பாளிகள் சிறந்தவர்கள் எனப்து குறித்த விவாதத்திற்குப் போகவேண்டாம். பட்டியல் தருவதால் என்ன பிரச்சினை? நாஞ்சில் நாடன் என்ன அத்தாரிட்டியா?  பட்டியல் போடுவதை இதழ்கள் போடுவதற்குத் தங்கள் பிரபலத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதுபோன்று சிறந்த கதைகள் என்று புத்தகம் வெளியிடுவதிலும் பெரும் அரசியலை உள்ளடக்கிக்
கொள்கிறார்கள். இப்படி பட்டியல் குப்பைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

                   எழுத்தாளனின் கடமை என்ன?  தரமான படைப்புக்களைப் பொது சமூகப் புத்தியில் ஆக்கம் தரும் வகையில் படைத்தளிப்பதுதான். நிறைய நாவல்களை வெளியிட்டும் பல்லாயிரக்கணக்கான சிறுகதைகளை வெளியிட்டும் பல பரிசுகளைப் பெற்றும்விட்டால் உடனே பட்டியல் போட்டுவிடவேண்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இன்னும் உலகநிலையில் ஒரு தரமான அங்கீகாரத்தையடையவில்லை
எனப்தை உணரவேண்டும். குண்டுச்ட்டிக்குள் குதிரைதான்.  அப்புறம் குறிப்பிட்ட பகுதி எழுத்தாளர்கள் எனும்போது அங்கே ஒரு சாதி அரசியலை உருவாக்கி விழா கொண்டாடி மகிழ்கிறார்கள். வருத்தமாக உள்ளது.
பட்டியலாக இருந்தாலும் சரி எதுவானாலும் சரி இந்தப் படைப்பாளிகளின் இதுவரை வெளிவந்துள்ள படைப்புக்கள் தரத்தில் கொஞ்சமும் குறைந்ததில்லை. மதிப்பானவை. ஆனாலும் அவை உலக இலக்கிய அரங்கைக் நோக்கிப் பயணிக்கவேண்டிய துர்ரம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது என்பதையும் கசப்பாக ஏற்றுக்கொள்ள
வேண்டும். பட்டியல் அரசியலை விட்டு படைப்பை இன்னும் மேம்படுத்துங்கள் எழுத்தாள சகோதர ஆளுமைகளே.

               2. பெண் எழுத்துக்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கருத்திற்கு  சாரு நிவேதிதா அம்பை. குட்டி ரேவதி சல்மா சுகிர்தராணி எனப்
பங்கேற்கும் விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. இன்னும் வரலாம்.
எதற்கு இந்த அருவருப்பான நிக்ழ்வுகள். ஆண் எழுத்தாளர்கள் என்ன இலக்கிய உலகை குத்தகைகு எடுத்திருக்கிறார்களா? பெண் எழுத்தாளர்கள் எழுத்தை
எதற்கு விமர்சிக்கவேண்டும்? உண்மையான விமர்சனமாக இல்லாமல் அது தனிப்பட்ட நிலையில் பெண்களைத் தாக்கும் சூழல் சரியானதல்ல. ஒரு
நாவல் எழுதிவிட்டு சல்மா உலக நாடுகளுக்குப் போகிறார் என்று சாரு நிவேதிதா எதற்குப் பேசவேண்டும்? போனால் என்ன?  ஒரேயொரு நாவலுக்கும் உலக நாடுகளுக்குச் செல்வதற்கும் என்ன தொடர்பு? அல்லது ஏராளமான கணமான தடித்த பக்கங்களில் நாவல்கள் எழுதி குவிப்பவர் என்றால் வெளிநாடுகள் போகலாமா? எதற்கு தனிப்பட்ட நிலையில் பெண்
எழுத்தாளர்களை விமர்சிக்கிறீர்கள்? அதற்கு என்ன உரிமை உங்களுக்கு யாரால் வழங்கப்பட்டிருக்கிறது?

                       
                              ஒத்த கருத்துள்ள ஐந்து எழுததாளர்கள் கூடி ஒரு கூட்டம்
நடந்தாலே அங்கேயும் ஒரு அரசியலை நடத்துகிறார்கள் ஒற்றுமையாக
இருப்பதுபோல இயங்கும் ஐந்துபேரும். இது ஒரு சான்றுதான்.

                               இதெல்லாம் படைப்பின் சாதனையா?

                               படைப்பாளுமையா?

                              என்னத்தை இந்த உலகில் நீங்கள் சாதிக்க எழுத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?

                              அப்படியென்ன மகோன்னதமான உலகியல் படைப்பைத்
தந்திருக்கிறீர்கள்?

                              உங்கள் எழுத்துக்களைத் தேடித் தேடி ஓடி ஓடி ஆசைதீரப்
படித்துவிட்டு இப்போது உங்கள் நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்களின்
எழுத்துக்களின் மேலே சந்தேகம் வருகிறது.

                              எமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி.

                              எமக்குத் தொழில் எழுத்து என்று சொல்லும் தகுதி உங்களில்
யாருக்காவது இருக்கிறதா?

                                எழுதுவதெல்லாம் எழுத்தாகாது.

                               எழுத்து ஒரு தவம். கடுமையான தவம்.

                               விளைந்த சகித்துக்கொள்ளுகிற உயர்ந்த மனப் பக்குவத்தின்
விளைச்சல்தானே எழுத்து?

                               தெரியாமல கேட்கிறேன்?

                               என்றைக்கு இந்த அக்கப்போரை விடப்போகிறீர்கள்?







11 comments:

  1. //உங்கள் எழுத்துக்களைத் தேடித் தேடி ஓடி ஓடி ஆசைதீரப்
    படித்துவிட்டு இப்போது உங்கள் நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்களின்
    எழுத்துக்களின் மேலே சந்தேகம் வருகிறது.// உண்மை ஐயா.
    உலக மக்களின் கவனத்தைப் பெற வேண்டும் என்று நீங்கள் சொல்வது உண்மை ஐயா..அதை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. ஐயா வணக்கம் . கோபமும் ஆற்றாமையும் ஆதங்கமும் வெளிப்படுகிறது உங்கள் எழுத்தில். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். பிறர் எழுத்தை விமரிசனம் செய்யவும் ஒரு உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. எழுதுபவன் எல்லாம் பெயர் பெற்று விடுவதில்லை. அப்படிப் பெயர் பெற்றவர்கள் தங்களை ஏதோ சாதித்து விட்டவர்போல் நினைக்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் படைப்பைஒருவர் புகழ்ந்தால் இகழ்பவர் இருவர் எங்கிருந்தோ தோன்றுகிறார்கள். ஒருவரை மட்டம் தட்டுவதன்மூலம் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காண்பித்துக் கொள்கிறார்கள். பத்திரிக்கைகளும் பிரசுரிக்கும். அவர்களுக்கு சர்க்குலேஷனே முக்கியம் . கருத்துக் கூற தகுதி எனக்கிருக்கிறதா தெரியவில்லை.நானும் ஒரு வாசகன் என்னும் முறையில்தோன்றியதை எழுதினேன்

    ReplyDelete
  3. // தெரியாமல் கேட்கிறேன்?.. என்றைக்கு இந்த அக்கப்போரை விடப்போகிறீர்கள்?..//

    நியாயமான கேள்வி..

    ReplyDelete
  4. உண்மைதான்! தேவையில்லாத அக்கப்போர் இது! என்னைப் பொறுத்தவரை பல பக்கங்கள் எழுதியும் பல புத்தகங்கள் வெளியிடுவதும் இல்லை இலக்கியம்! ஒன்றே என்றாலும் நன்றே உருவாவதுதான் இலக்கியம்!

    ReplyDelete
  5. // எழுத்து ஒரு தவம்... கடுமையான தவம்... //

    உண்மை. உண்மை.. உண்மை ஐயா...

    கேள்விகள் சாட்டையடி...!

    ReplyDelete
  6. எழுத்து ஒரு தவம்
    உண்மை ஐயா
    இவர்கள் தங்கள் எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தட்டும்

    ReplyDelete
  7. நான் பணியிலிருந்து ஒய்வு பெற்று சென்னை வந்தவுடன் தமிழில் ஒரு முனைவர் பட்டம் பெற விரும்பினேன். எந்தப் பல்கலையில் சேரலாம் என்பது பற்றி ஆலோசனை கேட்டபோது, ஒருவர் சொன்னார்: "தமிழில் உருப்படியாக ஒரு நல்ல நூல் எழுதுங்கள். அது நூறு பி.எச்.டி.க்குச் சமம்" என்று. அதைப் பின்பற்றி எழுத ஆரம்பித்தேன். எனது முதல் சிறுகதைத் தொகுதிக்கும் அவரே முன்னுரை அளித்தார். அவர் பெயர்: பேராசிரியர் க. அன்பழகன். அவரை 'ஹரணி' என்றும் கூறுவார்கள்.....

    ReplyDelete
  8. ந்ன்றி சகோதரி கிரேஸ்.

    ReplyDelete
  9. அன்புள்ள ஜஎம்பி ஐயா

    வணக்கம். நான் எழுத்துலகில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலவிக்கொண்டிருக்கிறேன். நான் என்ன கிழித்துவிட்டேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் இந்த நாற்பது ஆண்டுகளில் 25 ஆண்டுகள் தொடர்ந்து கவனித்ததில் இந்த அக்கப்போர் இன்றுவரை ஓயவில்லை. மிகுந்த வேதனையுடன் இதைப் பகிர்ந்துகொள்கிறேன். புத்தகம் எழுதுவது வெளியிடுவது அதனைக் கல்லுர்ரியில் பாடமாக வைப்பது விருதிற்குத் துரத்துவது எல்லாவற்றின் பின்னாலும் சாதி வெறி பிடித்தலைகிறது. இலக்கியக்கூட்டம் என்றாலே மறைமுகமாகத் தாக்கிக்கொள்கிறார்கள். எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை வக்கிரமாக விமர்சிக்கிறார்கள். இதைப்பற்றித் தொடர்ந்து எழுதி பலனில்லை என்று ஓய்ந்தாலும் நமக்கு மனதுக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றித் தவறாகப் பேசும்போது தாங்கமுடியவில்லை. எதிர்வினை கூடுதலாகப் புரியவேண்டியிருக்கிறது. நன்றிகள்

    ReplyDelete
  10. நன்றி செல்வராஜ் ஐயா.

    நன்றி தளிர் சுரேஷ் . மௌனி அழியாச்சுடர் ஒன்றுதான் எழுதினார். இன்றுவரை அணையவில்லை சுடரும் சுடரின் வெப்பமும். நன்றிகள்.

    நன்றி ஜெயக்குமார். இதைத்தான் நானும்.

    நன்றி தனபாலன்.

    ReplyDelete
  11. அன்புள்ள செல்லப்பா ஐயா

    வணக்கம்.

    உண்மைதான். முனைவர் பட்டங்கள் மோசமான சடங்குகள் ஆகிவிட்டன.

    முனைந்து ஆராய்தல் என்பது போய் முனைந்து பெறுதல் என்பது ஆகிவிட்டது.

    உண்மையில் உங்களைப் போன்று தரமாக முனைவர் பட்டம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விதிகளில் நிறுத்திவிடுகிறார்கள்.

    எதிர்காலத்தில் நிச்சயம் இதுபோன்ற முனைவர் பட்டங்கள் வாங்கியவர்கள் மரணத்தோடு சாம்பலாவது உறுதி. படைப்புக்கள் மட்டுமே பீனிக்ஸ் பறவைகளாய் உயிர்த்தெழுந்து படைப்பாளிகள் இறந்தும் வாழும்,

    எழுதுங்கள் ஐயா.

    ReplyDelete